பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கபிலதேவ நாயனார் / சிவபெருமான் திருவந்தாதி
வ.எண் பாடல்
1

ஒன்று முதலாக. நூறளவும் ஆண்டகள்வாழ்ந்(து)
ஒன்றும் மனிதர் உயிரையுண்(டு) - ஒன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான், வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.

2

மாலை ஒருபால் மகிழ்ந்தானை, வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை, - மாலை
ஒளியானை, உத்தமனை, உண்ணாநஞ் சுண்டற்(கு)
ஒளியானை, ஏத்தி உளம்.

3

உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும்
உளமாகில், ஏத்தாவா றுண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.

4

அடியார்தம் ஆரூயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்; - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி,
அந்தரத்தார் சூடும் அலர்.

5

அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு)
அலராகி யானும் அணிவன்; - அலராகி
ஒதத்தான் ஒட்டினேன்; ஓதுவன்யான், ஒங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.

6

ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன்(று) உடைதோலே, - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.

7

பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ்; நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.

8

கண்டங் கரியன்; உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன்; கரிகாடன்; - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு), என்னுள்ளம்
படியாக் கொண்ட பதி.

9

பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார்;அஃதேகொல்,
அம்மானார் கையார் அறம்!

10

அறமான நோக்கா(து) அநங்கனையும் (செற்றங்(கு)
அறமாநஞ் கண்ட அமுதன் - அறல்மானும்
ஓதியான் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.

11

ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு)
ஒளியான் உலகெல்லாம் ஏத்த - ஒளியாய
கள்ளேற்றான், கொன்றையான் காப்பிகந்தான், நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.

12

கடியரவர், அக்கர், இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே, அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.

13

யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி,
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.

14

யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து
யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு)
ஆர்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல், உய்வ தரிது.

15

அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.

16

வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா; - வியந்தாய
கண்ணுதலான் எந்தை,கா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.

17

கடனாகம் ஊராத காரணமும், கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி,
பாரிடந்தான் மேயாய், பணி.

18

பணியாய் மடநெஞ்சே, பல்சடையான் பாதம்;
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல், நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.

19

அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும்
அரன்காயும்; அந்தியுமற் றந்தோ! - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான்; களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.

20

வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ? நெஞ்சே, அயன்.

21

அயமால்ஊண்; ஆடரவம் நாண(து) அதள(து) ஆடை
அயமாவ(து) ஆனே(றுஆ)ர் ஆரூர் - அயமாய
என்னக்கன், தாழ்சடையன், நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.

22

ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்(று)
ஆழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்,
சலமுடியா தின்றருள்வாய் தார்.

23

தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான்; - தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ, ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.

24

அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக்(கு) - அரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்,
ஊர்தி எரித்தான் உறா.

25

உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து)
உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.

26

கலைகாமின்! ஏர்காமின்! கைவளைகள் காமின்!
கலைசேர் நுதலிர்நாண் காமின்! - கலையாய
பால்மதியன், பண்டரங்கன், பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.

27

பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.

28

ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய, அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும், தென்றலும், தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.

29

தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா, நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.

30

கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே,
பனிச்சங்காட் டாய்,கடிக்கப் பாய்ந்து.

31

பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய்; இதுவோ குணம்!

32

குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடிக் குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.

33

திறங்காட்டுஞ் சேயாள், சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன்; என்னும் - திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ(டு) என்னை யுடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.

34

உடைஓடு காடாடி, ஊர்ஐயம் உண்ணி,
உடைஆடை தோல்,பொடிசந்(து) என்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே,
உன்மத் தகமுடிமேல் உய்.

35

உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா உடம்பழிக்கும் ஒண்திதலை; - உய்யாம்
இறையானே! ஈசனே! எம்மானே! நின்னை
இறையானும் காண்கிடாய்; இன்று.

36

இன்றியாம் உற்ற இடரும், இருந்துயரும்
இன்றியாம் தீர்தும், எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றான், காமரு வெண்காட்டான்
காட்டானஞ் சேற்றான் கலந்து.

37

கலம்பெரியார்க் காஞ்சிரம்,காய் வின்மேரு என்னும்,
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை; - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.

38

கையா(று), அவா,வெகுளி, அச்சங், கழிகாமம்
கையாறு செஞ்சடையன் காப்பென்னும்; - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்,நெஞ்சே, சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.

39

மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனைஆ சறச்செற்ற வானோன்; - மனைஆய
என்பாவாய் என்றேனுக்(கு), யானல்லேன், நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.

40

இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறைஆகம் இன்றருளாய் என்னும்; - இறையாய்!
மறைக்காட்டாய்! மாதவனே! நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.

41

மாதரங்கம் தன்ன ங்கஞ் சேர்த்தி, வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து, - மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.

42

தெருளிலார் என்னாவார்! காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான். - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின்
செல்லுமெழில் நெஞ்சே, தெளி.

43

தெளியாய் மடநெஞ்சே, செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் - தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.

44

புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்,
புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன், நக்கு.

45

நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான், மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டாள் மதி.

46

மதியால் அடுகின்ற தென்னும்;மால் கூரும்,
மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா, ஈதேகொல்!
மாதெய்வங் கொண்ட வனப்பு.

47

வனப்பார் நிறமும், வரிவளையும், நாணும்
வனபார் வளர்சடையான் கொள்ள, - வனப்பால்
கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட்
கடற்றிரையும் ஈருங் கனன்று.

48

கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக், - கனன்றார்
உடம்பட்ட நாட்டத்தன், என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.

49

உருவியலுஞ் செம்பவளம்; ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன், - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற்(கு) ஈதோ வடிவு!

50

வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்போல்
முற்கூடல் அம்மான் முருகமருங் கொன்றையந்தார்
முற்கூட மாட்டா முலை.

51

முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும்; - முலைநலஞ்சேர்
மாதேவா, என்று வளர்கொன்றை, வாய்சோர,
மாதேவா, சோரல் வளை.

52

வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே, காணில், - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.

53

வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.

54

அக்காரம்; ஆடரவம் நாண்;அறுவை தோல்;பொடிசாந்(து)
அக்காரந் தீர்ந்தேன்; அடியேனுக்(கு) - அக்காரம்
பண்டரங்கன், எந்தை, படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன், எங்கள் பவன்.

55

பவனடிபார்; விண்,நீர், பகலோன், மதி,தீப்,
பவனஞ்சேர் ஆரமுதம்; பெண்ஆண்; - பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே; கரிகாட்டில்
காலங்கை எந்தினான் காண்.

56

காணங்கை இன்மை கருதித் கவலாதே
காணங்கை யாற்றொழுது; நன்னெஞ்சே, - காணங்கை
பாவனையாய் நின்றான், பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.

57

பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான், பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும், ஆக்குதிகாண், நெஞ்சே,கூர்ந்(து)
அஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.

58

ஆககூர் பனிவாடா, ஆவிசோர்ந் தாழ்கின்றேன்;
ஆக்கூர் அலர்தான் அழகிதா? - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோன், நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.

59

வந்தியான் சீறினும் வாழி! மடநெஞ்சே!
வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்,
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை,
நம்பரனை நாள்தோறும் நட்டு.

60

நட்டமா கின்றன வொண்சங்கம்; நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி, எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.

61

இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே?
இலமலரே ஆயினும் ஆக; - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க்(கு) ஆள்.

62

ஆளானம் சேர்களிறும், தேரும், அடல்மாவும்
ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே - ஆளான்பொய்;
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.

63

நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
அம்பலகலஞ் செற்றான் அருளான்; அநங்கவேள்
அம்பலகம் பாயும் அலர்ந்து.

64

அலங்காரம் ஆடரவம், என்பு;தோல் ஆடை;
அலங்கார வண்ணற்(கு) அழகார் - அலங்காரம்
மெய்காட்டும் வார்குழலார் என்னாவார்! வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.

65

விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா
விரையார் பொழிலுறந்தை மேயான், - விரையாநீ(று)
என்பணிந்தான் ஈசன் இறையான், எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.

66

எனக்குவளை நில்லா, எழிலிழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான்? - இனக்குவளைக்
கண்டத்தான், நால்வேதன், காரோணத் தெம்மானைக்
கண்டத்தால், நெஞ்சே,காக் கை.

67

காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாய்ப்பால் நையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊர்,குரக்குக் - காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான(து) அமைவு.

68

அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே, - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்,
சாமத்தன் இந்நோய்செய் தான்.

69

தானக்கன், நக்க பிறையன், பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன், தண்பழனன் . தானத்
தரையன், அரவரையன் ஆயிழைக்கும், மாற்கும்
அரையன் உடையான் அருள்.

70

அருள்நம்பாற் செஞ்சடையன், ஆமாத்தூர் அம்மான்,
அருள்நம்பால் நல்கும் அமுதன், - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை,
ஓராழி நெஞ்சே, உவ.

