பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நான்காம் தந்திரம் / ஏரொளிச் சக்கரம்
வ.எண் பாடல்
1

ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ்
ஏர் ஒளி விந்துவினால் எழு நாதம் ஆம்
ஏர் ஒளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கரம் அந் நடு வன்னியே.

2

வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம்
வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே.

3

சொல்லிய விந்துவும் ஈர் ஆறு நாதம் ஆம்
சொல்லிடும் அப்பதி அவ் எழுத்து ஆவன
சொல் இடு நூறு ஒடு நால் பத்து நால் உரு
சொல் இடும் சக்கரம் ஆய் வரும் மேல் அதே.

4

மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய் விடும்
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்து உடன்
மேல் வரும் அப்பதி அவ் எழுத்தே வரின்
மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே.

5

ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்
ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை
ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே.

6

விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்து அது சக்கரம் ஆக
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே.

7

அப்பு அது ஆக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ் அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே.

8

ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை
ஆகாச அவ் எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே.

9

அறிந்திடும் சக்கரம் ஐ ஐந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ் எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப் பகலோன் இல்லை ஆமே.

10

அம் முதல் ஆறும் அவ் ஆதி எழுத்து ஆகும்
அம் முதல் ஆறும் அவ் அம்மை எழுத்து ஆகும்
இம் முதல் நாலும் இருந்திடும் வன்னியே
இம் முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம்.

11

எழுத்து அவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்து அவை ஆறு அது அந் நடு வன்னி
எழுத்து அவை அந் நடு அச் சுடர் ஆகி
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே.

12

அந்தமும் ஈறு முதலா நவைஅற
அந்தமும் அப் பதினெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப் பதின்மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே.

13

ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபது
ஆவினம் அப் பதினைந்து இனம் ஆய் உறு
ஆவினம் அப் பதினெட்டுடன் ஆய் உறு
அவினம் அக் கதிரோன் வர வந்தே.

14

வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பது ராசியும்
வந்திடும் நாள் அது முந்நூற்று அறுபதும்
வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே.

15

அவ் வினம் மூன்றும் அவ் ஆடு அது வாய் வரும்
எவ்வினம் மூன்றும் கிளர் தரு வேர் அதாம்
சவ் வினம் மூன்றும் தழைத்திடும் தண்டு அதாம்
இவ் வினம் மூன்றும் இராசிகள் எல்லாம்.

16

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்
இராசியுள் சக்கரம் என்று அறி விந்து ஆம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடும் ஆறே.

17

நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ் எழுத்தே வரில்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே.

18

தாரகை ஆகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேல் ஓர் தழைத்தது பேர் ஒளி
தாரகை சந்திரன் நல் பகலோன் வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே.

19

கண்டிடும் சக்கரம் விந்து வளர்வது ஆங்கு
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திடக்
கண்டிடும் வன்னிக் கொழுந்து அன ஒத்தபின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே.

20

கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும்
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே.

21

நின்றது அண்டமும் நீளும் புவி எலாம்
நின்ற இவ் அண்டம் நிலைபெறக் கண்டிட
நின்ற இவ் அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இவ் அண்டம் பலமது விந்துவே.

22

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம்
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண் மடி கொண்டது வீசமே.

23

வீசம் இரண்டு உள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடும் மேல் உற
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

24

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உள் கட்டம் எட்டு எட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே.

25

விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த இஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே.

26

விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே.

27

மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரி வட்டம் ஆம்
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே.

28

உன்னிட்ட வட்டத்தில் ஒத்துஎழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பு அறப் பின் நிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே.

29

பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்றநுண் பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே.

30

அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே.

31

கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம்
மாறு இயல்பாக மதித்துக் கொள்வார்க்கே.

32

மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும்
மதித்து அங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்து அங்கு எழுந்தவை கூட கிலாவே.

33

கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும்
பாடி உள் ஆகப் பகைவரும் வந்து உறார்
தேடி உள் ஆகத் தெளிந்து கொள்வார்க்கே.

34

தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அந் நடு ஆக்கிக்
குளிர்ந்த வரனைக் கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய காலே.

35

கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய்
பாலித்து எழுந்து பகை அற நின்றபின்
மால் உற்ற மந்திரம் மாறிக் கொள்வார்க்கே.

36

கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்து அதாய்ப்
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின்
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நம எனே.