பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும் வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே, கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!
வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும் கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!
நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க விருத்தனை, வேதவித்தை, விளை பொருள் மூலம் ஆன கருத்தனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட ஒருத்தனை, உணர்தலால் நாம் உய்ந்தவா!-நெஞ்சினீரே!
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி, மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன், கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.
வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும் உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே!
வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை, மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை, கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்த ஆறே!
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் செற்ற வெஞ்சிலையர்; வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்- பெற்றவர் பிறந்தார்; மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
கரு மலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்; இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் திருவடி தரித்து நிற்க, திண்ணம், நாம் உய்ந்தஆறே!
வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்! கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே! பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே! வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே; நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே; செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின் நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும் சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!
பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள் மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்; கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என் வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார் வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக் கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.
பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே! கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!- மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே! கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!- வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து, ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே! எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்: கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை- நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!
கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் இருந்த திருமலை” என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான் பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே