பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருநாட்டுச் சிறப்பு
வ.எண் பாடல்
001

பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள்,
கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில்,
சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி
நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன்.

002

ஆதி மாதவ முனி அகத்தியன் தரு
பூத நீர்க் கமண்டலம் பொழிந்த, காவிரி,
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்தது ஓர்
ஓத நீர் நித்திலத் தாமம் ஒக்கும் ஆல்.

003

சைய மால் வரை பயில் தலைமை சான்றது;
செய்ய பூமகட்கு நற் செவிலி போன்றது;
வையகம் பல் உயிர் வளர்த்து, நாள் தொறும்
உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது.

004

மாலின் உந்திச் சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால், பல் உயிர் தருதல் மாண்பினால்
கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால்,
போலும் நான் முகனையும் பொன்னி மாநதி.

005

திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்,
எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழி
கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே.

006

வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால்,
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்,
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.

007

வம்புஉலா மலர், நீரால் வழிபட்டுச்
செம் பொன் வார் கரை எண்ணில் சிவ ஆலயத்து
எம் பிரானை இறைஞ்சலின், ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்கும் ஆல்.

008

வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர்,
தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே.

009

மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புது மதுப் பொங்கிட,
வாவியின் பொலி நாடு வளம் தரக்,
காவிரிப் புனல் கால் பரந்து ஓங்கும் ஆல்.

010

ஒண் துறைத் தலை மா மத கூடு போய்,
மண்டு நீர், வயலுள் புக, வந்துஎதிர்
கொண்ட மள்ளர், குரைத்த கை ஓசை போய்,
அண்டர் வானத்தின் அப் புறம் சாரும் ஆல்.

011

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும்,
ஓதைஆர் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவ.

012

உழுத சால் மிக ஊறித் தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதுஇல் காவிரி நாட்டின் பரப்பு எலாம்.

013

மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரியக்
கண்டு உழவர் பதம் காட்டக் களைகளையும் கடைசியர்கள்,
தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார்;
வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார்.

014

செங்குவளை பறித்து அணிவார்; கருங் குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களைக் கொடுஉகைத்து அயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள் நுதல் வெயர்வு அரும்பச் சிறுமுறுவல் தளவு அரும்பப்
பொங்கு மலர்க் கமலத்தின் புது மதுவாய் மடுத்து அயர்வார்.

015

கரும்புஅல்ல நெல் என்னக் கமுகு அல்ல கரும்பு என்னச்
சுரும்பு அல்ல குடைநீலத் துகள் அல்ல; பகல் எல்லாம்;
அரும்பு அல்ல முலைஎன்ன, அமுது அல்ல மொழி என்ன,
வரும்பல்ஆயிரம் கடைசி மடந்தையர்கள்; வயல் எல்லாம்.

016

கயல் பாய் பைந் தடம் நந்து ஊன் கழிந்த பெருங் கருங்குழிசி,
வியல்வாய் வெள் வளைத் தரள, மலர்வேரி உலைப்பெய்து அங்கு
அயல்ஆமை அடுப்பு ஏற்றி, அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும்,
வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு; வரம்பு எல்லாம்.

017

காடு எல்லாம் கழைக் கரும்பு; கா எல்லாம் குழைக்கு அரும்பு;
மாடு எல்லாம் கருங் குவளை; வயல் எல்லாம் நெருங்குவளை;
கோடு எல்லாம் மட அன்னம்; குளம் எல்லாம் கடல் அன்ன;
நாடு எல்லாம் நீர் நாடு தனை ஒவ்வா நலம் எல்லாம்.

018

ஆலை பாய்பவர் ஆர்ப்பு உறும் ஓலமும்
சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான் மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவும் ஆல்.

019

அன்னம் ஆடும் அகன் துறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத், துதைந்து எழும்
கன்னி வாளை, கமுகின் மேல் பாய்வன
மன்னு வான் மிசை வானவில் போலும் ஆல்.

