பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கழறிற்றிவார் நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

மாவீற்று இருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப்
பா வீற்றிருந்த பல்புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி தான்
சே வீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக்
கோ வீற்று இருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.

2

காலை எழும் பல் கலையின் ஒலி; களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி;
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி; துரகச் செருக்கால் சுலவும் ஒலி;
பாலை விபஞ்சி பயிலும் ஒலி; பாடல் ஆடல் முழவின் ஒலி;
வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது ஆல்.

3

மிக்க செல்வம் மனைகள் தொறும் விளையும் இன்பம் விளங்குவன;
பக்கம் நெருங்கும் சாலை தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன;
தக்க அன்பர் மடங்கள் தொறும் சைவ மெய்மை சாற்றுவனம்;
தொக்க வளங்கொள் இடங்கள் தொறும் அடங்க நிதியம் துவன்றுவன.

4

வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற
சாதி நான்கும் நிலை தழைக்கும் தன்மைத்து ஆகித் தட மதில் சூழ்
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்
கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்து உலகில்.

5

முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் அதன் கண் முறை மரபின்
அருகி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவத் திறம் தழைப்பத்
திருகு சின வெம் களியானைச் சேரர் குலமும் உலகும் செய்
பெருகு தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக் கோதையார்.

6

திருமா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர் மாரி
தருமா விசும்பின் மிக நெருங்கத் தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின ஆல்.

7

மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால்
கண் மேல் விளங்கும் நெறியினார் கழலே பேணும் கருத்தினராய்
உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார்
தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் களத்தில் திருத்தொண்டே புரிவார்.

8

உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார்
புலரி எழுந்து புனல் மூழ்கிப் புனித வெண் நீற்றினும் மூழ்கி
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து
மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து.

9

திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டுத் திரு மெழுக்கு
வரும் அன்புடன் இன்பு உறச் சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப் பணிந்தே ஒழுகும் நாள்.

10

நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான்.

11

வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின்
சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு முயல்வார் முதற்று ஆக
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் அவர் பால் எய்தினார்.

12

எய்தி அவர் தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டுச்
செய்தி முறைமையால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது எனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின்கண்.

13

இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் எனப் புக்கு,
முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால்.

14

மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத்
தாவு இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம்
காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார்.

15

ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும்
மான அமைச்சர் தாள் பணிந்து அவ் வினைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார்.

16

உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து
இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற் றறிவார் தாம்.

17

தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து
கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தஓர் வண்ணான் முன்னே வரக் கண்டார்.

18

மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்
உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே
இழையில் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார்.

19

சேரர் பெருமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனைக் கொண்டது; அடியேன் அடி வண்ணான் என்னச்
சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார்.

20

மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம்
சென்னி மிசை அஞ்சலி செய்து போற்றச் சினமால் களிறு ஏறி
மின்னும் மணிப் பூண் கொடி மாட வீதி மூதூர் வலம் கொண்டு
பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய.

21

யானை மிசை நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின் கண்
மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக் குடை நிழற்றப்
பானல் விழியார் சாமரை முன் பணி மாறப்பன் மலர் தூவி
மான அரசர் போற்றிட வீற்று இருந்தார் மன்னர் பெருமானார்.

22

உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட
நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி,
அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து
மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார்.

23

நீடும் உரிமைப் பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும்
தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைச் திருச்சிற்றம் பலத்து உள்
ஆடும் கழலே எனத் தெளிந்த அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குலப் பெருமாள்.

24

வாசத் திருமஞ்சனம் பள்ளித் தாமம் சாந்தம் மணித் தூபம்
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும்
ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆார் சிலம்பின் ஒலி அளித்தார்.

25

நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்பு உற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால்
செம் பொன் மழை ஆம் எனப் பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி
உம்பர் போற்றத் தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார்.

26

இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு
மன்னும் மதுரைத் திரு வால வாயில் இறைவர் வரும் அன்பால்
பன்னும் இசைப் பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு
நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள் புரிவார்.

27

இரவு கனவில் எழுந்து அருளி என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவும் சேரன் தனக்கு உனக்குப் பைம் பொன் காணம் பட்டு ஆடை
விரவு கதிர் செய் நவ மணிப் பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றித்
தர நம் ஓலைத் தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று.

28

அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள் செய்த பெருமை யாலே
எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று
மதிமலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மைக்
கதிர் ஒளி விரிந்த கோட்டுத் திருமுகம் கொடுத்தார் காண.

29

சங்கப் புலவர் திருமுகத்தைத் தலைமேல் கொண்டு பத்திரனார்
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தித்
துங்கப் பரிசை கொடுங் கோளூர் தன்னில் புகுந்து துன்னும் கொடி
மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார்.

30

கேட்ட பொழுதே கை தலைமேல் கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி
ஓட்டத்து அம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன்
பாட்டின் தலைமைப் பாணனார் பாதம் பலகால் பணிகின்றார்.

31

அடியேன் பொருள் ஆத் திருமுகம் கொண்டு அணைந்தது என்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகம் கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறிப் பொழி கண்ணீர்
பொடியார் மார்பில் பரந்து விழப் புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார்.

32

பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் தொழுது, படி எடுக்க
உரிய வகையால் எடுத்து ஓதி, உம்பர் பெருமான் அருள் போற்றி
விரிபொன் சுடர் மாளிகை புக்கு, மேவும் உரிமைச் சுற்றம் எலாம்
பெரிது விரைவில் கொடு போந்து பேணும் அமைச்சர்க்கு அருள் செய்வார்.

33

நங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய்து ஆளின்மேல் சமைய ஏற்றிக் கொணரும் என.

34

சேரர் பெருமான் அருள் செய்யத் திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகை உள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதி அம் எண் இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றிக் கொண்டு வந்து பணிந்தார்கள்.

35

பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வேறு வேறு நிரைத்துக் கட்டி மற்று இவையும்
உரம் தங்கிய வெம் கரிபரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும்
புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார்; பொறையர் புரவலனார்.

36

பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வு உற்று அதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ளப் பிஞ் ஞகனார
ஆணை அரசும் அரசு உறுப்பும் கைக் கொண்டு அருளும் என இறைஞ்ச.

37

இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே
உறை மும்மதத்துக் களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டுஓர்
பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் கொண்டு போந்தார் பெரும்பாணர்.

38

பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதல் நீர் வழியக் கையால் தொழுது அணைய
நண்பு சிறக்கும் அவர் தம்மை நகரின் புறத்து விடை கொண்டு
திண் பொன் புரிசைத் திரு மதுரை புக்கார் திருந்தும் இசைப் பாணர்.

39

வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகிக்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும்
பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி
மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்று இருந்தார்.

40

அளவு இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்
உளம் மன்னிய மெய் உறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்
களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றிறவார் தாம்
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் வைகும் நாள்.

41

வானக் கங்கை நதி பொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் தொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள்
தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல்
மானப் பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி.

43

ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கைமலர்
கூடத் தலைமேல் குவித்து அருளிக் கொண்டு விழுந்து தொழுது எழுந்து
நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அருமறை முன்
தேடற்கு அரியாய்! திருஅருள் முன் செய்யாது ஒழிந்தது என் ? என்றார்.

42

பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது எனப் பொருமி
ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று,
தேசின் விளங்கும் உடைவாளை உருவித் திருமார்பினில் நாட்ட,
ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார்.

44

என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றின் இடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி, வன் தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி உரை சேர் பதிகம் பாடுதல் ஆல்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் என்றார்; அவரை நினைப்பிப்பார்.

45

என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று
பொன் ஏர் சடையார் திருநடம் செய் புலியூர்ப் பொன் அம்பலம் இறைஞ்சித்
தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பன் என விரும்பி,
நல் நீர் நாட்டுச் செல நயந்தார்; நாமச் சேரர் கோமானார்.

46

பொன் ஆர் மௌலிச் சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி
நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற
மின்ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர்
அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய்.

47

இட்ட நல்நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக் களத்து
மட்டுவிரிபூங் கொன்றையினார் தம்மை வலம் கொண்டு இறைஞ்சிப் போய்ப்
பட்டநுதல் வெங் களியானைப் பிடர்மேல் கொண்டு பனி மதியம்
தொட்ட கொடிமாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார்.

48

யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன
மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற;
சேனைவீரர் புடைபரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த
கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது ஆல்.

49

புரவித் திரள்கள் ஆ யோகப் பொலிவின் அசைவு இல் போதுவன
அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து மேல் மேல் அடர்வன போல்
விரவிப் பரந்து சென்றன ஆல் மிசையும் அவலும் ஒன்று ஆக
நிரவிப் பரந்த நெடும் சேனை நேமி நெளியச் சென்றன ஆல்.

50

அந் நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி
மின்ஆர் மணிப்பூண் மன்னவன் ஆர் வேண்டுவாரை உடன்கொண்டு
கொன்ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளிப்
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டு இடைப் போவார்.

51

சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக் குறும்பர் இடங்கள் தோறும் குறைவு அறுப்பப்
துன்று முரம்பும் கான் ஆறும் துறும் கல் சுரமும் பல கடந்து
வென்றி விடையார் இடம் பலவும் மேவிப் பணிந்து செல்கின்றார்.

52

பொருவு இல் பொன்னித் திருநதியின் கரை வந்து எய்திப் புனித நீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வடபால் கரை ஏறித்
திருவில் பொலியும் திருப்புலியூர்ச் செம்பொன் மன்றுள் நடம் போற்ற
உருகும் மனத்தின் உடன் சென்றார்; ஒழியா அன்பின் வழி வந்தார்.

53

வந்து தில்லை மூது ஊரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந் தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர் வணங்கிச்
சந்த விரைப் பூந் திருவீதி இறைஞ்சித் தலைமேல் கரம் முகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழு நிலைக் கோபுரத்தை அணைந்தார் சேரலன் ஆர்.

54

நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து மணிமாளிகை வலம் கொண்டு
உலகு விளக்கும் திருப் பேர் அம்பலத்தை வணங்கி உள் அணைந்தார்
அலகு இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன்.

55

அளவு இல் இன்பப் பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட
உளமும் புலமும் ஒருவழிச் சென்று உருகப் போற்றி உய்கின்றார்;
களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார்.

56

ஆரா ஆசை ஆனந்தக் கடல் உள் திளைத்தே அமர்ந்து அருளால்
சீர் ஆர் வண்ணப் பொன் வண்ணத் திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்
பார் ஆதரிக்க எடுத்து ஏத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார் கழறிற்றறிவார் தாம்.

57

தம்பிரானார்க்கு எதிர் நின்று தமிழ்ச் சொல் மாலைக் கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்குப் பரிசில் எனச்
செம்பொன் மணி மன்றினில் எடுத்த செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த ஒலி தாமும் எதிரே கேட்பித்தார்.

58

ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார்; அளவு இல் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்;
நீடப் பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து
மாடத் திரு மாளிகை வீதி வணங்கிப் புறத்து வைகினார்.

59

பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் பைம் பொன் அம்பலத்து உள்
அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை
விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அந் நாளில்.

60

ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளித் தாழ்தத படி தமக்குக்
கூடும் பரிசால் முன்பு அருளிச் செய்த நாவலூர்க் கோவை
நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார்.

61

அறிவின் எல்லை ஆய திருத்தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சிப்
பிறவு இலாத திருவடியைப் பெருகும் உள்ளத்தினில் பெற்றுச்
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி
மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.

62

வழியின் குழியின் செழுவயலின் மதகின் மலர் வாவிகளின் மடுச்
சுழியின் தரளம் திரை சொரியும் துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி
விழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உகக்
கழிவு இல் பெரு வெள்ளமும் கொள்ளாக் கழனி ஆரூர் கண் உற்றார்.

63

நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி
அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார்.

64

வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த
அந் தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர் கொண்டு சென்று கிடைத்தார்; சேரலனார்
சந்த விரைத்தார் வன்தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார்.

65

முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருகத் தழுவ, விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ,
இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதுஅலைவார் போல்
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.

66

ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு இல் மகிழ்வு எய்த
மானச் சேரர் பெருமானார் தாமும் வன்தொண்டரும் கலந்த
பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது ஆல்.
உரை

67

ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து
மருவ இனியார் பால் செய்வது என்னாம் ? என்னும் மகிழ்ச்சியினால்
பருவ மழைச் செங்கை பற்றிக் கொண்டு பரமர் தாள் பணியத்
தெருவு நீங்கிக் கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர்.

68

சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சித் திருமாளிகை வலம் கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக
நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே
என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார்.

69

தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வப் பெருமாள் கழல் வணங்கி,
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரைத் திருமும் மணிக் கோவை
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்;
தாவில் பெருமைச் சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார்.
உரை

70

அங் கண் அருள் பெற்று எழுவாரைக் கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திருமாளிகையில் நண்ண நல்நுதலார்
பொங்கு விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர் கொண்டார்.

71

சோதி மணி மாளிகையின் கண் சுடரும் பசும் பொன் கால் அமளி
மீது பெருமாள் தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்பக்
கோது இல் குணத்துப் பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார்.

72

தாண்டும் புரவிச் சேரர் குலப் பெருமாள் தமக்குத் திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்.

73

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார் புடை சூழ்ந்து அவரோடு அமுது செயப்
பரவைப் பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார்.

74

சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூங் குழல் மடவாய்! தாழாது அமுது செய்வி எனப்
பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டின் படியாய் ஏற்றுதலும்.

75

ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள
வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும்
நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையர்க்கு இறையவனார்.

76

ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்தத்
தொக்க மகிழ்ச்சி களி சிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார்.

77

பனிநீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரைக் கலவை
வனிதை அவர்கள் சமைத்து எடுப்பக் கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்
புனித நறும் பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொன்கொடியார்
இனிய பஞ்ச வாசம் உடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார்.

78

ஆய சிறப்பின் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளித்
தூய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுது அணிந்து
மேய விருப்பின் உடன் இருப்பக் கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார்.

79

மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவிக்
கலை நாள் பெருகும் மதி முகத்துப் பரவையார் தம் கணவனார்
சிலை நாட்டிய வெல் கொடியாரைச் சேரத் தந்தார் எனக் கங்கை
அலை நாள் கொன்றை முடிச் சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார்.

80

செல்வத் திருவாரூர் மேவும் செம்பொன் புற்றில் இனிது அமர்ந்த
வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதி விடங்கப் பெருமானை
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து
சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார்.

81

இவ்வாறு ஒழுகும் நாளின் கண் இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூது ஊர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார்.

82

சேரர் பிரானும் ஆரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செலத் துணிந்தார்.

83

இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
மருவும் உரிமைப் பெரும் சுற்றம் வரம்பு இல் பணிகள் வாகனங்கள்
பொருவு இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத.

84

சேவித்து அணையும் பரிசனங்கள் சூழத் திருவாரூர் இறைஞ்சிக்
காவில் பயிலும் புறம் பணையைக் கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல் வணங்கிப் போந்து வேலைக் கழிக் கானல்
பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார்.

85

திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் சென்று பணிந்து சிந்தையினை
உருக்கு ஆர்வச் செந்தமிழ் மாலை சாத்திச் சில நாள் உறைந்து போய்ப்
பெருக்கு ஆறு உலவு சடைமுடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி
அருள் காரணர் தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர்.

86

முந்நீர் வலம் கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சிச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் புகலிச் சிவக் கன்றும்
அந்நேர் திறக்க அடைக்க எனப்பாடும் திருவாயிலை அணைந்து
நல்நீர் பொழியும் விழியினராய் நாயன் மாரை நினைந்து இறைஞ்சி.

87

நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்
அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் திளைத்து எழுந்தார்.

88

எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள்
செழும் தண் பழனப் பதி அதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்
கொழுந்து வளர் செங்சடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார்.

89

கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க்கண்நீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்.

90

அங்கு வைகிப் பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார்
தங்கும் இடங்கள் வணங்கிப் போய்ப் பாண்டி நாடுதனைச் சார்ந்து
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சிப் போந்து சேண் விளங்கும்
மங்குல் தவழும் மணிமாட மதுரை மூதூர் வந்து அணைந்தார்.

91

சேரமான் தோழரும் அச் சேரர் பிரானும் பணிப்பூண்
ஆர மார்பரை ஆலவாயினில் வணங்க
வாரமா வந்து அணைய வழுதியார் மனக்காதல்
கூர மாநகர் கோடித்து எதிர் கொண்டு கொடு புக்கார்.

92

தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி
மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார்.

93

திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சடையார் கோயில் வலம்
வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ்ப்
பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார்.

94

படி ஏறு புகழ்ச் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருள் ஆக அளித்த திருமுகக் கருணை
முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார் முன் பரவிக் களி கூர்ந்தார்.

95

செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரர் உடன்
நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால்
உம்பர்பிரான் கோயிலின் நின்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணி மாளிகையில் குறைவு அறுத்தார் பஞ்சவனார்.

96

உளம் மகிழக் கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன்
கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி
வளவனார் மீனவனார் வளம் பெருக மற்று அவரோடு
அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார்.

97

அந் நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள்
பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போதச்
செந் நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்று இறைஞ்சிச்
சொல் மாலைகளும் சாத்தித் தொழத் திருப்பூவணத்து அணைந்தார்.

98

நீடு திருப் பூவணத்துக்கு அணித்து ஆக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத் திருஉடையார் என்று எடுத்துப்
பாடி இசையின் பூவணம் ஈதோ என்று பணிந்து அணைவார்.

99

சென்று திருப் பூவணத்துத் தேவர் பிரான் மகிழ் கோயில்
முன்றில் வலம் கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
நின்று பரவிப்பாடி நேர் நீங்கி உடன் பணிந்த
வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார்.

100

அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் சில நாளில் ஆரூரர்
முப்பெரும் வேந்தர்கேளாடு முதல் மதுரை நகர் எய்தி
மெய்ப் பரிவில் திருவால வாயுடையார் விரை மலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்பு உற்று அங்கு அமர்கின்றார்.

101

செஞ்சடையார் திருவாப்பனூர் திருஏடகம் முதல் ஆம்
நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே
எஞ்சல் இலாக் காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து
மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார்.

102

பரமர் திருப்பரங் குன்றில் சென்று பார்த்திபரோடும்
புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்
சிரமலி மாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆள்செய்யும்
அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார்.

103

கோத்திட்டை என்று எடுத்துக் கோது இல் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசை பாடிப் பரவிச்
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங் குன்றில்.

104

இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி
மறை முந் நூல் மணி மார்பின் வன்தொண்டர் தமைப் பணிந்தார்
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார்.

105

அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை
நல் நாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள
மின் நாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
தென் நாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்.

106

இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்து அருளும்
பொரு அரும் சீர் வன்தொண்டர் புகழ்ச் சேரர் உடன் புனிதர்
மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலைச்சாரல்
குருமணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார்.

107

குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கிச்
சொல்தாம் மலர் புனைந்து குறும் பலாத் தொழுது இப்பால்
முற்றா வெண்மதி முடியார் பதிபணிந்து மூ எயில்கள்
செற்றார் மன்னிய செல்வத் திருநெல் வேலியை அணைந்தார்.

108

நெல்வேலி நீற்று அழகர் தமைப் பணிந்து பாடி நிகழ்
பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார்
வில்வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றிப் பின்
செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து.

109

மன்னும் இராமேச்சரத்து மாமணியை முன் வணங்கிப்
பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் பயில்கின்றார் பாம்பு அணிந்த
சென்னியர் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் சார்ந்த
சொல்மலர் மாலைகள் சாத்தித் தூரத்தே தொழுது அமர்ந்தார்.

110

திரு இராமேச்சரத்துச் செழும் பவளச் சுடர்க் கொழுந்தைப்
பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து
பெருவிமானத்து இமையோர் வணங்கும் பெருந்திருச்சுழியல்
மருவினார் வன்தொண்டர் மலை வேந்தருடன் கூட.

112

அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்
கங்குல் இடைக் கனவின் கண் காளை ஆம் திருவடிவால்
செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் உடன்
எங்கும் இலாத் திருவேடம் என்பு உருக முன்காட்டி.

111

திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்.

113

கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறிக் கங்கை எனும்
வானப் பேர் ஆறு உலவும் மா முடியார் தாம் அகல
ஞானப் பேர் ஆளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்
ஏனப் பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார்.

115

காளையார் தமைக் கண்டு தொழப் பெறுவது என்று என்று
தாளை நாளும் பரவத் தருவார் பால் சார்கின்றார்
ஆளை நீள் இடைக் காண அஞ்சிய நீர் நாய் அயலே
வாளைபாய் நுழைப் பழன முனைப்பாடி வள நாடார்.

