பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் / கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி
வ.எண் பாடல்
1

சொல்லும் பொருளுமே தூத்திரியும், நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

2

பெற்ற பயன்இதுவே யன்றே, பிறந்தியான்;
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்(கு)
ஆளாகப் பெற்றேன் அடைந்து.

3

அடைந்துய்ம்மின் அம்மானை; உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு - அடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்(து)
அண்ணலே கண்டீர் அரண்.

4

அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே
காணுமால் உற்(று)அன்றன் காளத்தி கைதொழுது
பேணுமால், உள்ளம் பெரிது.

5

பெரியவர், காணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த(து) இடம்.

6

இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே யானால், - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்(கு)
ஒருவடிவே அன்றால் உரு.

7

உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கயிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும்
மாக்கயிலை என்னும் மலை.

8

மலைவரும்போர் வானவரும், தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையால் தண்சாரற் காளத்தி ஆள்வார்நஞ்(சு)
உண்டமையால் உண்டிவ் வுலகு.

9

உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலக மெனப்பெறினும் சீசீ; - இலகியசீர்
ஈசா, திருக்கயிலை எம்பெருமான், என்றென்றே
பேசா திருப்பார் பிறப்பு.

10

பிறப்புடையர், கற்றோர், பெருஞ்செல்வர், மற்றும்
சிறப்புடைய ரானாலும் சீசீ; - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணா தவர்.

11

அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி!
எவரும் தொழுதேத்தும் எந்தை, - சிவம்மன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.

12

வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல்; அந்தோ! கிறிப்பட்டார்; - கீளாடை
அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற
கண்ணப்ப ராவார் கதை.

13

கதையிலே கேளீர்; கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் சென்று - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.

14

பண்டு தொடங்கியும், பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்(டு)
ஆளத் தயாஉண்டோ, இல்லையோ? சொல்லாயே
காளத்தி யாய்உன் கருத்து.

15

கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர்
அறிவான் உறுவார்க்(கு) அறியுமா றுண்டோ,
நெறிவார் சடையாய் நிலை!

16

நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன்; - தொலைவின்றிப்
போந்தேறக் கைதாராய்; காளத்திப் புத்தேளிர்
வேந்தே,இப் பாசத்தை விட்டு.

17

பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே,என்
நேசத்தை வைக்க நினைகண்டாய்; - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா, நீஎன்னைக்
காக்குமா(று) இத்தனையே காண்.

18

காணா தலக்கின்றார் வானோர்கள், காளத்திப்
பூணார மார்பன்றன் பொற்பாதம்; - நாணாதே
கண்டிடுவான் யான்இருந்தேன், காணீர், கடல்நஞ்சை
உண்டிடுவான் றன்னை ஒருங்கு.

19

ஒருங்கா(து) உடனேநின்(று) ஓர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம், ஒருகால் - நெருங்கிக்
கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.

20

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பால் மலர்தூய் வணங்காதே, - நம்பா,நின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்;
காலங்கள் போன கழிந்து.

21

கழிந்த; கழிகிலாய்; நெஞ்சே, கழியாது
ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை
நண்ணுதலாம் நன்மை நமக்கு.

22

நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால், நம்பர்
தமக்கழகு தாமே யறிவர் - அமைப்பொதும்பின்
கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை
வல்லவா, நெஞ்சமே, வாழ்த்து.

23

வாழ்த்துவாய்; வாழ்த்தா தொழிவாய்; மறுசுழியிட்டு
ஆழ்த்துவாய்; அஃதறிவாய் நீயன்றே! - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.

24

கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க் கில்லை; - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்(து)இங்(கு) ஈண்டிற்றுக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழலு மாறு.

25

மாறிப் பிறந்து, வழியிடை யாற்றிடை
ஏறி யிழியும் இதுவல்லால், - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல், சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.

26

இனிதே பிறவி; இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்
பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.

27

மகிழந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள்; என்செய்கேன்? பேசு.

28

பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம்
ஏசும் பரிசானாளே; பாவம்! - மாசுனைநீர்
காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.

29

போர்த்த களிற்றுரியும், பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா, யான்காணக் காட்டு.

30

காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப், போய்
நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ, காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.

31

வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும், வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல்! - வந்தித்து
வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

32

பண்டிதுவே; அன்றா கில், கேளீர்கொல்! பல்சருகு
கொண்டிலங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.

33

செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும்? சென்றடைந்து
கைதொழுவார்க்(கு) எந்தை கயிலாயர்; - நொய்தளவில்
காலற்காய்ந் தாரன்றே, காணீர்! கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.

34

பரிந்துரைப்பார் சொற்கேளாள்; எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதா,வா! காளத்தி நம்பா,வா என்றென்றென
மாதாவா உற்ற மயல்.

35

மயலைத் தவிர்க்கநீ வாராய்! ஒருமூன்(று)
எயிலைப் பொடியாக எய்தாய்; - கயிலைப்
பருப்பதவா, நின்னுடைய பாதத்தின் கீழே
யிருப்பதவா வுற்றாள் இவள்.

36

இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல், இன்றே
தவளப் பொடியிவள்மேல் சாத்தி, - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி; காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள்; தீரும் துயர்.

37

துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன்; - வியற்கொடும்போர்
ஏற்றானே! வண்கயிலை எம்மானே! என்கொலோ,
மேற்றான் இதற்கு விளைவு!

38

விளையும் வினைஅரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ! காளத்தி ஆள்வார் - வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.

39

வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே; - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு, கயிலாயத்(து)
எம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.

40

அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகளா வனவும்,
அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தி யாருக்கும் காண்டற் கரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.

41

நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று)
அறியாய்கொல்! அந்தோ! அயர்ந்தாள்; - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

42

நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று)
அறியாய்கொல்! அந்தோ! அயர்ந்தாள்; - நெறியில்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.

43

அருளாத வாறுண்டே! யார்க்கேனும் ஆக;
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில், வியன்கயிலை மேயான்வந்(து)
இம்மையே தீர்க்கும் இடர்.

44

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால்; நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங்(கு) ஒண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர்; உணர்ந்து.

45

உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்;
புணருங்கால் ஆரமுதே போலும்; - இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்,
இனியவா காண்நின் இயல்பு.

46

நின்னியல்பை யாரே அறிவார், நினையுங்கால்!
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே! - நின்னில்
வெளிப்படுவ ஏழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவுமா னால்; உரை.

47

உரையும் பொருளும், உடலும் உயிரும்,
விரையும் மலரும்போல்; விம்மிப் - புரையின்றி
சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா றெங்கும் நிறைந்து.

48

நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும், ஒன்றின்
மறைந்தைம் புலன்காண வாராய்; - சிறந்த
கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்;
பணியாயால்; என்முன் பரிசு.

49

பரிசறியேன்; பற்றிலேன்; கற்றிலேன்; முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய்; - திரியும்
புரம்மாளச் செற்றவனே! பொற்கயிலை மன்னும்
பரமா! அடியேற்குப் பற்று.

50

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே;
முற்றாவெண் திங்கள் முளைசூடி; - வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான்; காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.

51

மன்னா! கயிலாயா! மாமுத்தம், மாணிக்கம்
பொன்னா மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய்! வெள்ளெலும்பு பூண்கின்ற(து)
என்செய்வான்? எந்தாய்! இயம்பு.

52

இயம்பாய்; மடநெஞ்சே! ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய்? - புயம்பாம்பால்
ஆர்த்தானே! காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.

53

இருந்தவா காணீர்; இதுவென்ன மாயம்!
அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த்
தானாளும் பிச்சை புகும்போலும்! தன்அடியார்
வானாள, மண்ணாள வைத்து.

54

வைத்த இருநிதியே, என்னுடைய வாழ்முதலே,
நித்திலமே, காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத் தாசை அடிநாயேன்; காணுங்கால்
எக்காலத் தெப்பிறவி யான்.

55

யானென்றும் தானென்(று) இரண்டில்லை என்பதனை
யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண்(டு)
அளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான், மாயங்கள் செய்து.

56

மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று,
காயங்கொண் டாடல் கணக்கன்று; - காயமே
நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.

57

கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம், - பிணக்கின்றிக்
காலத்தால், நெஞ்சே, கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.

58

தொழுவாள்; பெறாளே; தோள்வளையும்; தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்;
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.

59

பெண்இன்(று) அயலார்முன் பேதை; பிறைசூடி,
கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன், - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமம்தா, மற்றிவளைச் சார்ந்து

60

சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும், - கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.

61

தங்கழல்கள் ஆர்ப்ப, விளக்குச், சலன் சலன் என்(று)
அங்கழல்கள் ஆர்ப்ப, அனலேந்திப் - பொங்ககலத்(து)
ஆர்த்தா டரவம், அகன்கயிலை மேயாய்,நீ
கூத்தாடல் மேவியவா, கூறு.

62

கூறாய்நின் பொன்வாயால்; கோலச் சிறுகிளியே,
வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல்தாவும்
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திறம்.

63

ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல்
மாசில் நிறத்த மடக்குருகே, - கூசி
இருத்தியாய், நீயும் இருங்கயிலை மேயாற்(கு)
அருத்தியாய்க் காமுற்றா யாம்.

64

காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே!
யாமுற்ற துற்றாய்; இருங்கடலே, - யாமத்து
ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சு நள்ளிருள்கூர்
காலத்தும் துஞ்சாதுன் கண்.

65

கண்ணும், கருத்துங் கயிலாய ரேஎமக்கென்(று)
எண்ணி யிருப்பன்யான் எப்பொழுதும்; - நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல்! நெஞ்சே, அவர்.

68

நெஞ்சே, அவர்கண்டாய், நேரே, நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார்; - நஞ்சேயும்
கண்டத்தார், காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அவர்.

67

அலரோன், நெடுமால், அமரர்கோன், மற்றும்
பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத்(து)
ஒன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.

68

கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீப் பற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.

