பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சொல்லும் பொருளுமே தூத்திரியும், நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகற் கேற்றினேன் பெற்று.
பெற்ற பயன்இதுவே யன்றே, பிறந்தியான்; கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத் தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்(கு) ஆளாகப் பெற்றேன் அடைந்து.
அடைந்துய்ம்மின் அம்மானை; உம்ஆவி தன்னைக் குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு - அடைந்துநும் கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்(து) அண்ணலே கண்டீர் அரண்.
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே காணுமால் உற்(று)அன்றன் காளத்தி கைதொழுது பேணுமால், உள்ளம் பெரிது.
பெரியவர், காணீர்என் உள்ளத்தின் பெற்றி தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும் திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை இருத்தத்தான் போந்த(து) இடம்.
இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த மடப்பாவை தன்வடிவே யானால், - விடப்பாற் கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்(கு) ஒருவடிவே அன்றால் உரு.
உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய பூக்கயிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும் மாக்கயிலை என்னும் மலை.
மலைவரும்போர் வானவரும், தானவரும் எல்லாம் அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக் கண்டமையால் தண்சாரற் காளத்தி ஆள்வார்நஞ்(சு) உண்டமையால் உண்டிவ் வுலகு.
உலக மனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலக மெனப்பெறினும் சீசீ; - இலகியசீர் ஈசா, திருக்கயிலை எம்பெருமான், என்றென்றே பேசா திருப்பார் பிறப்பு.
பிறப்புடையர், கற்றோர், பெருஞ்செல்வர், மற்றும் சிறப்புடைய ரானாலும் சீசீ; - இறப்பில் கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார் அடியாரைப் பேணா தவர்.
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி! எவரும் தொழுதேத்தும் எந்தை, - சிவம்மன்னு தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே போக்குவார் வாளா பொழுது.
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கேளார்கொல்; அந்தோ! கிறிப்பட்டார்; - கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்ப ராவார் கதை.
கதையிலே கேளீர்; கயிலாயம் நோக்கிப் புதையிருட்கண் மாலோடும் சென்று - சிதையாச்சீர்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
பண்டு தொடங்கியும், பாவித்தும் நின்கழற்கே தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்(டு) ஆளத் தயாஉண்டோ, இல்லையோ? சொல்லாயே காளத்தி யாய்உன் கருத்து.
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர் அறிவான் உறுவார்க்(கு) அறியுமா றுண்டோ, நெறிவார் சடையாய் நிலை!
நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத் தலைவ தடுமாறு கின்றேன்; - தொலைவின்றிப் போந்தேறக் கைதாராய்; காளத்திப் புத்தேளிர் வேந்தே,இப் பாசத்தை விட்டு.
பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே,என் நேசத்தை வைக்க நினைகண்டாய்; - பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா, நீஎன்னைக் காக்குமா(று) இத்தனையே காண்.
காணா தலக்கின்றார் வானோர்கள், காளத்திப் பூணார மார்பன்றன் பொற்பாதம்; - நாணாதே கண்டிடுவான் யான்இருந்தேன், காணீர், கடல்நஞ்சை உண்டிடுவான் றன்னை ஒருங்கு.
ஒருங்கா(து) உடனேநின்(று) ஓர்ஐவர் எம்மை நெருங்காமல் நித்தம், ஒருகால் - நெருங்கிக் கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான் வருங்கொலோ நம்பால் மதித்து.
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே வம்பால் மலர்தூய் வணங்காதே, - நம்பா,நின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்; காலங்கள் போன கழிந்து.
கழிந்த; கழிகிலாய்; நெஞ்சே, கழியாது ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க் கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை நண்ணுதலாம் நன்மை நமக்கு.
நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால், நம்பர் தமக்கழகு தாமே யறிவர் - அமைப்பொதும்பின் கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை வல்லவா, நெஞ்சமே, வாழ்த்து.
வாழ்த்துவாய்; வாழ்த்தா தொழிவாய்; மறுசுழியிட்டு ஆழ்த்துவாய்; அஃதறிவாய் நீயன்றே! - யாழ்த்தகைய வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே கண்டாய் அடியேன் கடன்.
கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க் கில்லை; - இடம்நாடி இந்நாட்டிற் கேவந்(து)இங்(கு) ஈண்டிற்றுக் கொண்டுபோய் அந்நாட்டில் உண்டுழலு மாறு.
மாறிப் பிறந்து, வழியிடை யாற்றிடை ஏறி யிழியும் இதுவல்லால், - தேறித் திருக்கயிலை ஏத்தீரேல், சேமத்தால் யார்க்கும் இருக்கையிலை கண்டீர் இனிது.
இனிதே பிறவி; இனமரங்கள் ஏறிக் கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப் பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
மகிழந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய் நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும் விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என் பெண்ணுறங்காள்; என்செய்கேன்? பேசு.
பேசும் பாசறியாள் பேதை; பிறர்க்கெல்லாம் ஏசும் பரிசானாளே; பாவம்! - மாசுனைநீர் காம்பையலைத் தாலிக்கும் காளத்தி என்றென்று பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து.
போர்த்த களிற்றுரியும், பூண்ட பொறியரவும் தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும் கயிலாயா, யான்காணக் காட்டு.
காட்டில் நடம்ஆடிக் கங்காளர் ஆகிப், போய் நாட்டிற் பலிதிரிந்து நாள்தோறும் - ஓட்டுண்பார் ஆனாலும் என்கொலோ, காளத்தி ஆள்வாரை வானோர் வணங்குமா வந்து.
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும், வார்சடைமேல் கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல்! - வந்தித்து வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல் பால்உகுத்த மாணிக்குப் பண்டு.
பண்டிதுவே; அன்றா கில், கேளீர்கொல்! பல்சருகு கொண்டிலங்கத் தும்பின்னூற் கூடிழைப்பக் - கண்டு நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர் சிலந்திக்குச் செய்த சிறப்பு.
செய்த சிறப்பெண்ணில், எங்குலக்கும்? சென்றடைந்து கைதொழுவார்க்(கு) எந்தை கயிலாயர்; - நொய்தளவில் காலற்காய்ந் தாரன்றே, காணீர்! கழல்தொழுத பாலற்காய் அன்று பரிந்து.
பரிந்துரைப்பார் சொற்கேளாள்; எம்பெருமான் பாதம் பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர் நாதா,வா! காளத்தி நம்பா,வா என்றென்றென மாதாவா உற்ற மயல்.
மயலைத் தவிர்க்கநீ வாராய்! ஒருமூன்(று) எயிலைப் பொடியாக எய்தாய்; - கயிலைப் பருப்பதவா, நின்னுடைய பாதத்தின் கீழே யிருப்பதவா வுற்றாள் இவள்.
இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல், இன்றே தவளப் பொடியிவள்மேல் சாத்தி, - இவளுக்குக் காட்டுமின்கள் காளத்தி; காட்டிக் கமழ்கொன்றை சூட்டுமின்கள்; தீரும் துயர்.
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு மயக்கில் வழிகாண மாட்டேன்; - வியற்கொடும்போர் ஏற்றானே! வண்கயிலை எம்மானே! என்கொலோ, மேற்றான் இதற்கு விளைவு!
விளையும் வினைஅரவின் வெய்ய விடத்தைக் களைமினோ! காளத்தி ஆள்வார் - வளைவில் திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும் மருந்தினைநீர் வாயிலே வைத்து.
வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே; - தூயவே கம்பெருமா தேவியொடு மன்னு, கயிலாயத்(து) எம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.
அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகளா வனவும், அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த காளத்தி யாருக்கும் காண்டற் கரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி.
நெறிவார் சடையாய், நிலையின்மை நீஒன்(று) அறியாய்கொல்! அந்தோ! அயர்ந்தாள்; - நெறியில் கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை நினைத்தருவி கண்சோர நின்று.
அருளாத வாறுண்டே! யார்க்கேனும் ஆக; இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து மெய்ம்மையே உன்னில், வியன்கயிலை மேயான்வந்(து) இம்மையே தீர்க்கும் இடர்.
இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு நடவீரோ காலத்தால்; நாங்கள் - கடல்வாய்க் கருப்பட்டோங்(கு) ஒண்முகில்சேர் காளத்தி காண ஒருப்பட்டோம் கண்டீர்; உணர்ந்து.
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்; புணருங்கால் ஆரமுதே போலும்; - இணரில் கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய், இனியவா காண்நின் இயல்பு.
நின்னியல்பை யாரே அறிவார், நினையுங்கால்! மன்னியசீர்க் காளத்தி மன்னவனே! - நின்னில் வெளிப்படுவ ஏழுலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவுமா னால்; உரை.
உரையும் பொருளும், உடலும் உயிரும், விரையும் மலரும்போல்; விம்மிப் - புரையின்றி சென்றவா றோங்கும் திருக்கயிலை எம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து.
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும், ஒன்றின் மறைந்தைம் புலன்காண வாராய்; - சிறந்த கணியாரும் தண்சாரற் காளத்தி ஆள்வாய்; பணியாயால்; என்முன் பரிசு.
பரிசறியேன்; பற்றிலேன்; கற்றிலேன்; முற்றும் கரியுரியாய் பாதமே கண்டாய்; - திரியும் புரம்மாளச் செற்றவனே! பொற்கயிலை மன்னும் பரமா! அடியேற்குப் பற்று.
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே; முற்றாவெண் திங்கள் முளைசூடி; - வற்றாவாம் கங்கைசேர் செஞ்சடையான்; காளத்தி யுள்நின்ற மங்கைசேர் பாகத்து மன்.
மன்னா! கயிலாயா! மாமுத்தம், மாணிக்கம் பொன்னா மாக்கொண்டு பூணாதே - எந்நாளும் மின்செய்வார் செஞ்சடையாய்! வெள்ளெலும்பு பூண்கின்ற(து) என்செய்வான்? எந்தாய்! இயம்பு.
இயம்பாய்; மடநெஞ்சே! ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய்? - புயம்பாம்பால் ஆர்த்தானே! காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து.
இருந்தவா காணீர்; இதுவென்ன மாயம்! அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தானாளும் பிச்சை புகும்போலும்! தன்அடியார் வானாள, மண்ணாள வைத்து.
வைத்த இருநிதியே, என்னுடைய வாழ்முதலே, நித்திலமே, காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர் அக்காலத் தாசை அடிநாயேன்; காணுங்கால் எக்காலத் தெப்பிறவி யான்.
யானென்றும் தானென்(று) இரண்டில்லை என்பதனை யானென்றுங் கண்டிருப்பனா னாலும் - தேனுண்(டு) அளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான் தெளிகொடான், மாயங்கள் செய்து.
மாயங்கள் செய்துஐவர் சொன்ன வழிநின்று, காயங்கொண் டாடல் கணக்கன்று; - காயமே நிற்பதன் றாதலால் காளத்தி நின்மலன்சீர் கற்பதே கண்டீர் கணக்கு.
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை வணக்கி வலைப்படா முன்னம், - பிணக்கின்றிக் காலத்தால், நெஞ்சே, கயிலாயம் மேவியநற் சூலத்தான் பாதம் தொழு.
தொழுவாள்; பெறாளே; தோள்வளையும்; தோற்றாள் மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்; நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப் பெறுமாறு காணீர்என் பெண்.
பெண்இன்(று) அயலார்முன் பேதை; பிறைசூடி, கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன், - உண்ணின்ற காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத் தாமம்தா, மற்றிவளைச் சார்ந்து
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும், - கூர்ந்துள்ளே மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும் காளத்தி யார்தம் கழல்.
தங்கழல்கள் ஆர்ப்ப, விளக்குச், சலன் சலன் என்(று) அங்கழல்கள் ஆர்ப்ப, அனலேந்திப் - பொங்ககலத்(து) ஆர்த்தா டரவம், அகன்கயிலை மேயாய்,நீ கூத்தாடல் மேவியவா, கூறு.
கூறாய்நின் பொன்வாயால்; கோலச் சிறுகிளியே, வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல்தாவும் மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச் செஞ்சடைஎம் ஈசன் திறம்.
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல் மாசில் நிறத்த மடக்குருகே, - கூசி இருத்தியாய், நீயும் இருங்கயிலை மேயாற்(கு) அருத்தியாய்க் காமுற்றா யாம்.
காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே! யாமுற்ற துற்றாய்; இருங்கடலே, - யாமத்து ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சு நள்ளிருள்கூர் காலத்தும் துஞ்சாதுன் கண்.
கண்ணும், கருத்துங் கயிலாய ரேஎமக்கென்(று) எண்ணி யிருப்பன்யான் எப்பொழுதும்; - நண்ணும் பொறியா டரவசைத்த பூதப் படையார் அறியார்கொல்! நெஞ்சே, அவர்.
நெஞ்சே, அவர்கண்டாய், நேரே, நினைவாரை அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார்; - நஞ்சேயும் கண்டத்தார், காளத்தி ஆள்வார் கழல்கண்டீர் அண்டத்தார் சூடும் அவர்.
அலரோன், நெடுமால், அமரர்கோன், மற்றும் பலராய்ப் படைத்துக்காத் தாண்டு - புலர்காலத்(து) ஒன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான் குன்றாத சீர்க்கயிலைக் கோ.
கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக் கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே பண்பொழியாக் கோபத்தீப் பற்றுதலும் பற்றற்று வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர் செந்தறுகண் கேழல் திறம்புரிந்து - வந்தருளும் கானவனாம் கோலமியான் காணக் கயிலாயா வானவர்தம் கோமானே, வா.
வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல் தாமார் உலகில் தவமுடையார்! - தாம்யார்க்கும் காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத் தீண்டத்தான் பெற்றமையாற் சென்று.
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய், என்றும் அடியார்க்கு முன்னிற்பர்; - நன்று, கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்; இனியவா பத்தர்க் கிவர்.
இவரே முதல்தேவர்; எல்லார்க்கும் மிக்கார்; இவர்அல்லர் என்றிருக்க வேண்டா; - கவராதே காதலித்தின் றேத்துதிரேல், காளத்தி யாள்வார்நீர் ஆதரித்த தெய்வமே யாம்.
ஆம்என்று நாளை உள என்று வாழ்விலே தாம்இன்று வீழ்தல் தவமன்று; - யாமென்றும் இம்மாய வாழ்வினையே பேணா(து) இருங்கயிலை அம்மானைச் சேர்வ தறிவு.
அறியாம லேனும், அறிந்தேனும் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகலி ஆடுதலும் போம்.
போகின்ற மாமுகிலே, பொற்கயிலை வெற்பளவும் ஏகின் றெமக்காக; எம்பெருமான் - ஏகினால், உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய் விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு.
வேறேயும் காக்கத் தகுவேனே; மெல்லியலாள் கூறேயும் காளத்திக் கொற்றவனே! - ஏறேறும் அன்பா! அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து) என்பாவ மேயன்றோ! இன்று.
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு) என்றும், இளமதியே; எம்பெருமான் - என்றும்என் னுட்காதல் உண்மை, உயர்கயிலை மேயாற்குத் திட்காதே விண்ணப்பஞ் செய்.
செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது கையறவும், உள்மெலிவும் யான்காட்டப் - பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம் போரேறே இத்தெருவே போது.
போது நெறியனவே பேசி,நின் பொன்வாயால் ஊதத் தருவன்; ஒளிவண்டே, - காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத் தெம்பெருமான் வண்தார்மோந்(து) என்குழற்கே வா.
வா!வா! மணிவாயால் மாவின் தளிர்கோதிக் கூவா திருந்த குயிற்பிள்ளாய்! - ஓவாதே; பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக் கோமான் வர,ஒருகாற் கூவு.
கூவுதலும், பாற்கடலே சென்றவனைக் கூடுக என்(று) ஏவினான் பொற்கயிலை எம்பெருமான்; - மேவியசீர் அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால் தன்பால்பால் வேண்டுதலும் தான்.
தானே உலகாள்வான்; தான்கண்ட வா,வழக்கம் ஆனான்மற் றார்இதனை அன்(று)என்பார் - வானோர் களைகண்டதா னாய்நின்ற காளத்தி யாள்வார் வளைகொண்டார்; மால்தந்தார்; வந்து.
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத் தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ! இடந்தார், இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற் கிடந்தார் வலியெலாங் கெட்டு.
கெட்ட அரக்கரே, வேதியரே, கேளீர்கொல்! பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக் கலந்தரனார் காளத்தி யாள்வார்மேற் சென்று சலந்தரனார் பட்டதுவும் தாம்.
தாம்பட்டது ஒன்றும் அறியார்கொல்! சார்வரே! காம்புற்ற செந்நெற் கயிலைக்கோன் - பாம்புற்ற ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார்! தூரத்தே போவார் தொழுது.
தொழுது, நமனும்தன் தூதுவர்க்குச் சொல்லும், வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப் பத்தர்களைக் கண்டால், பணிந்தகலப் போமின்கள் எத்தனையும் சேய்த்தாக என்று.
வென்றைந்தும் காமாதி வேரறுத்து, மெல்லவே ஒன்ற நினைதிரேல், ஒன்றலாம்; - சென்றங்கை மானுடையான், என்னை உடையான் வடகயிலை தானுடையான் தன்னுடைய தாள்.
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத், தண்விசும்பில், தாளொன்றால் அண்டம் கடந்துருவித் - தோளொன்றால், திக்கனைத்தும் போர்க்கும் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம்.
நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்; படம்ஆடும் பாம்பணையான் காணான்; - விடம்மேவும் காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை யாரே அறிவார் இசைந்து.
இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக் காட்டுமேல், காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும் கூட்டுமேல், கூடலே கூடு.
கூடி யிருந்து, பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி வடகயிலை ஏத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில், அடகயில, ஆர்முதை விட்டு.
விட்டாவி போக, உடல்கிடந்து வெந்தீயிற் பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம் கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற வள்ளலைச்சென் றேத்த மனம்.
மனம்முற்றும் மையலாய், மாதரார், தங்கள் கனம்உற்றும் காமத்தே வீழ்வர், - புனமுற்(று) இனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான் றனக்குறவு செய்கலா தார்.
தாழ்ந்த சடையும், தவளத் திருநீறும் ழ்ந்த புலிஅதளும், சூழ் அரவும், - சேர்ந்து நெருக்கி, வானோர்இறைஞ்சும் காளத்தி ஆள்வார்க்(கு) இருக்கும்,மா கோலங்கள் ஏற்று.
ஏற்றின் மணியே அமையாதோ! ஈர்ஞ்சடைமேல் வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ! - ஆற்றருவி கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத் தெம்பெருமான் என்மேற் படைவிடுப்பாற்(கு) ஈங்கு.
ஈங்கேவா என்றருளி, என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல், நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய்,நான் நல்ல பணிகின்ற வண்ணம் பணி.
பணியாது முன்இவனைப் பாவியேன் வாளா கணியாது காலங் கழித்தேன்; - அணியும் கருமா மிடற்றெம் கயிலாயத் தெங்கள் பெருமான தில்லை பிழை.
பிழைப்புவாய்ப் பொன்றறியேன்; பித்தேறி னாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன்; - அழைத்தாலும் என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி மன்னா தருவாய் வரம்.
வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமா,உன் பாதார் விந்தம் - சிரம்ஆர ஏத்திடும்போ தாகவந்(து) என்மனத்தில் எப்பொழுதும் வாய்த்திடுநீ; வேண்டேன்யான் மற்று.
மற்றுப் பலபிதற்ற வேண்டா, மடநெஞ்சே! கற்றைச் சடையண்ணல், காளத்தி - நெற்றிக்கண் ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதுஞ் சொல்.