114

கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார்.

116

மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்தி
சென்னி வளர்மதி அணிந்தார் செழும் கோயில் வலம் கொண்டு
முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து
பன்னு செழும் தமிழ் மாலை பாடினார் பரவினார்.

117

ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்
சீர் ஆரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்
கார் ஆரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்
போர் ஆன் ஏற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில்.

118

புன வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னோடு என்றே
வினவு ஆன தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்.

119

திருப்புன வாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்பு உடைய கோயில் பணிந்து அருள் பெற்று மேவினார்
பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார் தம் பாம்பணிமா நகர் தன்னில்.

120

பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்
வேத ஆதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
சூது ஆரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார்.

121

திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தர் உடன்
வருவாரைத் திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தரும் காதலுடன் வணங்கித் தம் பெருமான் கோயிலின் உள்
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெறப் புகுந்தார்.

122

வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டு
நேசம் உற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
ஏசறவு ஆல் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார்.

123

பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த
விரவு பேர் அலங்கார விழுச் செல்வம் மிகப் பெருக
வரவு எதிர் கொண்டு அடிவணங்க வன் தொண்டர் மலைநாட்டுப்
புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார்.

124

பரவியே பரவையார் பரிவு உடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகம் கறிகள் விதம் பலவாகச் சமைத்துப்
பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்துத்
திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார்.

125

மங்கலம் ஆம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து
தங்கி இனிது அமர் கின்றார் தம்பிரான் கோயிலின் உள்
பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சிப் புறத்து அணைந்து
நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார்.

126

நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி,
விலக்கு அரும் போர்த் தகர்ப் பாய்ச்சல் கண்டு அருளி, வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணைக்கால் வாரணப் போர் மகிழ்ந்து அருளி,
அலைக்கும் மறப் பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார்.

127

விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்லக்
கரவு இல் ஈகைக் கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டுப்
பரவையார் தம் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டு அணைவான்
இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்து அருள.

128

நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்து அருளத்
திங்கள் முடியார் திரு அருளைப் பரவிச் சேரமான் பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளிப்
பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்.

130

பொன் பரப்பி மணிவரன்றிப் புனல் பரக்கும் காவேரித்
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி
மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திருக் கண்டியூர்
அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள்.

129

தம்பிரானைத் தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆருரரும் சேரர் நல்நாட்டு அரசனார் ஆய
பைம் பொன் மணி நீள் முடிக் கழறிற் றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடும் மதில் ஆரூர் தொழுது மேல் பால் செல்கின்றார்.

131

வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர்க் கரங்கள்
உடல் உருக உள் உருக உச்சியின்மேல் குவித்து அருளிக்
கடல் பரந்தது எனப் பெருகும் காவிரியைக் கடந்து ஏறித்
தொடர்வு உடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்.

132

ஐயாறு அதனைக் கண்டு தொழுது அருள் ஆரூரர் தமை நோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் அருளிச் செய்கின்றார்
மை ஆர் கண்டர் மருவு திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி
நையா நின்றது இவ்ஆறு கடந்து பணிவோம் நாம் என்ன.

133

ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல்
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப
நீறு விளங்கும் திருமேனி நிருத்தர் பாதம் பணிந்துஅன்பின்
ஆறு நெறியாச் செலஉரியார் தரியாது அழைத்துப் பாடுவார்.

134

பரவும் பரிசு என்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகேளா என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்.

135

மன்றில் நிறைந்து நடம்ஆட வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர் அழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்று ஆப்போல்
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார்; பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட.

136

விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்பால் பளிக்கு வெற்பு என்ன
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழிப்
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்டதொண்டர் பயில் மாரி
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்.

137

நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய, நாவலூர்ச்
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமான் எதிர் வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ ? என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானைப் போற்றி இசைத்துத் தடம் காவேரி நடு அணைந்தார்.

138

செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் இடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதி வாணரைப் பணிந்து விழுந்தார்; எழுந்தார்; பரவினார்.

139

அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றித் திளைத்து இறைஞ்சித்
தங்கள் பெருமான் திரு அருளால் தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்
பொங்கு நதியின் முன் வந்த படியே நடுவு போந்து ஏறத்
துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடரப் பெருகியது ஆல்.

140

ஆய செயலின் அதிசயத்தைக் கண்டு அக்கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்
தூய மதிவாழ் சடையார் தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்
சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரர் உடன்.

141

கொங்கு நாடு கடந்து போய்க் குலவு மலைநாட்டு எல்லை உற
நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர்
அங் கண் உடனே அணைய எழுந்து அருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்பு உறுவார்.

142

பதிகள் எங்கும் தோரணங்கள்; பாங்கர் எங்கும் பூவனங்கள்;
வதிகள் எங்கும் குளிர் பந்தர்; மனைகள் எங்கும் அகில் புகைக்கார்;
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல்; ஞாங்கர் எங்கும் ஓங்குவன
நிதிகள்; எங்கும் முழவின் ஒலி; நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ.

143

திசைகள் தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்;
குசை கொள் வாசி நிரை வெள்ளம்; கும்ப யானை அணி வெள்ளம்;
மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம்; மேவும் சோற்று வெள்ளம் கண்டு
அசைவு இல் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து கொடுங் கோளூர் அணைந்தார்.

144

கொடுங்கோ ளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர்ச் சாலைகள் தெற்றி
நெடும் கோ நகர்கள் ஆடு அரங்கு நிரந்த மணித் தாமம் க
விடும் கோதைப் பூந் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து.

145

நகர மாந்தர் எதிர் கொள்ள நண்ணி எண் இல் அரங்கு தொறும்
மகர குழை மாதர்கள் பாடி ஆட, மணி வீதியில் அணைவார்
சிகர நெடும் மாளிகை அணையார்; சென்று திருவஞ்சைக் களத்து
நிகர் இல் தொண்டர் தமைக் கொண்டு புகுந்தார் உதியர் நெடும் தகையார்.

146

இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடிப் பரவிப் பெருமாளுடன் தொழுதார்.

147

தொழுது தினைத்துப் புறம் போந்து தோன்றப் பண்ணும் பிடி மேல் பார்
முழுதும் ஏத்த நம்பியை முன்பு ஏற்றிப் பின்பு தாம் ஏறிப்
பழுதுஇல் மணிச் சாமரை வீசிப் பைம்பொன் மணி மாளிகையில் வரும்
பொழுது மறுகில் இருபுடையும் மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.

148

நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார்;
எல்லை இல்லாத் தவம் முன்பு என் செய்தோம் இவரைத் தொழ என்பார்
செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்;
சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலைப் பாரீர் எனத் தொழுவார்.

149

பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார்; பொருவு இல் இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் திலதம் என வியப்பார்;
பாவும் துதிகள் எம் மருங்கும் பயில வந்து மாளிகையில்
மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்.

150

கழறிற்று அறியும் திருவடியும் கலை நாவலர் தம் பெருமான் ஆம்
முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர் தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தித் தாமும் நேர் நின்று.

151

செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த
அம்பொன் பாதம் தாம் விளக்கி அருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருளத் தரணியில் வீழ்ந்து
எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என.

152

பெருமாள் வேண்ட எதிர் மறுக்க மாட்டார் அன்பில் பெருந்தகையார்
திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார்
அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன்பின்
ஒருமா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து உவந்தார்.

153

சேரர் உடனே திருஅமுது செய்த பின்பு கை கோட்டி
ஆரம் நறும் மென் கலவை மான் மதச் சாந்து ஆடை அணிமணிப் பூண்
ஈர விரை மென்மலர்ப் பணிகள் இனைய முதல் ஆயின வருக்கம்
சார எடுத்து வன் தொண்டர்ச் சாத்தி மிக்க தமக்கு ஆக்கி.

154

பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம் தொறும் நிகழ
மாடு விரைப்பூந் தரு மணம்செய் ஆராமங்கள் கைகுவித்துக்
கூட முனைப் பாடியார் கோவைக் கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.

155

செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்றுப் பெரும் சிறப்பும்
வண்டுஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும்
தண் டாமும் மத கும்பத் தட மலைப்போர் சல மற்போர்
கண்டு ஆரா விருப்பு எய்தக் காவலனார் காதல் செய்நாள்.

