பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / அவத்தை பேதம் நின்மலாவத்தை
வ.எண் பாடல்
1

ஊமைக் கிணற்று அகத்து உள்ளே உறைவது ஓர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே.

2

காலங்கி நீர்பூக் கலந்த ஆகாயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதா சிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார் கட்குக்
காலனும் இல்லை கருத்து இல்லை தானே.

3

ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது
தான் மா மறை அறை தன்மை அறிகிலர்
ஆன் மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல்
ஆன் மாவும் இல்லைஆல் ஐ ஐந்தும் இல்லையே.

4

உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதி தரு சேதனன் பற்று ஆம் துரியத்து
அதி சுபன் ஆயன் தான் நந்தி ஆகுமே.

5

எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல் உயிர்
பொல்லாத ஆறா உள் போகாது போதம் ஆய்ச்
செல்லாச் சிவகதி சென்று எய்தும் அன்றே.

6

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனல் என வாதனை நின்றால்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத்து துரிசு அகலாதே.

7

ஆன மறை ஆதி யாம் உரு நந்தி வந்து
ஏனை அருள் செய் தெரி நனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைத்தாய் விட
ஆன மலா தீதம் அப்பரம் தானே.

8

சுத்த அதீதம் சகலத்தில் தோய் உறில்
அத்தன் அருள் நீங்கா ஆங்கு அணிற்றான் ஆகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதி செய்
அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே.

9

வேறு செய்தான் இருபாதியின் மெய்த் தொகை
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான்
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே.

10

கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை
நிறம்சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே.

11

தானே சிவம் ஆன தன்மை தலைப் பட
ஆன மலமும் அப் பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதிபோல் படராவே.

12

நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத் தக்க மாலும் திசை முகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே.

13

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதன் உள்புக்கு
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழி எளிது ஆமே.

14

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேத ஆகமங்களும்
நாடியின் உள் ஆக நான் கண்ட வாறே.

15

முன்னை அறிவினில் செய்த முது தவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றிப்
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே.

16

செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும்
செயல் அற்று இருப்பார் சிவ யோகம் தேடார்
செயல் அற்று இருப்பார் செகத் தொடும் கூடார்
செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.

17

தான் அவன் ஆகும் சமாதி கை கூடினால்
ஆன மலம் அறும் அப் பசுத் தன்மை போம்
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர் கட்கே.

18

தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும்
தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே.

19

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை
தான் தரு ஞானம் தன் சத்திக்குச் சாதன் ஆம்
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே.

20

அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள் செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.

21

தான் அவன் ஆகிய ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மா மணிச் சோதியை
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை
ஊனம் இலாள் தன்னை ஊன் இடைக் கண்டதே.

22

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனல் ஆகும் ஆன் மாவை அன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்தம் ஆமே.

23

ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில்
தான் அந்தம் ஆம் உயிர் தானே சமாதி செய்
ஊன் அந்தம் ஆய் உணர்வாய் உள் உணர்வு உறில்
கோன் அந்தம் வாய்க்கும் மகா வாக்கியம் ஆமே.

24

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர் வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும்
அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்கத் தம் அறிவார் அறிவோரே.

25

சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கூடிச்
சித்தும் அசித்தும் சிவ சித்தாய் நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல் அற்றவர்களே.

26

தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்
தானே அறிவான் அறிவு சத சத்து என்று
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

27

தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே.

28

தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும்
பின்னது சன் முத்தி சன்மார்க்கப் பேர் ஒளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.

29

ஞானம் தன் மேனி கிரியை நடு அரங்கம்
தான் உறும் இச்சை உயிர் ஆகத் தற்பரன்
மேனி கொண்டு ஐங் கருமத்து வித்து ஆதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே.

30

உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர் மாயை சூக்கம்
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச் செயல் அன்றி அவ் உள்ளத்து உளானே.

31

தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர்
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும்
பழி அற்ற காரண காரியம் பாழ் விட்டு
அழிவு அற்ற சாந்தன் அதீதன் சிவன் ஆமே.

32

இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி
இல்லதும் உள்ளதும் ஆயன் தாம் அண்ணலைச்
சொல்லாது சொல்லிடில் தூர் ஆதி தூரம் என்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்கு உயிர் ஆகுமே.

33

உயிர் இச்சை ஊட்டி உழி தரும் சத்தி
உயிர் இச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிர் இச்சை ஊட்டி உடன் உறலாலே
உயிர் இச்சை வாட்டி உயர் பதம் சேருமே.

34

சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர் ஒன்று இலார் ஐம் மல இருள் உற்றவர்
பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர்
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே.

35

எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறை அருள் தானே.

36

திருந்தனர் விட்டார் திருவின் அரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே.

37

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருள் ஆமே.

38

அருளான சத்தி அனல் வெம்மை போலப்
பொருள் அவன் ஆகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டும் மும் மலம் ஆகும்
திரு அருள் ஆன நந்தி செம் பொருள் ஆமே.

39

ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள்
பேதித்த அவ்வினையால் செயல் சேதிப்ப
ஆதித்தன் தன் கதிரால் அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறு அருட் பேதமே.

40

பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும்
போதம் புணர் போதம் போதமும் நாதமும்
நாதமுடன் நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே.

41

மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை எனப்
பாவிய பூதம் கொண்டாட்டிப் படைப் பாதி
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள்
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே.

42

ஆறு அகன்று தனை அறிந்தான் அவன்
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த
வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள்
தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே.

43

தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று
தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

44

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்தி அருள் தன்மை யாரே.

45

தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையைத்
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்
தான் இன்றித் தான் ஆகத் தத்துவ சுத்தமே.

46

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.

47

அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறி வழியே சென்று நேர் பட்ட பின்னை
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும்
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே.

48

ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர்
தேம்பு கின்றார் சிவம் சிந்தை செய்யாதவர்
கூம்ப கில்லார் வந்து கொள்ளலும் ஆமே.

49

குறி அறியார்கள் குறிகாண மாட்டார்
குறி அறியார்கள் தம் கூடல் பெரிது
குறி அறியா வகை கூடுமின் கூடி
அறிவு அறியா விருந்து அன்னமும் ஆமே.

50

ஊனோ உயிரோ உறுகின்றதே இன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உற நிற்கத்
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பு அறியாரே.