பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இயற்கைப் புணர்ச்சி
வ.எண் பாடல்
1

திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அன நடை வாய்ந்து,
உருவளர் காமன்தன் வென்றிக்கொடி போன்று? ஒளிர்கின்றதே,
மதிவாள் நுதல் வளர் வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது.

2

போதோ, விசும்போ, புனலோ, பணிகளது பதியோ,
யாதோ? அறிகுவது ஏதும் அரிது, யமன் விடுத்த
தூதோ? அனங்கள் துணையோ? இணையிலி , தொல்லைத்தில்லை
மாதோ, மடமயிலோ என நின்றவர் வாழ்பதியே
தெரிய அரியது ஓர் தெய்வம் என்ன
அருவரை நாடன் ஐயுற்றது.

3

பாயும் விடை அரன் தில்லை அன்னாள், படைக்கண் இமைக்கும்,
தோயும் நிலத்து அடி; தூமலர் வாடும்; துயரம் எய்தி
ஆயும் மனனே! அணங்கு அல்லள்; அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல், பெரும் பணைத்தோள், இச்சிறுநுதலே.
அணங்கு அல்லள் என்று அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்து உரைத்தது.

4

அகல்கின்ற அல்குல்தடம் அது கொங்கை அவை; அவம் நீ
புகல்கின்றது என்னை? நெஞ்சு! உண்டே இடை; அடையார் புரங்கள்
இகல்குன்ற வில்லில் செற்றோன், தில்லை ஈசன், எம்மான், எதிர்ந்த
இகல் குன்றப் பல்உகுத்தோன், பழனம் அன்ன பல்வளைக்கே.
வண்டு அமர் புரிகுழல் ஒண்தொடி மடந்தையை
நயந்த வள்ளல் வியந்து உள்ளியது.

5

அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன்; தில்லைச் சிந்தா-
மணி, உம்பரார் அறியா மறையோன், அடி வாழ்த்தலரின்,
பிணியும் அதற்கு மருந்தும், பிறழப் பிறழ, மின்னும்
பணியும் புரமருங்குல், பெருந்தோளி படைக்கண்களே
இறைதிருக் கரத்து மறிமான் நோக்கி
உள்ளக் கருத்து வள்ளல் அறிந்தது.

6

வளைபயில் கீழ்கடல் நின்றுஇட, மேல் கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத், தில்லைத்தொல்லோன் கயிலைக்
கிளைவயின் நீக்கி, இக்கெண்டையம் கண்ணியைக் கொண்டு தந்த
விளைவை அல்லால், வியவேன், நயவேன், தெய்வம், மிக்கனவே.
அன்ன மென்நடை அரிவையைத் தந்த
மன்இருந் தெய்வத்தை மகிழ்ந்து உரைத்தது.

7

ஏழ்உடையான் பொழில், எட்டுஉடையான்புயம், என்னை முன்னாள்
ஊழ்உடையான், புலியூர் அன்ன பொன், இவ் வுயர் பொழில்வாய்ச்
சூழுடை ஆயத்தை நீக்கும் விதி துணையா, மனனே!
யாழ்உடையார் மணம்காண், அணங்காய் வந்து, அகப்பட்டதே.
கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது

8

சொற்பால் அமுது இவள், யான்சுவை , என்னத் துணிந்து இங்ஙகனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று; நான் இவள் ஆம் பகுதிப்
பொற்பு ஆர் அறிவார்? புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பில்
கல் பாவிய வரைவாய்க் கடி தோட்ட களவுஅகத்தே.
கொலை வேலவன் கொடியிடையொடு
கலவி இன்பம் கட்டுரைத்தது .

9

உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன், தில்லைச்சிற்றம்பலத்து ஒருத்தன்
குணம்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக் கொடியிடை தோள்,
புணர்ந்தால் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்
மணம்தாழ் புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றதே.
ஆரா இன்பத்து அன்பு மீதூர
வார் ஆர் முலையை மகிழ்ந்து உரைத்தது

10

அளவியை யார்க்கு மறிவரி
யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே.

11

கூம்பலங் கைத்தலத் தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.

12

. சிந்தா மணிதெண் கடலமிர்
தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே.

13

கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
அறியே னயர்கின்றதே.

14

தேவரிற் பெற்றநஞ் செல்வக்
கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப் புலம்புவதே

15

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.

16

தெளிவளர் வான்சிலை செங்கனி
வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
னேவந்து தோன்றுவனே.

17

புணர்ப்போன் நிலனும் விசும்பும்
பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே.

18

உயிரொன் றுளமுமொன் றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தனருளென
லாகும் பணிமொழிக்கே.

19

பூங்கனை யார்புனற் றென்புலி
யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டு கொண்டாடும்
பிரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக்
கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப்
பாவையை யெய்துதற்கே

20

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்
பலத்துமென் சிற்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலின்
ஆய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே.

21

கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித்
தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட
நோக்கிதில் லைச்சிவன்றாள்
ஆம்பொற் றடமலர் சூடுமென்
னாற்ற லகற்றியதே.

22

உளமாம் வகைநம்மை யுய்யவந்
தாண்டுசென் றும்பருய்யக்
களமாம் விடமமிர் தாக்கிய
தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து
நின்றொர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம்
மண்ண லிரங்கியதே.

23

சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
தில்லைச்சிற் றம்பலத்து
மாணிக்கக் கூத்தன் வடவான்
கயிலை மயிலைமன்னும்
பூணிற் பொலிகொங்கை யாவியை
யோவியப் பொற்கொழுந்தைக்
காணிற் கழறலை கண்டிலை
மென்றோட் கரும்பினையே.

24

லிலங்கலைக் கால்விண்டு மேன்மே
லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றஅன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே.

25

தலைப்படு சால்பினுக் குந்தள
ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந்
தேற்றுவ னெத்துணையுங்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி
வுற்று மயங்கினனே.

26

நல்வினை யும்நயந் தந்தின்று
வந்து நடுங்குமின்மேற்
கொல்வினை வல்லன கோங்கரும்
பாமென்று பாங்கன்சொல்ல
வில்வினை மேருவில் வைத்தவன்
தில்லை தொழாரின்வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென
தாருயிர் துப்புறவே.

27

ஆலத்தி னாலமிர் தாக்கிய
கோன்தில்லை யம்பலம்போற்
கோலத்தி னாள் பொருட்டாக
வமிர்தங் குணங்கெடினுங்
காலத்தி னான்மழை மாறினும்
மாறாக் கவிகைநின்பொற்
சீலத்தை நீயும் நினையா
தொழிவதென் தீவினையே.

28

நின்னுடை நீர்மையும் நீயு
மிவ்வாறு நினைத்தெருட்டும்
என்னுடை நீர்மையி தென்னென்ப
தேதில்லை யேர்கொண்முக்கண்
மன்னுடை மால்வரை யோமல
ரோவிசும் போசிலம்பா
என்னிடம் யாதியல் நின்னையின்
னேசெய்த ஈர்ங்கொடிக்கே.

29

விழியாற் பிணையாம் விளங்கிய
லான்மயி லாம்மிழற்று
மொழியாற் கிளியாம் முதுவா
னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி
லாமெங் குலதெய்வமே.

30

குயிலைச் சிலம்படிக் கொம்பினைக்
தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங்
காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண்டி யான்போய்
வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை
நண்ணும் பளிக்கறையே.

31

கொடுங்கால் குலவரை யேழேழ்
பொழிலொழில் குன்றுமன்று
நடுங்கா தவனை நடுங்க
நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ
லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழில்
நீழலந் தண்புனத்தே.

32

வடிக்க ணிவைவஞ்சி யஞ்சும்
இடையிது வாய்பவளந்
துடிக்கின்ற வரவெற்பன் சொற்பரி
சேயான் றொடர்ந்துவிடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண்
ணோர்வணங் கம்பலம்போற்
படிச்சந் தமுமிது வேயிவ
ளேஅப் பணிமொழியே.

33

குவளைக் களத்தம் பலவன்
குரைகழல் போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின்
றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந்
தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே.

34

பணந்தா ழரவரைச் சிற்றம்
பலவர்பைம் பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண்
பரப்பி மடப்பிடிவாய்
நிணந்தாழ் சுடரிலை வேலகண்
டேனொன்று நின்றதுவே.

35

கயலுள வேகம லத்தலர்
மீது கனிபவளத்
தயலுள வேமுத்த மொத்த
நிரையரன் அம்பலத்தின்
இயலுள வேயிணைச் செப்புவெற்
பாநின தீர்ங்கொடிமேற்
யலுள வேமலர் சூழ்ந்திருள்
தூங்கிப் புரள்வனவே.

36

எயிற்குல மூன்றிருந் தீயெய்த
வெய்தவன் தில்லையொத்துக்
குயிற்குலங் கொண்டுதொண் டைக்கனி
வாய்க்குளிர் முத்தநிரைத்
தயிற்குல வேல்கம லத்திற்
கிடத்தி அனநடக்கும்
மயிற்குலங் கண்டதுண் டேலது
வென்னுடை மன்னுயிரே.

37

ஆயியன் னாய்கவ லேல்அக
லேமென் றளித்தொளித்த
ஆவியன் னார்மிக்க வாவின
ராய்க்கெழு மற்கழிவுற்
றாவியன் னார்மன்னி யாடிடஞ்
சேர்வர்கொலம்பலத்தெம்
ஆவியன் னான்பயி லுங்கயி
லாயத் தருவரையே.

38

காம்பிணை யாற்களி மாமயி
லாற்கதிர் மாமணியால்
வாம்பிணை யால்வல்லி யொல்குத
லால்மன்னு மம்பலவன்
பாம்பிணை யாக்குழை கொண்டோன்
கயிலைப் பயில்புனமுந்
தேம்பிணை வார்குழ லாளெனத்
தோன்றுமென் சிந்தனைக்கே.

39

நேயத்த தாய்நென்ன லென்னைப்
புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
ஆயத்த தாயமிழ் தாயணங்
காயர னம்பலம்போல்
தேயத்த தாயென்றன் சிந்தைய
தாய்த்தெரி யிற்பெரிது
மாயத்த தாகி யிதோவந்து
நின்றதென் மன்னுயிரே.

40

தாதிவர் போதுகொய் யார்தைய
லாரங்கை கூப்பநின்று
சோதி வரிப்பந் தடியார்
சுனைப்புன லாடல்செய்யார்
போதிவர் கற்பக நாடுபுல்
லென்னத்தம் பொன்னடிப்பாய்
யாதிவர் மாதவம் அம்பலத்
தான்மலை யெய்துதற்கே.

41

காவிநின் றேர்தரு கண்டர்வண்
தில்லைக்கண் ணார்கமலத்
தேவியென் றேயையஞ் சென்றதன்
றேயறி யச்சிறிது
மாவியன் றன்னமென் னோக்கிநின்
வாய்திற வாவிடினென்
ஆவியன் றேயமிழ் தேயணங்
கேயின் றழிகின்றதே.

42

அகலிடந் தாவிய வானோ
னறிந்திறைஞ் சம்பலத்தின்
இகலிடந் தாவிடை யீசற்றொ
ழாரினின் னற்கிடமாய்
உகலிடந் தான்சென் றெனதுயிர்
நையா வகையொ துங்கப்
புகலிடந் தாபொழில் வாயெழில்
வாய்தரு பூங்கொடியே.

43

தாழச்செய் தார்முடிதன்னடிக்
கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தானம் பலங்கை
தொழாரினுள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண்
புதைத்துப்பொன் னேயென்னைநீ
வாழச்செய் தாய்சுற்று முற்றும்
புதைநின்னை வாணுதலே.

44

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை யேத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
அருநா ணளிய வழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.

45

கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக்
கஃதே குறைப்பவர்தஞ்
சீலத் தனகொங்கை தேற்றகி
லேஞ்சிவன் தில்லையன்னாள்
நுலொத்த நேரிடை நொய்ம்மையெண்
ணாதுநுண் தேன்நசையாற்
சாலத் தகாதுகண்டீர்வண்டு
காள்கொண்டை சார்வதுவே.

46

நீங்கரும் பொற்கழற் சிற்றம்
பலவர் நெடுவிசும்பும்
வாங்கிருந் தெண்கடல்வையமு
மெய்தினும் யான்மறவேன்
தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந்
தேனும் பொதிந்துசெப்புங்
கோங்கரும் புந்தொலைத் தென்னையு
மாட்கொண்ட கொங்கைகளே.

47

சூளா மணியும்பர்க் காயவன்
சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென்னாருயிர்
ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
லாயம் நணுகுகவே.

48

பொய்யுடை யார்க்கரன்போலக
லும்மகன் றாற்புணரின்
மெய்யுடை யார்க்கவன் அம்பலம்
போல மிகநணுகும்
மையுடை வாட்கண் மணியுடைப்
பூண்முலை வாணுதல்வான்
பையுடை வாளர வத்தல்குல்
காக்கும்பைம் பூம்புனமே.

49

என்னறி வால்வந்த தன்றிது
முன்னும்இன்னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று
தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.

50

எளிதன் றினிக்கனி வாய்வல்லி
புல்ல லெழின்மதிக்கீற்
றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப்
பிரானையுன் னாரினென்கண்
தெளிசென்ற வேற்கண் வருவித்த
செல்லலெல் லாந்தெளிவித்
தளிசென்ற பூங்குழற் றோழிக்கு
வாழி யறிவிப்பனே.

51

குவளைக் கருங்கட் கொடியே
ரிடையிக் கொடிகடைக்கண்
உவளைத் தனதுயி ரென்றது
தன்னோ டுவமையில்லா
தவளைத்தன் பால்வைத்த சிற்றம்
பலத்தா னருளிலர்போல்
துவளத் தலைவந்த இன்னலின்
னேயினிச் சொல்லுவனே.

52

இருங்களி யாயின் றியானிறு
மாப்பஇன் பம்பணிவோர்
மருங்களி யாஅன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.

53

கருங்கண் ணனையறி யாமைநின்
றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய்
வருங்கண் ணனையவண் டாடும்
வளரிள வல்லியன்னீர்
இருங்கண்ணனைய கணைபொரு
புண்புண ரிப்புனத்தின்
மருங்கண் ணனையதுண் டோவந்த
தீங்கொரு வான்கலையே.

54

சிலம்பணி கொண்டசெஞ் சீறடி
பங்கன்றன் சீரடியார்
குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்
தோன்கொண்டு தானணியுங்
கலம்பணி கொண்டிடம் அம்பலங்
கொண்டவன் கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்
குரைமின்கள் சென்னெறியே.

55

ஒருங்கட மூவெயி லொற்றைக்
கணைகொள்சிற் றம்பலவன்
கருங்கடம் மூன்றுகு நால்வாய்க்
கரியுரித் தோன்கயிலை
இருங்கடம் மூடும் பொழிலெழிற்
கொம்பரன் னீர்களின்னே
வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி
யோவிங்கு வாழ்பவர்க்கே.

56

தாரென்ன வோங்குஞ் சடைமுடி
மேற்றனித் திங்கள்வைத்த
காரென்ன வாருங் கறைமிடற்
றம்பல வன்கயிலை
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.

57

இரத முடைய நடமாட்
டுடையவ ரெம்முடையர்
வரத முடைய வணிதில்லை
யன்னவ ரிப்புனத்தார்
விரத முடையர் விருந்தொடு
பேச்சின்மை மீட்டதன்றேற்
சரத முடையர் மணிவாய்
திறக்கிற் சலக்கென்பவே.

58

வின்னிற வாணுதல் வேனிறக்
கண்மெல் லியலைமல்லல்
தன்னிற மொன்றி லிருத்திநின்
றோன்றன தம்பலம்போல்
மின்னிற நுண்ணிடைப் பேரெழில்
வெண்ணகைப் பைந்தொடியீர்
பொன்னிற வல்குலுக் காமோ
மணிநிறப் பூந்தழையே.

59

கலைக்கீ ழகலல்குற் பாரம
தாரங்கண் ணார்ந்திலங்கு
முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றன்முற்
றாதன் றிலங்கையர்கோன்
மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம்
பலவர்வண் பூங்கயிலைச்
சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர்
எதுநுங்கள் சிற்றிடையே.

60

பல்லில னாகப் பகலைவென்
றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம்
வினாவிவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில்
வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட
வானிச் சுனைப்புனமே.

61

ஆழமன் னோவுடைத் திவ்வையர்
வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத்
தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற
வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க்
கழிந்தது வந்துவந்தே.

62

நிருத்தம் பயின்றவன் சிற்றம்
பலத்துநெற் றித்தனிக்கண்
ஒருத்தன் பயிலுங் கயிலை
மலையி னுயர்குடுமித்
திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந்
தாடிச் சிலம்பெதிர்கூய்
வருத்தம் பயின்றுகொல் லோவல்லி
மெல்லியல் வாடியதே.

63

மடுக்கோ கடலின் விடுதிமி
லன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக்
கோபரன் தில்லைமுன்றிற்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்
காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீ ரணியீர்
மலர்நும் சுரிகுழற்கே.

64

அளியமன் னும்மொன் றுடைத்தண்ண
லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல
நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே.

65

பிழைகொண் டொருவிக் கெடாதன்பு
செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின்
றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம்
பயின்றஎம் மொண்ணுதல்மாந்
தழைகொண்டொருவனென் னாமுன்ன
முள்ளந் தழைத்திடுமே.

66

மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
மேன்மன மீட்டிவளும்
பொய்யே புனத்தினை காப்ப
திறைபுலி யூரனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம்
வாழுஞ்செந் தாமரைவாய்
எய்யே மெனினுங் குடைந்தின்பத்
தேனுண் டெழிறருமே.

67

மைவார் கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறு பிறைக்கே.

68

அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.

69

செந்நிற மேனிவெண் ணீறணி
வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி
லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையுந்
தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங்
குடைவ னிருஞ்சுனையே.

70

பருங்கண் கவர்கொலை வேழப்
படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத்
தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய்
விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற்
றோமற்றவ் வான்சுனையே.

71

காகத் திருக்கண்ணிற் கொன்றே
மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம்
யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி
லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய்
வருமின்பத் துன்பங்களே.

72

ஆவா விருவ ரறியா
அடிதில்லை யம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின்
றோனையுன் னாரின்முன்னித்
தீவா யுழுவை கிழித்ததந்
தோசிறி தேபிழைப்பித்
தாவா மணிவேல் பணிகொண்ட
வாறின்றொ ராண்டகையே.

73

பொருளா வெனைப்புகுந் தாண்டு
புரந்தரன் மாலயன்பால்
இருளா யிருக்கு மொளிநின்ற
சிற்றம் பலமெனலாஞ்
சுருளார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் துடியிடையீர்
அருளா தொழியி னொழியா
தழியுமென் னாருயிரே.

74

காய்சின வேலன்ன மின்னியல்
கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு
மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென ஏறுவர்
சீறூர்ப் பனைமடலே.

75

விண்ணை மடங்க விரிநீர்
பரந்துவெற் புக்கரப்ப
மண்ணை மடங்க வருமொரு
காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம்
பலவ னருளிலர்போற்
பெண்ணை மடன்மிசை யான்வரப்
பண்ணிற்றொர் பெண்கொடியே.

76

கழிகின்ற வென்னையும் நின்றநின்
கார்மயில் தன்னையும்யான்
கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
கொண்டென் பிறவிகெட்டின்
றழிகின்ற தாக்கிய தாளம்
பலவன் கயிலையந்தேன்
பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
தெருவிடைப் போதுவனே.

77

நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை
நான்முகன் மாலறியாக்
கடனாம் உருவத் தரன்தில்லை
மல்லற்கண் ணார்ந்தபெண்ணை
உடனாம் பெடையொடொண் சேவலும்
முட்டையுங் கட்டழித்து
மடனாம் புனைதரின் யார்கண்ண
தோமன்ன இன்னருளே

78

அடிச்சந்த மால்கண் டிலாதன
காட்டிவந் தாண்டுகொண்டென்
முடிச்சந்த மாமல ராக்குமுன்
னோன்புலி யூர்புரையுங்
கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக்
கன்னி யனநடைக்குப்
படிச்சந்த மாக்கும் படமுள
வோநும் பரிசகத்தே.

79

யாழு மெழுதி யெழின்முத்
தெழுதி யிருளின்மென்பூச்
சூழு மெழுதியொர் தொண்டையுந்
தீட்டியென் தொல்பிறவி
ஏழு மெழுதா வகைசிதைத்
தோன்புலி யூரிளமாம்
போழு மெழுதிற்றொர் கொம்பருண்
டேற்கொண்டு போதுகவே.

80

ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத்
திண்மடல் நின்குறிப்புச்
சீர்வாய் சிலம்ப திருத்த
இருந்தில மீசர்தில்லைக்
கார்வாய் குழலிக்குன் னாதர
வோதிக்கற் பித்துக்கண்டால்
ஆர்வாய் தரினறி வார்பின்னைச்
செய்க அறிந்தனவே.

81

பைந்நா ணரவன் படுகடல்
வாய்ப்படு நஞ்சமுதாம்
மைந்நாண் மணிகண்டன் மன்னும்
புலியூர் மணந்தபொன்னிம்
மொய்ந்நாண் முதுதிரை வாயான்
அழுந்தினு மென்னின்முன்னும்
இந்நா ளிதுமது வார்குழ
லாட்கென்க ணின்னருளே.

82

தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை
வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே
யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா
வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது
வார்குழ லேந்திழையே.

83

வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன்
ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா
னொருவனித் தேம்புனமே.

84

நீகண் டனையெனின் வாழலை
நேரிழை யம்பலத்தான்
சேய்கண்டனையன்சென் றாங்கோ
ரலவன்றன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்
கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின்
றானப் பெருந்தகையே.

85

சங்கந் தருமுத்தி யாம்பெற
வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப்
பொலிகலிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி
னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை
வானவன் நேர்வருமே.

86

புரங்கடந் தானடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற்
றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.

87

உள்ளப் படுவன வுள்ளி
யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி
யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா
அரன்தில்லை காணலர்போற்
கொள்ளப் படாது மறப்ப
தறிவிலென் கூற்றுக்களே.

88

மேவியந் தோலுடுக் குந்தில்லை
யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின்
னெழிலென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன
பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட
லேறக்கொல் பாவித்ததே.

89

பொன்னார் சடையோன் புலியூர்
புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன்
றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னாரெனுமித் துரிசுதுன்
னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு
நீர்மை இனியவர்க்கே.

90

தேமென் கிளவிதன் பங்கத்
திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென்றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.

91

ஆரத் தழையராப் பூண்டம்
பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
ரெனவரும் ஐயுறவே.

92

முன்றகர்த் தெல்லா விமையோரை
யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
மூடுமென் றெள்குதுமே.

93

யாழார் மொழிமங்கை பங்கத்
திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
சிலம்ப தருந்தழையே.

94

எழில்வா யிளவஞ்சி யும்விரும்
பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே.

95

உறுங்கண்ணி வந்த கணையுர
வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே.

96

நறமனை வேங்கையின் பூப்பயில்
பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே.

97

கற்றில கண்டன்னம் மென்னடை
கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.

98

முனிதரு மன்னையும் மென்னையர்
சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.

99

அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.

100

தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.

101

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே.

102

மைத்தழை யாநின்ற மாமிடற்
றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே.

103

அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.

104

உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
முருகு தலைச்சென்ற கூழை
முடியாமுலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே.
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்

105

பண்டா லியலு மிலைவளர்
பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
கொல்லோ கருதியதே.

106

மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே.

107

. விண்ணிறந் தார்நிலம் விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.

108

குவவின கொங்கை குரும்பை
குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே.

109

. ஈசற் கியான்வைத்த வன்பி
னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே.

110

. தோலாக் கரிவென்ற தற்குந்
துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
நீதந்த கொய்தழையே.

111

கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
யேன் சொல்லும் ஈடவற்கே.

112

தவளத்த நீறணி யுந்தடந்
தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.

113

ஏறும் பழிதழை யேற்பின்மற்
றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே.

114

தெவ்வரை மெய்யெரி காய்சிலை
யாண்டென்னை யாண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
திற்றந்த ஈர்ந்தழையே.

115

பாசத் தளையறுத் தாண்டுகொண்
டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.

116

வானுழை வாளம்ப லத்தரன்
குன்றென்று வட்கிவெய்யோன்
தானுழை யாவிரு ளாய்ப்புற
நாப்பண்வண் தாரகைபோல்
தேனுழை நாக மலர்ந்து
திகழ்பளிங் கால்மதியோன்
கானுழை வாழ்வுபெற் றாங்கெழில்
காட்டுமொர் கார்ப்பொழிலே.

117

புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன்
னேபின்னைப் போய்ப்பொலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
அருவி திருவுருவிற்
கயல்வளர் வாட்கண்ணி போதரு
காதரந் தீர்த்தருளுந்
தயல்வளர் மேனிய னம்பலத்
தான்வரைத் தண்புனத்தே.

118

தினைவளங் காத்துச் சிலம்பெதிர்
கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச்
சுனைவளம் பாய்ந்து துணைமலர்
கொய்து தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி
யம்பல வன்றன்வெற்பிற்
புனைவளர் கொம்பரன் னாயன்ன
காண்டும் புனமயிலே.

119

நரல்வே யினநின தோட்குடைந்
துக்கநன் முத்தஞ்சிந்திப்
பரல்வே யறையுறைக் கும்பஞ்
சடிப்பரன் தில்லையன்னாய்
வரல்வேய் தருவனிங் கேநிலுங்
கேசென்றுன் வார்குழற்கீர்ங்
குரல்வே யளிமுரல் கொங்கார்
தடமலர் கொண்டுவந்தே.

120

படமா சுணப்பள்ளி யிக்குவ
டாக்கியப் பங்கயக்கண்
நெடுமா லெனவென்னை நீநினைந்
தோநெஞ்சத் தாமரையே
இடமா விருக்கலுற் றோதில்லை
நின்றவன் ஈர்ங்கயிலை
வடமார் முலைமட வாய்வந்து
வைகிற்றிவ் வார்பொழிற்கே

121

தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்
லோனரு ளென்னமுன்னி
முத்தீன் குவளைமென் காந்தளின்
மூடித்தன் ஏரளப்பாள்
ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின்
றாள்மருங் குல்நெருங்கப்
பித்தீர் பணைமுலை காளென்னுக்
கின்னும் பெருக்கின்றதே.

122

அளிநீ டளகத்தின் அட்டிய
தாதும் அணியணியும்
ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண்
மாலையுந் தண்நறவுண்
களிநீ யெனச்செய் தவன்கடற்
றில்லையன் னாய்கலங்கல்
தெளிநீ யனையபொன் னேபன்னு
கோலந் திருநுதலே.

123

செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
பலவன் திருக்கழலே
கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
வாய்க்கொள்ளுங் கள்ளகத்த
கழுநீர் மலரிவள் யானதன்
கண்மரு விப்பிரியாக்
கொழுநீர் நறப்பரு கும்பெரு
நீர்மை யளிகுலமே.

124

கொழுந்தா ரகைமுகை கொண்டலம்
பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
சேர்க திருத்தகவே.

125

பொன்னனை யான்தில்லைப் பொங்கர
வம்புன் சடைமிடைந்த
மின்னனை யானருள்மேவலர்
போன்மெல் விரல்வருந்த
மென்னனை யாய்மறி யேபறி
யேல்வெறி யார்மலர்கள்
இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
தாழ்குழற் கேய்வனவே.

126

அறுகால் நிறைமல ரைம்பால்
நிறையணிந் தேன் அணியார்
துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல்
லாயமெல் லப்புகுக
சிறுகால் மருங்குல் வருந்தா
வகைமிக என்சிரத்தின்
உறுகால் பிறர்க்கரி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.

127

தழங்கு மருவியெஞ் சீறூர்
பெரும இதுமதுவுங்
கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
டின்று கிளர்ந்துகுன்றர்
முழங்குங் குரவை இரவிற்கண்
டேகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரானெரி யாடிதென்
தில்லை மணிநகர்க்கே.

128

தள்ளி மணிசந்த முந்தித்
தறுகட் கரிமருப்புத்
தெள்ளி நறவந் திசைதிசை
பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.

129

மாடஞ்செய் பொன்னக ரும்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை யுள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே.

130

வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானக மானுஞ்
சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட
அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங்
காவலித் தாழ்வரையே.

131

மன்னுந் திருவருந் தும்வரை
யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி
வாடுதிரும்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ்
சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல
னென்னப் புலம்புவனே.

132

பனித்துண்டஞ் சூடும் படர்சடை
அம்பல வன்னுலகந்
தனித்துண்டவன்தொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சு மெம்மனையே.

133

. ஈவிளை யாட நறவிளை
வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று
நோக்கியெம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை
அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை
யாடி திருமலைக்கே.

134

சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம்
பலவற் றொழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினித்தம ரிற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே.

135

வழியும் அதுவன்னை யென்னின்
மகிழும்வந் தெந்தையும்நின்
மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன்
னேவய மம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற்
றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல
வென்னோ கிளக்கின்றதே.

136

படையார் கருங்கண்ணி வண்ணப்
பயோதரப் பாரமும்நுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்க
ளீர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட்
டார்வியன் தென்புலியூர்
உடையார் கடவி வருவது
போலு முருவினதே.

137

உருப்பனை அன்னகைக் குன்றொன்
றுரித்துர வூரெரித்த
நெருப்பனை யம்பலத் தாதியை
யும்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன்
னாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை
யேன்யான் புகல்வதுவே.

138

மாதிடங் கொண்டம் பலத்துநின்
றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை
தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன்
கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதென் மைக்கெடு
வித்தது தூமொழியே.

139

வடிவார் வயற்றில்லை யோன்மல
யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர்
தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக
யானுமக் கென்னுரைக்கேன்
தடிவார் தினையெமர் காவேம்
பெருமஇத் தண்புனமே.

140

நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின்
மலைப்பொருப் பன்விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட
தாகி விளைந்ததுவே.

141

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண்
டார்க்கம் பலத்தமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்தோய்
கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தன மாயின்
நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறுமுண்
டோஇத் திருக்கணியே.

142

வழுவா இயலெம் மலையர்
விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே.

143

பொருப்பர்க் கியாமொன்று மாட்டேம்
புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம் பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.

144

பரிவுசெய் தாண்டம் பலத்துப்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.

145

கணியார் கருத்தின்று முற்றிற்
றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திர்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்காள்
அயில்வே லொருவர்வந்தால்
துணியா தனதுணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.

146

பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
புலியூ ரரன்பொருப்பே
இதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
எதுநுமக் கெய்திய தென்னுற்
றனிரறை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.

147

ஆனந்த மாக்கட லாடுசிற்
றம்பல மன்னபொன்னின்
தேனுந்து மாமலைச் சீறூ
ரிதுசெய்ய லாவதில்லை
வானுந்து மாமதி வேண்டி
அழுமழப் போலுமன்னோ
நானுந் தளர்ந்தனன் நீயுந்
தளர்ந்தனை நன்னெஞ்சமே.

148

மருந்துநம் மல்லற் பிறவிப்
பிணிக்கம் பலத்தமிர்தாய்
இருந்தனர் குன்றினின் றேங்கும்
அருவிசென் றேர்திகழப்
பொருந்தின மேகம் புதைந்திருள்
தூங்கும் புனையிறும்பின்
விருந்தினன் யானுங்கள் சீறூ
ரதனுக்கு வெள்வளையே.

149

விசும்பினுக் கேணி நெறியன்ன
சின்னெறி மேன்மழைதூங்
கசும்பினிற் றுன்னி அளைநுழைந்
தாலொக்கும் ஐயமெய்யே
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.

150

மாற்றே னெனவந்த காலனை
யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே.

151

கூளி நிரைக்கநின் றம்பலத்
தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே.

152

வரையன் றொருகா லிருகால்
வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ வெய்துநின்
றோன்தில்லை யன்னநின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன
வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம்
பாவி யொளிர்வனவே.

153

. செம்மல ராயிரந் தூய்க்கரு
மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத்
தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.

154

பனைவளர் கைம்மாப் படாத்தம்
பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
தோகை துயில்பயிலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
றாடுஞ் செழும்பொழிலே.

155

மலவன் குரம்பையை மாற்றியம்
மால்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
கானலிற் சீர்ப்பெடையோ
டலவன் பயில்வது கண்டஞர்
கூர்ந்தயில் வேலுரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன
தாங்கொன்மன் சேர்துயிலே.

156

மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
நாகம் நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே.

157

செழுங்கார் முழவதிர் சிற்றம்
பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண
வேட்டைசெய் மொய்யிருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று
மோவின்றெம் வள்ளலையே.

158

ஓங்கு மொருவிட முண்டம்
பலத்தும்ப ருய்யவன்று
தாங்குமொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே.

159

ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை
செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருள்
மேல்நிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை
யுறார்செல்லுஞ் செல்லல்களே.

160

முன்னு மொருவ ரிரும்பொழில்
மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத்
தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந்
தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில்
பேரும் மயிலினமே.

161

கூடார் அரண்எரி கூடக்
கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன்
னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி
யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை
நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே.

162

விண்ணுக்கு மேல்வியன் பாதலக்
கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்
தில்லைநின் றோன்மிடற்றின்
வண்ணக் குவளை மலர்கின்
றனசின வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே.

163

நந்தீ வரமென்னும் நாரணன்
நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை
யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின்
இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி
வீயுந் தருகுவனே.

164

காமரை வென்றகண் ணோன்தில்லைப்
பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத
வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச்
சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத் தென் னோவந்து
வைகி நயந்ததுவே.

165

அகிலின் புகைவிம்மி ஆய்மலர்
வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத்
தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித்
தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகஇங்ங னேயிறு
மாக்கும் புணர்முலையே.

166

அழுந்தேன் நரகத் தியானென்
றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப்
புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத
மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர்
வானத் திளமதியே.

167

சுரும்புறு நீலங் கொய்யல்
தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறற் றோழியொ டாயத்து
நாப்ப ணமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி
வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்
பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.

168

நற்பகற் சோமன் எரிதரு
நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத்
திவளின் மெய்யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர்
தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல்
நாடஇக் கல்லதரே.

169

பைவா யரவரை அம்பலத்
தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே.

170

பைவா யரவும் மறியும்
மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன்
தில்லையின் முன்னினக்காற்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.

171

. நாகந் தொழவெழில் அம்பலம்
நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.

172

மின்னங் கலருஞ் சடைமுடி
யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே.

173

சோத்துன் னடியமென் றோரைக்
குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னா ளிவள்துவள
ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
மதியும் இழந்தவம்நீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
நோக்காய் பெருங்கடலே.

174

மாதுற்ற மேனி வரையுற்ற
வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீ்ர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே.

175

இன்னற வார்பொழிற் றில்லை
நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்குமி்ல் லோருந்
துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.

176

தாருறு கொன்றையன் தில்லைச்
சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா றளவில
நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும்
அஞ்சுக மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற்
பாற்றன்று தூங்கிருளே.

177

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப்
புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல்
லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி
யேற்கொரு வாசகமே.

178

பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ
னெனநீ புகுந்துநின்றால்
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.

179

பூங்கணை வேளைப் பொடியாய்
விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே.

180

அலரா யிரந்தந்து வந்தித்து
மாலா யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய்
தாற்கள வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே.

181

புகழும் பழியும் பெருக்கிற்
பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல் போலில்லை
யாம்பழி சின்மொழிக்கே.

182

ஆரம் பரந்து திரைபொரு
நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
சிறந்தார்க்குஞ் செறிகடலே.

183

பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி
யூர்சுற்றும் போர்க்கடலே.

184

பகன்தா மரைக்கண் கெடக்கடந்
தோன்புலி யூர்ப்பழனத்
தகன்தா மரையன்ன மேவண்டு
நீல மணியணிந்து
முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
லோநம் மகன்றுறையே.

185

உள்ளு முருகி யுரோமஞ்
சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன்
தேர்வழி தூரற்கண்டாய்
புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
ஆர்க்கும் பொருகடலே.

186

ஆழி திருத்தும் புலியூ
ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின்
நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி
யோவுள்ளம் வள்ளலையே.

187

கார்த்தரங் கந்திரை தோணி
சுறாக்கடல் மீன்எறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந்
துறைவர்தம் போக்குமிக்க
தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே.

188

. பகலோன் கரந்தனன் காப்பவர்
சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோனெவ ரும்புகலத்
தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட அன்னங்களே.

189

பொன்னும் மணியும் பவளமும்
போன்று பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர்
விரவா தவரினுள்நோய்
இன்னு மறிகில வாலென்னை
பாவம் இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை
தேரும்வண் டானங்களே.

190

கருங்கழி காதற்பைங் கானலில்
தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில்
செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென்
றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள்
கூப்பும் மலர்க்கைகளே.

191

மூவல் தழீஇய அருண்முத
லோன் தில்லைச்செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந்
துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
தளிய களியன்னமே.

192

நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதி்ர்முத்தங் காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோ னருள்களில் லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.

193

வளருங் கறியறி யாமந்தி
தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.

194

ஒராக மிரண்டெழி லாயொளிர்
வோன்தில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகஞ் சிதர்ந்த பயோதர
மிப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை
யேயெம ரெண்ணுவதே.

195

மணியக் கணியும் அரன்நஞ்ச
மஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன்
தில்லையன் னாள்திறத்துத்
துணியக் கருதுவ தின்றே
துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர்
மேன்மே லயலவரே.

196

பாப்பணி யோன்தில்லைப் பல்பூ
மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவா
ரினிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில்
நின்றிவை ஏர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத்
தழங்கும் மணமுரசே.

197

எலும்பா லணியிறை யம்பலத்
தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.

198

விசும்புற்ற திங்கட் கழும்மழப்
போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற்
றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.

199

மைதயங் குந்திரை வாரியை
நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை
யும்மல்குற் பைந்தொடியே.

200

மாவைவந் தாண்டமென் னோக்கிதன்
பங்கர்வண் தில்லைமல்லற்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங்
கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்
தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித்
தாளின்றென் பைந்தொடியே.

201

மெல்லியல் கொங்கை பெரியமின்
நேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந்
தீக்கற்று வானமெல்லாஞ்
சொல்லிய சீர்ச்சுடர்ந்த திங்களங்
கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோகைநல் லாயெல்லை
சேய்த்தெம் அகல்நகரே.

202

பிணையுங் கலையும்வன் பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய
அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாஇறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.

203

இங்கய லென்னீ பணிக்கின்ற
தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
லண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம்
நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற்
கண்ணித் திருநுதலே.

204

தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.

205

குறப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம்விராய்
நறப்பாடலம்புனை வார்நினை
வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்று சென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியரே.

206

நிழற்றலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல் லக்குறிப்
பாகும்நங் கொற்றவர்க்கே.

207

காயமும் ஆவியும் நீங்கள்சிற்
றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவர
லென்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங்
கொடார்நமர் இன்னசெப்பில்
தோயமும் நாடுமில் லாச்சுரம்
போக்குத் துணிவித்தவே.

208

மற்பாய் விடையோன் மகிழ்புலி
யூரென் னொடும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர்
விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப்
பறித்தெறி யக்கழிக
இற்பாற் பிறவற்க ஏழையர்
வாழி எழுமையுமே.

209

கம்பஞ் சிவந்த சலந்தரன்
ஆகங் கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர்
கற்சுர மாகுநம்பா
அம்பஞ்சி ஆவம் புகமிக
நீண்டரி சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக்
கும்மலர்ச் சீறடிக்கே.

210

முன்னோன் மணிகண்ட மொத்தவன்
அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன்
னாய்அரு ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே.

211

பனிச்சந் திரனொடு பாய்புனல்
சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி
யாவ அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே.

212

வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கு
முழுதுஞ் செழுமிடற்றின்
மைவந்த கோன்தில்லை வாழ்த்தார்
மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியுந்
துயிலுமிம் மூதெயிலே.

213

பறந்திருந் தும்பர் பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் தில்லையன்
னாள்திறத் துச்சிலம்பா
அறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
திறந்திரிந் தார்கலி யும்முற்றும்
வற்றுமிச் சேணிலத்தே.

214

ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும்
நீங்கஇவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மைஎம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன்
சிற்றம் பலம்நிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.

215

பேணத் திருத்திய சீறடி
மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி
சேரும் இருமருங்குங்
காணத் திருத்திய போலும்முன்
னாமன்னு கானங்களே.

216

கொடித்தேர் மறவர் குழாம்வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.

217

முன்னோ னருள்முன்னும் உன்னா
வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னா ரணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா வெனஉடை யான்நட
மாடுசிற் றம்பலமே.

218

விடலையுற் றாரில்லை வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
இன்றிக் கடுஞ்சுரமே.

219

அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும்
ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்அளி
போன்றொளிர் நாடகமே.

220

கண்கடம் மாற்பயன் கொண்டனங்
கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.

221

மின்றங் கிடையொடு நீவியன்
தில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றால்நின்று
தோன்றுங் குரூஉக்கமலந்
துன்றங் கிடங்குந் துறைதுறை
வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை
சூழ்தரு சேண்நகரே.

222

மின்போல் கொடிநெடு வானக்
கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை
காட்டப் பொலிபுலியூர்
மன்போற் பிறையணி மாளிகை
சூலத்த வாய்மடவாய்
நின்போல் நடையன்னந் துன்னிமுன்
தோன்றுநன் னீணகரே.

223

செய்குன்றுவைஇவை சீர்மலர்
வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே.

224

மயிலெனப் பேர்ந்திள வல்லியி
னொல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டன்எங்
குற்றதென் னெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
தில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்
கொலாமின் றயர்கின்றதே.

225

ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
யாவருக் கும்மெளிதாந்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு
மேவித் தழல்திகழ்வேற்
கோளரிக் குந்நிக ரன்னா
ரொருவர் குரூஉமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே.

226

வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப்
பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி
யாவன எம்மனைக்கே.

227

முறுவல்அக் கால்தந்து வந்தென்
முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாம்முழு துஞ்சிதையத்
தெறுவலக் காலனைச் செற்றவன்
சிற்றம் பலஞ்சிந்தியார்
உறுவலக் கானகந் தான்படர்
வானா மொளியிழையே.

228

தாமே தமக்கொப்பு மற்றில்
லவர்தில்லைத் தண்ணனிச்சப்
பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
பொங்கும்நங் காய்எரியுந்
தீமேல் அயில்போற் செறிபரற்
கானிற் சிலம்படியாய்
ஆமே நடக்க அருவினை
யேன்பெற்ற அம்மனைக்கே.

229

தழுவின கையிறை சோரின்
தமியமென் றேதளர்வுற்
றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
பேதை யறிவுவிண்ணோர்
குழுவினை உய்யநஞ் சுண்டம்
பலத்துக் குனிக்கும்பிரான்
செழுவின தாள்பணி யார்பிணி
யாலுற்றுத் தேய்வித்ததே.

230

யாழியன் மென்மொழி வன்மனப்
பேதையொ ரேதிலன்பின்
தோழியை நீத்தென்னை முன்னே
துறந்துதுன் னார்கண்முன்னே
வாழியிம் மூதூர் மறுகச்சென்
றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி
யாரின் அருஞ்சுரமே.

231

கொன்னுனை வேல்அம் பலவற்
றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றன ளென்னணஞ்
சேரு மெனஅயரா
என்னனை போயினள் யாண்டைய
ளென்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
னுள்ளத்தை யீர்கின்றதே

232

பெற்றே னொடுங்கிள்ளை வாட
முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கான்நடந்
தாள்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய்
தோன்தில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந்
தேன்சுடர் வானவனே.

233

வைம்மலர் வாட்படை யூரற்குச்
செய்யுங்குற் றேவல்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல்
லாந்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்
றெண்ணித்துண் ணென்றொளித்துக்
கைம்மல ராற்கண் புதைத்துப்
பதைக்குமெங் கார்மயிலே.

234

வேயின தோளி மெலியல்விண்
ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத்
தானைப் பழித்துமும்மைத்
தீயின தாற்றல் சிரங்கண்
ணிழந்து திசைதிசைதாம்
போயின எல்லையெல் லாம்புக்கு
நாடுவன் பொன்னினையே.

235

பணங்களஞ் சாலும் பருவர
வார்த்தவன் தில்லையன்ன
மணங்கொளஞ் சாயலும் மன்னனும்
இன்னே வரக்கரைந்தால்
உணங்கலஞ் சாதுண்ண லாமொள்
நிணப்பலி யோக்குவல்மாக்
குணங்களஞ் சாற்பொலி யுந்நல
சேட்டைக் குலக்கொடியே.

236

முன்னுங் கடுவிட முண்டதென்
தில்லைமுன் னோனருளால்
இன்னுங் கடியிக் கடிமனைக்
கேமற் றியாமயர
மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
தான்பெறு மாறுமுண்டேல்
உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
நான்மறை யுத்தமரே.

237

தெள்வன் புனற்சென்னி யோன்அம்
பலஞ்சிந்தி யாரினஞ்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன்
செய்வினை யேனெடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி
யிங்கிவை யுங்குவையக்
கள்வன் பகட்டுர வோனடி
யென்று கருதுவனே.

238

. பாலொத்த நீற்றம் பலவன்
கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
மாணிழை கால்மலரே.

239

பேதைப் பருவம் பின்சென்
றதுமுன்றி லெனைப்பிரிந்தால்
ஊதைக் கலமரும் வல்லியொப்
பாள்முத்தன் தில்லையன்னாள்
ஏதிற் சுரத்தய லானொடின்
றேகினள் கண்டனையே
போதிற் பொலியுந் தொழிற்புலிப்
பற்குரற் பொற்றொடியே.

240

புயலன் றலர்சடை ஏற்றவன்
தில்லைப் பொருப்பரசி
பயலன் றனைப்பணி யாதவர்
போல்மிகு பாவஞ்செய்தேற்
கயலன் தமியன்அஞ் சொற்றுணை
வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயலன் றெனக்கிற் றிலைமற்று
வாழி எழிற்புறவே.

241

பாயும் விடையோன் புலியூ
ரனையவென் பாவைமுன்னே
காயுங் கடத்திடை யாடிக்
கடப்பவுங் கண்டுநின்று
வாயுந் திறவாய் குழையெழில்
வீசவண் டோலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று
நிலாவிடும் நீள்குரவே.

242

சுத்திய பொக்கணத் தென்பணி
கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவொர் பெருந்தகையே.

243

வெதிரேய் கரத்துமென் தோலேய்
சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
அதிரேய் மறையினிவ் வாறுசெல்
வீர்தில்லை அம்பலத்துக்
கதிரேய் சடையோன் கரமான்
எனவொரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே
வெறுப்பவொ ரேந்தலொடே.

244

மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின
ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை
யோஅன்னை சொல்லியதே.

245

பூங்கயி லாயப் பெரருப்பன்
திருப்புலி யூரதென்னத்
தீங்கை இலாச்சிறி யாள்நின்ற
திவ்விடஞ் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்கைம்
மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது
திண்டிற லாண்டகையே.

246

மின்றொத் திடுகழல் நூபுரம்
வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன்
றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற்
றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை
நீசொன்ன கொள்கையரே.

247

மீள்வது செல்வதன் றன்னையிவ்
வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ
னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந்
நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் தில்லையி
னெல்லை யணுகுவரே.

248

சுரும்பிவர் சந்துந் தொடுகடல்
முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி
யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன்
சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந்
நீர்மையர் காணுநர்க்கே.

249

ஆண்டி லெடுத்தவ ராமிவர்
தாமவ ரல்குவர்போய்த்
தீண்டி லெடுத்தவர் தீவினை
தீர்ப்பவன் தில்லையின்வாய்த்
தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ
டெற்றப் பழம்விழுந்து
பாண்டி லெடுத்தபஃறாமரை
கீழும் பழனங்களே.

250

எழுங்குலை வாழையின் இன்கனி
தின்றிள மந்தியந்தண்
செழுங்குலை வாழை நிழலில்
துயில்சிலம் பாமுனைமேல்
உழுங்கொலை வேல்திருச் சிற்றம்
பலவரை உன்னலர்போல்
அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென்
னோநின் னருள்வகையே.

251

பரம்பயன் தன்னடி யேனுக்குப்
பார்விசும் பூடுருவி
வரம்பயன் மாலறி யாத்தில்லை
வானவன் வானகஞ்சேர்
அரம்பையர் தம்மிட மோஅன்றி
வேழத்தி னென்புநட்ட
குரம்பையர் தம்மிட மோஇடந்
தோன்றுமிக் குன்றிடத்தே.

252

சிறார்கவண் வாய்த்த மணியிற்
சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில்
உந்து மிடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற்
றாளுங் கொடிச்சிஉம்பர்
பெறாவரு ளம்பல வன்மலைக்
காத்தும் பெரும்புனமே.

253

கடந்தொறும் வாரண வல்சியின்
நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு
நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீஅர வன்னம்
பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென் பதேஅன்ப
நின்னருள் தோன்றுவதே.

254

களிறுற்ற செல்லல் களைவயிற்
பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகன்
நீசெய்யும் மெய்யருளே.

255

கழிகட் டலைமலை வோன்புலி
யூர்கரு தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇ அரி
யாளி குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல்
கைதொழு தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலின்
துவளு மிவள்பொருட்டே.

256

விண்ணுஞ் செலவறி யாவெறி
யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்தில்லை மல்லெழிற்
கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டா மெனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே.

257

வான்றோய் பொழிலெழின் மாங்கனி
மந்தியின் வாய்க்கடுவன்
தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
டாள்திரு நீள்முடிமேல்
மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
யாளையும் மேனிவைத்தான்
வான்றோய் மதில்தில்லை மாநகர்
போலும் வரிவளையே.

258

நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று
நாடக மாடுதில்லைச்
சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
காக்குஞ்செவ் வேலிளைஞர்
பறைக்கண் படும்படுந் தோறும்
படாமுலைப் பைந்தொடியாள்
கறைக்கண் மலிகதிர் வேற்கண்
படாது கலங்கினவே.

259

கலரா யினர்நினை யாத்தில்லை
அம்பலத் தான்கழற்கன்
பிலரா யினர்வினை போலிருள்
தூங்கி முழங்கிமின்னிப்
புலராஇரவும் பொழியா
மழையும்புண் ணில்நுழைவேல்
மலரா வரும்மருந் தும்மில்லை
யோநும் வரையிடத்தே.

260

இறவரை உம்பர்க் கடவுட்
பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை ஆர்க்குங் குளிர்வரை
நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம்
பலம்நெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல
ராம்பக லுன்னருளே.

261

சுழியா வருபெரு நீர்சென்னி
வைத்தென்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம்
பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ
லாள்திறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர
வேதும் பயனில்லையே.

262

மையார் கதலி வனத்து
வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள்
சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதெ னம்பலத்
தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன்
மாலையின் முன்னினவே.

263

தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம்
பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில்
வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார்
கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென்
னாஞ்சொல்லுந் தன்மைகளே.

264

வல்சியி னெண்கு வளர்புற்
றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம்
பலவரைச் சேரலர்போற்
கொல்கரி சீயங் குறுகா
வகைபிடி தானிடைச்செல்
கல்லத ரென்வந்த வாறென்
பவர்ப்பெறிற் கார்மயிலே.

265

வாரிக் களிற்றின் மருப்புகு
முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை
நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச்
சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந்
நீர்மையென் னெய்துவதே.

266

குறைவிற்குங் கல்விக்குஞ் செல்விற்கும்
நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பின்அல் லால்நினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை யோதுநர்க்கே.

267

வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
ணித்தில வாள்நகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்தொழும்பிற்
படுத்தநன் நீள்கழ லீசர்நிற்
றம்பலந் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவின்நின் னாரருளே.

268

குன்றங் கிடையுங் கடந்துமர்
கூறும் நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும் மையும்வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே.

269

கேழே வரையுமில் லோன்புலி
யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியா ளிரவரி
னும்பகற் சேறியென்று
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீ வருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி
யேகு தனிவள்ளலே.

270

வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.

271

நல்லாய் நமக்குற்ற தென்னென்
றுரைக்கேன் நமர்தொடுத்த
வெல்லா நிதியு முடன்விடுப்
பான்இமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
தில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கட மின்றுசென்
றார்நம் சிறந்தவரே.

272

அருந்தும் விடமணி யாம்மணி
கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே.

273

ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன்
ஏத்த எழில்திகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென்
கொலாமின்று செய்கின்றதே.

274

கானமர் குன்றர் செவியுற
வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென
மான்நல் தொடைமடக்கும்
வானமர் வெற்பர்வண் தில்லையின்
மன்னை வணங்கலர்போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல்
செல்லல் திருநுதலே.

275

மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோன்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.

276

வந்தாய் பவரையில் லாமயில்
முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
நாடன்பண்போஇனிதே
கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென்
தில்லை தொழார்குழுப்போற்
சிந்தா குலமுற்றுப் பற்றின்றி
நையுந் திருவினர்க்கே.

277

மொய்யென் பதேஇழை கொண்டவ
னென்னைத்தன் மொய்கழற்காட்
செய்யென் பதேசெய் தவன்தில்லைச்
சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
பொய்யென்ப தேகருத் தாயிற்
புரிகுழற் பொற்றொடியாய்
மெய்யென்ப தேதுமற் றில்லைகொ
லாமிவ் வியலிடத்தே.

278

மன்செய்த முன்னாள் மொழிவழியே
அன்ன வாய்மைகண்டும்
என்செய்த நெஞ்சும் நிறையும்நில்
லாவென தின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
நீர்மைகொல் மொய்குழலே.

279

கருந்தினை யோம்பக் கடவுட்
பராவி நமர்கலிப்பச்
சொரிந்தன கொண்மூச் சுரந்ததன்
பேரரு ளால்தொழும்பிற்
பரிந்தெனை யாண்டசிற் றம்பலத்
தான்பரங் குன்றிற்றுன்றி
விரிந்தன காந்தள் வெருவரல்
காரென வெள்வளையே.

280

வென்றவர் முப்புரஞ் சிற்றம்
பலத்துள்நின் றாடும்வெள்ளிக்
குன்றவர் குன்றா அருள்தரக்
கூடினர் நம்மகன்று
சென்றவர் தூதுகொல் லோஇருந்
தேமையுஞ் செல்லல்செப்பா
நின்றவர் தூதுகொல் லோவந்து
தோன்றும் நிரைவளையே.

281

வருவன செல்வன தூதுகள்
ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே.

282

வேயின மென்தோள் மெலிந்தொளி
வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள்
அல்லள் பவளச்செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்
கமரன்சிற் றம்பலத்தான்
சேயின தாட்சியிற் பட்டன
ளாம்இத் திருந்திழையே.

283

சுணங்குற்ற கொங்கைகள் சூதுற்
றிலசொல் தெளிவுற்றில
குணங்குற்றங் கொள்ளும் பருவமு
றாள்குறு காவசுரர்
நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம்
பலநெஞ் சுறாதவர்போல்
அணங்குற்ற நோயறி வுற்றுரை
யாடுமின் அன்னையரே.

284

மாட்டியன் றேயெம் வயிற்பெரு
நாணினி மாக்குடிமா
சூட்டியன் றேநிற்ப தோடிய
வாறிவ ளுள்ளமெல்லாங்
காட்டியன் றேநின்ற தில்லைத்தொல்
லோனைக்கல் லாதவர்போல்
வாட்டியன் றேர்குழ லார்மொழி
யாதன வாய்திறந்தே.

285

குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி
கூறன்சிற் றம்பலத்தான்
இயலிதன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே.

286

வேலன் புகுந்து வெறியா
டுகவெண் மறியறுக்க
காலன் புகுந்தவி யக்கழல்
வைத்தெழில் தில்லைநின்ற
மேலன் புகுந்தென்கண் நின்றா
னிருந்தவெண் காடனைய
பாலன் புகுந்திப் பரிசினின்
நிற்பித்த பண்பினுக்கே.

287

அயர்ந்தும் வெறிமறி ஆவி
செகுத்தும் விளர்ப்பயலார்
பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
பேசுவ பேர்ந்திருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரான
தம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதி னொழியினென்
ஆதுந் துறைவனுக்கே.

288

சென்றார் திருத்திய செல்லல்நின்
றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா வழகிதன் றேயிறை
தில்லை தொழாரின்நைந்தும்
ஒன்றா மிவட்கு மொழிதல்கில்
லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன்
உரைப்பனிக் கூர்மறையே.

289

யாயுந் தெறுக அயலவ
ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே.

290

வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
தோன்றல் வரிவளையீர்
உண்டலுற் றேமென்று நின்றதொர்
போழ்துடை யான்புலியூர்க்
கொண்டலுற் றேறுங் கடல்வர
எம்முயிர் கொண்டுதந்து
கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
றானொர் கழலவனே.

291

குடிக்கலர் கூறினுங் கூறா
வியன்தில்லைக் கூத்தனதாள்
முடிக்கல ராக்குமொய் பூந்துறை
வற்கு முரிபுருவ
வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
சென்றுநம் யாயறியும்
படிக்கல ராமிவை யென்நாம்
மறைக்கும் பரிசுகளே.

292

விதியுடை யாருண்க வேரி
விலக்கலம் அம்பலத்துப்
பதியுடை யான்பரங் குன்றினிற்
பாய்புனல் யாமொழுகக்
கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க
வேறு கருதுநின்னின்
மதியுடை யார்தெய்வ மேயில்லை
கொல்இனி வையகத்தே.

293

மனக்களி யாய்இன் றியான்மகிழ்
தூங்கத்தன் வார்கழல்கள்
எனக்களி யாநிற்கும் அம்பலத்
தோன்இருந் தண்கயிலைச்
சினக்களி யானை கடிந்தா
ரொருவர்செவ் வாய்ப்பசிய
புனக்கிளி யாங்கடி யும்வரைச்
சாரற் பொருப்பிடத்தே.

294

இளையா ளிவளையென் சொல்லிப்
பரவுது மீரெயிறு
முளையா அளவின் முதுக்குறைந்
தாள்முடி சாய்த்திமையோர்
வளையா வழுத்தா வருதிருச்
சிற்றம் பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி
லைப்பயில் செல்வியையே.

295

கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை
யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப் பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே.

296

பூரண பொற்குடம் வைக்க
மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
றேங்கும் மணமுரசே.

297

அடற்களி யாவர்க்கு மன்பர்க்
களிப்பவன் துன்பவின்பம்
படக்களி யாவண் டறைபொழிற்
றில்லைப் பரமன்வெற்பிற்
கடக்களி யானை கடிந்தவர்க்
கோவன்றி நின்றவர்க்கோ
விடக்களி யாம்நம் விழுநக
ரார்க்கும் வியன்முரசே.

298

என்கடைக் கண்ணினும் யான்பிற
வேத்தா வகையிரங்கித்
தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
சங்கரன் தாழ்கயிலைக்
கொன்கடைக் கண்தரும் யானை
கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
முன்கடைக் கண்ணிது காண்வந்து
தோன்றும் முழுநிதியே.

299

பிரசந் திகழும் வரைபுரை
யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம்
நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும்
பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர்
தீரப் புகுந்துநின்றே.

300

. இருந்துதி யென்வயிற் கொண்டவன்
யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே

301

சீரியல் ஆவியும் யாக்கையும்
என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந்
தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் தில்லை
வணங்குமெங் காவலரே.g

302

. தொண்டின மேவுஞ் சுடர்க்கழ
லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள்
நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன்
யானவள் தற்பணிவோள்
வண்டினமேவுங் குழலா
ளயல்மன்னும் இவ்வயலே.

303

பொட்டணி யான்நுதல் போயிறும்
பொய்போ லிடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல
ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான்
மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடையோன்தில்லை
போலிதன் காதலனே.

304

தெய்வம் பணிகழ லோன்தில்லைச்
சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று
நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன்
வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார்
பரிசின்ன பான்மைகளே.

305

சிற்பந் திகழ்தரு திண்மதில்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன்
பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங்
கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல்
லாதவ னீர்ங்களிறே.

306

மன்னவன் தெம்முனை மேற்செல்லு
மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
றோர்தெய்வ முன்னலளே.

307

ஆனந்த வெள்ளத் தழுந்துமொர்
ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத்
தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்
றாதிவ் வணிநலமே.

308

சீரள வில்லாத் திகழ்தரு
கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா அளவுசென்
றாரம் பலத்துள்நின்ற
ஓரள வில்லா ஒருவன்
இருங்கழ லுன்னினர்போல்
ஏரள வில்லா அளவின
ராகுவ ரேந்திழையே.

309

வீதலுற் றார்தலை மாலையன்
தில்லைமிக் கோன்கழற்கே
காதலுற் றார்நன்மை கல்விசெல்
வீதரு மென்பதுகொண்
டோதலுற் றாருற் றுணர்தலுற்
றார்செல்லல் மல்லழற்கான்
போதலுற் றார்நின் புணர்முலை
யுற்ற புரவலரே.

310

. கற்பா மதிற்றில்லைச் சிற்றம்
பலமது காதல்செய்த
விற்பா விலங்கலெங் கோனை
விரும்பலர் போல அன்பர்
சொற்பா விரும்பின ரென்னமெல்
லோதி செவிப்புறத்துக்
கொற்பா இலங்கிலை வேல்குளித்
தாங்குக் குறுகியதே.

311

பிரியா மையுமுயி ரொன்றா
வதும்பிரி யிற்பெரிதுந்
தரியா மையுமொருங் கேநின்று
சாற்றினர் தையல்மெய்யிற்
பிரியாமை செய்துநின் றோன்தில்லைப்
பேரிய லூரரன்ன
புரியா மையுமிது வேயினி
யென்னாம் புகல்வதுவே.

312

மூப்பான் இளையவன் முன்னவன்
பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு
ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி
தாழ்குழற் பூங்கொடியே.

313

சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.

314

மிகைதணித் தற்கரி தாமிரு
வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.

315

நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை
போலுந் திருநுதலே.

316

போது குலாய புனைமுடி
வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்றதின்
றொன்னா ரிடுமதிலே.

317

பொன்னி வளைத்த புனல்சூழ்
நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை
யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
பாசறைத் தோன்றுங்கொலோ
மின்னி வளைத்து விரிநீர்
கவரும் வியன்முகிலே.

318

கோலித் திகழ்சிற கொன்றி
னொடுக்கிப் பெடைக்குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு
சேவல் பயிலிரவின்
மாலித் தனையறி யாமறை
யோனுறை யம்பலமே
போலித் திருநுத லாட்கென்ன
தாங்கொலென் போதரவே.

319

கருப்பினம் மேவும் பொழிற்றில்லை
மன்னன்கண் ணாரருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ்சென்
றல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மாலெழில்
தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பின மேறித் தமியரைப்
பார்க்கும் புயலினமே.

320

சுற்றின வீழ்பனி தூங்கத்
துவண்டு துயர்கவென்று
பெற்றவ ளேயெனைப் பெற்றாள்
பெடைசிற கானொடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப்
புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
பெறுமிம் மயங்கிருளே.

321

புரமன் றயரப் பொருப்புவில்
லேந்திப்புத் தேளிர்நாப்பண்
சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலமனையாள்
பரமன் றிரும்பனி பாரித்த
வாபரந் தெங்கும்வையஞ்
சரமன்றி வான்தரு மேலொக்கும்
மிக்க தமியருக்கே.

322

வாழும் படியொன்றுங் கண்டிலம்
வாழியிம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்றிரு
ளாநின்ற கோகிலமே.

323

பூண்பதென் றேகொண்ட பாம்பன்
புலியூ ரரன்மிடற்றின்
மாண்பதென் றேயெண வானின்
மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங்
கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாயெழில்
வாய்த்த பனிமுகிலே.

324

தெளிதரல் காரெனச் சீரனஞ்
சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட
மாடக்கண் ணார்முழவந்
துளிதரற் காரென ஆர்த்தன
ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்
றளிதரக் காந்தளும் பாந்தளைப்
பாரித் தலர்ந்தனவே.

325

தேன்றிக் கிலங்கு கழலழல்
வண்ணன்சிற் றம்பலத்தெங்
கோன்றிக் கிலங்குதிண் டோட்கொண்டற்
கண்டன் குழையெழில்நாண்
போன்றிக் கடிமலர்க் காந்தளும்
போந்தவன் கையனல்போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
யோமெய்யிற் றோன்றுவதே.

326

திருமா லறியாச் செறிகழல்
தில்லைச்சிற் றம்பலத்தெங்
கருமால் விடையுடை யோன்கண்டம்
போற்கொண்ட லெண்டிசையும்
வருமா லுடன்மன் பொருந்தல்
திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல் லாயின்று
தோன்றுநம் பொன்னகர்க்கே.

327

புயலோங் கலர்சடை ஏற்றவன்
சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
கோபமுங் காட்டிவருஞ்
செயலோங் கெயிலெரி செய்தபின்
இன்றோர் திருமுகமே.

328

சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம்
பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பிற் றுனைந்து பெருகுக
தேர்பிறங் கும்மொளியார்
நிறப்பொற் புரிசை மறுகினின்
துன்னி மடநடைப்புள்
இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை
தேரும் எழில்நகர்க்கே.

329

அருந்தே ரழிந்தனம் ஆலமென்
றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
முழங்கேல் வளமுகிலே.

330

பணிவார் குழையெழி லோன்தில்லைச்
சிற்றம் பலமனைய
மணிவார் குழல்மட மாதே
பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர்
சின்னமுங் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ டாலிக்கும்
மாவோ டணுகினரே.

331

கருங்குவ ளைக்கடி மாமலர்
முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
நீடிய வைகலுமே.

332

முனிவரும் மன்னரும் முன்னுவ
பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
வந்திக்கும் நன்னுதலே.

333

வறியா ரிருமை யறியா
ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன் தில்லைச்
சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதலே.

334

சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
றம்ம கொடியவளே.

335

வானக்கடிமதில் தில்லையெங்
கூத்தனை ஏத்தலர் போற்
கானக் கடஞ்செல்வர் காதல
ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
இனிச்சென்று தேர்பொருளே.

336

சுருடரு செஞ்சடை வெண்சுட
ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர்
போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை
யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை
யேற்குப் புரவலரே.

337

மூவர்நின் றேத்த முதலவன்
ஆடமுப்பத்து மும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன் தில்லை
யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக
மனைய புனையழற்கான்
போவர்நங் காதல ரென்நாம்
உரைப்பது பூங்கொடியே.

338

தென்மாத் திசைவசை தீர்தரத்
தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி
யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப்
பூவணம் அன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர்
இன்றுநம் மன்னவரே.

339

ஆழியொன் றீரடி யும்மிலன்
பாகன்முக் கட்டில்லையோன்
ஊழியொன் றாதன நான்குமைம்
பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்மெண்
டிசையுந் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந்
தேர்வந்து வைகுவதே.

340

பிரியாரென இகழ்ந்தேன் முன்னம்
யான்பின்னை எற்பிரியின்
தரியா ளென இகழ்ந் தார்மன்னர்
தாந்தக்கன் வேள்விமிக்க
எரியா ரெழிலழிக் கும்மெழி
லம்பலத் தோனெவர்க்கும்
அரியா னருளிலர் போலன்ன
என்னை யழிவித்தவே.

341

சேணுந் திகழ்மதிற் சிற்றம்
பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்
சூணுந் திருத்து மொருவன்
திருத்தும் உலகினெல்லாங்
காணுந் திசைதொறுங் கார்க்கய
லுஞ்செங் கனியொடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு
தோன்றுமொர் பூங்கொடியே.

342

பொன்னணி யீட்டிய ஓட்டரும்
நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட்
கோநீ விரைகின்றதே.

343

நாய்வயி னுள்ள குணமுமில்
லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
தக்க துன் சிக்கனவே.

344

தீமே வியநிருத் தன்திருச்
சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
தேர்ந்தெம்மை வாழ்விப்பதே.

345

தெண்ணீ ரணிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே.

346

சுற்றம் பலமின்மை காட்டித்தன்
தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
லாநின்ற கூர்ஞ்செக்கரே.

347

கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.

348

அற்படு காட்டில்நின் றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகி லென்னின்முன்
னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீள்நகர்க்கே.

349

பாவியை வெல்லும் பரிசில்லை
யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
தேர்வந்து மேவினதே.

350

யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலத் தானமைத்த
ஊழின் வலியதொன் றென்னை
ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல்
ஆவிசெல் லாதமுன்னே
சூழுந் தொகுநிதி யோடன்பர்
தேர்வந்து தோன்றியதே.

351

மயின்மன்னு சாயலிம் மானைப்
பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்
லாம்விடை யோன்புலியூர்க்
குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென்
அங்கத் திடைக்குளிப்பத்
துயின்மன்னு பூவணை மேலணை
யாமுன் துவளுற்றதே.

352

உடுத்தணி வாளர வன்தில்லை
யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு
வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும்
பற்றினர் மாதிரமே.

353

சுரும்புறு கொன்றையன் தொல்புலி
யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் னாவியுந்
தேற்வுற் றழிகின்றதே.

354

அப்புற்ற சென்னியன் தில்லை
யுறாரி னவர்உறுநோய்
ஒப்புற் றெழில்நல மூரன்
கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
லாருயிர் தேய்பவரே.

355

தேவா சுரரிறைஞ் சுங்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
தேனரும் பாவியனே.

356

செய்ம்முக நீல மலர்தில்லைச்
சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி
யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
பொருத்தமன் றென்றிலையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங்
கீழும் நெடுஞ்சுடரே.

357

பூங்குவ ளைப்பொலி மாலையும்
ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனுங்
கொள்கநள் ளார் அரணந்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
தோமன் உறாவரையே.

358

தவஞ்செய் திலாதவெந் தீவினை
யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
நோவதென் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந்
தொடல்விடு நற்கலையே.

359

தணியுறப் பொங்குமிக் கொங்கைகள்
தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென் றின்றெய்து
மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல்
லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை
யார்கள் பயின்மனைக்கே.

360

இரவணை யும்மதி யேர்நுத
லார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழல் இங்கிவ
ளால்இக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்தில்லை
யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
வாறுநந் தன்மைகளே.

361

சிவந்தபொன் மேனி மணிதிருச்
சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி யூரற்
குலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப்
பட்டுங்கட் டார்முலைமேற்
சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின
வந்து திருமனைக்கே.

362

குராப்பயில் கூழை யிவளின்மிக்
கம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யாரடங்
காரெவ ரேயினிப்பண்
டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை
யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன்
புகுமிக் கடிமனைக்கே.

363

வந்தான் வயலணி யூர
னெனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செல்வி சென்றசிற்
றம்பல வன்னருளான்
முந்தா யினவியன் நோக்கெதிர்
நோக்க முகமடுவிற்
பைந்தாட் குவளைகள் பூத்திருள்
சூழ்ந்து பயின்றனவே.

364

வில்லிகைப் போதின் விரும்பா
அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
லூரற் கெதிர்கொண்டதே.

365

புலவித் திரைபொரச் சீறடிப்
பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென்
றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம்
பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனஞ் சென்றெய்த
லாயின வூரனுக்கே.

366

செவ்வாய் துடிப்பக் கருங்கண்
பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின்
முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக்
கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகு
மெனநினைந் தின்னகையே.

367

மலரைப் பொறாவடி மானுந்
தமியள்மன் னன்ஒருவன்
பலரைப் பொறாதென் றிழிந்துநின்
றாள்பள்ளி காமனெய்த
அலரைப் பொறாதன் றழல்விழித்
தோனம் பலம்வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாளென்னை
கொல்லோ கருதியதே.

368

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.

369

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்
கிற்றுணைச் சேவல்செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்
குதர்செம்ம லூரன்திண்டோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்
தில்லை யானருளே
போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது
வாய்ந்த புதுப்புனலே.

370

சேயே யெனமன்னு தீம்புன
லூரன்திண் டோளிணைகள்
தோயீர் புணர்தவந் தொன்மைசெய்
தீர்சுடர் கின்றகொலந்
தீயே யெனமன்னு சிற்றம்
பலவர்தில் லைந்நகர்வாய்
வீயே யெனஅடி யீர்நெடுந்
தேர்வந்து மேவினதே.

371

அரமங் கையரென வந்து
விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு
கும்மவ ளன்றுகிராற்
சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச்
சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதைய
காத்துநம் பொற்பரையே.

372

கனலூர் கணைதுணை யூர்கெடச்
செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோ னருள்பெற்
றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பா
லருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப்பிரி யும்புன
லூர்கணப் பூங்கொடியே.

373

இறுமாப் பொழியுமன் றேதங்கை
தோன்றினென் னெங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத்
தான்தில்லை யூரன்திண்டோள்
பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக்
குப்பெற்ற பெற்றியினோ
டிறுமாப் பொழிய இறுமாப்
பொழிந்த இணைமுலையே.

374

வேயாது செப்பின் அடைத்துத்
தமிவைகும் வீயினன்ன
தீயாடி சிற்றம்பலமனை
யாள்தில்லை யூரனுக்கின்
றேயாப் பழியென நாணியென்
கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயா மியல்பிவள் கற்புநற்
பால வியல்புகளே.

375

விறலியும் பாணனும் வேந்தற்குத்
தில்லை யிறையமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின்
றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை
மாமரம் போலுமன்னோ
அறலியல் கூழைநல் லாய்தமி
யோமை யறிந்திலரே.

376

திக்கின் இலங்குதிண் டோளிறை
தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக தணிந்துநின்
றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய
அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்திலன் நின்றசெவ்
வேலெந் தனிவள்ளலே.

377

அன்புடை நெஞ்சத் திவள்பே
துறஅம் பலத்தடியார்
என்பிடை வந்தமிழ் தூறநின்
றாடி யிருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்
தன்னஞ் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய
லூரன் வரம்பிலனே.

378

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம்
பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை
யேந்திவந் தாரவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார்
நனவு கனவுமுண்டேற்
பஞ்சா ரமளிப் பிரிதலுண்
டோவெம் பயோதரமே.

379

தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்
சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா
இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகுமொரு காற்பிரி
யாதுள்ளி யுள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்றகத்
தேவரும் பான்மையளே.

380

தேன்வண் டுறைதரு கொன்றையன்
சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன்
மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு
தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ்
வாறுகொ னண்ணுவதே.

381

கயல்வந்த கண்ணியர் கண்ணினை
யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
னாட்டுப் பொலிபவரே.

382

கூற்றாயினசின ஆளியெண்
ணீர்கண்கள் கோளிழித்தாற்
போற்றான் செறியிருட் பொக்கமெண்
ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா வெனநீர் வருவது
பண்டின்றெம் மீசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற்
போதிர்அத் தேர்மிசையே.

383

வியந்தலை நீர்வையம் மெய்யே
யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற
வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர்
அரனிருக்கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த
விருந்தினர் கார்மயிலே.

384

தேவியங் கண்திகழ் மேனியன்
சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
வௌவுதல் கற்றனவே.

385

உடைமணிகட்டிச் சிறுதே
ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன்
நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென்
தோகையன் னார்கண்முன்னங்
கடைமணி வாள்நகை யாயின்று
கண்டனர் காதலரே.

386

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட
தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென்
விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொல் சேரியின்
விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை
ஆத்தின்னி போந்ததுவே.

387

கொல்லாண் டிலங்கு மழுப்படை
யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம்
நெரியச் செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங்
கொள்வன் பணிமொழியே.

388

மத்தக் கரியுரி யோன்தில்லை
யூரன் வரவெனலுந்
தத்தைக் கிளவி முகத்தா
மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர்
விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
யோடிக் கெழுமினவே.

389

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக்
காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றல்
துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
பாலை யரசனுக்கே.

390

சேறான் திகழ்வயற் சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம்
மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
தீண்டலெங் கைத்தலமே.

391

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்
பலவர்சில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கால்
அயிற்படைக் கொற்றவரே.

392

மின்றுன் னியசெஞ் சடைவெண்
மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம்
பலவன்தென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம
தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
சாலுமன் னெங்களுக்கே.

393

செழுமிய மாளிகைச் சிற்றம்
பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய
நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன
வாறு விரும்புவதே.

394

திருந்தேன் உயநின்ற சிற்றம்
பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
வருவதொர் வஞ்சனையே.

395

இயன்மன்னும் அன்புதந் தார்க்கென்
நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம்
பலவர்தென் னம்பொதியிற்
புயன்மன்னு குன்றிற் பொருவேல்
துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
தேரும் அதரகத்தே.

396

கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை
மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித்
தானிமை யோரிறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை
யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா
எம்மைப் பூசிப்பதே.

397

சிலைமலி வாணுத லெங்கைய
தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
தான்றலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை யூரனிற்
கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
மாலை கலுழ்ந்தனவே.

398

ஆறூர் சடைமுடி அம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
கங்குற் சிறிதுயிலே.

399

ஐயுற வாய்நம் அகன்கடைக்
கண்டுவண் டேருருட்டும்
மையுறு வாட்கண் மழவைத்
தழுவமற் றுன்மகனே.
மெய்யுற வாம்இதுன் னில்லே
வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
யூரன்ன காரிகையே.

400

காரணி கற்பகங் கற்றவர்
நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்
தஞ்சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க் கூரன்மற்
றியாவர்க்கும் ஊதியமே.