பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து, நீள்மலர்க் கண்பனிப்ப வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி லேன்அன்று வானருய்ய நஞ்சங் கருந்து பெருந்தகை யே;நல்ல தில்லைநின்ற அஞ்செம் பவளவண் ணா!வருட் கியானினி யாரென்பனே.
என்பும், தழுவிய ஊனும், நெகஅக மேயெழுந்த அன்பின் வழிவந்த வாரமிர் தே!யடி யேனுரைத்த வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்;வளர் தில்லைதன்னுள் மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.
அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியானழுந் தாமைவாங்கித் தவநெறிக் கேயிட்ட தத்துவ னே!அத் தவப்பயனாம் சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ னே!சென னந்தொறுஞ்செய் பவமறுத் தாள்வதற் கோ,தில்லை நட்டம் பயில்கின்றதே.
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம்; பனிமலர்த்தார் முயல்கின் றிலேன்நின் திருவடிக் கேயப்ப; முன்னுதில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துளெந் தாய்!இங்ஙனே அயர்கின்ற நானெங்ங னேபெறு மாறுநின் னாரருளே.
அருதிக்கு விம்ம நிவந்த(து)ஓர் வெள்ளிக் குன்றமஞ்சு பருதிக் குழுவி யுமிழ்கின்றதே யொக்கும்; பற்றுவிட்டோர் கருதித் தொழுகழற் பாதமும், கைத்தலம் நான்கும்,மெய்த்த கருதிப் பதமுழங் குந்தில்லை மேய சுடரிருட்கே.
சுடலைப் பொடியும் படுதலை மாலையும், சூழ்ந்தவென்பும் மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும் அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை விடலைக்கென் ஆனைக் கழ(கு)இது வேத வினோதத்தையே.
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள் நாத னவனெச்சன் நற்றலை யும்,தக்க னார்தலையுங் காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழ்ந்துநின்று மாதவ ரென்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.
வழுத்திய சீர்த்திரு மாலுல குண்டு,வன் பாம்புதன்னின் கழுத்தரு கேதுயின் றான்உட்கப் பாந்தளைக் கங்கணமாச் செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கையிட, அழுத்திய கல்லொத் தன்ஆய னாகிய மாயவனே.
மாயவன், முந்நீர்த் துயின்றவன், அன்று மருதிடையே போயவன் காணாத பூங்கழல், நல்ல புலத்தினர்நெஞ்(சு) ஏயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழலெவர்க்குந் தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே.
நிழல்படு பூண்நெடு மாலயன் காணாமை நீண்டவரே தழல்படு பொன்னக லேந்தித் தமருகம் தாடித்தமைத்(து) எழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை யம்பலத்தே குழல்படு சொல்வழி யாடுவர், யாவர்க்குங் கூத்தினையே.
கூத்தனென் றுந்தில்லை வாணனென் றுங்குழு மிட்டிமையோர் ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே, யிடுதுணங்கை, மூத்தவன் பெண்டிர் குணலையிட் டாலும், முகில்நிறத்த சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம் பலந்தன்னின் மன்னிநின்ற விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் னுடல்முழுதும் கண்ணாங் கிலோ!தொழக் கையாங் கிலோ!திரு நாமங்கள்கற்(று) எண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோ!வெனக் கிப்பிறப்பே.
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம், பேரொலிநீர் நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடக மாடுகின்ற துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர் உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே.
உண்டேன் அவரரு ளாரமிர் தத்தினை வுண்டலுமே கண்டேன் எடுத்த கழலுங் கனலுங் கவித்தகையும்; ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கு மொளிநகையும் வண்டேன் மலர்த்தில்லை யம்பலத் தாடும் மணியினையே.
மணியொப் பன,திரு மால்மகு டத்து; மலர்க்கமலத்(து) அணியொப் பன,வவன் தன்முடி மேலடி யேனிடர்க்குத் துணியச் சமைத்தநல் ஈர்வா ளனையன சூழ்பொழில்கள் திணியத் திகழ்தில்லை யம்பலத் தான்தன் திருந்தடியே.
அடியிட்ட கண்ணினுக் கோ?அவ னன்பினுக் கோ?அவுணர் செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோ?தில்லை யம்பலத்து முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும் அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.
படைபடு கண்ணிதன் பங்க!தென் தில்லைப் பரம்பர!வல் விடைபடு கேதுக! விண்ணப்பங் கேளென் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய், புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே.
புகவுகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி, மிகவுகும் மாற்கரும் பாதத்த னேல்,வியன் தில்லைதன்னுள் நகவு குலாமதிக் கண்ணி,யற்(கு) கங்கண னென்றனன்றும் தகவு கொலாம்,தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.
சங்கோர் கரத்தன் மகன்,தக்கன், தானவர், நான்முகத்தோன் செங்கோல விந்திரன், தோள்,தலை, யூர்,வேள்வி, சீருடலம் அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்; எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.
ஏவுசெய் மேருத் தடக்கை யெழில்தில்லை யம்பலத்து மேவுசெய் மேனிப் பிரானன்றி யங்கணர் மிக்குளரே? காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத் தேவுசெய் வான்;வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.
வேடனென் றாள்;வில் விசயற்கு வெங்கணை யன்றளித்த கோடனென் றாள்;குழைக் காதனென் றாள்இடக் காதிலிட்ட தோடனென் றாள்;தொகு சீர்த்தில்லை யம்பலத் தாடுகின்ற சேடனென் றாள்;மங்கை யங்கைச் சரிவளை சிந்தினவே.
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள் வந்திக் கவும்மனம் வாய்கர மென்னும் வழிகள்பெற்றுஞ் சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை யம்பலத்துள் அந்திக் கமர்திரு மேனியெம் மான்ற னருள்பெறவே.
அருள்தரு சீர்த்தில்லை யம்பலத் தான்தன் அருளினன்றிப் பொருள்தரு வானத் தரசாத லிற்,புழு வாதல்நன்றாம்; சுருள்தரு செஞ்சடை யோனரு ளேல்,துற விக்குநன்றாம், இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச்சிற் றம்பலத்துப் பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற மிறைப்புள வாகிவெண் ணீறணிந்(து) ஓடேந்தும் வித்தகர்தம் உறைப்புள வோ,வயன் மாலினொ(டு) உம்பர்தம் நாயகற்கே.
அகழ்சூழ் மதில்தில்லை யம்பலக் கூத்த! அடியமிட்ட முகிழ்சூ ழிலையும் முகைகளு மேயுங்கொல்! கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப் புகழ்சூ ழிமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே.
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசெம்பொ னம்பலத்து வேந்தன் தனக்கன்றி யாட்செய்வ தென்னே! விரிதுணிமேல் ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச் சேந்தன் கொடுக்க, வதுவும் திருவமிர் தாகியதே.
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர் பாகங் கனங்குழை யாய்,அரு ளாயெனத் தில்லைப்பிரான் வேகம் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல், மோகங் கலந்தன் றுலந்ததன் றோவிந்த மூவுலகே.
மூவுல கத்தவ ரேத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்(கு) ஏவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த் தாவு தொழிற்பட் டெடுத்தனன் மாலயன் சாரதியா மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.
வேதகச் சிந்தை விரும்பிய வன்,தில்லை யம்பலத்து மேதகக் கோயில்கொண் டோன்,சேய வன்,வீ ரணக்குடிவாய்ப் போதகப் போர்வைப் பொறிவா ளரவரைப் பொங்குசினச் சாதகப் பெண்பிளை தன்ஐயன்; தந்த தலைமகனே.
தலையவன்; பின்னவன்; தாய்;தந்தை; யிந்தத் தராதலத்து நிலையவன் நீக்கு தொழில்புரிந் தோன்;அடு வாகிநின்ற கொலையவன் சூலப் படையவன்; ஆலத் தெழுகொழுந்தின் இலையவன் காண்டற் கருந்தில்லை யம்பலத் துள்ளிறையே.
இறையும் தெளிகிலர், கண்டும், எழில்தில்லை யம்பலத்துள் அறையும் புனல்சென்னி யோனரு ளாலன்(று) அடுகரிமேல் நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்,நிறை தார்ப்பரிமேல் நறையும் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.
நல்வழி நின்றார் பகைநன்று, நொய்ய ருறவிலென்னும் சொல்வழி கண்டனம் யாம்;தொகு சீர்த்தில்லை யம்பலத்து, வில்வழி தானவ ரூரெரித் தோன்,வியன் சாக்கியனார், கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க, சிவகதியே.
. கதியே! யடியவர்க்(கு) எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த நிதியே! நிமிர்புன் சடையமிர் தே!நின்னை யென்னுள்வைத்த மதியே! வளர்தில்லை யம்பலத் தாய்!மகிழ் மாமலையாள் பதியே! பொறுத்தரு ளாய்,கொடி யேன்செய்த பல்பிழையே.
பிழையா யினவே பெருக்கி,நின் பெய்கழற்(கு) அன்புதன்னில் நுழையாத சிந்தையி னேனையும், மந்தா கினித்துவலை முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே! புழையார் கரியுரித் தோய்!தில்லை நாத! பொறுத்தருளே.
பொறுத்தில னேனும்பன் நஞ்சினைப் பொங்கெரி வெங்கத்தைச் செறுத்தில னேனும்;நந் தில்லைப் பிரானத் திரிபுரங்கள் கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.
அடுக்கிய சீலைய ராய்,அக லேந்தித் தசையெலும்பில் ஒடுக்கிய மேனியோ(டு) ஊணிரப் பாரொள் ளிரணியனை நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல இடுக்கிய பாதன்றன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.
ஏழையென் புன்மை கருதா(து) இடையறா அன்பெனக்கு வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்; மாழைமென் நோக்கிதன் பங்க! வளர்தில்லை யம்பலத்துப் போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.
புண்ணிய னேயென்று போற்றி செயாது புலன்வழியே நண்ணிய னேற்கினி யாதுகொ லாம்புகல் என்னுள் வந்திட்(டு) அண்ணிய னே!தில்லை யம்பல வா!வலர் திங்கள் வைத்த கண்ணிய னே!செய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.
கறுத்தகண் டா!அண்ட வாணா! வருபுனற் கங்கைசடை செறுத்தசிந் தாமணி யே!தில்லை யாயென்னைத் தீவினைகள் ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ பிறர்என் னுறுதுயரை அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ வருஞ்சொ லரும்பழியே.
பழித்தக் கவுமிக ழான்தில்லை யான்;பண்டு வேட்டுவனும் அழித்திட் டிறைச்சி, புலைய னளித்த அவிழ்க்குழங்கன் மொழித்தக்க சீரதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும் இழித்தக்க வென்னா(து) அமிர்துசெய் தானென் றியம்புவரே.
வரந்தரு மாறிதன் மேலுமுண் டோ!வயல் தில்லைதன்னுள் புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்;புலைப் பொய்ம்மையிலே நிரந்தர மாய்நின்ற வென்னையும் மெய்ம்மையின் தன்னடியார் தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்; பேசருந் தன்மையிதே.
தன்தாள் தரித்தார் யாவர்க்கும் மீளா வழிதருவான் குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடையுடையோன் மன்றா டவும்,பின்னும் மற்றவன்பாதம் வணங்கியங்கே ஒன்றார் இரண்டில் விழுவரந் தோ!சில வூமர்களே.
களைக ணிலாமையுந் தன்பொற் கழல்துணை யாந்தன்மையும் துளைக ணிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்; தளைக ணிலாமலர்க் கொன்றையன், தண்புலி யூரனென்றேன், வளைக ணிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.
வரித்தடந் திண்சிலை மன்மத னாதலும் ஆழிவட்டம் தரித்தவன் தன்மக னென்பதோர் பொற்புந் தவநெறிகள் தெரித்தவன், தில்லையுட் சிற்றம் பலவன் திருப்புருவம் நெரித்தலும் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.
நின்றில வேவிச யன்னொடுஞ் சிந்தை களிப்புறநீள் தென்தில்லை மாநட மாடும் பிரான்தன் திருமலைமேல் தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர் கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே.
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்; விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன்; விதிர்விதிரேன்; இருப்புரு வச்சிந்தை யென்னைவந் தாண்டது மெவ்வணமோ பொருப்புரு வப்புரி சைத்தில்லை யாடல் புரிந்தவனே.
புரிந்தவன் பின்றியும் பொய்ம்மையி லேயும், திசைவழியே விரித்தகங் கைம்மலர் சென்னியில் கூப்பின், வியன்நமனார் பரிந்தவ னூர்புக லில்லை; பதிமூன்(று) எரியவம்பு தெரிந்தவெங் கோன்தன் திரையார் புனல்வயற் சேண்தில்லையே.
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டுமன்பு பூண்டிலை; நின்னை மறந்திலை; யாங்கவன் பூங்கழற்கே மாண்டிலை; யின்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான் மீண்டனை; யென்னையென் செய்திட வோ?சிந்தை! நீவிளம்பே.
விளவைத் தளர்வித்த விண்டுவுந், தாமரை மேலயனும் அளவிற்கு அறியா வகைநின்ற வன்றும் அடுக்கல்பெற்ற தளர்வில் திருநகை யாளும்நின் பாகங்கொல்! தண்புலியூர்க் களவிற் கனிபுரை யுங்கண்ட! வார்சடைக் கங்கையனே.
கங்கை வலம்,இடம் பூ;வலங் குண்டலம்; தோடிடப்பால்; தங்குங் கரம்வலம் வெம்மழு; வீயிடம்; பாந்தள்வலம் சங்க மிடம்;வலம் தோலிட மாடை; வலம்அக்(கு);இடம் அங்கஞ் சரி;அம் பலவன் வலங்கா ணிடமணங்கே.
அணங்(கு),ஆ டகக்குன்ற மா(து),அற ஆட்டிய வாலமர்ந்தாட்(கு) இணங்கா யவன்தில்லை யெல்லை மிதித்தலு மென்புருகா வணங்கா, வழுத்தா விழாவெழும் பாவைத் தவாமதர்த்த குணங்காண் இவளென்ன வென்றுகொ லாம்வந்து கூடுவதே.
கூடுவ(து) அம்பலக் கூத்த னடியார் குழுவுதொறும்; தேடுவ(து) ஆங்கவ னாக்கமச் செவ்வழி; யவ்வழியே ஓடுவ(து) உள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத்தெண்தோள் மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம் சித்தகக் கோயில் இருத்தும் திறத்(து)ஆ கமியர்க்கல்லால் புத்தகப் பேய்களுக் கெங்கித்த தோ!அரன் பொன்னடியே.
பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்; புயல்மறந்த கன்னல்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர் மன்னு மழைபொழிந்(து) ஈரறு வேலிகொண் டாங்கவற்கே பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு வேலிகொள் பிஞ்ஞகனே.
நேசனல் லேன்;நினை யேன்;வினை தீர்க்குந் திருவடிக்கீழ் வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேனென்தன் வாயதனால் தேசனென் னானைபொன் னார்திருச் சிற்றம் பலம்நிலவும் ஈசனென் னேன்பிறப்(பு) என்னாய்க் கழியுங்கொல்! என்தனக்கே
தனந்,தலை, சக்கரம், வானத் தலைமை குபேரன்,தக்கன், வனந்தலை ஏறடர்த் தோன்,வா சவன்உயிர், பல்லுடலூர் சினந்தலை காலன், பகல்,காமன், தானவர், தில்லைவிண்ணோர் இனந்தலை வன்னரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும் தவமதித்(து) ஒப்பில ரென்னவிண் ணாளுந் தகைமையரும் நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும் சிவநிதிக் கேநினை யாரும், நினைந்திட்ட செல்வருமே.
வருவா சகத்தினில், முற்றுணர்ந் தோனை,வண் தில்லைமன்னைத் திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப் பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப்பொருளைத் தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும், செழுஞ்சடைமேல் விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும், வெங்கதப் பாந்தளும்,தீத் தரித்திட்ட வங்கையும், சங்கச் சுருளுமென் நெஞ்சினுள்ளே தெரிந்திட்ட வா!தில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செயும்? காமனன்று கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன்; விற்கொடும்பூண் விடுஞ்சினத் தானவர் வெந்திலர்; வெய்தென வெங்கதத்தை ஒடுங்கிய காலனந் நாள்நின் றுதையுணா விட்டனனே.
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில் இட்டங் கரியன்;நல் லானல்லன்; அம்பலத் தெம்பரன்மேல் கட்டங் கியகணை யெய்தலுந் தன்னைப்பொன் னார்முடிமேல் புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.
பொடிஏர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு, கோயிற் கருவியில்லா, வடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்தன் முடி ஏர்தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே.
கழலும் பசுபாசர் ஆம்இமை யோர்தங் கழல்பணிந்திட்(டு) அழலு மிருக்குந் தருக்குடை யோர்,இடப் பால்வலப்பால் தழலும், தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச் சுழலு மொருகா லிருகால் வரவல்ல தோன்றல்களே.
தோன்றலை, வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத் தான்தலை பாதங்கள் சார்வரி யோன்றன்னைச் சார்ந்தவர்க்குத் தேன்றலை யான்பா லதுகலந் தாலன்ன சீரனைச்சீர் வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ! வடவனத்து மின்றங் கிடைக்(கு)உந்தி நாடக மாடக்கொல்! வெண்தரங்கம் துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக் கன்றங் கடைசடை மேலடை யாவிட்ட கைதவமே.
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்னடி யெற்குதவும் சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச்செய்ய அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த பவனைப் பணியுமின்; நும்பண்டை வல்வினை பற்றறவே.
பற்றற முப்புரம் வெந்தது, பைம்பொழில் தில்லைதன்னுள் செற்றரு மாமணிக் கோயிலின் நின்றது, தேவர்கணம் சுற்றரு நின்புக ழேத்தித் திரிவது சூழ்சடையோய்! புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.
புல்லறி வின்மற்றைத் தேவரும், பூம்புலி யூருள்நின்ற அல்லெறி மாமதிக் கண்ணியன் போ லருளுவரே கல்லெறிந் தானுந்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி, நமனுலகத்(து) எண்ணினை நீக்கி இமையோ ருலகத் திருக்கலுற்றீர்! பெண்ணினொர் பாகத்தன், சிற்றம் பலத்துப் பெருநடனைக் கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.
கைச்செல்வ மெய்திட லாமென்று பின்சென்று, கண்குழியல் பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட் கேயென்றும் பொன்றலில்லா அச்செல்வ மெய்திட வேண்டுதி யே;தில்லை யம்பலத்துள் இச்செல்வன் பாதங் கரு(து)இரந் தேனுன்னை; யென்னெஞ்சமே.