பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் / திருஈங்கோய்மலைஎழுபது
வ.எண் பாடல்
1

அடியும், முடியும் அரியும் அயனும்
படியும், விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே, ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.

2

அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்ந்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே, மேரு
மலைவளைக்கை வில்லி மலை.

3

அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே, நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.

4

அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே,
மையடுத்த கண்டன் மலை.

5

அரியும், உழுவையும், ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே, கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.

6

ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே, நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.

7

இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே, ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.

8

ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை - ஊன்றவைத்(து)
என்அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே,
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.

9

ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே, நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.

10

உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்பேய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே,
பூமயிலி தாதை பொருப்பு.

11

ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே, வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.

12

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே, தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.

13

ஏழை இளமாதே, என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ
வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே, நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.

14

ஏனம் உழுத புழுதி இன மணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே, நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.

15

ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை
இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே, நம்மேல்
வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.

16

ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்
ஆளரிதான் ஓட, அரிவெருவும் ஈங்கோயே,
கோளரிக்கும் காண்பரியான் குன்று.

17

ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே, சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.

18

ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே,
கோச்சீயம் காண்பரியான் குன்று.

19

கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் - கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே, நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.

20

கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே,
மைக்கொணருங் கண்டன் மலை.

21

கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே, பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.

22

கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே, ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.

23

கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே, - செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.

24

கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கும்
உருமென்று புற்றடையும் ஈங்கோயே, காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.

25

கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா(து)
இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று)
ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே, பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.

26

கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே
ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே, நீங்காத
மான்தரித்த கையான் மலை.

27

கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் - துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே, நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.

28

கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லைஅங்கண்
பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே, மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.

29

கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே, மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.

30

கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் - தண்கோ(டு)
இளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே, வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.

31

காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு.

32

குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே,
மைந்நீட்டுங் கண்டன் மலை.

33

கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
ஏழை யிளமந்தி சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே, இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.

34

கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்(டு) - ஒல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே, மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.

35

கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் - செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே, அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.

36

கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே, தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை

37

கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே, தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.

38

சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே, தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு

39

சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் - மந்தி
இனமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே, வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.

40

சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே, இன்பக்
குமரன்முது தாதையார் குன்று.

41

தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.

42

செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு போந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே, ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு.

43

சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே, மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.

44

செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே,
மாக்கலைகள் வைத்தான் மலை.

45

தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே,
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.

46

தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே, எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.

47

தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி மடலேறி - வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும் ஈங்கோயே, வெங்கூற்றைச்
சேராமைச் செற்றான் சிலம்பு.

48

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே, பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.

49

தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே, வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.

50

தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறிஆயத் தோடாட - நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே, நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.

51

நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே, நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.

52

நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே, ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.

53

நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த - மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே, ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.

54

பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.

55

பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே, வானோர்
மருவரியான் மன்னும் மலை.

56

பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே, மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.

57

பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் -டிரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே, வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.

58

பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே, மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.

59

மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே, மூன்று
வளவெயில்தீ யிட்டான் மலை.

60

மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணவ நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே,
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.

61

மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார்புக்கு - நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே,
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.

62

மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு - சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே, மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.

63

மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே, தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.

64

மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே - நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே, கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.

65

மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே, செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.

66

முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் - ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே,
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.

67

வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே, தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.

68

வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் - தானங்(கு)
இருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே, நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.

69

வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே, மறைகலிக்கும்
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.

70

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி - பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே, திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.