பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / அணைந்தோர் தன்மை
வ.எண் பாடல்
1

மலம் இல்லை மாசு இல்லை மான அபிமானம்
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலம் இல்லை நந்தி ஞானத்தி னாலே
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே

2

ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன்
அழிந்து ஆங்கு இனிவரு மார்க்கமும் வேண்டேன்
செழும் சார்புடைய சிவனைக் கண்டேனே.

3

ஆலைக் கரும்பும் அமுதும் அக்காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டு இடைப்
பீலிக் கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு
கோலப் பெண்ணாட்குக் குறை ஒன்றும் இல்லையே.

4

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனிச்
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே.

5

பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்து கின்றேனே.

6

ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாயப் பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்த வாறே.

7

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும் பொருள்
சிந்தையின் மேவித் தியக்கு அறுத்தானே.

8

பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே.

9

அன்னையும் அத்தனும் அன்பு உற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே.

10

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்து உளே
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே.

11

நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.

12

சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்
சுத்தச் சிவம் ஆவர் தோயார் மல பந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கை காணார்
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே.

13

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப் பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப் பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில் அவன் நீளியன் ஆமே.

14

சிவ பெருமான் என்று நான் அழைத்து ஏத்தத்
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானைப் பணிந்து நின்றேனே

15

பணிந்து நின்றேன் பரமாதி பதியைத்
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன்
அணிந்து நின்றேன் உடல் ஆதிப் பிரானைத்
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே.

16

என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும்
தன் நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம் செய்து என்னைப் பிணக்கு அறுத்தானே.

17

பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும்
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னைப்
பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம்
வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே.

18

சிவன் வந்து தேவர் குழாம் உடன் கூடப்
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதிப் பெருமான்
அவன் வந்து என் உள்ளே அகப்பட்ட வாறே.

19

கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளி உறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

20

உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடிச்
செய்வன எல்லாம் சிவம் ஆகக் காண்டலால்
கை வளம் இன்றிக் கருக் கடந்தேனே.

21

மீண்டார் கமலத்து உள் அங்கி மிகச் சென்று
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடா மணி
மாண்டான் ஒருவன் கை வந்தது தானே.

22

அன்பு உள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப் பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே

23

மனம் விரிந்து குவிந்தது மாதவ
மனம் விரிந்து குவிந்தது வாயு
வனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே.