பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

காரைக்கால் அம்மையார் /அற்புதத் திருவந்தாதி
வ.எண் பாடல்
1

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப(து) இடர்.

2

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா(து) என்நெஞ் சவர்க்கு.

3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு)
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத(து) என்கொலோ! கேள்ஆமை - நீள் ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.

5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே
‘எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.

6

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.

7

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்; - யானேஅக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.

8

ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.

9

அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன்
அருளே, பிறப்பறுப்ப தானால், - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு

10


எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன்; - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

11


ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்;
ஒன்றையென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான், திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற்(கு) ஆளாம் அது.

12


அதுவே பிரான் ஆமா(று) ஆட்கொள்ளு மாறும்
அதுவே; யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.

13


தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர்; - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே;பாவந் தான்.

14

தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்; - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானைநினைந்து

15

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார்; - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய்; வேதியனே என்கின்றேற்(கு)
என்செய்வான் கொல்லோ இனி.

16


இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்;
இனியோர் இடரில்லோம், நெஞ்சே; - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

17

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே; கைதொழுது
காண்பார்க்குங் காணலாங்; காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே; தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

18

அரனென்கோ! நான்முகன் என்கோ! அரிய
பரனென்கோ! பண்புணர மாட்டேன்; - முரண்அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை,
யானவனை, எம்மானை இன்று.

19

இன்று நமக்கெளிதே! மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஓர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.

20


அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர், பார், ஆகாயம்
அப்பொருளுந் தானே; அவன்.

21

அவனே இருசுடர்,தீ, ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்,காற்(று) ஆவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

22

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ! - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை.

23

பிறையும், புனலும், அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க்(கு) ஆட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

24


இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று)!
இதுவன்றே என்றனக்(கு)ஒர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற(து) இங்கு.

25

இங்கிருந்து சொல்லுவதென்! எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.

26

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.

27

அரவமொன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்;
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள்;- முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.

28


பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக, இவர்.

29

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்; - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி, என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.

30

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே;
பிறரறியும் பேருணர்வுந் தாமே; - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.

31

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க்(கு) ஆட்பட்ட
பேரன்பே இன்றும் பெருக்கு.

32

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும்; - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்

33

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக;
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த(து)
எக்கோலத்(து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்.

34

ஆமா றறியாவே வல்வினைகள்; அந்தரத்தே
நாம்ஆளென்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று)
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும்.

35

அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.

36


மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆ!ஆ! - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

37


மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியால்
என்பாக்கை யாலிகழா(து) ஏத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.

38

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே? - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.

39

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடிஅணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.

40

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்(டு)
உள்ளாதார் கூட்டம் ஒருவு.

41

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால், - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ, மின்னுருவோ? நேர்ந்து.

42

நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ? நீயதனை
ஈர்ந்தளவே கொண்டி சைய வைத்தாயோ? - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ? என்னோ,
இளங்குழவித் திங்கள் இது?

43


திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல், யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு.

44


தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்? - மனக்கினிய
சீராளன், கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன், வானோர் பிரான்.

45

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
‘எங்குற்றான்’ என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்(கு) எளிது.

46


எளிய(து) இதுஅன்றே! ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர்; ஆ!ஆ! - ஒளிகொள்மிடற்(று)
எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.

47


திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ! பேதாய் - நிறுத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு

48


திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும்; - ஒருநாள்
இதுமதியென்(று) ஒன்றாக இன்றளவுந் தேரா(து)
அது,மதியொன் றில்லா அரா.

49

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுவதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே?
தன்னோடே ஒப்பான் சடை.

50


சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும், - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

51

குழலார் சிறுபுறுத்துக் கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.

52


அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்(து)
எங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

53


சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.

54

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்?
ஓருருவாய் நின்னோடு ழிதருவான், - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான், நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.

55

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு,
கண்டங் கறுத்தவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.

