பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகல் இடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே.
உணர்ந்து இலர் ஈசனை ஊழி செய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன் அருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே.
கும்பக் களிறு ஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிது உறை தையலும் அன்பில் கலவி உள் ஆய் ஒழிந்தாரே.
இன்பக் கலவியில் இட்டு எழுகின்றது ஓர் அன்பில் புக வல்லன் ஆம் எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள் என்பில் பராசத்தி என் அம்மை தானே.
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன் மன் அம்மை ஆகி மருவி உரை செய்யும் பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே.
தார் மேல் உறைகின்ற தண்மலர் நான் முகன் பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள பூ மேல் உறைகின்ற போது அகம் வந்தனள் நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே.
ஆணையம் ஆய் அருந்தாது உள் இருந்தவர் மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின் பாழ்நயம் ஆய பரத்தை அறிந்தபின் தாள்நயம் ஆய அனாதனன் தானே.
தானே எழுந்த இத்தத்துவ நாயகி வான் நேர் எழுந்து மதியை விளக்கினள் தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடம் உடை மன்று அறியீரே.
அறிவு ஆன மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவு ஆன மங்கை அருள் அது சேரில் பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் நெறி ஆய சித்தம் நினைந்து இருந்தாளே.
இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம் செய்யாமல் அருளுடன் தூங்கப் பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே.
பாலனும் ஆகும் பரா சத்தி தன்னொடு மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்படச் சாலவும் ஆய் நின்ற தற் பரத்தாளே.
நின்ற பரா சத்தி நீள் பரன் தன்னொடு நின்று அறி ஞானமும் இச்சையும் ஆய் நிற்கும் நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே மன்றன் அவற்றுள் மருவிடும் தானே.
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் கரு ஒத்து நின்று கலங்கின போது திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.
சிந்தையின் உள்ளே திரியும் சிவ சத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தம் ஒடு ஆதி அதாம் வண்ணத் தாளே.
ஆறி இருந்த அமுத பயோதரி மாறி இருந்த வழி அறிவார் இல்லை தேறி இருந்து நல்தீபத்து ஒளியுடன் ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே.
உடையவன் அங்கி உருத்திர சோதி விடை அவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடை அது ஆகிய சாதகர் தாமே.
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது பார் மேல் இதழ் பதின் எட்டின் இருநூறு உள பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார் மேல் உறைகின்ற பைந் தொடியாளே.
பைங்கொடியாளும் பரமன் இருந்திடத் திண் கொடி ஆகத் திகழ் தரு சோதி ஆம் விண் கொடி ஆகி விளங்கி வருதலால் பெண் கொடி ஆக நடந்தது உலகே.
நடந்தது அம் மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி அடுத்தே.
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகத்தே செல முடுக்கும் தாமரை முச் சதுரத்தே.
முச் சதுரத்தே எழுந்த முளைச் சுடர் எச் சதுரத்தும் இடம் பெற ஓடிடக் கைச் சதுரத்துக் கடந்து உள் ஒளிபெற எச்சதுரத்தும் இருந்தனள் தானே.
இருந்தனள் தன் முகம் ஆறு ஒடு நால் ஆய் பரந்தன வாயு திசை திசை தோறும் குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி நடந்தது தேறல் அதோ முகம் அம்பே.
அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய செம் பொன் செய் யாக்கை செறிகமழ் நாள்தொறும் நம்பனை நோக்கி நவிலுகின்றாளே.
நவிலும் பெரும் தெய்வம் நால் மறைச் சத்தி துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து புகலும் முச்சோதி புனைய நிற்பாளே.
புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள் வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே புனைய வல்லாள் மண்டலத்து ஒளி தன்னைப் புனைய வல்லாளையும் போற்றி என்பேனே.
போற்றி என்பேன் புவனா பதி அம்மை என் ஆற்றல் உள் நிற்கும் அரும் தவப் பெண் பிள்ளை சீற்றம் கடிந்த திரு நுதல் சேயிழை கூற்றம் துரக்கின்ற கோள் பைந் தொடியே.
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை ஆம் மங்கை சங்கைச் செடியார் வினை கெடச் சேர்வரை என்று என்று அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே.
மெல் இசைப் பாவை வியோமத்தின் மென் கொடி பல் இசைப் பாவை பயன் தரு பைங் கொடி புல் இசைப் பாவையைப் போகத்துரந்திட்டு வல் இசைப் பாவை மனம் புகுந்தாளே.
தாவித் தவப் பொருள் தானவன் எம் இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பரா சத்தி மேலொடு கீழ் தொடர்ந்து ஆவிக்கும் அப் பொருள் தான் அது தானே.
அது இது என்பார் அவனை அறியார் கதி வர நின்றது ஓர் காரணம் காணார் மது விரி பூங் குழல் மா மங்கை நங்கை திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே.