பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / கரு உற்பத்தி
வ.எண் பாடல்
1

ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.

2

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை கின்ற இன் உயிர் போந்து உற நாடிப்
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே.

3

இன்புறு காலத்து இருவர் முன் பூறிய
துன்புறு பாசத்து உயர்மனை வான் உளன்
பண்பு உறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்பு உறு காலத்து அமைத்து ஒழிந்தானே.

4

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே.

5

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈர் ஐந்தொடு ஏறிப்
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே.

6

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.

7

ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேர் அரசு ஆளுமே.

8

ஏயம் கலந்த இருவர் தஞ்சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப் பல
காயம் கலந்தது காணப் பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.

9

கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம்
சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.

10

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே.

11

பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே.

12

ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப்
பழி பல செய்கின்ற பாசக் கருவைச்
சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே.

13

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே.

14

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.

15

பிண்டத்தில் உள் உறு பேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள் உறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே.

16

இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.

17

இன்பு உற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.

18

அறியீர் உடம்பினில் ஆகிய வாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.

19

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே.

20

கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன்
கூட்டு கின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர் பட்ட வாறே.

21

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே.

22

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.

23

கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடைப்
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே.

24

அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அவ் ஓர் உயிரைத்
தருகின்றபோது இருகைத் தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே.

25

வகுத்த பிறவியை மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே.

26

மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே.

27

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

28

பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின்னால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

29

பாய்கின்ற வாயுக் குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே.

30

மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

31

குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.

32

கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல் வளையாட்கே.

33

கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே.

34

உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே.

35

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே.

36

இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.

37

குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்ற வாறே.

38

முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதல் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே.

39

பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம்
உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திரு அருளாலே.