பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வன பவளவாய் திறந்து, “வானவர்க்கும் தானவனே!” என்கின்றாளால்; “சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன்” என்கின்றாளால்; “அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான்” என்கின்றாளால்- கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!
“வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே!” என்கின்றாளால்; “விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு” என்கின்றாளால்; “உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன்” என்கின்றாளால்- கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது” என்கின்றாளால்; “நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே” என்கின்றாளால்;- மறம் கிளர் வேல் கண்ணாள்,- “மணி சேர் மிடற்றவனே!” என்கின்றாளால்- கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன்” என்கின்றாளால்- “சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்; “பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன்” என்கின்றாளால்- கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன்” என்கின்றாளால்; “விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே!” என்கின்றாளால்; “சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே!” என்கின்றாளால்- கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே!” என்கின்றாளால்; “எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே!” என்கின்றாளால்; “பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே!” என்கின்றாளால்- கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
“முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம்” என்கின்றாளால்; “அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம்” என்கின்றாளால்; “சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே” என்கின்றாளால்- கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான்” என்கின்றாளால்; “நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே!” என்கின்றாளால்; “பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே” என்கின்றாளால் கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே!” என்கின்றாளால்; “ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான்” என்கின்றாளால்; “தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன்” என்கின்றாளால்- கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
“அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே!” என்கின்றாளால்; “சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்; “மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான்” என்கின்றாளால்- கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார் தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார் சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார் ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார் பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார் கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார் பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார் ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார் நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார் கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார் ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார் வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்) எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார் கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன் வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ, காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று, கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்! பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்; எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும் கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை, பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே.
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால் கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத் தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.