020

காவினில் பயிலும் களி வண்டு இனம்,
வாவியில் படிந்து உண்ணும் மலர் மது;
மேவி அத்தடம் மீது எழப் பாய் கயல்;
தாவி அப்பொழிலின் கனி சாடுமால்.

021

சாலி நீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலி தாம் வெண்மை உண்மைக் கருவின் ஆம் வளத்த ஆகிச்
சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர்
ஆல் இன சிந்தை போல அலர்ந்தன; கதிர்கள் எல்லாம்.

022

பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்,
மொய்த்த நீள் பத்தியின்பால் முதிர்தலை, வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல, விளைந்தன; சாலி எல்லாம்.

023

அரிதரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்;
பரிவுஉறத் தடிந்த பன்மீன் படர் நெடும் குன்று செய்வார்;
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு உயர்ப்பார்;
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார்.

024

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம்,
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலம் கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே.

025

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
செய்ய பொன் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர், வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று ஆல்
மொய் வரை உலகம் போலும்; முளரி நீர் மருத வைப்பு.

026

அரசு கொள் கடன்கள் ஆற்றி, மிகுதிகொண்டு அறங்கள் பேணிப்
பரவுஅரும் கடவுள் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி, விளங்கிய குடிகள் ஓங்கி
வரை புரை மாடம் நீடி மல்ர்ந்துஉள; பதிகள் எங்கும்.

027

கரும்பு அடு களமர் ஆலைக் கமழ் நறும் புகையோ மாதர்
சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ, யூப வேள்விப்
பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ, வானின்
வரும் கரு முகிலோ? சூழ்வ; மாடமும் காவும் எங்கும்.

028

நாளி கேரம் செருந்தி, நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசாலம் தமாலம் குளிர் மலர்க் குரவம் எங்கும்
தாள் இரும் போந்து சந்து தண்மலர் நாகம், எங்கும்
நீள் இலை வஞ்சி, காஞ்சி, நிறைமலர்க் கோங்கம் எங்கும்.

029

சூத பாடலங்கள் எங்கும்; சூழ் வழை ஞாழல் எங்கும்
சாதி மாலதிகள் எங்கும்; தண்தளிர் நறவம் எங்கும்;
மாதவி, சரளம் எங்கும்; வகுள சண்பகங்கள் எங்கும்;
போது அவிழ் கைதை எங்கும்; பூக புன்னாகம் எங்கும்.

030

மங்கல வினைகள் எங்கும்; மணம் செய் கம்பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும்; பண்களின் மழலை எங்கும்;
பொங்கு ஒளிக் கலன்கள் எங்கும்; புது மலர்ப் பந்தர் எங்கும்;
செங் கயல் பழனம் எங்கும்; திருமகள் உறையுள் எங்கும்.

031

மேகமும் களிறும் எங்கும்; வேதமும் கிடையும் எங்கும்;
யாகமும் சடங்கும் எங்கும்; இன்பமும் மகிழ்வும் எங்கும்;
யோகமும் தவமும் எங்கும்; ஊசலும் மறுகும் எங்கும்;
போகமும் பொலிவும் எங்கும்; புண்ணிய முனிவர் எங்கும்.

032

பண் தரு விபஞ்சி எங்கும்: பாத செம் பஞ்சி எங்கும்;
வண்டு அறை குழல்கள் எங்கும்; வளர் இசைக் குழல்கள் எங்கும்,
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும்;
தண்டலை பலவும் எங்கும்; தாதகி பலவும் எங்கும்.

033

மாடு போதகங்கள் எங்கும்; வண்டு போதுஅகங்கள் எங்கும்;
பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும்;
நீடு கேதனங்கள் எங்கும்; நிதி நிகேதனங்கள் எங்கும்;
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.

034

வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா; தனயரும் அனையில் தப்பா;
நீதிய புள்ளும் மாவும்; நிலத்து இருப்புஉள்ளும் ஆவும்
ஓதிய எழுத்து ஆம் அஞ்சும்; உறுபிணி வரத் தாம் அஞ்சும்.

035

நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு, என்றும்
பொன் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால்
மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ?