பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
போற்று கின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத் தேற்று கின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்று கின்றேன் அறையோ சிவ யோகத்தை ஏற்று கின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே.
ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை மா எழுத்தாலே மயக்கமே உற்றதுஏ.
தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும் தேவர் உறை கின்ற தென் பொது ஆமே.
ஆமே பொன் அம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும் அத் தாண்டவம் ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே.
தாண்டவம் ஆன தனி எழுத்து ஓர் எழுத்து தாண்டவம் ஆனது அனுகிரகத் தொழில் தாண்டவக் கூத்துத் தனி நின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியம் தானே.
தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே பரஞ் சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே.
தராதல மூலைக்குத் தற்பர மா பரன் தராதலம் வெப்பு நமசிவாய வாம் தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் தராதல யோகம் தயா வாசி ஆமே.
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம் என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே.
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை ஆனந்த மோடும் அறிய வல்லார் கட்கு ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.
படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் ஆறே.
வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் வாறே திருக் கூத்து ஆகம வசனங்கள் வாறே பொது ஆகும் மன்றின் அமலமே.
அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம் அலமந்து இரோதாய் ஆகும் ஆனந்தம் ஆம் அமலம் சொல் ஆணவ மாயை காமியம் அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே.
தானே தனக்குத் தலைவியும் ஆய் நிற்கும் தானே தனக்குத் தன் மலையாய் நிற்கும் தானே தனக்குத் தன் மயம் ஆய் நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே.
தலைவனுமாய் நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனுமாய் நின்ற சற் பாத்திரத்தைத் தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞானத் தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே.
இணையார் திருவடி எட்டு எழுத்து ஆகும் இணையார் கழல் இணை ஈர் அஞ்சது ஆகும் இணையார் கழல் இணை ஐம்பத்து ஒன்று ஆகும் இணையார் கழல் இணை ஏழாயிரமே.
ஏழாயிரம் ஆய் இருபதாய் முப்பதாய் ஏழாயிரத்தும் எழுகோடி தான் ஆகி ஏழாயிரத்து உயிர் எண் இலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.
இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி இருக்கின்ற மந்திரம் இவ் வண்ணம் தானே.
தானே தனக்குத் தகு நட்டம் தான் ஆகும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனி நடம் தானே.
நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும் நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம் நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே.
செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில் செம்பு பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பு பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயும் எனச் செம்பு பொன் ஆன திரு அம்பலமே.
திரு அம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத் திரு அம்பலம் ஆக ஈர் ஆறு கீறித் திரு அம்பலம் ஆக இருபத்து அஞ்சு ஆக்கித் திரு அம்பலம் ஆகச் செபிக்கின்ற ஆறே.
வாறே சிவாய நமச்சி வாய நம வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை வாறே அருளால் வளர் கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே.
பொன் ஆன மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன் ஆன மந்திரம் பொறிகிம் சுகத்து ஆகும் பொன் ஆன மந்திரம் புகையுண்டு பூரிக்கில் பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே.
பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும் பொன் பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே.
சொல்லும் ஒரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயந்துடனே வரும் சொல்லினும் பாசச் சுடர் பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக் கூத்தின் சூக்குமம் தானே.
சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல் சூக்குமம் ஆன வழி இடைக் காணலாம் சூக்குமம் ஆன வினையைக் கெடுக்கலாம் சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே.
ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஏ-ஓம் என்று ஐந்திடம் ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம்-ஹரீம்-அம்-க்ஷம்-ஆம் ஆகுமே.
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள மேனி இரண்டும் இகார விகாரியா மேனி இரண்டும் ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும் மேனி இரண்டும் ஈ-ஓ-ஊ-ஆ-ஏ-கூத்து ஆமே.
கூத்தே சிவாய நம மசி வாயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவாய நம ஆயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவய நம ஆயிடும் கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோள் ஒன்றும் ஆறே.
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட ஒன்றினின் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.