கருமங் கேண்மதி! கருமங் கேண்மதி!
துருமதிப் பாண கருமங் கேண்மதி!
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
5
காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்
தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே
இறுகுபு, சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறுத் தனைய வுருவுகொண்(டு) உள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்தமந்(து) அன்னம்
10
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்
சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்(து)
இன்புற் றிருநிதி எய்தும் அதுநுன(து)
உள்ளத்(து) உள்ள தாயின், மதுமலர்
15
வண்டறை சோலை வளவயல் அகவ,
ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகழ்
உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரண் கணையக் கபாட
20.
விளையக் கோபுர விளங்கெழில் வாயில்
நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஒளிச் சூளிகை வளாகம்
25.
அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய
நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
30.
கழுமல நாதன், கவுணியர் குலபதி,
தண்டமிழ் விரகன், சைவ சிகாமணி,
பண்டிதர் இன்பன், பாசமய கோளரி
என்புனை தமிழ்கொண்(டு), இரங்கிஎன் உள்ளத்(து)
அன்பினை யருளியஆண்தகை தன்புகழ்
35.
குறைவறுத்(து) உள்கி, நிறைகடை குறுகி
நாப்பொலி நல்லிசை பாட,
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.