பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / ஆறந்தம்
வ.எண் பாடல்
1

வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நல்போத அந்தமும்
ஓதத்தகும் எட்டு யோகாந்த அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே.

2

அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு
அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே.

3

தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்து அணுவன் தனைகண்டு
தேனார் பராபரம் சேர் சிவ யோகமாய்
ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே.

4

நித்தம் பரனோடு உயிர் உற்று நீள் மனம்
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து
அத்தன் பரன்பால் அடைதல் சித்தாந்தமே.

5

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறுஆறு
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே.

6

உள்ள உயிர் ஆறுஆறு அது ஆகும் உபாதியைத்
தெள்ளி அகன்று நாத அந்தத்தைச் செற்று மேல்
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே.

7

தேடும் இயம நியம ஆதி சென்று அகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடு உறச் சீவன் பரமாகப் பற்று அறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

8

கொள்கையில் ஆன கலாந்தம் குறிக் கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்தாதி மேதாதிக்கு
உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

9

தெளியும் இவை அன்றித் தேர் ஐங் கலை வேறு
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார் கட்கு
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேச ஞானத் தொடு ஐந்தாமே.

10

ஆகும் அனாதி கலை ஆகம வேதம்
ஆகும் அத் தந்திரம் அந்நூல் வழி நிற்றல்
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம்
ஆகும் சிவ போதகம் உபதேசமே.

11

தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை
வாசா மகோசர மா நந்தி தானே.

12

தான் அவன் ஆகும் சமாதி தலைப் படில்
ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே.

13

ஆறு அந்தமும் சென்று அடங்கும் அந்நேயத்தே
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்தம் உண்மையே

14

உண்மைக் கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம்
உண்மைக் கலை ஒன்றில் ஈறு ஆய நாத அந்தத்து
உண்மைக் கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே.

15

ஆவுடையாளை அரன் வந்து கொண்டபின்
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து
வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

16

கருதும் அவர் தம் கருத்தினுக்கு ஒப்ப
அரன் உரை செய்து அருள் ஆகமம் தன்னில்
வரு சமயப் புற மாயை மா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

17

வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்தத் ஆன பிரணவத்துள் புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாது கண்டு இன்புறுவோர்களே.

18

வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரா உதயம் ஆகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே.

19

வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட
நாதாந்த பாசம் விடு நல்ல தொம் பதம்
மீதாந்த காரணோ பாதி ஏழ் மெய்ப் பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே.

20

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்தமாம் பரன் பால் புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.

21

அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும்
உண்டு என்ற பேர் ஒளிக்கு உள்ளாம் உள ஒளி
பண்டு உறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே.

22

கோ உணர்த்தும் சத்தியாலே குறி வைத்துத்
தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே
பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப
ஒவ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே.

23

ஒருவனை உன்னார் உயிர் தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி
அருவனும் ஆகிய ஆதரத் தானே.

24

அரன் அன்பர் தானம் அது ஆகிச் சிவத்து
வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரன் உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன் உறு தோயாச் சிவா நந்தி ஆமே.

25

வேதாந்த தொம் பதம் மேவும் பசு என்ப
நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவ சாயுச்சியம் ஆமே.

26

சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும்
அவம் அவம் ஆகும் அவ் அவ் இரண்டும்
சிவம் ஆம் சதா சிவம் செய்து ஒன்றான் ஆனால்
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே.

27

சித்தாந்தத் தேசீவன் முத்தி சித்தித்தலால்
சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம் பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

28

சிவனைப் பரமன் உள் சீவன் உள் காட்டும்
அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான்
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவம் ஆம்
தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே.

29

தத்துவம் ஆகும் சகள வகளங்கள்
தத்துவம் ஆம் விந்து நாதம் சதா சிவம்
தத்துவம் ஆகும் சீவன் தன் தற்பரம்
தத்துவம் ஆம் சிவ சாயுச் சியமே.

30

வேதமோடு ஆகமம் மெய் ஆம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம்
பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே.

31

பரா னந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரா னந்த மேல் மூன்றும் பாழ் உறு ஆனந்தம்
விரா முத்திரானந்தம் மெய்ந் நடன ஆனந்தம்
பொரா நின்ற உள்ளமே பூரிப்பியாமே.

32

ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே.

33

அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம் தன்னை
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே.

34

அனாதி சீவன் ஐம் மலம் அற்றப் பாலாய்
அனாதி அடக்கித் தனைக் கண்டு அரனாய்
தனாதி மலம் கெடத் தத்துவா தீதம்
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே.

35

உயிரைப் பரனை உயர் சிவன் தன்னை
அயர்வு அற்று அறி தொந்தத் தசி அதனால்
செயல் அற்ற அறிவாகியும் சென்று அடங்கி
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே.

36

மன்னிய சோகமா மாமறையாளர் தம்
சென்னியது ஆன சிவயோகம் ஆம் ஈது என்ன
அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள்
துன்னிய ஆகம நூல் எனத் தோன்றுமே.

37

முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அப்
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே.