பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மெய்ப்பொருள் நாயனார் புராணம்
வ.எண் பாடல்
001

சேதி நல் நாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
மாது ஒரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்;
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்.

002

அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மை யினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்.

003

மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழ் இசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்;
தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார்.

004

தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார்.

005

இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேல்கொண்டு்
பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்.

006

இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்
செப்ப அரும் நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான்.

007

மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி,
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்.

008

மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகிச்
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்.

009

கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
‘உடையவர் தாமே வந்தார்; உள் எழுந்து அருளும்’ என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
‘இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன்’ என்றான்.

010

என்று அவன் கூறக் கேட்டே ‘யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும்’ என்றே அவனையும் நீக்கிப் புக்குப்
பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே
மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான்.

011

கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டு அலர் மாலையானை எழுப்பிட, உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் எனக் குவித்த செங் கை
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று.

012

‘மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ’ என்று கூற,
‘உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன்; இயம்ப’ என்றான்.

013

‘பேறு எனக்கு இதன் மேல் உண்டோ? பிரான் அருள் செய்த இந்த
மாறு இல் ஆகமத்தை வாசித்து அருள் செயவேண்டும்’ என்ன,
‘நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருத்தல் வேண்டும்’ என்று அவன் விளம்ப, வேந்தன்.

014

திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப் புரத்திடைப் போக ஏவித்
தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றார்.

015

கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில்,
பத்திரம் வாங்கித் தான் முன் நினைந்த அப் பரிசே செய்ய,
‘மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள்’ எனத் தொழுது வென்றார்.

016

மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்;
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்.

017

வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதன் ஆம் தத்தன்தானும் தலையினால் வணங்கித் தாங்கி,
‘யாது நான் செய்கேன்’ என்ன, ‘எம்பிரான் அடியார் போக
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ’ என்றார்.

018

அத் திறம் அறிந்தார் எல்லாம் ‘அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம்’ எனப் புடை சூழ்ந்த போது,
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்,
‘இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை’ என்றான்.

019

அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து,
கை வடி நெடுவாள் ஏந்தி ஆள் உறாக் கானம் சேர,
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்.

020

மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்; கோமகன் குறிப்பில் நின்றான்.

021

சென்று அடி வணங்கி நின்று ‘செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன்’ என்று கூற,
‘இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார்’ என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்.

022

அரசியல் ஆயத்தார்க்கும் அழிவு உறும் காதலார்க்கும்
விரவிய செய்கை எல்லாம் விளம்புவார், ‘விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்.

023

தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்டர் வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவர் இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்.

024

இன் உயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொன் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.