பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப(து) இடர்.
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு) அன்பறா(து) என்நெஞ் சவர்க்கு.
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு) ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத(து) என்கொலோ! கேள்ஆமை - நீள் ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே ‘எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான்.
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான்.
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்; - யானேஅக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன்.
ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள்.
அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன் அருளே, பிறப்பறுப்ப தானால், - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு
எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன்; - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று.
ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்; ஒன்றையென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான், திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற்(கு) ஆளாம் அது.
அதுவே பிரான் ஆமா(று) ஆட்கொள்ளு மாறும் அதுவே; யினியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு.
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர்; - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லே;பாவந் தான்.
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான், தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்; - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானைநினைந்து
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார்; - நினைந்திருந்து மின்செய்வான் செஞ்சடையாய்; வேதியனே என்கின்றேற்(கு) என்செய்வான் கொல்லோ இனி.
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்; இனியோர் இடரில்லோம், நெஞ்சே; - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண்.
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே; கைதொழுது காண்பார்க்குங் காணலாங்; காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே; தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன்.
அரனென்கோ! நான்முகன் என்கோ! அரிய பரனென்கோ! பண்புணர மாட்டேன்; - முரண்அழியத் தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை, யானவனை, எம்மானை இன்று.
இன்று நமக்கெளிதே! மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஓர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு.
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர், பார், ஆகாயம் அப்பொருளுந் தானே; அவன்.
அவனே இருசுடர்,தீ, ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்,காற்(று) ஆவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து.
வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ! - வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை.
பிறையும், புனலும், அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க்(கு) ஆட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது.
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று)! இதுவன்றே என்றனக்(கு)ஒர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற(து) இங்கு.
இங்கிருந்து சொல்லுவதென்! எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று.
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு.
அரவமொன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்; பரவித் தொழுதிரந்தோம் பன்னாள்;- முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண்.
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக, இவர்.
இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை யிகழ்வதே கண்டீர்; - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி, என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர்.
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே; பிறரறியும் பேருணர்வுந் தாமே; - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க்(கு) ஆட்பட்ட பேரன்பே இன்றும் பெருக்கு.
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும்; - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக; நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த(து) எக்கோலத்(து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்.
ஆமா றறியாவே வல்வினைகள்; அந்தரத்தே நாம்ஆளென்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று) ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை யடும்.
அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு.
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆ!ஆ! - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி.
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியால் என்பாக்கை யாலிகழா(து) ஏத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச் சிறுகியதே போலாதே? - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு.
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடிஅணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து.
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்(டு) உள்ளாதார் கூட்டம் ஒருவு.
ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை ஒருபால் உமையவளாம் என்றால், - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ, மின்னுருவோ? நேர்ந்து.
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ? நீயதனை ஈர்ந்தளவே கொண்டி சைய வைத்தாயோ? - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ? என்னோ, இளங்குழவித் திங்கள் இது?
திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல், யாம்விலக்க வல்லமே தானே யறிவான் தனக்கு.
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவாறு என்கொல்? - மனக்கினிய சீராளன், கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன், வானோர் பிரான்.
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை ‘எங்குற்றான்’ என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க்(கு) எளிது.
எளிய(து) இதுஅன்றே! ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர்; ஆ!ஆ! - ஒளிகொள்மிடற்(று) எந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம்.
திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ! பேதாய் - நிறுத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும்; - ஒருநாள் இதுமதியென்(று) ஒன்றாக இன்றளவுந் தேரா(து) அது,மதியொன் றில்லா அரா.
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரிய ஓடி - விராவுவதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே? தன்னோடே ஒப்பான் சடை.
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும், - முடிமேல் வலப்பால்அக் கோலமதி வைத்தான் பங்கின் குலப்பாவை நீலக் குழல்.
குழலார் சிறுபுறுத்துக் கோல்வளையைப் பாகத்து எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்(து) எங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர்.
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்? ஓருருவாய் நின்னோடு ழிதருவான், - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியான், நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு.
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு, கண்டங் கறுத்தவும் அன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு.
