பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருநாவுக்கரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில் ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்.
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச் சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள் மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு.
புனப் பண்ணை மணியின் ஒடும் புறவின் நறும் புதுமலரின் கனப்பு எண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ் உலகும் வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்.
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் பால் எல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை.
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழுஞ்சாறு இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் புடை பரந்து ஞிமிறு ஒலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப உடை மடையக் கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்.
கருங் கதலிப் பெருங் குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் பெருஞ் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்ப்பனவாம் நிறை மருதம்.
நறை யாற்றும் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல் பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித் துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பெண்ணை நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது ஆல்.
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் வரு மேனிச் செங்கண் வரால் மடி முட்டப் பால் சொரியும் கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ-திரை வாவி.
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலையச் செய்ய தளிர் நறு விரலின் செழு முகையின் நகம் சிறப்ப மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை.
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் பயிர்க் கண் இயல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி மயில் குலமும் முகல் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும்.
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்து அருள உளது ஆனால் நம் அளவோ பேர் உலகில் சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு.
இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்.
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழுவு இல் அறம் நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்.
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும் அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் கலம் நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெரு வளங்கள்.
தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித நலத்தின் கண் வழுவாத நடை மரவும் குடி நாப்பண் விலக்கு இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும்.
அக் குடியின் மேல் தோன்றல் ஆய பெருந்தன்மையினார் மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்.
புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண் மகிழவரு மணம் புணந்த மாதினியார் மணி வயிற்றில் நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார்.
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் அலகில் கலைத் துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்.
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகழனார் காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள் மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் ஏதம் இல் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார்.
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்த தன்பின் பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார்.
தந்தைதார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் முந்து முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார்.
அந் நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின் முன் ஆக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர் மின் ஆர் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் பொன் ஆரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்.
ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் பூண்ட கொடைப் புகழனார் பால் பொரு இல் மகள் கொள்ள வேண்டி எழும் காதலினால் மேலோரைச் செலவிட்டார்.
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்.
கன்னி திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன் மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்று அவர்மேல் அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ் வினை மேல் அவர் அகன்றார்.
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடை கொண்டு போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார்.
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத் தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்.
மற்று அவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் சுற்றம் உடன் மக்களையும் துகளாகவே நீத்துப் பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்.
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின் மாதர் ஆர் திலகவதியாரும் அவர் பின் வந்த காதலனார் மருள் நீக்கியாரும் மனக் கவலையினால் பேது உறு நல் சுற்றமொடும் பெருந்துயரில் அழுந்தினார்.
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார் மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார் பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்.
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய் அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத் தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச் செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்.
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக் கொடுக்க இசைந்தார்கள் அந்த முறையால் அவர்க்கே உரியது நான்-ஆதலினால் இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய வந்தவர் தம் அடி இணை மேல் மருள் நீக்கியார் விழுந்தார்.
அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலினால் உயிர் தரித்தேன் என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்.
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்.
மாசு இல் மனத் துயர் ஒழிய மருள் நீக்கியார் நிரம்பித் தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க் காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால் ஆசு இல் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்.
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார்.
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின் நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால் கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார்.
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் பொங்கும் உணர்வு உறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத் துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் தங்களின் மேல் ஆம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்.
அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில் சித்த நிலை அறியாத தேரரையும் வாதின் கண் உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார்.
அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச் செல் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் தொல் நெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ நல் நெறியே சேர்வதற்கு நாதன் அருள் நண்ணுவார்.
பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார் நீர்ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக் குன்றை அடி பணிந்து கோது இல் சிவ சின்னம் அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால் துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார்.
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறிப் புனிறு அகன்ற நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுகு இட்டு மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்.
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் கேள் உறும் அன்பு உற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் கோள் உறு தீவினை முந்தப் பர சமயம் குறித்த அதற்கு மூளும் மனக் கவலையினால் முற்ற அரும் துயர் உழந்து.
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனர் ஆல்.
தவம் என்று பாய் இடுக்கித் தலை பறித்து நின்று உண்ணும் அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச் சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்.
மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார். உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வாம் என அருளி.
பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவு இறை வழுவும் தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கது ஆல்.
அடைவுஇல் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது வட அனலும் கொடு விடமும் வச்சிரமும் பிறவும் ஆம் கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப் படர் உழந்து நடுங்கி அமண் பாழி அறை இடை விழுந்தார்.
அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம் நச்சு அரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார்.
அவர் நிலைமை கண்ட அதன்பின் அமண் கையர் பலர் ஈண்டிக் கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்.
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது குண்டிகை நீர் மந்திரித்தும் குடிப்பித்தும் தணியாமை கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார்.
தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தார் ஆய் ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினர் ஆய்ப் போவார்கள் இது நம்மால் போக்க அரிதுஆம் எனப் புகன்று.
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை கைக் கொண்டு மண்டி மிக மேல் மேலும் முடுகுதலால் மதி மயங்கிப் பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளர் ஆக் கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த.
ஆங்கு அவன் போய்த் திருஅதிகை தணை அடைய அருந்தவத்தார் பூங்கமழ் நந்தன வனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத் தீங்கு உளவோ என வினவ மற்று அவனும் செப்புவான்.
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு அல் ஆகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்.
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச் செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என.
எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருஅதிகை அணைவதனுக்கு உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத் தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார்.
பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண் செய் தவ மாதவர் வாழும் திருஅதிகை சென்று அடைவார்.
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோய்உடன் தொடரக் குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருஅதிகை இனில் திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார்.
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் இந்த உடல் கொடும் சூலைக்கு இடைந்து அடைந்தேன் இனி மயங்காது உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து.
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி ஆளுடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது கோள் இல் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது மூளும் அருந்துயர் உழந்தீர் எழுந்திரீ என மொழிந்தார்.
மற்ற வுரை கேட்டலுமே மருள் நீக்கியார் தாமும் உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார்.
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார்.
திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்பப் பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்.
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார்.
திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங் கனக வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால் உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்.
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோதுஇல் திருப்பதிகம் போற்றால் உலகு ஏழின் வரும் துயரும் போமாறு எதிர் நின்று புகன்றனர் ஆல்.
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு உற்று அடு சூலை மறப் பிணிதான் அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச் செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கின
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப் பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின் தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் தகுமோ என இன்னன தாம் மொழி
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண நீசர் புறத் துறை ஆம் அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும் இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத் தொழு
மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்பு உற மன்னுக என்று யாவர்க்கும் வியப்பு உற மஞ்சு உறைவான் இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.
இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறம் ஆன அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான் முரசம் படகம்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே எய்து உற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றி எழும் திருவாசகமும் கையில் திகழும் உழவாரமுடன் கைக் கொண்டு கலந்து கசிந்தனரே.
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அத் தன்மைப் பதி மேவியதா பதியார் பொய்மைச் சமயப் பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறை
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில் புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்.
தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உயப் போய்ப் பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் மருவும் நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்.
மலையும் பல் சமயங்களும் வென்று மற்று அவரால் நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் கொலையும் பொய்மையும் இல என்று கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்.
இவ்வகைப் பல அமணர்கள் துயருடன் ஈண்டி மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்.
தவ்வை சைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம் பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய லங்கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார்.
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்.
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் கடை அணைந்துஅவன் வாயில் காவலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன இடை அறிந்து புக்கு அவரும் தம் இறைவனுக்கு இசைப்பார்.
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கனன்று உரைத்தான்.
கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால் நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்.
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து, புரை உடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே கரை இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான்.
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்.
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவுஎன்று மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான்.
அரசனது பணிதலை நின்று அமைச்சர்களும் அந்நிலையே முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து விரை செறியும் சோலை சூழ் திருஅவதிகை தனை மேவிப் பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்.
சென்று அணைந்த அமைச்சருடன் சேனை வீரரும் சூழ்ந்து மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்று நுமை அரசன் அழைத்து எமை விடுத்தான் போதும் என நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார்.
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன் குளிர் மதி வாழ் சடை யானைத் தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவுஇலம் என்று அருள் செய்தார்.
ஆண்ட அரசுஅருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்.
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச் சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார்.
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப் பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை உருகு பெருந்தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித் திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார்.
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத் தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்.
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் ஐயர் திருவடி நீழல் அருள் ஆகிக் குளிர்ந்ததே.
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப் பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்.
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வு இல் அமணரை அழைத்துப் பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள்.
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர்ப் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே ஈனம் தாங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார்.
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்.
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடும் மன்னன் ஓங்கு பெருமையலினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத் தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப் பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார்.
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனை ஆம் படி அறிந்தே செஞ் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெஞ் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்.
பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதற்க்குப் புவனங் கள் முடிவுஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் படியார்க்கும் அறிவு அரிய பசுபதியார் தம் உடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ.
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத் தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார்.
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் தஞ்சம்உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார்.
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் செற்றவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார்.
மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடி ஆம் கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப் பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல் கோ பாதி சயம் ஆன கொலைக் களிற்றை விடச் சொன்னான்.
கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித் தாடத்தின் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்.
பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணி விலகா ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வரும் ஆல்.
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில் கடிது உற்று அடு செயலின் கிளர் கடலில் படு கடையின் முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே.
மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக் கோடு உற்று இரு பிளவுஇட்டு அறு குறை கைக்கொடு முறியச் சாடு உற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று ஆடு உற்று அகல் வெளி உற்று அது அவ் அடர் கைக்குல வரையே.
பாவக் கொடு வினை முற்றிய படிறு உற்று அடு கொடியோர் நாவுக்கரசு எதிர் முன்கொடு நணுகிக் கருவரை போல் ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார் சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்.
அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனை தம் மேல் வரக் கண்டு விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச் சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்.
வஞ்சகர் விட்ட சினப் போர் மத வெங் களிற்றினை நோக்கிச் செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூ இலைச் சூல வீரட்டர் தம் அடி யோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்.
தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரண்ஆகக் கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புஉறு கொள்கைத் தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்.
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத் தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்து மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே.
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே.
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையர் ஆகித் தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான்.
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர் பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப் பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்.
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் பின் தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைத்தவன் தன்னைச் சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுக என்றார்.
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித் தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப் பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில் வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்.
அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போய் அருகந்த வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பதகர்.
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்சு எழுத்தும் துதிப்பார்.
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக் கரு நெடும் கடலினுள் கல் மிதந்ததே.
அப் பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொளத் தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர் மெய்ப் பெருந்தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்சு எழுத்து ஆரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ.
அருள் நயந்து அஞ்சு எழுத்து ஏத்தப் பெற்ற அக் கருணை நா அரசினைத் திரைக் கரங்களால் தெருள் நெறி நெர்மையில் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம்.
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்து அருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ எத் திசையினும் அர என்னும் ஓசைபோல் தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே.
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண் கொழுந்து அணி சடையானைக் கும்பிட்டு அன்பு உற விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும் சான்று ஆம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினரே.
மற்றும் இனையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றது ஓர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருஅதிகைப் பதி சென்று அடைவார்.
தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும் மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப் பூ அலர் சோலை மணம் அடி புல்லப் பொருள் மொழியின் காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார்.
வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீயஞ் மிறைகள் எல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள மஞ்சிவர் மாடத் திருஅதிகைப் பதி வாணர் எல்லாம் தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்.
மணி நெடும் தோரணம் வண் குலைப் பூகம் மடல் கதலி இணை உற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும் தணிவில் பெருகு ஒளித் தாமங்கள் நாற்றிச் செஞ்சாந்து நீவி அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார்.
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப் பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே.
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே.
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால் மிண்டு ஆய செய்கை அமண் கையர் தீங்கு விளைக்கச் செற்றம் உண்டு ஆயின வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.
இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச் செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே.
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்பு உறு காதலினால் திளைத்தே எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை விரி புனல் சூழ் திருஅதிகை வீரட்டானத்து அமுதைத் தெரிவரிய பெருந்தன்மைத் திருநாவுக் கரசு மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள்.
புல் அறிவின் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து வல் அமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்.
வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த காடவனும் திருஅதிகை நகரின் கண் கண் ணுதற்குப் பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்.
இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல் பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச் சொல் நாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்.
திருஅதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல் ஊரும் அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப் பெருகு விருப்பு உடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்.
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப் பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்.
புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்த உடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்ப அதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழும் தமிழ் மாலை முன் நின்று பாடுவார்.
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத் தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்.
நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம் மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திருத் தோளில் சேடு உயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த.
ஆங்கு அவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத் தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து தூங்கு அருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்.
தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப் பாங்கு ஆகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள் பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும் தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து.
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்கு உள்ள தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல் புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார்.
ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வான் ஆறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி ஊன் ஆலும் உயிர் ஆலும் உள்ள பயன் கொள நினைந்து தேன் ஆரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லைப் பால் மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் வாவித் தடமலர் வதனம் பொலிவுறு மருதத் தண்பணை வழி வந்தார்.
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும் அருகில் செறிவனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்குப் பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுஉறு புனல் கண் பொழிவன என முன்புஉள வயல் எங்கும்.
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் செறிவில் பலதரு நிலையில் பொலிவுஉறு திரு நந்தன வனம் எதிர் கண்டார்.
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணை உற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம் இவர் தம் திருவடிவுஅது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாறச் செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குடதிசை மணி வாயில் புறம் வந்து உற்றா
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும் மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் கல்வித் துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை வளர் சிவமே நிலவிய திருவீதி.
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் புவனங்களின் முதல் இமையோர் தடமுடி பொருதுஉந்திய மணி போகட்டிப் பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளி புனல் விடுவார்கள்.
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவு அரிதாகும் கோலம் பெருகிய திருவீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலம் ஆர் முனிவர்கள் துதியோடும் ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உறமெய் கொடு தொழுது உள்புக்கார்.
வளர் பொன் கன மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் புளகச் செறி நிரை விரவத் திருமலி பொன் கோபுரம் அது புகுவார் முன் களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனகப் பொது எதிர் கண்ணுற்றார்.
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவு உற நேரே கூடும் படி வரும் அன்பால் இன்புஉறு குணம் முன் பெறவரு நிலை கூடத் தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா ஆடும் கழல் புரி அமுதத் திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார்.
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் மெய்யும் தரைமிசை விழும்முன்பு எழுதரும் மின்தாழ் சடையொடு ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்று ஆல்.
இத் தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்று ஆடும் அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும் சித்தம் பெருகிய பரிவால் இன்பு உறு திரு நேரிசை மொழி பகர்கின்றார்.
பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலை பாடிக் கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப் பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்.
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் திருக் குறுந் தொகைகள் பாடித் திரு உழவாரம் கொண்டு பெருத்து எழு காதலோடும் பெருந்திருத் தொண்டு செய்து விருப்பு உறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டல் ஆட.
மேவிய பணிகள் செய்து விளங்கும்நாள் வேட்களத்துச் சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக் காவியம் கண்டர் மன்னும் திருக்கழிப் பாலை தன்னில் நாவினுக்கு அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.
சின விடை யேறுஉகைத்து ஏறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து வன பவள வாய்திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று அனைய திருப்பதிகம் உடன் அன்பு உறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவுஅரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார்.
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மருங்கு நீங்கி நனைச்சினை மென் குளிர்ஞாழல் பொழில் ஊடு வழிக் கொண்டு நண்ணும் போதில் நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் தினைத்தனையாம் பொழுதும் மறந்து உய்வேனோ எனப் பாடித் தில்லை
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ் உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்.
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை அஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயம் ஆம் படி பாடி அன்பு சூழ்ந்த நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
கடை உகத்தில் ஆழியின் மேல் மிதந்த திதுக்கழு மலத்தின் இருந்த செங்கண் விடை உகைத்தார் திரு அருளால் வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள் உரைப்பக் கேட்டார்.
ஆழிவிடம் உண்ட வரை அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ப்ப.
