பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

புகழ்ச் சோழ நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்குஎல்லாம் உள்ளு ஊறையூர் ஆம் உறையூர்.

2

அளவு இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும்
இள வெயிலின் சுடர்ப்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க்
கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடி கெழுவும்
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்.

3

நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு இல் பல பொருள் பிறங்கும்
ஆகரம் ஒத்து உள அளவில் ஆவண வீதிகள் எல்லாம்.

4

பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்
போர் முக வெங் கறை அடியும் புடையினம் என்று அடையவரும்
சோர் மழையின் விடு மதத்துச் சுடரும் நெடுமின் ஓடைக்
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைக்களம் எல்லாம்.

5

படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம்.

6

துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும்
விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர்
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர்க் கிடங்கு.

7

கார் ஏறும் கோபுரங்கள்; கதிர் ஏறும் மலர்ச் சோலை;
தேர் ஏறும் மணி வீதி; திசை ஏறும் வசை இல் அணி;
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை; ஒண்
பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர்வு அரிது ஆல்.

8

அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்;
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளக்கும்
சென்னி நீடு அநபாயன் திருக்குலத்து வழி முதலோர்
பொன்னி நதிப் புரவலனார் புகழ்ச் சோழர் எனப் பொலிவார்.

9

ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து
பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்பத்
திருமலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப
அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்.

10

பிறை வளரும் செஞ்சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக்
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார்.

11

அங் கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து
கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத்
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில்
மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார்.

12

வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்திச்
சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில்
முந்து உற வந்து அணைந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார்.

13

மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன்
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த
ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம்
நீள் இடை வில் இலகு மணி முதல் நிறையும் திறை கண்டார்.

14

திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி
முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர்
உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள்.

15

சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்.

16

விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும்
துளங்கு ஒளி நீள் முடியார்க்குத் தொல் முறைமை நெறி அமைச்சர்
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார்.

17

ஆங்கு அவன் யார் ? என்று அருள அதிகன் அவன் அணித்தாக
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப,
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ! படை எழுந்துஅ
பாங்கு அரணம் துகள் ஆகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார்.

18

அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து
கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார்
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக
மிடல் உடை நால் கருவி உற வெஞ் சமரம் மிக விளைத்தார்.

19

வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற
அளவு இல் அரணக்குறும்பின் அதிகர் கோன் அடல் படையும்
உளம் நிறை வெஞ் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக்
கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தன ஆல்.

20

கயமொடு கயம் எதிர் குத்தின
அயம் உடன் அயம்முனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியன் அமர் வியல் இடம் மிக்கதே.

21

மலையொடு மலைகள் மலைந்துஎன
அலை மத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத் தெறு
கொலை மத கரிகொலை உற்றவே.

22

சூறை மாருதம் ஒத்து எதிர்
ஏறு பாய் பரி வித்தகர்
வேறு வேறு தலைப் பெய்து
சீறி ஆவி செகுத்தனர்.

23

மண்டு போரின் மலைப்பவர்
துண்டம் ஆயிட உற்று எதிர்
கண்டர் ஆவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே.

24

வீடினார் உடலின் பொழி
நீடுவார் குருதிப் புனல்
ஓடும் ஆறு என ஒத்தது
கோடு போல்வ பிணக் குவை.

25

வான் நிலாவு கருங்கொடி
மேன் நிலாவு பருந்து இனம்
ஏனை நீள் கழுகின் குலம்
ஆன ஊண் ஒடு எழுந்தவே.

26

வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள்
சுரிகைப் படை சத்தி கழுக் கடைவேல்
எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல்
முரிவு உற்றன துற்றன மொய்க் களமே.

27

வடிவேல் அதிகன் படைமாள வரைக்
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக்
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்
முடி நேரியனார் படை முற்றியதே.

28

முற்றும் பொரு சேனை முனைத் தலையில்
கல் திண் புரிசைப் பதி கட்டு அழியப்
பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச்
சுற்றும் படை வீரர் துணித்தனரே.

29

மாறு உற்ற விறல் படை வாள் அதிகன்
நூறு உற்ற பெரும்படை நூழில் படப்
பாறு உற்ற எயில் பதி பற்று அற விட்டு
ஏறு உற்றனன் ஓடி இரும் சுரமே.

30

அதிகன் படை போர் பொருது அற்ற; தலைப்
பொதியின் குவை எண் இல போயின பின்
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா
எதிரும் கரி பற்றினர் எண் இலரே.

31

அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்
இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்
தரணித் தலைவன் கழல் சார் வுறவே.

32

மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்
முன் வந்த கரும் தலை மொய் குவைதான்
மின்னும் சுடர் மா முடிவேல் வளவன்
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உள்ளோர்.

33

மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
எண் இல் பெருகும் தலை யாவையினும்
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் நடுக்
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே.

34

கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது
கொண்ட பெரும் பயத்தின் உடன் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
திண் திறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்.

35

முரசு உடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி
உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து, யான்
அரசு அளித்தபடி சால அழகு இது! என அழிந்து அயர்வார்.

36

தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் திருமுடியார்
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவர் ஆனார்;
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார்.

37

என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார்
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து
மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப
வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார்.

38

அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றிக்
கை மாற்றும் செயல்தாமே கடன் ஆற்றும் கருத்து உடையார்
செம்மார்க்கம் தலை நின்று செந் தீ முன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார்.

39

கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனகமணிக் கலத்து ஏந்திக்
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி,
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்.

40

புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்பச்
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சே வடியின்
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்.

41

முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
பிரசம் கொள்நறும் தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
பரசும் குற் றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்.