பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும் கையர்; கனைகழல் கட்டிய காலினர்; மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும் பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.
மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப் பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர், நாக வளையினர், நாக உடையினர் போகர்-புகலூர்ப் புரிசடையாரே.
பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி, கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து, திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர் நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும் உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும் புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.
ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல் பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக் கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக் காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர், சேம நெறியினர்; சீரை உடையவர் பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.
உதைத்தார், மறலி உருள ஓர் காலால்; சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி; பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண் புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும், தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண; விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ, நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச; மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும் பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.
கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும், அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம் பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.
பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ, புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள் அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித் திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக் கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்; ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம் செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!
முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை, அப்பர் போல் ஐவர் வந்து(வ்), “அது தருக, இது விடு!” என்று(வ்) ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்- செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!
பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி, நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும் அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும் செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி, களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும் தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம் தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும் நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம் செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!
காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்; வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்- பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள் தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!
நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி, ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்), ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற, தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.
மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால; செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!
அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும், இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன் கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத் திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய, புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ! என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.
பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்! புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே! என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே! மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!- என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்! உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே
ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும், காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத் தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க் கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.