பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நம்பியாண்டார் நம்பிகள் / ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
வ.எண் பாடல்
1

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
5. திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
10. காழி நாடன் கவுணியர் தலைவன்

மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.

2

அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற - வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.

3

என்று மடியவ ருள்ளத் திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே.

4

அடுசினக் கடகரி யதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால்
பிறந்தது கழுமலம் என்னும் கடிநக ரதுவே;
வளர்ந்தது, தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே;
பெற்றது, குழகனைப் பாடிக் கோலக்காப்புக்(கு)
அழகுடைச் செம்பொன் தாளம் அவையே;
10 தீர்த்தது,
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே;
அடைத்த(து)அரசோ டிசையா அணிமறைக் காட்டுக்

15 குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே;
ஏறிற்(று), அத்தியும், மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகைமுன்னாட் பெற்றே;

20 பாடிற்(று), அருமறைஓத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும்பெண்பனை யாவே;
கொண்டது, பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆயிரமே;

25 கண்டது,
உறியோடுபீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே;
நீத்த(து), அவிழ்ச்சுவை யேஅறிந்(து) அரனடி பரவும்
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே

30 நினைந்த(து)
அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே;
மிக்கவர்,
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல

35 ஞானசம்பந்தன்இந் நானிலத் திடையே.

5

நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக்கு மேலேதா னென்பர் - சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பக்தர்கள்போய் வாழும் பதி.

6

பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக் காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக் காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந் தோசில வூமர்களே.

7

கவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர்ப் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துகக்
10 கொடுஞ்சிலை வளைத்தே கடுஞ்சரந் துரந்து
முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
கணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.

8

பழியொன்றும் பாராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை - யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரந்தரம்போய் நெஞ்சே! நினை.

9

நினையா தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்
நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே.

10

தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
5
பொற்பமர் தோள நற்றமிழ் விரக

10 மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ(று)
ஆதரித்(து) இறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.

11

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தொஃறோணி கண்டீர் - நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.

12

ஞானத் திரளையி லேயுண் டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.

13

அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே
எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணிபிதுங்கப்
5 பிடரிடைப்பாய்வன பேழ்வாய்ப் புலியே
இடையிடைச்
செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையாலறுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
நிரையார்

10 பொருகட லுதைந்த கரிமுகச் சங்கு
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
15 சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.

14

மலைத்தலங்கள் தேறி வான்தவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தத் தீராதார் தாம்.

15

தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போலழ கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங னேகுமென் நேரிழையே.

16

இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே;
காமர்
சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே
தினைதொறும்
5 பாய்கிளி யிரியப் பையவந் தேறி
ஆயவென் றிருக்கு மணிப்பர ணிதுவே
ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்புசெய் தென்னை யாட்கொளு மிடமே
பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
10 நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்

15 நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்
பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவ
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.

17

வேழங்க ளெய்பவர்க்கு வில்லாதல் இக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்
வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.

18

தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே.

19

வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில்பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண்சிலம்ப
அஃதிங்கு
5 என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத
10 தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்

15 கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.

20

தேம்புனமே!யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.

21

சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி!யிரும்புனமே.

22

புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சுர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகுநாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
5 பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்
கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே!யுறவலைகாண்நீ
நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழுமலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்

10 தன்னருள்பெற்ற பொன்னணி குன்றம்
மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை

15 ஏதிலன்பின்செல விலக்கா தொழிந்தனை
ஆதலின் புறவே யுறவலை நீயே.

23

அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் - மலர்கள்தலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.

24

ஊரும் பசும்புர வித்தே ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம் பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம் யான்சங்கு தாங்குவதே.

25

தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
சுவடிச் சிறுகாற் கற்கட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
5 துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்
காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த

10 முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே
வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்

15 இங்குத் தணந்தெய்தி நுமரும்
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.

26

குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை - யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமி இன்னம்
புன்கலங்கல் வைகைப் புனல்.

27

புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட் டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே விளையுஞ் செழுங்கதிரே.

28

கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழிநாட்டுறை யணங்கோ
மொய்த்தெழு
5 தாமரையல்லித் தவிசிடை வளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ
மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
10 ஆரணியத்து ளருந்தெய்வ மதுவோ

வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஓவியர் தங்க ளொண்மதி காட்டும்

15 வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.

29

வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.

30

குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே.