பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / அட்டமா சித்திபரகாயப் பிரவேசம்
வ.எண் பாடல்
1

பணிந்து எண்திசையும் பரமனை நாடித்
துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்து எண் திசை சென்று தாபித்த வாறே.

2

பரிசு அறி வானவர் பண்பன் அடி எனத்
துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி
பெரியது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.

3

குரவன் அருளில் குறிவழி மூலன்
பரையின் மணம்மிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே.

4

காயாதி பூதம் கலை கால மாயையில்
ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே
ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.

5

இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.

6

மதி தனில் ஈர் ஆறாய் மன்னும் கலையின்
உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈர் ஆறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈர் ஆறு சித்திகள் ஆமே.

7

நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈர் ஆறே.

8

ஏழ் ஆனதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன் பதிற்றான் பர காயமே.

9

ஈர் ஐந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர் ஒன்று பன் ஒன்றில் ஈர் ஆறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈர் ஆறே.

10

தானே அனுவும் சகத்துத்தன் நொய்ம்மையும்
மானாக் கனமும் பரகாயத்து ஏகமும்
தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே.

11

தாங்கிய தன்மையும் தான் அணுப் பல் உயிர்
வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வர முத்தி முந்தியவாறே.

12

முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாய் இடச்
சிந்தை செயச் செய மண் முதல் தேர்ந்து அறிந்து
உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே.

13

சித்தம் திரிந்து சிவ மயம் ஆகிய
முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.

14

ஒத்த இவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ் ஒன்பதின் மிக்க தனம் செயன்
ஒத்த இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.

15

இருக்கும் தனம் செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்று ஆய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே.

16

வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.

17

கண்ணில் வியாதி ரோகம் தனஞ் செயன்
கண்ணில் இவ் வாணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.

18

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர் விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே.

19

ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வல்லார் கட்கு
ஒன்பது காட்சி இலை பல ஆமே.

20

ஓங்கிய அங்கிக் கீழ் ஒண் சுழுனைச் செல்ல
வாங்கி இரவி மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
ஆங்கு அது சொன்னோம் அருவழி யோர்க்கே.......

21

தலைப் பட்ட வாறு அண்ணல் தையலை நாடி
வலைப் பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
துலைப் பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே.

22

ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர்
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

23

கட்டி இட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டு இட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டி இட்டு நின்று களம் கனி ஊடுபோய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.

24

பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
ஏர் அணி கன்னியர் எழு நூற்று அம் சாக்கினார்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.

25

விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை
கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார் முதல் பூதம்
இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே.

26

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
தடை அவை ஆறு ஏழும் தண் சுடர் உள்ளே
மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே.

27

ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதன் உள்
மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
நடம் கொண்ட கூத்தனும் நாடு கின்றானே.

28

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன் சென்று அத் திருவினைக் கைக் கொண்டு
பாடி உள் நின்ற பகைவரைக் கட்டி இட்டு
மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே.

29

அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே.

30

எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடு நாடி மூலத்தன் அல் பானு
விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே.

31

சித்திகள் எட்டு அன்றிச் சேர் எட்டியோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை
சத்தி அருள் தரத் தான் உள ஆகுமே.

32

எட்டு இவை தன்னோடு எழில் பரம் கை கூடப்
பட்டவர் சித்தர் பர லோகம் சேர்தலால்
இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே.

33

மந்திரம் ஏறு மதி பானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத்
தந்து இன்றி நல் காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.

34

முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
அணிந்த அணிமாகை தான் ஆம் இவனும்
தணிந்த அப் பஞ்சினும் தான் ஒய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.

35

ஆகின்ற அத் தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலது ஆய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்றதை ஆண்டின் மால் அகு ஆகுமே.

36

மால் அகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும்
பால் ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல் ஒளி ஆகிய மெய்ப் பொருள் காணுமே

37

மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாள் உடன்
தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப் பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப் பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே

38

ஆகின்ற கால் ஒளி ஆவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
மேல் நின்ற காலம் வெளி உற நின்றன
தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.

39

தன்வழி ஆகத் தழைத்திடும் ஞானமும்
தன் வழி ஆகத் தழைத்திடும் வையகம்
தன் வழி ஆகத் தழைத்த பொருள் எல்லாம்
தன் வழி தன் அருள் ஆகி நின்றானே.

