பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அடியும், முடியும் அரியும் அயனும் படியும், விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால், இன்ன தெனவறியா ஈங்கோயே, ஓங்காரம் அன்னதென நின்றான் மலை.
அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக் கொந்தவிழ்ந்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின் இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே, மேரு மலைவளைக்கை வில்லி மலை.
அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச் செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின் இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே, நம்மேல் மறுதலைநோய் தீர்ப்பான் மலை.
அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஓடப் பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும் கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே, மையடுத்த கண்டன் மலை.
அரியும், உழுவையும், ஆளியுமே ஈண்டிப் பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே, கூற்றம் திரியாமற் செற்றான் சிலம்பு.
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின் இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே, நம்மேற் கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
இடுதினைதின் வேழங் கடியக் குறவர் வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே, ஏங்குமணி பூண்டகழை யேறி பொருப்பு.
ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை - ஊன்றவைத்(து) என்அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே, மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல் நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே, நம்மேல் வரலாம்நோய் தீர்ப்பான் மலை.
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்பேய்ப் பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே, பூமயிலி தாதை பொருப்பு.
ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள் நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக் குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே, வானோர் குணமருட்டுங் கோளரவன் குன்று.
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக் கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே, தூங்கெயில்கள் சென்றன்று வென்றான் சிலம்பு.
ஏழை இளமாதே, என்னொடுநீ போதென்று கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே, நந்தம் வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
ஏனம் உழுத புழுதி இன மணியைக் கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல் இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே, நம்மேல் மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே, நம்மேல் வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.
ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில் இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும் ஆளரிதான் ஓட, அரிவெருவும் ஈங்கோயே, கோளரிக்கும் காண்பரியான் குன்று.
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத் தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில் தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே, சங்கக் குழையிறுத்த காதுடையான் குன்று.
ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே, கோச்சீயம் காண்பரியான் குன்று.
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர் உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் - கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே, நான்கு மறைக்கீறு கண்டான் மலை.
கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன் கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே, மைக்கொணருங் கண்டன் மலை.
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள் வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே, பாங்கார் குரவரும்பு செஞ்சடையான் குன்று.
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச் சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள் கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே, ஆல்கீழ்நால் வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே, - செறுத்த கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த விடமிடற்றி னான்மருவும் வெற்பு.
கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற் கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கும் உருமென்று புற்றடையும் ஈங்கோயே, காமன் வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா(து) இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று) ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே, பாங்காய வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.
கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே, நீங்காத மான்தரித்த கையான் மலை.
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் - துள்ளி இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே, நந்தம் மனக்கவலை தீர்ப்பான் மலை.
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக் கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லைஅங்கண் பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே, மூவெயிலும் கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே, மேனிப் பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.
கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல் வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் - தண்கோ(டு) இளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே, வேதம் விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.
காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான் கடறு.
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர் கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே, மைந்நீட்டுங் கண்டன் மலை.
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய ஏழை யிளமந்தி சென்றிருந்து - வாழை இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே, இஞ்சி சிலையால்தான் செற்றான் சிலம்பு.
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்(டு) - ஒல்லை இருங்கைக் களிறேறும் ஈங்கோயே, மேல்நோய் வருங்கைக் களைவான் மலை.
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர் கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் - செவ்வை எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே, அன்பர் குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல் படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம் தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே, தாழ்சடைமேல் வண்டூன்றுந் தாரான் மலை
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர் வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே, தீங்கு வரவதனைக் காப்பான் மலை.
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன் கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே, தேங்காதே விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து கொந்தியினி துண்ணக் குறமகளிர் - மந்தி இனமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே, வெற்பின் வளமகளிர் பாகன் மலை.
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத் தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே, இன்பக் குமரன்முது தாதையார் குன்று.
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம் வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக் கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் வண்கொன்றைத் தாரான் வரை.
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப் பிடியட்ட மாக்களிறு போந்து - கடம்முட்டி என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே, ஏந்தழலிற் பொன்னேர் அனையான் பொருப்பு.
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப் புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி மன்னி மணம்புணரும் ஈங்கோயே, மாமதியம் சென்னி அணிந்தான் சிலம்பு.
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத் தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே, மாக்கலைகள் வைத்தான் மலை.
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள் இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே, கோக்குரவை ஆடிகொழுங் குன்று.
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத் தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் - தாமரையின் ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே, எவ்வுயிர்க்கும் வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய் வள்ளவட்டப் பாழி மடலேறி - வெள்ளகட்ட காராமை கண்படுக்கும் ஈங்கோயே, வெங்கூற்றைச் சேராமைச் செற்றான் சிலம்பு.
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள் பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே, பாங்கமரர் சீராட்ட நின்றான் சிலம்பு.
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின் கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின் றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே, வானோர் வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல் ஓகை செறிஆயத் தோடாட - நாகம் இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே, நம்மேல் வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம் இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர் இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே, நங்கை விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.
நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில் நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான் மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே, ஓங்கியசெந் தீக்கையால் ஏந்தி சிலம்பு.
நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின் ஆகந் தழுவி அசைவெய்த - மேகங் கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே, ஓங்கு பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல் வண்கங்கை ஏற்றான் மலை.
பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித் தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக் கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே, வானோர் மருவரியான் மன்னும் மலை.
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண் டெல்லே பிடியென்னும் ஈங்கோயே, மூவெயிலும் வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப் படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் -டிரா இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே, வானோர் குருவருட்குன் றாய்நின்றான் குன்று.
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே, மூவெயிலும் திக்குகக்கச் செற்றான் சிலம்பு.
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம் குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம் இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே, மூன்று வளவெயில்தீ யிட்டான் மலை.
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணவ நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே, மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.
மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த புரையிதணம் பூங்கொடியார்புக்கு - நுரைசிறந்த இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே, பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.
மலையர் கிளிகடிய மற்றப் புறமே கலைகள் வருவனகள் கண்டு - சிலையை இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே, மாதைப் புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர் முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய ஏனற் புனம்நீடும் ஈங்கோயே, தேங்குபுனல் கூனற் பிறையணிந்தான் குன்று.
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல் முந்தி இருந்து முறைமுறையே - நந்தி அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே, கூற்றம் வளைந்தோடச் செற்றான் மலை.
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண் முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த் தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே, செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை.
முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் - ஒள்ளார் எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே, புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல் எல்லிப் புகநுழையும் ஈங்கோயே, தீங்கருப்பு வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
வான மதிதடவல் உற்ற இளமந்தி கான முதுவேயின் கண்ணேறித் - தானங்(கு) இருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே, நம்மேல் வருந்துயரம் தீர்ப்பான் மலை.
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே, மறைகலிக்கும் பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகியதென் றஞ்சிமுது மந்தி - பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே, திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.