பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப் பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே.
தானே அருளால் சிவயோகம் தங்காது தானே அக் காமம் ஆதி தங்குவோனும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும் ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே.
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்று இரண்டு ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே.
ஆறு ஐந்து பன் னொன்றும் அன்றிச் சக மார்க்கம் வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின் னந்தோடு ஏறும் இரு பத்து ஒரு நாள் இடைத்து ஓங்கும் ஆறின் மிகுத்து ஓங்கும் அக்காலம் செய்யவே.
செய்யும் அளற்று இரு நால் முகூர்த்தமே எய்யும் கலை காலம் இந்து பருதி கால் நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே.
விடும் காண் முன் ஐந்திரியங்களைப் போல் நடுங்காது இருப்பானும் ஐ ஐந்து நண்ணப் படுங்காதல் மாதின்பால் பற்று அற விட்டுக் கடுங்கால் கரணம் கருத்து உறக் கொண்டே.
கொண்ட குணனே நலனே நல் கோமளம் பண்டை உருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உள் செல்லக் கண்டு ஏவிடே.
விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே தொட்டு உறும் காலங்கள் தோன்றக் கருதிய கட்டிய வாழ் நாள் சா நாள் குணம் கீழ்மை சீர்ப் பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே.
பார்த்திட்டு வைத்துப் பரப்பு அற்று உருப் பெற்று வார்ச்சென்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்து உற்ற இரு திங்கள் சேராது அகலினும் மூப்பு உற்றே பின் நாளில் ஆம் எல்லாம் உள்ளவே.
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை வித்தினில் வித்தை விது அர உணர்வ ரேல் மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே.
கருத்தினில் அக்கரம் ஆய் உயவும் யாவும் கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் கருத்தது வித்தாய்க் காரண காரியம் கருத்து உறுமாறு இவை கற்பனை தானே.
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலம் சத்தி ஒழியாத புத்தி தபம் செபம் மோனம் அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே.
வற்ற அனலைக் கொளுவி மறித்து ஏற்றி உற்ற சுழி அனல் சொருகிச் சுடர் உற்று முற்று மதியத்து அமுதை முறை முறை செற்று உண்பவரே சிவ யோகியாரே.
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் உரை அமிர் உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே.
அண்ணல் உடல் ஆகி அவ் அனல் விந்துவும் மண் இடை மாய்க்கும் பிராணன் ஆம் விந்துவும் கண்ணும் கனல் இடைக் கட்டி கலந்து எரித்து உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே.
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்பு கின்றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரியச் செறிவாய் இருந்து சேரவே மாயுமே.
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்னக் காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சத கோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே.
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன் காலங்களின் விந்து செற்று உற்ற காரிகை காலின் கண் வந்த கலப்பு அறியாரே.
கலக்கு நாள் முன்னாள் தன் இடைக் காதல் நலத் தக வேண்டில் அந் நாரி உதரக் கலத்தின் மலத்தைத் தண் சீதத்தைப் பித்தை விலக்குவன செய்து மேல் அணைவீரே.
மேலா நிலத்து எழு விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறி வழியே சென்று பால் ஆம் அமிர்து உண்டு பற்று அறப் பற்றினால் மால் ஆனது மாள மாளும் அவ் விந்துவே.
விந்து விளையும் விளைவின் பயன் முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் தந்து உணர்வோர்க்குச் சயம் ஆகும் விந்துவே.
விந்து என் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியினாலே நயம் தெரித்து அந்தம் இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றிச் சந்திரன் சார்பு உறத் தண் அமுது ஆமே.
அமுதச் சசிவிந்து ஆம் விந்து மாள அமுதப் புனல் ஓடி அங்கியின் மாள அமுதச் சிவ போகம் ஆதலால் சித்தி அமுதப் பலாவன ஆங்கு உறும் யோகிக்கே.
யோகம் அவ் விந்து ஒழியா வகை புணர்ந்து ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறாப் போகம் சிவபோகம் போகி நல் போகமா மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே.
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலின் ஆல் விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிர் ஆசை கைக் கொண்டே வாடுவர் காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே.
சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை எழ மூட்டி நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே.
விந்துவும் நாதமும் மேவக் கனல் மூல வந்தவன் நன் மயிர்க்கால் தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவ மகம் ஆகவே விந்துவும் மாளும் மெய்க் காயத்தில் வித்திலே.
வித்துக் குற்று உண்பான் விலை அறியாதவன் வித்துக் குற்று உண்ணாமல் வித்துச் சுட்டு உண்பவன் வித்துக் குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் வித்துக் குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே.
அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு மன்னப் பிராணன் ஆம் விந்து மறித்திட்டு மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட அன்ன அத் திரு விந்து ஆயும் காயத்திலே
அன்னம் பிராணன் என்றார்க்கும் இருவிந்து தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாம் உருத்தோன்றும் எண் சித்தி ஆம் அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே.
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணன் ஆய் ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை சென்று பரா சத்தி விந்து சயம் தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே.
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை வானே உயர்விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே.
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்த இப் பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் அந்தமும் ஆதியும் ஆம் மந்திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே.
வறுக்கின்ற வாறு மனத்து உலா வெற்றி நிறுக்கின்ற வாறும் அந் நீள் வரை ஒட்டிப் பொறிக்கின்ற வாறும் அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள் வரும் அத்திப் பழமே.
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடிச் சந்திரனோடே தலைப் படும் ஆயிடில் அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே.
மனத்தொடு சத்து மனம் செவி அன்ன இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே.
சத்தமும் சத்த மனமும் மனக் கருத்து ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ் இடம் தானே.
உரமடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி கரு முலை மீ மிசை கைக் கீழில் கால் ஆம் விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே.