பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்; சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.
தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்; பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்! காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர் மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே.
அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று, வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே; சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே.
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல் ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி, மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப் பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக் கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை- மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார் திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.
கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார் வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.
கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும் சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்; தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.
தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்! காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில், பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே; துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச, மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை, பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து “காரிகை, அஞ்சல்!” என்பார்-கலி மறைக்காடனாரே.
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை; அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;- தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி, “அகப்படுத்து!” என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன் உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.
அந்தரம் தேர் கடாவி, “ஆர் இவன்?” என்று சொல்லி, உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன் பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச் சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி, கடுக்க ஓர் தேர் கடாவி, “கை இருபதுகளாலும் எடுப்பன், நான்; என்ன பண்டம்!” என்று எடுத்தானை ஏங்க அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான், “கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன்” என்று; நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான் தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், “மா வலியன்” என்று பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக் கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்- முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி, புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான், மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி, நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்) ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட, தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை, முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட, அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.