பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இருந்த இவ் வட்டங்கள் ஈராறு ரேகை இருந்த இரேகை மேல் ஈர் ஆறு இருத்தி இருந்த மனைகளும் ஈர் ஆறு பத்து ஒன்று இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.
தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும் தான் ஒன்று அந்நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் தான் ஒன்று நால் கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் தான் ஒன்றிலே ஒன்று அவ் அரன் தானே.
அரகர என்ன அரியது ஒன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும் பிறப்பு அன்றே.
எட்டு நிலை உள எம் கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இரு மூன்றும் ஈர் ஏழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான் மொழி பாலே.
மட்டு அவிழ் தாமரை மாது நல்லா ளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே.
ஆலயம் ஆக அமர்ந்த பஞ் சாக்கரம் ஆலயம் ஆக அமர்ந்த இத் தூலம் போய் ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே.
இருந்த இவ்வட்டம் இருமூன்று ரேகை இருந்த அதன் உள் இரேகை ஐந்து ஆக இருந்த அறைகள் இருபத்து ஐந்து ஆக இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே.
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இரு கண் சிகாரம் ஆய் நகார வகார நல் காலது நாடுமே.
நாடும் பிரணவ நடு இரு பக்கமும் ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது நாடு நடுவுள் முக நமசிவாய வாடும் சிவாய நம புற வட்டத்து ஆயதே.
ஆயும் சிவாய நம மசி வாய ந வாயு நமசி வாய யநம சிவாய ந வாயுமே வாய நமசி எனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்ட அந்தத்து அடைவிலே.
அடைவினில் ஐம்பதும் ஐ ஐந்து அறையின் அடையும் அறை ஒன்றுக்குக் கீழ் எழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும் அடைவின் எழுத்து ஐம் பத்து ஒன்றும் அமர்ந்ததே.
அமர்ந்த அரகர ஆம் புற வட்டம் அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள் வட்டம் அமர்ந்த அசபை ஆம் அதன் உள் வட்டம் அமர்ந்த ரேகையும் ஆகின்ற சூலமே.
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும் சூலத் தலையினில் சூழும் ஓங் காரத்தால் சூலத்து இடை வெளி தோற்றிடும் அஞ்சு எழுத்து ஆலப் பதிக்கும் அடைவது ஆமே.
அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம் அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம் பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே.
பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது சோர் உற்ற சக்கர வட்டத்து உள் சந்தியின் நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம் ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே.
இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன் புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.
ஆறு எட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் ஏறு இட்ட அதன் மேல் விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நம என்னக் கூறிட்டு மும் மலம் கூப்பிட்டுப் போமே.
அண்ணல் இருப்பது அவளக் கரத்து உளே பெண்ணின் நல்லாளும் பிரான் அக் கரத்து உளே எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திடப் புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே.
அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல் வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும் மவ்விட்டு மேலே வளி உறக் கண்ட பின் தொம் இட்டு நின்ற சுடக் கொழுந்து ஆமே.
அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்குச் சவ் உண்டு சத்தி சதா சிவன் தானே.
அஞ்சு எழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்சு எழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்சு எழுத்து ஆகிய வக்கர சக்கரம் அஞ்சு எழுத்து உள்ளே அமர்ந்து இருந்தானே.
கூத்தனைக் காணும் குறிபல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார் கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய் நிற்பர் கூத்தனைக் காணும் குறி அது ஆமே.
அத் திசைக்குள் நின்ற அனலை எழுப்பியே அத் திசைக்குள் நின்ற நவ் எழுத்து ஓதினால் அத் திசைக்குள் நின்ற அந்த மறையனை அத் திசைக்குள் உறவு ஆக்கினன் தானே.
தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேல் உற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதிடத் தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே.
கல் ஒளியே என நின்ற வட திசை கல் ஒளியே என நின்றனன் இந்திரன் கல் ஒளியே என நின்ற சிகாரத்தை கல் ஒளியே எனக் காட்டி நின்றானே.
தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும் தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவன் ஆமே.
மறையவன் ஆக மதித்த பிறவி மறையவன் ஆக மதித்திடக் காண்பர் மறையவன் அஞ்சு எழுத்து உள் நிற்கப் பெற்ற மறையவன் அஞ்சு எழுத்தாம் அது ஆகுமே.
ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் ஆகின்ற சீய் இரு தோள் வவ்வாய் கண்ட பின் ஆகின்ற அச் சுடர் அவ் இயல்பு ஆமே.
அவ் இயல்பு ஆய இரு மூன்று எழுத்து ஐந்தையும் செவ் இயல்பு ஆகச் சிறந்தனன் நந்தியும் ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் பவ் இயல்பு ஆகப் பரந்து நின்றானே.
பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம் வரம்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரம் சூழ்பகை போக உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே.
ஓம் என்று எழுப்பித் தன் உத்தம நந்தியை நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே.
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும் பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்து ஓர் எழுத்துள் நிற்கப் பாகு ஒன்றி நிற்கும் பரா பரன் தானே.
பரம் ஆய அஞ்சு எழுத்துள் நடு ஆகப் பரம் ஆய நவசிம பார்க்கில் மவய நசி பரம் ஆய சிய நம ஆம் பரத்து ஓதில் பரம் ஆய வாசி மய நம ஆய் நின்றே.
நின்ற எழுத்துக்கள் நேர் தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர் தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர் தர நின்றிடில் நின்ற எழுத்து உள்ளும் நின்றனன் தானே.
நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம் மன்ற அதுவாய் நின்ற மாய நல் நாடனைக் கன்று அது ஆகக் கறந்தனன் நந்தியும் குன்று இடை நின்றிடும் கொள்கையன் ஆமே.
கொண்ட இச் சக்கரத்து உள்ளே குணம் பல கொண்ட இச் சக்கரத்து உள்ளே குறி ஐந்தும் கொண்ட இச் சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும் கொண்ட இச் சக்கரத்து உள் நின்ற கூத்தே.
வெளியில் இரேகை இரேகையில் அத்தலை சுளியில் உகாரம் ஆம் சுற்றிய வன்னி நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் தெளியும் பிரகாரம் சிவ மந்திரமே.
அகார உகார சிகார நடுவாய் வகார மோடு ஆறும் வளியுடன் கூடிச் சிகாரம் உடனே சிவன் சிந்தை செய்ய ஒகார முதல்வன் உவந்து நின்றானே.
அற்ற இடத்தே அகாரம் அது ஆவது உற்ற இடத்தே உறு பொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே.
அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால் உவ் என்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ் என்று என் உள்ளே வழி பட்ட நந்தியை எவ் வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை யார் இவ் எழுத்தை அறிவார் அவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.
காலை நடுஉறக் காயத்தில் அக்கரம் மாலை நடுஉற ஐம்பதும் ஆவன மேலை நடுஉற வேதம் விளம்பிய மூலம் நடு உற முத்தித் தானே.
நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று பாவிகளத்தின் பயன் அறிவார் இல்லை ஓவியராலும் அறிய ஒண்ணாது அது தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே.
அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின் உள்ளே உதயம் பண்ணா நிற்கும் சந்தி செய்யா நிற்பர் தாம் அறிகிலர் அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே.
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே.
அருவினில் அம்பரம் அங்கு எழு நாதம் பெருகு துடி இடை பேணிய விந்து மருவி அகார சிகார நடுவாய் உருவிட ஊறும் உறு மந்திரமே.
ஆறு எழுத்து ஓதும் அறிவார் அறிகிலார் ஆறு எழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு ஓர் எழுத்தாலே உயிர் பெறலாமே.
ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூ அஞ்சும் ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐ இரு மூன்று உள நாத எழுத்து இட்டு நாடிக் கொள்ளீரே.
விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலை அதாய்க் கந்தர வாகரம் கால் உடம்பு ஆயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்து ஒன்று ஆயதே.
ஐம்பது எழுத்தே அனைத்தும் வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமம் களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்சு எழுத்து ஆமே.
அஞ்சு எழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்சு எழுத்தால் பல யோனி படைத்தனன் அஞ்சு எழுத்தால் இவ் அகல் இடம் தாங்கினன் அஞ்சு எழுத்தாலே அமர்ந்து நின்றானே.
வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தைச் சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத் துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரி சடையோனே.
உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும் பண் உறு கேள்வியும் பாடலும் ஆய் நிற்கும் விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ எண் நின்று எழுத்து அஞ்சும் ஆகிநின்றானே.
