பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிடைமருதூர்
வ.எண் பாடல்
1

ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

2

தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

3

வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.

4

அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

5

வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே
தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,
பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய
ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.

6

வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

7

தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,
போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

8

பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

9

முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,
நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,
பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக
எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

10

சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

11

கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிடைமருதூர்
வ.எண் பாடல்
1

தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-
காடு பேணி நின்று ஆடும் மருதனே.

2

கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்;
மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.

3

எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை,
பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே.

4

விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே.

5

பந்த விடை ஏறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

6

கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே.

7

பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார், இன்பமே.

8

எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே

9

இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

10

நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை
அன்றி உரை சொல்ல, நன்று மொழியாரே.

11

கருது சம்பந்தன், மருதர் அடி பாடி,
பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிடைமருதூர்
வ.எண் பாடல்
1

மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான்,
அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன், வள நகர் இடைமருதே.

2

தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள்
கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த
நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல்
ஏற்றவன், வள நகர் இடைமருதே.

3

படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன்,
நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம்
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்-
இடைமருது இனிது உறை எம் இறையே.

4

பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார்
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்து, அடு திறல் காலன் செற்ற
இணை இலி, வள நகர் இடைமருதே.

5

பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும்
தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும்
கழலவன், கரிஉரி போர்த்து உகந்த
எழிலவன், வள நகர் இடைமருதே

6

நிறை அவன், புனலொடு மதியும் வைத்த
பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற
மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட
இறையவன், வள நகர் இடைமருதே.

7

நனி வளர் மதியொடு நாகம் வைத்த
பனி மலர்க் கொன்றை அம் படர் சடையன்,
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க,
இனிது உறை வள நகர் இடைமருதே.

8

தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன், வள நகர் இடைமருதே.

9

பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான்,
வரி அரவு அணை மறிகடல்-துயின்ற
கரியவன் அலரவன் காண்பு அரிய
எரியவன், வள நகர் இடைமருதே.

10

சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே,
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா,
எந்தைதன் வள நகர் இடைமருதே.

11

இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிடைமருதூர்
வ.எண் பாடல்
1

நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்,
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,
இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.

2

மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை
கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்;
குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர்
இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.

3

அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.

4

பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்,
வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர்
எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.

5

வரு நல மயில் அன மடநடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்,
செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.

6

கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை,
மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்;
விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு
இலை உடை படையவன்; இடம் இடைமருதே.

7

வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்
இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது
உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி,
குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.

8

“மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு
துறையவன்” என வல அடியவர் துயர் இலர்;
கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை
இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.

9

மருது இடை நடவிய மணிவணர், பிரமரும்
இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக்
கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்
எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.

10

துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல்
கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு-
மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.

11

தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,
படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிடைமருதூர்
வ.எண் பாடல்
1

விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

2

“மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர்
எறிதிரை கரை பொரும் இடைமருது” எனுமவர்
செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்;
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.

3

சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்
நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,
இலர் என இடு பலியவர், இடைமருதினை
வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.

4

விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை தொறு, “பலி இடுக!” என முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்
உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.

5

“உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,
அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை
இரை மரும் அரவினர், இடைமருது” என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.

6

ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்
எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

7

கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,
இலை மலி படையவர், இடம் இடைமருதே.

8

செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்
அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,
இருவகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?

9

அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

10

குடை மயிலின தழை மருவிய உருவினர்,
உடை மரு துவரினர், பல சொல உறவு இலை;
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடை மருது என மனம் நினைவதும் எழிலே.

11

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.