40

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே.

41

ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின்
பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
ஏகின்ற காலம் வெளிஉற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லைஏ.

42

போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
யாவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே.

43

அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
பறிந்தது பூதப் படை அவை எல்லாம்
குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகயம் மேவலும் ஆமே.

44

ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்
மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
கான விளக்கு ஒளி கண்டு கொள்வார் கட்கு
மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே.

45

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படை அவை எல்லாம்
கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
பண்டை அவ் ஈசன் தத்துவம் ஆகுமே.

46

ஆகின்ற சந்திரன் தன் ஒளி ஆய் அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே.

47

தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன் எனும் தன்மயன் ஆமே.

48

தன்மை அது ஆகத் தழைத்த கலையின் உள்
பன்மை அது ஆகப் பரந்த ஐம் பூதத்தை
வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் காணுமே.

49

மெய்ப் பொருள் ஆக விளைந்தது ஏது எனின்
நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம்
கைப் பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம்
தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே.

50

தன்மை அது ஆகத் தழைத்த பகலவன்
மென்மை அது ஆகிய மெய்ப் பொருள் கண்டிடின்
பொன்மை அது ஆகப் புலன்களும் போயிட
நன்மை அது ஆகிய நல்கொடி காணுமே.

51

நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அக் கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டு
பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கல் கொடி ஆகிய காமுகன் ஆமே.

52

காமரு தத்துவம் ஆனது வந்தபின்
பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
மா மரு உன் இடை மெய்த் தடுமானன் ஆய்
நா மருவும் ஒளி நாயகம் ஆனதே.

53

நாயகம் ஆகிய நல் ஒளி கண்டபின்
தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும்
போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின்
பேய் அகம் ஆகிய பேர் ஒளி காணுமே

54

பேர் ஒளி ஆகிய பெரிய அவ் வேட்டையும்
பார் ஒளி ஆகப் பதைப்பு அறக் கண்டவன்
தார் ஒளி ஆகத் தரணி முழுதும் ஆம்
ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே.

55

காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
கால் அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
கால் அது வேண்டிக் கொண்ட இவ் ஆறே.

56

ஆறது ஆகும் அமிர்தத் தலையின் உள்
ஆறது ஆயிர முந்நூற்று தொடைஞ்சு உள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆக வளர்ப்பது இரண்டே.

57

இரண்டின் மேலே சதா சிவ நாயகி
இரண்டது கால் கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.

58

அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

59

ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
ஒன்று அது கால் கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்று அது வென்றி கொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே.

60

முன் எழும் அக் கலை நாயகி தன்னுடன்
முன் உறு வாயு முடிவகை சொல்லிடின்
முன் உறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சும் ஆய்
முன் உறு வாயு முடி வகை ஆமே.

61

ஆய் வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய் வரும் ஐஞ்ஞூற்று முப்பதோடு ஒன்பது
மாய் வரு வாயு வளப்பு உள் இருந்தே.

62

இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்று உடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே

63

எழுகின்ற சோதியுள் நாயகி தன் பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பான் அது நாலாய்
எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே.

64

ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

65

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து
உந்திச் சமாதி யுடை ஒளியோகியே.

66

அணங்கு அற்றம் ஆதல் அரும்சன நீவல்
வணங்கு உற்ற கல்விமா ஞானம் மிகுத்தல்
சுணங்கு உற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே.

67

மரணம் சரை விடல் வண்பர காயம்
இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணன் திருஉற வாதன் மூ ஏழாங்
கரன் உறு கேள்வி கணக்கு அறிந்தேனே.

68

ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர் அறிவாரே.

69

மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்கக்
கோலிய ஐம் முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனி நாதம்
பாலித்த சத்தி பரை பரன் பாதமே.

70

ஆதார யோகத்து அதி தேவொடும் சென்று
மீது ஆன தற்பரை மேவும் பரன் ஒடு
மேதாதி ஈர் எண் கலை செல்லம் மீது ஒளி
ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே.

71

மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய் அடியார்க்குப்
பதி அது காட்டும் பரமன் நின்றானே.

72

கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து
பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு
நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே.