பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நான்காம் தந்திரம் / நவாக்கரி சக்கரம்
வ.எண் பாடல்
1

நவாக்கரி சக்கரம் நான் உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரி ஆக
நவாக்கரி எண்பத்து ஒரு வகை ஆக
நவாக்கரி அக்கிலி சௌ முதல் ஈறே.

2

சௌ முதல் அவ்வொடு ஹௌவுடனாம் கிரீம்
கௌவுள் உமையுளும் கலந்து இரீம் சிரீம் என்று
ஒவ்வில் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வுள் எழுந்து சிவாய நம என்னே.

3

நவாக்கரி ஆவது நான் அறி வித்தை
நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே.

4

நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடிச்
சிரம்தரு தீவினை செய்வது அகற்றி
வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே.

5

கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

6

நினைத்திடும் மச்சிரீ மக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர் தருவாளே.

7

நேர் தரும் அத்திரு நாயகி ஆனவள்
யாது ஒரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார் தரு வண்ணம் கருதின கைவரும்
நார் தரு வண்ணம் நடந்திடு நீயே.

8

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே.

9

அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

10

அறிந்திடுவார்கள் அமரர் களாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீரே.

11

நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பார் அணியும் ஹிரீ முன்ஷ்றீம் ஈறாம்
தார் அணியும் புகழ்த் தையல் நல்லாள் தனைக்
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே.

12

கண்டும் கொள்ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும்
பண்டு கொளும் மரம் ஆய பரம் சுடர்
நின்று கொளும் நிலை பேறு உடையாளே.

13

பேறு உடையாள் தன் பெருமையை எண்ணிடில்
நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர்
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை
கூறு உடையாளையும் கூறுமின் நீரே.

14

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என
மாறுமின் வையம் வரும் வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.

15

சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூ அடி இட்டுப் பொலிய இருந்தவர்
மா அடி காணும் வகை அறிவாரே.

16

ஐம் முதல் ஆக வளர்ந்து எழு சக்கரம்
மைம் முதல் ஆக அமர்ந்து இரீம் ஈறு ஆகும்
அம் முதல் ஆகி அவர்க்கு உடையாள் தனை
மைம் முதல் ஆக வழுத்திடு நீயே.

17

வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னைப்
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை
முகத்துளும் முன் எழக் கண்டு கொளீரே.

18

கண்ட இச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையது ஆய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.

19

மெல்லியல் ஆகிய மெய்ப் பொருளாள் தனைச்
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல் ஆகப் பரந்து எழு நாள் பல
நல் இயல்பாலே நடந்திடும் தானே.

20

நடந்திடும் நாவின் உள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆகப்
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.

21

பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.

22

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ் வினைதானே.

23

தானே கழறித் தணியவும் வல்லன் ஆய்த்
தானே நினைத்து அவை சொல்லவும் வல்லன் ஆய்த்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.

24

ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்ற அத் தையலும்
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே.

25

புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகு எங்கும்
கண்ணியன் ஆகிக் கலந்து அங்கு இருந்திடும்
தண்ணியன் ஆகித் தரணி முழுதுக்கும்
அண்ணியன் ஆகி அமர்ந்து இருந்தானே.

26

தான் அது கம் இறீம்க் கௌ அது ஈறு ஆம்
நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே.

27

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.

28

அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே.

29

புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம்
குகை இல்லை கொல்வது இலாமை யினாலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.

30

சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழுமேல் வினை காண கிலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது கார் இருள் மாறு ஒளி தானே.

31

ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறு ஆம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரம் அது ஆமே.

32

ஆமே சதாசிவ நாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள்
ஆமே அனைத்து உயிர் தன் உளும் ஆமே.

33

தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என் உளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும்
கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.

34

காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செயக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.

35

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆகத்
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப் பொருள் ஆகுமே.

36

மெய்ப் பொருள் ஓள முதல் ஹௌ அது ஈறு ஆக்
கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம்
தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி
நல் பொருள் ஆக நடு இருந்தாளே.

37

தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி
கால் அது கொண்டு கலந்து உற வீசிடின்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே.

38

கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்டபின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்றபின்
மாடு இல்லை காணும் வரும்வழி கண்டபின்
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே.

39

உற்ற இடம் எல்லாம் உலப்பு இல் பாழ் ஆக்கிக்
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே.

40

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே.

41

விளக்கு ஒளி ஸௌ முதல் லௌ அது ஈறா
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின் கொடியாளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே.

42

விளங்கிடும் மேல் வரும் மெய்ப் பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும்
விளங்கிடும் மெய்ந் நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.

43

தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்து உள அண்ட சகலமே.

44

அண்டத்தின் உள்ளே அளப்பு அரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார் களே.

45

கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர்தன்னைச்
சிலப்பு அறியார் சில தேவரை நாடித்
தலைப் பறி ஆகச் சமைந்தவர் தானே.

46

தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்து இட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த வரை எண்பத்து ஒன்றுமே

47

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே.

48

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்த இப் பெண் எண்பத்து ஒன்றில் நிரைத்தபின்
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணுமே.

49

பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண் என நேய நல் சேர்க்கலும் ஆமே.

50

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.

51

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச் சிறு கொங்கை கலந்து எழு கன்னியைத்
தச்சிது ஆகச் சமைந்த இம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

52

சிந்தையின் உள்ளே திகழ் தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு
முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே.

53

இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே.

54

கொண்ட கனகம் குழை முடி ஆடை ஆய்க்
கண்ட இம் முத்தம் கனல் திரு மேனி ஆய்ப்
பண்டு அமர் சோதிப் படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே.

55

உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்து எழும் ஓசை ஒளிஅது காணும்
தணந்து எழு சக்கரம் தான் தருவாளே.

56

தருவழி ஆகிய தத்துவ ஞானம்
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று
கருவழி ஆகும் கணக்கை அறுத்துப்
பெருவழி ஆக்கும் பேர் ஒளி தானே.

57

பேர் ஒளி ஆய பெரிய பெரும் சுடர்
சீர் ஒளி ஆகித் திகழ் தரு நாயகி
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம்
பார் ஒளி ஆகிப் பரந்து நின்றாளே.

58

பரந்த கரம் இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம் இரு கொய் தளிர்ப் பாணி
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே.

59

மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சின் உள் தன் அருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே.

60

பரந்து இருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இருகையின் மலர் அவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே.

61

தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்தி அது ஆமே.

62

ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேர் ஒளி ஆய மலர் அதாய்ப்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந் அழல் மண்டலம் ஆனதே.

63

ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே.

64

சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதம் ஆய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானம் ஆய்
ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே.

65

பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்ளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே.

66

கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண் உறு நாதம் பகை அற நின்றிடில்
விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே.

67

மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தைக்
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

68

தாங்கிய நாபித் தட மலர் மண்டலத்து
ஓங்கி எழுங் கலைக்குள் உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

69

நாவுக்கு நாயகி நல் மணிய பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே.

70

அன்று இரு கையில் அளந்த பொருள் முறை
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே.

71

காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு எனக்
காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே.

72

நின்ற இச் சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே.

73

கண்ட இச் சத்தி இருதய பங்கயம்
கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள்
பண்டை அவ் வாயுப் பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே.

74

இருந்த இச் சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூங் கிளி பாசம் மழுவாள்
கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.

75

உகந்தனள் பொன்முடி முத்து ஆரம் ஆகப்
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணிக் கச்சு அணிந்து
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே.

76

பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறு எட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய்
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே.

77

தாள் அத்தின் உள்ளே தாங்கிய சோதியைக்
கால் அது ஆகக் கலந்து கொள் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போலப் பரந்து எழு விண்ணிலே.

78

விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடைக்
கண் அமர் கூபம் கலந்து வருதலால்
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்தது காணுமே.

79

கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்து உள
தா பத்துச் சத்தி தயங்கி வருதல் ஆல்
ஆ பத்துக் கைகள் அடைந்தன நால் ஐந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.

80

சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானம் ஆய்
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு
கால் அம் பூப் பாசம் மழு கத்தி கைக் கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே.

81

எண் அமர் சத்திகள் நால் பத்து நால் உடன்
எண் அமர் சத்திகள் நால் பத்து நால்வர் ஆம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே.

82

கடந்தவள் பொன் முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆகப்
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே.

83

நின்ற இச் சத்தி நிரந்தரம் ஆகவே
கண்டிடும் மேரு வணிமாதி தான் ஆகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே.

84

உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே.

85

நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரைக் கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே.

86

பூசனைச் சத்திகள் எண் ஐவர் சூழவே
நேசவள் கன்னிகள் நால் பத்து நேர் அதாய்க்
காசினிச் சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே.

87

தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போலக் கலந்து எழு மண்ணிலே.

88

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நம என்று
கண்ணில் எழுந்தது காண்பு அரிது அன்று கொல்
கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே.

89

என்று அங்கு இருந்த அமுத கலை இடைச்
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே.

90

அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆகப் பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆகக் குளிர்ந்து எழு முத்துக்
கெமுதம் அது ஆகிய கேடு இலிதானே.

91

கேடு இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு இலி கன்னிகள் நால் ஒன்பதின் மரும்
பூ இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள் இலி தன்னை நணுகி நின்றார்களே.

92

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்து உள் இருந்திடக்
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட வௌகாரம் விளங்கின அன்றே.

93

விளங்கிடும் வான் இடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே.

94

ஆமே அதோ முகம் மேலே அமுதம் ஆய்த்
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே.

95

பொன் கொடியாள் உடைப் பூசனை செய்திட
அக் களி ஆகிய ஆங்காரம் போயிடும்
மற் கடம் ஆகிய மண்டலம் தன் உளே
பிற் கொடி ஆகிய பேதையைக் காணுமே.

96

பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்குத் தாணுவும் ஆய் நிற்கும்
மாதை அவளுக்கு மண்ணும் திலகம் ஆய்க்
கோதையர் சூழக் குவிந்திடக் காணுமே.

97

குவிந்தனர் சத்திகள் முப்பத்து இருவர்
நடந்தனர் கன்னிகள் நால் எண்மர் சூழப்
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே.

98

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடும் ஆல்
இன்று என் மனத்து உளே இல் அடைந்து ஆளுமே.

99

இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே.

100

ஆனை மயக்கும் அறுபத்து நால் தறி
ஆனை இருக்கும் அறு பத்து நால் ஒளி
ஆனை இருக்கும் அறுபத்து நால் அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.