69

வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர்
செந்தறுகண் கேழல் திறம்புரிந்து - வந்தருளும்
கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா
வானவர்தம் கோமானே, வா.

70

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார்! - தாம்யார்க்கும்
காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத்
தீண்டத்தான் பெற்றமையாற் சென்று.

71

சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்,
என்றும் அடியார்க்கு முன்னிற்பர்; - நன்று,
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்;
இனியவா பத்தர்க் கிவர்.

72

இவரே முதல்தேவர்; எல்லார்க்கும் மிக்கார்;
இவர்அல்லர் என்றிருக்க வேண்டா; - கவராதே
காதலித்தின் றேத்துதிரேல், காளத்தி யாள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே யாம்.

73

ஆம்என்று நாளை உள என்று வாழ்விலே
தாம்இன்று வீழ்தல் தவமன்று; - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா(து) இருங்கயிலை
அம்மானைச் சேர்வ தறிவு.

74

அறியாம லேனும், அறிந்தேனும் செய்து
செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்.

75

போகின்ற மாமுகிலே, பொற்கயிலை வெற்பளவும்
ஏகின் றெமக்காக; எம்பெருமான் - ஏகினால்,
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய்
விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.

76

வேறேயும் காக்கத் தகுவேனே; மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே! - ஏறேறும்
அன்பா! அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து)
என்பாவ மேயன்றோ! இன்று.

77

இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு)
என்றும், இளமதியே; எம்பெருமான் - என்றும்என்
னுட்காதல் உண்மை, உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பஞ் செய்.

78

செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது
கையறவும், உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.

79

போது நெறியனவே பேசி,நின் பொன்வாயால்
ஊதத் தருவன்; ஒளிவண்டே, - காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான்
வண்தார்மோந்(து) என்குழற்கே வா.

80

வா!வா! மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய்! - ஓவாதே;
பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக்
கோமான் வர,ஒருகாற் கூவு.

81

கூவுதலும், பாற்கடலே சென்றவனைக் கூடுக என்(று)
ஏவினான் பொற்கயிலை எம்பெருமான்; - மேவியசீர்
அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பால்பால் வேண்டுதலும் தான்.

82

தானே உலகாள்வான்; தான்கண்ட வா,வழக்கம்
ஆனான்மற் றார்இதனை அன்(று)என்பார் - வானோர்
களைகண்டதா னாய்நின்ற காளத்தி யாள்வார்
வளைகொண்டார்; மால்தந்தார்; வந்து.

83

வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ!
இடந்தார், இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற்
கிடந்தார் வலியெலாங் கெட்டு.

84

கெட்ட அரக்கரே, வேதியரே, கேளீர்கொல்!
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று
சலந்தரனார் பட்டதுவும் தாம்.

85

தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல்! சார்வரே!
காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்!
தூரத்தே போவார் தொழுது.

86

தொழுது, நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும்,
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால், பணிந்தகலப் போமின்கள்
எத்தனையும் சேய்த்தாக என்று.

87

வென்றைந்தும் காமாதி வேரறுத்து, மெல்லவே
ஒன்ற நினைதிரேல், ஒன்றலாம்; - சென்றங்கை
மானுடையான், என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.

88

தாளொன்றால் பாதாளம் ஊடுருவத், தண்விசும்பில்,
தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால்,
திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.

89

நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்;
படம்ஆடும் பாம்பணையான் காணான்; - விடம்மேவும்
காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை
யாரே அறிவார் இசைந்து.

90

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல், காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல், கூடலே கூடு.

91

கூடி யிருந்து, பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்,
அடகயில, ஆர்முதை விட்டு.

92

விட்டாவி போக, உடல்கிடந்து வெந்தீயிற்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம்
கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.

93

மனம்முற்றும் மையலாய், மாதரார், தங்கள்
கனம்உற்றும் காமத்தே வீழ்வர், - புனமுற்(று)
இனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
றனக்குறவு செய்கலா தார்.

94

தாழ்ந்த சடையும், தவளத் திருநீறும்
ழ்ந்த புலிஅதளும், சூழ் அரவும், - சேர்ந்து
நெருக்கி, வானோர்இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்(கு)
இருக்கும்,மா கோலங்கள் ஏற்று.

95

ஏற்றின் மணியே அமையாதோ! ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ! - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற்(கு) ஈங்கு.

96

ஈங்கேவா என்றருளி, என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல், நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய்,நான் நல்ல
பணிகின்ற வண்ணம் பணி.

97

பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன்; - அணியும்
கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள்
பெருமான தில்லை பிழை.

98

பிழைப்புவாய்ப் பொன்றறியேன்; பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன்; - அழைத்தாலும்
என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.

99

வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும்
பரமா,உன் பாதார் விந்தம் - சிரம்ஆர
ஏத்திடும்போ தாகவந்(து) என்மனத்தில் எப்பொழுதும்
வாய்த்திடுநீ; வேண்டேன்யான் மற்று.

100

மற்றுப் பலபிதற்ற வேண்டா, மடநெஞ்சே!
கற்றைச் சடையண்ணல், காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதுஞ் சொல்.