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய், சொல்லாய்; - படுவெண் புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்; நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய்; - தூய மடவரலார் வந்து பலியிடார், அஞ்சி, விடவரவம் மேல்ஆட மிக்கு.
மிக்க முழங்கெரியும், வீங்கிய பொங்கிருளும் ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே? - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும், ஆங்கவன்தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ? மாலுருவோ? ஆனேற்றாய் நீறணிவ(து) எவ்வுருவோ நின்னுருவம் மேல்.
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே! - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ(து) அம்மான் திருமேனி அன்று
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது?
ஏதொக்கும் ? ஏதொவ்வா(து) ஏதாகும் ஏதாகா(து) ஏதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு.
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா.
நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ! - நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று.
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு; - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை; மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு
மிடற்றில் விடம்உடையீர், உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறே! - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ, பைத்தாலும் நும்மார்பிற் பாம்பு.
பாம்பும் மதியும்; மடமானும், பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு.
சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்(று) எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி.
முடிமேற் கொடுமதியான், முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனியவலம் உண்டோ, எமக்கு.
எமக்கிதுவோ பேராசை; என்றுந் தவிரா(து) எமக்கொருநாள் காட்டுகியோ? எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந்தன்ன புரிசடையாய், பொங்கிரவில் எந்தெரிபாய்ந் தாடும் இடம்.
இடப்பால, வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே; முக்கண்ணா, கண்.
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன்; - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய், மிக்குலகம் ஏழினுக்குங் கண்ணாளா, ஈதென் கருத்து.
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன்; - பருத்தரங்கம் வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி உள்ளமே எப்போதும் ஓது.
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏதும் நிறைந்தில்லை என்பரால்; - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கலம்.
கலங்கு புனற்கங்கை ஊடால லாலும் இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு.
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து, பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து, எந்தாய் தழும்பேறி யேபாவம்! பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி.
அடிபேரிற் பாதாளம் பேரும்; அடிகள் முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம் மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்; அறிந்தாடும் ஆற்றா(து) அரங்கு.
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும்! ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான்!தான் எவ்வுலகம் ஈந்தளியான்! பன்னாள் இரந்தாற் பணிந்து.
பணிந்தும், படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும், அணிந்தவரை ஏத்தத் - துணிந்தும் எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு.
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும் முன்னின்(று) அடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா(து) அரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால்.
காலனையும் வென்றோம்; கடுநரகம் கைகழன்றோம்; மேலை இருவினையும் வேரறுத்தோம்; - கோல அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து.
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம்; - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட்(கு) என்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது.
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும்நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - நெடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக் கண்டாலும் முக்கணாங் கண்.
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ! பெரியானைக் காணப் பெறின்.
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்(கு)ஈ(து) உறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்.
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள்.
இருளின் உருவென்கோ! மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ! - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி.
ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா(று) என்இதனைக் கூறு.
கூறெமக்கீ தெந்தாய், குளிர்சடையை மீதழித்திட்(டு) ஏற மிகப்பெருகின் என்செய்தி? - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை.
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்; - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென்?
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூர்ச்சடையான், வானோர்க்(கு) அருளாக வைத்த அவன்.
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்; அவன்கண்டாய் அம்பவள வண்ணன்; - அவன்கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால், நன்னெஞ்சே, மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
விருப்பினால் நீபிரிய கில்லாயோ? வேறா இருப்பிடம்மற் றில்லையோ ? என்னோ ? - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய்; அவள்.
அவளோர் குலமங்கை பாகத்(து) அகலாள் இவளோர் சலமகளும் ஈதே; -தவளநீ(று) என்பணிவீர் என்றும் பிரிந்தறியீர்; ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமினிங்(கு) ஆர்.
ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து.
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ? அன்றேல் உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்(டு) உளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு) அளைந்தெழுந்த செந்தீ யழல்.
அழலாட அங்கை சிவந்ததோ? அங்கை அழகால் அழல்சிவந்த வாறே? - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாய்இதனைச் செப்பு.
செப்பேந் திளமுலையாள் காணவோ ? தீப்படுகாட்(டு) அப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தாய் ஆடும் நடம்.
நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல் பொருமேறோ ? ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ(று) உருமேறோ ஒன்றா உரை.
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ(டு) அண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து.