பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமலைச் சிறப்பு
வ.எண் பாடல்
001

பொன்னின் வெண்திரு நீறு புனைந்து எனப்
பன்னும் நீள் பனி மால் வரைப் பால் அது
தன்னை யார்க்கும் அறிவுஅரியான் என்றும்
மன்னி, வாழ், கயிலைத் திரு மா மலை.

002

அண்ணல் வீற்று இருக்கப் பெற்றது ஆதலின்
நண்ணும் மூன்று உலகும் நான்மறைகளும்
எண்ணில் மா தவம் செய்ய, வந்து எய்திய
புண்ணியம், திரண்டு உள்ளது போல்வது.

003

நிலவும் எண் இல் தலங்களூம், நீடு ஒளி
இலகு தண் தளிர் ஆக, எழுந்தது ஓர்
உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல்
மலரும் வெண் மலர் போல்வது; அம் மால்வரை.

004

மேன்மை நான் மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் கார் எதிர்
தான மாக்கள் முழக்கமும் தாஇல் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம்.

005

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ்,
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன் அரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம்.

006

நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறள் சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம்.

007

நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டு அவன்,
தூய மால் வரைச் சோதியில் மூழ்கி ஒன்று
ஆய அன்னமும் காணாது அயர்க்கும் ஆல்.

008

காதில் வெண்குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான்,
சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு,
மீது எழு பண்டைச் செம் சுடர் இன்று வெண்சுடர் ஆனது என்று அதன் கீழ்
ஆதி ஏனமதாய் இடக்கல் உற்றான் என்று, அதனை வந்து அணைதரும் கலு

009

அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க,
வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி,
நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாம் கடவுளர் போற்றப் பொலிவது அத் திருமலைப் புறம்பு.

010

வேத நான் முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந் தடையாம் கதிர் மணிக் கோபுரத்து உள்ளான்
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்
நாதனார், ஆதி தேவனார், கோயில் நாயகன்; நந்தி எம் பெருமான்.

011

நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர்; நீறு அணி மேனியர்; அநேகர்
பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார்; பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்;
மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அக் கயிலைமா

012

கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி
ஐயர், வீற்றிருக்கும் தன்மையின் ஆலும், அளப்பரும் பெருமையின் ஆலும்,
மெய் ஒளி தழைக்கும் தூய்மையின் ஆலும், வெற்றி வெண்குடை அந பாயன்
செய்ய கோல் அபயன் திருமனத்து ஓங்கும் திருக் கயிலாய நீள் சிலம்பு.

013

அன்ன தன் திருத் தாழ் வரையின் இடத்து,
இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்ன அரும் சீர் உப மன்னிய முனி.

014

யாதவன், துவரைக்கு இறை ஆகிய
மாதவன் முடி மேல் அடி வைத்தவன்;
பூதநாதன் பொரு அரும் தொண்டினுக்கு,
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்;

015

அத்தர் தந்த அருள் பால் கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்;
பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்து உழி,

016

அம் கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு
பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிடத்
துங்க மாதவர், சூழ்ந்து இருந்தார், எலாம்,
‘இங்கு இதுஎன் கொல் அதிசயம்’ என்றலும்,

017

அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள்
சிந்தியா உணர்ந்து அம் முனி, ‘தென் திசை
வந்த நாவலர் கோன், புகழ் வன் தொண்டன்,
எந்தையார் அருளால் அணைவான்’ என.

018

கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத் திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள் சடை மாமுனி செல்வுழி,
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.

019

சம்புவின் அடித் தாமரைப் போதுஅலால்
எம்பிரான்! இறைஞ்சாய்; இஃது என்?’ எனத்
‘தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன்;
நம்பி ஆரூரன்; நாம் தொழும் தன்மையான்’.

020

என்று கூற இறைஞ்சி இயம்புவார்,
‘வென்ற பேர் ஒளியார் செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பும் நசையின் ஓம்
இன்று எமக்கு உரை செய்து அருள்’ என்றலும்,

021

உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான்;
‘வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருள் ஆகிய
வள்ளல் சாத்தும்’ மது மலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன்;

022

அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு,
இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திடத்
துன்னினான் நந்தனவனச் சூழலில்,

023

‘அங்கு, முன் எமை ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திடத்
திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவின் உடைப் பூவைமார்;

024

‘அந்தம் இல் சீர் அனிந்திதை, ஆய் குழல்
கந்தம் மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய் வுழி,
வந்து வானவர் ஈசர் அருள்’ என,

025

‘மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்
போதுவான் அவர் மேல் மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.

026

முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன
பன் மலர், கொய்து செல்லப், பனிமலர்
அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின்,

027

ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே,
“மாதர் மேல் மனம் வைத்தனை, தென் புவி்
மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய்” என

028

கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கி னான்;
“செய்ய சேவடி நீங்கும் சிறுமை யேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி,
ஐயனே! தடுத்து ஆண்டு அருள் செய்” என,

029

அங் கணாளன் அதற்கு அருள் செய்த பின்,
நங்கை மாருடன் நம்பி, மற்று அத் திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாரும்’ என்று
அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன்.

030

அந்த ணாளரும், ஆங்கு அது கேட்டவர்;
“பந்த மானுடப் பால்படு தென்திசை
இந்த வான் திசை எட்டினும் மேல் பட
வந்த புண்ணியம் யாது?” என மாதவன்;

031

பொரு அருந் தவத்தான் புலிக் காலனாம்
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது;
பெருமை சேர் பெரும் பற்றப் புலியூர் என்று
ஒருமை யாளர் வைப்புஆம் பதி ஓங்கும் ஆல்;

032

அத் திருப்பதியில் நமை ஆளு ஓடை
மெய்த் தவக்கொடி காண, விருப்புடனுன்
அத்தன், நீடிய அம்பலத்து ஆடும்; மற்று
இத் திறம் பெறலாம் திசை எத்திசை?

033

‘பூதம் யாவையின் உள்அலர் போது என,
வேத மூலம் வெளிப்படும் மேதினிக்
காதல் மங்கை இதய கமலம்ஆம்
மாது ஒர் பாகனார் ஆரூர், மலர்ந்தது ஆல்.

034

எம் பிராட்டி இவ் ஏழ்உலகு ஈன்றவள்,
தம் பிரானைத் தனித் தவத்தால் எய்திக்
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது;

035

‘நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து,
பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது;
கங்கை, வேணி மலரக் கனல் மலர்
செங்கை யாளர், ஐயாறும் திகழ்வது;

036

தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூசனைக்குப் பொருந்தும் இடம் பல;
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.

037

என்று மாமுனி வன் தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால், அடியவர்
தொன்று சீர்த்’திருத் தொண்டத் தொகை’ விரி
இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன்.

038

மற்று இதற்குப் ‘பதிகம்’ வன் தொண்டர் தாம்
புற்று இடத்து எம் புராணர் அருளினால்
சொற்ற, மெய்த் ‘திருத்தொண்டத்தொகை’ எனப்
பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்.

039

அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை
நம்தம் நாதனாம் நம்பியாண் டார் நம்பி
புந்தி ஆரப் புகன்ற வகையினால்,
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.

040

உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகுஇல் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்து உறை
குலவு தண்புனல் நாட்டு அணி கூறுவாம்.