பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திரு மூல நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
இந்திரன் மால் அயன் முதல்ஆம் இமையவர்க்கு நெறி அருளும்
நந்தி திருஅருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்.

2

மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார்
கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால்
உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு
நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார்.

3

மன்னு திருக் கேதாரம் வழி பட்டு, மா முனிவர்
பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்
துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை
அன்ன மலி அகன் துறை நீர் அரும்கரையின் மருங்கு அணைந்தார்.

4

கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துஉறை நீல் கடல் ஏற்றும்
அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி,
மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சித்
திங்கள் அணி சடையர் திருக்காளத்தி மலை சேர்ந்தார்.

5

நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி
ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தித்
தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து
மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார்.

6

நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க்
கல் புரிசைத் திருஅதிகை கலந்து இறைஞ்சிக் கறைக் கண்டர்
அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப்
பொன் பதியாம் பெரும் பற்றப் புலியூரில் வந்து அணைந்தார்.

7

எவ் உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச்
செவ்விய அன்பு உற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து
வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை
அவ் இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்.

8

தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்
அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே
விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே
கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்.

9

காவிரி நீர்ப் பெருந்தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி
ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து
சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து
மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார்.

10

அந்நிலைமைத் தானத்தை அகலாதது ஒரு கருத்து
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப்
பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள்
பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார்.

11

அந்தணர்தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடித் தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர்உடையான்
வந்து தனி மேய்க் கின்றான் வினைமாள வாழ்நாளை
வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான்.

12

மற்று அவன் தன் உடம்பினைஅக் கோக் குலங்கள் வந்து அணைந்து
சுற்றி மிகக் கதறுவன சுழல்வன மோப்பன வாக
நல் தவ யோகியர் காணா நம்பர் அருளாலே ஆ
உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார்.

13

இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்.

14

பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம்
நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து
வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின்
நீத்த துயரின வாகி நிரைந்து போய் மேந்தன ஆல்.

15

ஆவின் நிரை மகிழ்வு உறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய்
மேவி அவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம்
காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப்
பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார்.

16

வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச்
சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன்
பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி
வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார்.

17

போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார்
மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்த்தார் என்று
ஆன பயத்துடன் சென்றே, அவர் நின்ற வழி கண்டாள்
ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார்.

18

அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள்
தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத் தளர,
இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்துப்
பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள்புகுந்தார்.

19

இல்லான் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம்
சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள்
பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப
நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார்.

20

பித்து உற்ற மயல் அன்று; பிறிது ஒரு சார்பு உளது அன்று
சித்த விகற்பம் களைந்து, தெளிந்த சிவ யோகத்தில்
வைத்த கருத்தினர் ஆகி வரம்பு இல் பெருமையில் இருந்தார
இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார்.

21

பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல்
முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள்
சுற்ற இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி
மற்று அவளும் மையல் உற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார்.

22

இந்த நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள்
வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த
முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார்.

23

தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக்
கண்ணிய அத் திரு அருளால் அவ் உடலைக் கரப்பிக்க
எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உணர்ந்தார்.

24

சுற்றிய அக் குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்குத் தொடர்வு இன்மை
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின்
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச்
செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார்.

25

ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி
மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த்
தே இருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று
பூ அலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார்.

26

ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய
ஞானம் முதல் நான்கும் அலர் நல் திரு மந்திர மாலை
பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்று ஆகப் பரம் பொருள் ஆம்
ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்தான் என எடுத்து.

27

முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி,
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து,
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்.

28

நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை எலாம்
மலர்ந்த மொழித் திருமூல தேவர் மலர்க் கழல் வணங்கி
அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட
தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம்.