71

உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா(று)
எழுமதிபோல் வாள்முகத்(து) ஈசனார்க் கென்னே;
எழுமதிபோல் ஈசன் இடம்

72

இடமால்; வலமாலை வண்ணமே; தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி - இடமாய
மூவா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்,
மூவா மதியான் முனி.

73

முனிவன்,மால் செஞ்சடையான், முக்கணான் என்னுமர்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும்; - முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.

74

புலர்ந்தால்யான் ஆற்றேன்; புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும்; - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.

75

மனமாய நோய்செய்தான்; வண்கொன்றை தாரான்;
மனமாய உள்ளார வாரான்; - மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான்; புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.

76

போந்தார், புகவணைந்தார்; பொன்னேர்ந்தார்; பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார்; - போந்தார்
இலங்கோல வாள்முகத்(து) ஈசனார்க்(கு) எல்லே
இலங்கோலந் தோற்ப தினி.

77

இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல்! எண்ணார்,
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான், - இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார், தாம்.

78

தாமரைசேர் நான்முகற்கும், மாற்கும் அறிவரியார்,
தாமரைசேர் பாம்பர், சாடமகுடர், - தாமரைசேர்
பாணியார், தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார், தீர்ந்தளிப்பர்; பார்.

79

பார்,கால்,வான், நீர்,தீப், பகலோன், பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே! நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.

80

கோப்பாடி ஒடாதே; நெஞ்சே மொழி; கூத்தன்
கோப்பாடிக் கோகரணங், குற்றாலம்; - கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றாற்(கு) கிடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம், எம்பெருமான் பேர்.

81

பேரானை ஈருரிவை போர்த்தனை, ஆயிரத்தெண்
பேரானை, ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்(சு)
உண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.

82

உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி, உள்ளத்
துயிராய ஒண்மலர்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான், பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே, ஆசைக்கட் பட்டு.

83

பட்டாரண் பட்டரங்கன், அம்மான், பரஞ்சோதி,
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான், கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே,
கோவணத்து நம்பனையே கூறு.

84

கூற்றும், பொருளும்போற் காட்டி,யெற் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை, நெஞ்சே,
செருக்கழியா முன்னமே செய்.

85

செய்யான், கருமிடற்றான், செஞ்சடையான், தேன்பொழில்சூழ்
செய்யான், பழனத்தான், மூவுலகும் - செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய், நன்னெஞசே,
நாட்டூணாய் நின்றானை நாம்.

86

நாவாய் அகத்துளதே; நாமுளமே; நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே; - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும்; மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.

87

சூதொன் றுனக்கனறியச் சொல்லினேன்; நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.

88

குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் பொல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்;
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.

89

போதரங்க வார்குழலார் என்னாவார்? நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியற்குப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.

90

கற்றானஞ் சாடுகா வாலி, களந்தைக்கோன்,
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்;
அமரர்க் கமரர் அரர்க்டிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.

91

ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி, அழிகின்றார்; - ஆவா!
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.

92

பகனாட்டம் பாட்டயரும், பாட்டோடாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும்; உச்சி - பகனாட்டந்(து)
ஆங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான், தம்முடைய(து)
ஆங்கால் தொழுதல் தலை.

93

தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்;
தலையாலங் காடர்தம் என்னும்; - தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர், வல்விடையீர்,
பாகீ ரதிவளரும் பண்பு.

94

பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்வான்,
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.

95

சிவன்மாட் டுகவெழுதும்; நாணும் நகுமென்னும்;
சிவன்மேய செங்குன்றூர் என்னும்; - சிவன்மாட்டங்(கு)
ஆலிங் கனம்நினையும் ஆயிழை,ஈர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.,

96

ஆறாவெங் கூற்றுதைத்(து) ஆனைத்தோல் போர்த்துகத்தங்(கு)
ஆறார் சடையீர் கமையாதே? - ஆறாத
ஆனினத்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை;
ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.

97

ஆட்டும் அரவம், அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான், கொன்றையான் போந்தான் பலிக்கென்று;
போரேற்றான் போந்தான் புறம்.

98

புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே
புறத்தாழ் புலிப்பொதுவுள் ஆடி, - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன், வெண்பிறையான், வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.

99

மெய்யன் பகலாத வேதியன், வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் - வெய்ய
துணையகலான், நோக்கலான், போற்றிகலா நெஞ்சே,
துணையிகலா கூறுவான் நூறு.

100

நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து,
நூறா நொடிவதனின் மிக்கதே, - நூறா
உடையான் பரித்தவெரி உத்தமனை, வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.