ஐந்தின் பெருமையே அகல் இடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகை செயப் பாலனும் ஆமே.
வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும் நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து ஓர் எழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே.
நால் ஆம் எழுத்து ஓசை ஞாலம் உருவது நால் ஆம் எழுத்தின் உள் ஞாலம் அடங்கிற்று நால் ஆம் எழுத்தே நவில வல்லார் கட்கு நால் ஆம் எழுத்து அது நல் நெறி தானே.
பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின் இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர நட்டம் அது ஆடு நடுவே நிலயம் கொண்டு அட்ட தேசப் பொருள் ஆகி நின்றாளே.
அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வரு முப்பதத்தில் சிகாரம் சிவம் ஆய் வகாரம் வடிவமாய் அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.
நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஒகார முதல் கொண்டு ஒருகால் உரைக்க மகார முதல்வன் மனத்து அகத்தானே.
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்சு எழுத்து அங்குசம் ஆவன அஞ்சையும் கூடத் தடுக்க வல்லார் கட்கே அஞ்சு ஆதி ஆதி அகம் புகல் ஆமே.
ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகர் ஆதி மாற்றி மகர் ஆதி நந்தியை மூலத்தே நாடிப் பரை யொடும் சந்தி செய்வார்க்குச் சடங்கு இல்லை தானே.
மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் தெருள் வந்த சிவனார் சென்று இவற்றாலே அருள் தங்கி அச் சிவம் ஆவது வீடே.
அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்தபின் நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே.
சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச் சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும் சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள் சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே
சிகார வகார யகாரம் உடனே நகார மகார நடுஉற நாடி ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்து நின்றானே.
நம் முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள் அம் முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம் முதல் உள்ளே தெளிய வல்லார் கட்குத் தம் முதல் ஆகும் சதா சிவம் தானே.
நவமும் சிவமும் உயிர் பரம் ஆகும் தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும் சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அச் சிவம் என்பது ஆனாம் எனும் தெளி உற்றதே.
கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் தேடி அதனைத் தெளிந்து அறியீரே.
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு எனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில் வட்டத்திலே அறை நாற்பத்து எட்டும் இட்டுச் சிட்டம் அஞ்சு எழுத்தும் செபி சீக்கிரமே.
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆன இம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய் சிவ சக்கரத்தானே.
பட்டன மாதவம் ஆறும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே.
வித்து ஆம் செக மயம் ஆக வரை கீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப் பின் உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும் பத்து ஆம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே.
கண்டு எழுந்தேன் கமலம் மலர் உள் இடை கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்துப் பண்டு அழியாத பதிவழியே சென்று நண் பழியாமே நம எனல் ஆமே.
புண்ணிய வானவர் பூ மழை தூவி நின்று எண்ணுவர் அண்ணல் இணை அடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தைக் கண் என உன்னிக் கலந்து நின்றாரே.
ஆறு எழுத்து ஆவது ஆறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர் சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.
எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே கட்டிய ஒன்று எட்டாய்க் காண நிறை இட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே.
நம் முதல் அவ்வொடு நாவினர் ஆகியே அம் முதல் ஆகிய எட்டு இடை உற்று இட்டு உம் முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் உம் முதல் ஆயவன் உற்று நின்றானே.
நின்ற அரசு அம் பலகை மேல் நேர் ஆக ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் துன்று எழுகையுள் பூசிச் சுடர் இடைத்து அன்ற வெதுப்பு இடத் தம்பனம் காணுமே.
கரண விறளிப் பலகை யமன் திசை மரணம் இட்டு எட்டின் மகார எழுத்து இட்டு வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே.
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பங்கு படவே பலாசப் பலகையில் ஆங்கு அரு மேட்டில் கடுப் பூசி விந்து விட்டு ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே.
உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் பச் சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சதுரத்தின் முது காட்டில் வைத்திட வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்து இட்டு வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண் பதினாயிரம் வேண்டிலே.
எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டு எண்ணாப் பொன் ஒளி எழுவெள்ளி பூசிடா வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி எண்ணா எழுத்து எட்டாயிரம் வேண்டிலே.