பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மாடு விரைப் பொலி சோலையின் வான் மதி வந்து ஏறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற, நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு.
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல் மேவி, உறங்குவ மென் சிறை வண்டு; விரைக் கஞ்சப் பூவில் உறங்குவ நீள் கயல்; பூ மலி தே மாவின் காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி.
வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப் பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால், அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலைக் கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை.
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடக்கிப் போய்த் தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்து ஏறிப் பைங் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ; பாளை என.
அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று, கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும் மல்கு வளத்தது; முல்லை உடுத்த மருங்கு ஓர்பால்.
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத் தண் நகை வெண் முகை மேவு சுரும்பு; தடஞ்சாலிப் பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின் வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம்.
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடாம் அங்கு அது மண்ணின் அரும் கலமாக, அதற்கே ஓர் மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்.
ஒப்பு இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பு இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது; சீர் மேவும் அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்; வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலின் பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து, எங்கும் தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு ஊனம் இல் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்.
கன்றொடு பால் மறை நாகு, கறப்பன பால் ஆவும் புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் வென்றி விடைக் குலம் ஓடும் இனம் தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள்.
ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்து என்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் காவலர் தம் பெருமான் அடி அன்பு உறு கானத்தின் மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேல் கொண்டார்
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் அந்தம் முதல் நால் இரண்டில் அரிந்து, நரம்பு உறு தானம் வந்த துளை நிரை யாக்கி, வாயு முதல் வழங்கு துளை அந்தம் இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து.
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும் தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்துத் அடுத்த சரா சரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார்; அங்கு ஒரு நாள்.
வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி, மருங்கு உயர்ந்த தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணித் தொடை செருகிப் பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து, காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி.
வெண் கோடல் இலைச் சுருளில் பைந் தோட்டு விரைத் தோன்றித் தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத் திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோர் கண் கோடல் நிறைந்து ஆராக் கவின் விளங்க மிசை அணிந்து.
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச் செறிந்த புனை வடம் தாழத் திரள் தோளின் புடை அலங்கல் அறைந்த சுரும்பு இசை அரும்ப, அரை உடுத்த மரவுரியின் புறம் தழையின் மலி தானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய.
சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும் மேவும் இசை வேய்ங் குழலும் மிக விளங்க, வினை செய்யும் காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழப் பூ அலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார்.
நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடிப் புறவம் பாடக் கோல வெண் முகை யேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட, ஆலும் மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலம் நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள்.
எம் மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடைப் பொதுவர் தம் மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வரும் தலைவர், அம் மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு செம் மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார்.
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என மன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல் நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார்.
அன்பு ஊறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால் வன் பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம் முன் பூதி வரும் அளவின் முறைமையே எவ் உயிரும் என்பூடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ங் கருவிகளில்.
ஏழு விரல் இடை இட்ட இன் இசை வங்கியம் எடுத்துத் தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போலச் சூழும் முரன்று எழ நின்று தூய பெருந்தனித் துளையில் வாழிய! நம் தோன்றலார் மணி அதரம் வைத்து.
முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து, வைத்த துளை ஆராய்ச்சி வக்கானை வழி போக்கி, ஒத்த நிலை உணர்ந்து அதன்பின், ஒன்று முதல் படி முறையாம் அத் தகைமை ஆரோசை அமர் ஓசைகளின் அமைத்தார்.
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லைப் பண் ஆக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு எழுத்தின் இசை பெருகக் கூறிய பட்டு அடைக்குரல் ஆம் கொடிப் பாலையினில் நிறுத்தி.
ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து மேய துளை பற்றுவன விடுப்பன ஆம் விரல் நிரையின் சேய வொளி இடை அலையத் திருவாளன் எழுத்து அஞ்சும் தூய இசைக் கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார்.
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கிச் சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்கு உண்ண.
எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பு என்னும் வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் பண் அமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்.
வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின் உள் உறை அஞ்சு எழுத்து ஆக, எழும் ஒழுகி மதுர ஒலி வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன் தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க.
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயரப் பால் நுரை வாய்த் தாய் முலையில் பற்றும் இளம் கன்று இனமும் தான் உணவு மறந்து ஒழியத் தட மருப்பின் விடைக் குலமும் மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய.
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்.
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்; மணி வரை வாழ் அர மகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்; தணிவு இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர், அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்.
சுர மகளிர் கற்பகப் பூஞ் சோலைகளின் மருங்கு இருந்து, கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் விரவு நறும் குழல் அலைய, விமானங்கள் விரைந்து ஏறிப் பரவிய ஏழ் இசை அமுதம் செவி மடுத்துப் பருகினார்.
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்; சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்; புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல் வாயும்.
மருவிய கால் விசைத்து அசையா; மரங்கள் மலர்ச் சினை சலியா; கருவரை வீழ் அருவிகளும் கான் ஆறும் கலித்து ஓடா; பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா; இரு விசும்பின் இடை முழங்கா; எழு கடலும் இடை துளும்பா.
இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசை மயமாய், மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயின ஆல், மொய் வாச நறும் கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர் செவ் வாயின் மிசை வைத்த திருக் குழல் வாசனை உருக்க.
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப் பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும் ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன், கான் ஆதி காரணர் ஆம் கண் நுதலார் விடை உகைத்து, வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ்.
திசை முழுதும் கண நாதர் தேவர்கட்கு முன் நெருங்கி மிசை மிடைந்து வரும் பொழுது, வேற்று ஒலிகள் விரவாமே அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு எழுத்தால் தமைப் பரவும் இசை விரும்பும் கூத்தனார் எழுந்து அருளி எதிர் நின்றார்.
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் செந் நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க, இந் நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும் அந் நின்ற நிலை பெயர்ப்பார், ஐயர் திரு மருங்கு அணைந்தார்.
விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க, எண்ணில் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த, அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப் புண்ணியனார் எழுந்து அருளிப் பொன் பொதுவின் இடைப் புக்கார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக் காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப, மாது கொள் புலவி நீக்க மனை இடை இரு கால் செல்லத் தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்.