பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
குரு உரு அன்றிக் குனிக்கும் உருவம் அரு உரு ஆவதும் அந்த அருவே திரிபுரை ஆகித் திகழ் தரு வாளும் உரு அருவு ஆகும் உமை அவள் தானே.
திரு வழி ஆவது சிற்றம் பலத்தே குரு வடிவு உள்ளாக் குனிக்கும் உருவே உருவு அருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு அருள் வழி ஆவதும் அவ்வழி தானே.
நீரும் சிரசு இடை பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட நாடு மின் நாத அந்த நம் பெருமான் உகந்து ஆடும் இடம் திரு அம்பலம் தானே.
வளி மேக மின் வில்லு வானக ஓசை தெளிய விசும்பில் திகழ்தரு வாறு போல் களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே.
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயை மா மாயை கடந்து நின்றார் காண நாயகன் நின்று நடம் செய்யும் ஆறே.
கூத்தன் கலந்திடும் கோல் வளையா ளொடும் கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே.
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படம் கொடு நின்ற இப் பல் உயிர்க்கு எல்லாம் அடங்கலும் தாம் ஆய் நின்று ஆடு கின்றாரே.
சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனி ஆம் சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே.
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம் பற்றுக்குப் பற்று ஆய்ப் பரமன் இருந் திடம் சிற்றம் பலம் என்று சேர்ந்து கொண்டேனே
அண்டங்கள் தத்துவம் ஆகிச் சதா சிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவ ஆசனம் ஆகவே கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே.
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை சென்றது தான் ஒரு பத்து இரு நூறு உள நின்றது தான் நெடு மண்டலம் ஆமே.
அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி அண்ட நடம் செயும் ஆலயம் தானே.
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கை கள் மோகாய முக் கண்கள் மூன்று ஒளி தான் ஆக மாகாய மன்றுள் நடம் செய் கின்றானே.
அம்பலம் ஆவது அகில சரா சரம் அம்பலம் ஆவது ஆதிப் பிரான் அடி அம்பலம் ஆவது அப்புத் தீ மண்டலம் அம்பலம் ஆவது அஞ்சு எழுத்து ஆமே.
கூடிய திண் முழவம் குழலோம் என்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடி நல் கணம் ஆர் அம்பல் பூதங்கள் பாடிய வாறு ஒரு பாண்டரங்கம் ஆமே.
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் புண்டரிகப் பதப் பொன் அம்பலக் கூத்துக் கண்டு சேவித்துக் கதி பெறுவார் களே.
புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறு மா போல் களிக்கும் திருக் கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே.
திண்டாடி வீழ்கை சிவ ஆனந்தம் ஆவது உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
அங்கி தமருகம் அக்கு மாலை பாசம் அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம் தங்கு பயம் தரு நீலமும் உடன் மங்கை யோர் பாகம் ஆய் நடம் ஆடுமே.
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக் கூடிய பாதம் சிலம்பு கைக் கொள் துடி நீடியநாதம் பரால் பர நேயத்தே ஆடிய நந்தி புறம் அகத்தானே.
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட அன்பு உறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட இன்பு உறும் ஏழினும் ஏழ் ஐம் பத்து ஆறு ஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரம் சோதி ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே.
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவு ஆகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை மா மணி ஈசன் மலர் அடித் தாள் இணை வா மணி அன்பு உடையார் மனத்து உள் எழும் கா மணி ஞாலம் கடந்து நின்றானே.
புரிந்தவன் ஆடில் புவனங் களோடும் தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே.
ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே.
ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற இருபதத்து அன்பு உறு கோணம் அசி பதத்து ஆடிடத் துன்பு உறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே அன்பு உறு எந்தை நின்று ஆடல் உற்றானே.
தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச் சித்தமும் ஆடச் சிவ சத்தி தான் ஆட வைத்த சரா சரம் ஆட மறை ஆட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
இருவரும் காண எழில் அம்பலத்தே உருவோடு அருவோடு உருபர ரூபமாய்த் திரு அருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே.
சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில் அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட நவம் ஆன தத்துவ நாத அந்தம் ஆடச் சிவம் ஆடும் வேத அந்தச் சித்தாந்தத்து உள்ளே.
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச் சிவ ஆனந்தமும் தாது அற்ற நல்ல சதா சிவ ஆனந்தத்து நாதப் பிரமம் சிவ நடம் ஆமே.
சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத் தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்துத் தவம் ஆம் பரன் எங்கும் தான் ஆக ஆடும் தவம் ஆம் சிவ ஆனந்தத் தோர் ஞானக் கூத்தே.
கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள் வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தைத் தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி ஆட நின்றான் என்னை ஆள் கொண்ட வாறே.
நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர் நேதத்துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படா வண்ணம் பின்னி நின்றானே.
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே.
திருந்து நல் என்று உதறிய கையும் அரும் தவர் வா என்று அணைத்த மலர்க் கையும் பொருந்தில் இமைப் பிலி அவ் என்ற பொன் கையும் திருந்தத் தீ ஆகும் திரு நிலை மவ்வே.
மருவம் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நம என ஓதே.
அரன் துடி தோற்றம் அமைத்தல் திதி ஆம் அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரன் அடி என்றும் அனுக் கிரகம் என்னே.
தீத் திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி கூத்தனைக் கண்ட அக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர சுந்தரக் கூத்தனை என் சொல்லும் ஆறே.
சீய குரு நந்தி திரு அம்பலத்திலே ஆய் உறு மேனியை யாரும் அறிகிலர் தீய் உறு செம்மை வெளுப் பொடு அத் தன்மை ஆய் உறு மேனி அணை புகல் ஆமே.
தான் ஆன சத்தியும் தற்பரை ஆய் நிற்கும் தான் ஆம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை ஞான ஆதி பேத நடத்து நடித்து அருள் ஆனால் அரன் அடி நேயத்தம் ஆமே.
பத்தி விதையில் பயிர் ஒன்று நாணத்தைச் சித்தி தரு வயிராக்கத்தால் செய்து அறுத்து உய்த்த சமாதி சிவானந்தம் உண்டிடச் சித்தி திகழ் முத்தி யானந்தம் சித்தியே.