156

நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையர் ஆய்
ஆவியை ஆரூரானை மறக்கலும் ஆமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்.

157

திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்று
மரு ஆர்வத் தொண்டர் உடன் வழிக் கொண்டு செல்பொழுதில்
ஒருவா நண்பு உள்உருக உடன் எழுந்து கை தொழுது
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார்; பின் செல்வார்.

158

வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினர் ஆய்
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன,
ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார்.

159

ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்
தேர் ஊரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள
நேர் ஊரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்.

160

மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார்
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை
வன் நெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன்; மதி அணிந்தார்
இன் அருளால் அரசு அளிப்பீர்! நீர் இருப்பீர் என இறைஞ்ச.

161

மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்துப்
பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த
நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம்
பற் பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என.

162

ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள்
ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணிப்பூண் துகில் வருக்க
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்பத்
தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலியக் கொண்டு அணைந்தார்.

163

மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவு இட்டு முனைப்பாடித் திருநாடார்
பொற் பதங்கள் பணிந்து அவரைத் தொழுது எடுத்துப் புனை அலங்கல்
வெற்பு உயர் தோள் உறத் தழுவி விடை அளித்தார் வன்தொண்டர்.

164

ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அகன்று
கார் ஊரும் மலைநாடு கடந்து அருளிக் கல் சுரமும்
நீர் ஊரும் கான் யாரும் நெடும் கானும் பலகழியச்
சீர் ஊரும் திருமுருகன் பூண்டி வழிச் செல்கின்றார்.

165

திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின் கண்
பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதுஅல்லால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருக அருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ அது அறியோம்.

167

வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்துக்
கொல்வோம் இங்கு இட்டுப்போம் எனக் கோபத்தால் குத்தி
எல்லை இல் பண்டாரம் எலாம் கவர்ந்து கொள இரிந்து ஓடி
அல்லல் உடன் பறி உண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார்.

166

வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று
வன்தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள
அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவப் படையாய்ச்
சென்று அவர் தாம் வரும் வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து.

168

ஆரூரர் தம்பால் அவ் வேடுவர் சென்று அணையாதே
நீர் ஊரும் செஞ்சடையார் அருளினால் நீங்க அவர்
சேர் ஊராம் திருமுருகன் பூண்டியினில் சென்று எய்திப்
போர் ஊரும் மழவிடையார் கோயிலை நாடிப் புக்கார்.

169

அங்கணர் தம் கோயிலினை அஞ்சலி கூப்பித் தொழுது
மங்குல் உற நீண்ட திருவாயிலினை வந்து இறைஞ்சிப்
பொங்கு விருப்புடன் புக்கு வலம் கொண்டு புனித நதி
திங்கள் முடிக்கு அணிந்தவர் தம் திருமுன்பு சென்று அணைந்தார்.

170

உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
வெருவு உறவேடுவர் பறிக்கும் வெஞ் சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக் கொடுகு வெஞ்சிலை அஞ்சொல்பதிகம்.

171

பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால்
வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க
நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக் கொண்டார்

172

கைக்கொண்டு கொடுபோம் அக் கைவினைஞர் தமை ஏவி
மைக் கொண்ட மிடற்றாரை வணங்கிப்போய்க் கொங்கு அகன்று
மெய்க் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
செய்க் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார்.

173

நாவலர் மன்னவர் அருளால் விடை கொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றாம் நண்பின் ஆரூரர் தமை நினைந்து
மா அலரும் மலர்ச்சோலை மகோதையினில் மன்னிமலைப்
பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார்.

174

இந் நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன்தொண்டர்
பொன்னி வளநாடு அகன்று மகோதையினில் மேல் புகுந்து
மன்னு திருக் கயிலை யினில் மத வரைமேல் எழுந்து அருள
முன்னர் வயப் பரி உகைக்கும் திருத்தொழில் பின் மொழிகின்றாம்.

175

மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் மா கடல் போல்
சிலை மலிந்த கொடித் தானைச் சேரலனார் கழல் போற்றி
நிலை மலிந்த மணிமாடம் நீள் மறுகு நான் மறை சூழ்
கலை மலிந்த புகழ்க் காழிக் கணநாதர் திறம் உரைப்பாம்.