56

வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய், சொல்லாய்; - படுவெண்
புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்;
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.

57


நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய்; - தூய
மடவரலார் வந்து பலியிடார், அஞ்சி,
விடவரவம் மேல்ஆட மிக்கு.

58


மிக்க முழங்கெரியும், வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே? - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும், ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.

59


பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ? மாலுருவோ? ஆனேற்றாய் நீறணிவ(து)
எவ்வுருவோ நின்னுருவம் மேல்.

60

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே! - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ(து)
அம்மான் திருமேனி அன்று

61

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது?

62


ஏதொக்கும் ? ஏதொவ்வா(து) ஏதாகும் ஏதாகா(து)
ஏதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.

63


வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.

64

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ! - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.

65

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு

66

மிடற்றில் விடம்உடையீர், உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறே! - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ,
பைத்தாலும் நும்மார்பிற் பாம்பு.

67

பாம்பும் மதியும்; மடமானும், பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

68


சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்(று)
எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.

69

முடிமேற் கொடுமதியான், முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ, எமக்கு.

70

எமக்கிதுவோ பேராசை; என்றுந் தவிரா(து)
எமக்கொருநாள் காட்டுகியோ? எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந்தன்ன புரிசடையாய், பொங்கிரவில்
எந்தெரிபாய்ந் தாடும் இடம்.

71

இடப்பால, வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே; முக்கண்ணா, கண்.

72

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன்; - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய், மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா, ஈதென் கருத்து.

73

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன்; - பருத்தரங்கம்
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது.

74


ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால்; - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

75

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.

76

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து,
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து,
எந்தாய் தழும்பேறி யேபாவம்! பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.

77

அடிபேரிற் பாதாளம் பேரும்; அடிகள்
முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம்
மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றா(து) அரங்கு.

78

அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும்! ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்!தான் எவ்வுலகம் ஈந்தளியான்!
பன்னாள் இரந்தாற் பணிந்து.

79

பணிந்தும், படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும், அணிந்தவரை ஏத்தத் - துணிந்தும்
எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

80

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின்(று) அடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா(து) அரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.

81

காலனையும் வென்றோம்; கடுநரகம் கைகழன்றோம்;
மேலை இருவினையும் வேரறுத்தோம்; - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

82

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம்; - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.

83

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட்(கு) என்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.

84

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும்நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - நெடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண்.

85


கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ!
பெரியானைக் காணப் பெறின்.

86

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்(கு)ஈ(து)
உறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.

87

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.

88

இருளின் உருவென்கோ! மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ! - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி.

89

ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா(று) என்இதனைக் கூறு.

90


கூறெமக்கீ தெந்தாய், குளிர்சடையை மீதழித்திட்(டு)
ஏற மிகப்பெருகின் என்செய்தி? - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை.

91


திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்; - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்?

92


என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூர்ச்சடையான், வானோர்க்(கு)
அருளாக வைத்த அவன்.

93

அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்;
அவன்கண்டாய் அம்பவள வண்ணன்; - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால், நன்னெஞ்சே,
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.

94

விருப்பினால் நீபிரிய கில்லாயோ? வேறா
இருப்பிடம்மற் றில்லையோ ? என்னோ ? - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய்; அவள்.

95

அவளோர் குலமங்கை பாகத்(து) அகலாள்
இவளோர் சலமகளும் ஈதே; -தவளநீ(று)
என்பணிவீர் என்றும் பிரிந்தறியீர்; ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங்(கு) ஆர்.

96

ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

97


மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ? அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்(டு)
உளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு)
அளைந்தெழுந்த செந்தீ யழல்.

98


அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை
அழகால் அழல்சிவந்த வாறே? - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு.

99


செப்பேந் திளமுலையாள் காணவோ ? தீப்படுகாட்(டு)
அப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடும் நடம்.

100


நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ? ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ(று)
உருமேறோ ஒன்றா உரை.

101


உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ(டு) அண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.