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப் பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி புரண்டு வலம் கொண்டு போந்தே எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்ப அரிய பெருமையினார் திரு நாரையூர் பணிந்து பாடிச் செல்வார்.
தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் தெண் திரைவாய்க் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் வண் தமிழால் எழுதும் மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் ஆண்ட அரசு எழுந்து அருளக் கேட்டு அருளி ஆளுடைய பிள்ளையாரும் காண் தகைய பெரு விருப்புக் கைம் மிக்க திரு உள்ளக் கருத்தினோடு மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ எழுந்து அருளி முன்னே வந்தார்.
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர் குழத்திடையே சென்று பழுது இல் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்துஅவர்தம் கரங்கள் பற்றி எழுத அரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார் தம்மை அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்.
அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் எனச் சிறந்த சீர்த்தி எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.
பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மை யோடும் வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலும் ஆம் எனவும் ஓங்கும் பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய இருள் கடு உண்டவர் அருளும் அகிலம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித் தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்து உள்புக்கு விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எழுந்த எல்லைச் சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று பரிவுஉறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி அரிய வகை புறம் போந்து பிள்ளையார்தம் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து மருவிய நண்புஉறு கேண்மை அற்றை நாள் போல் வள
அத்தன்மைபயில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத சித்தம் நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் மைத் தழையும் மணி மிடற்றார் பொன்னி நட்டு மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்பு கொண்டு மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடூர்நீடு திருக் குறுக்கை திரு நின்றி யூரும் காண் தகைய நனிபள்ளி முதலாய் நண்ணிக் கண்ணுதலார் க
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளி பாடிக் கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக் கரைத் துருத்தி வேள்விகுடி எதிர் கொள் பாடி பாஉறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன் அருளிச் செய்து மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் பூ வலயத்தவர் பரவப் பல நாள்
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்தி அன்பினோடு மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அருந்தமிழ் மாலை புனைந்து போந்து செறி விரை நன்மலர்ச்
சென்று சேர்ந்து திருச் சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும் என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார்.
கோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவார் அடிகள் என் தலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில் வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
நன்மை பெருகு அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று அவர்தம் சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்.
நனைந்துஅனைய திருவடி என்தலைமேல் வைத்தார் என்று புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள் நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார்.
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால் மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து பாவுற்ற தமிழ் மாலை பலபாடிப் பணிந்து ஏத்தித் தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகிச் செல்லும் நாள்.
கருகாவூர் முதலாகக் கண்நுதலோன் அமர்ந்து அருளும் திருவாவூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் பெருகு ஆர்வத் திருத் தொண்டு செய்து பெருந்திரு நல்லூர் ஒரு காலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார்.
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்.
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் செப்ப அரும்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்.
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப் பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண.
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக் கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப் பெற்ற பெருந்தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்.
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார் பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து.
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர் தம் பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வரத் தனிவிட்டார்.
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே பூங்கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம் தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்.
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் தாயர் கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்.
தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்.
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க் கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்.
அருந்தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது இருந்ததற்குத் தளவு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்.
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப் பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து பொங்கிய அன்பு உற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்.
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ் அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார்.
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும் தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத் தழும்பு உறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச் செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார்.
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து சேல் உலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார்.
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள் தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்.
நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை பல்லூர் வெண்தலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி.
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி மேல் ஊர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிச் சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார்.
பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும் திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்.
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம் நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்று உடையார் காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார்.
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால் எல்லை இல் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார்.
பற்று ஒன்று இலாஅரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால் உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே புற்று இடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார்.
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்.
கண்டு தொழுது கர சரண் ஆதி அங்கம் எலாம் கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள் தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப் புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து.
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம் தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி ஈண்டும் மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்.
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றில் முன் தேவ ஆசிரியன் சார்ந்து கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூராரைக் கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே.
மார்புஆரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர்வுஆகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே சார்வுஆன திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்று இடம் கொள் நிருத்தர் தம்மைக் கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப் பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்.
நான் மறைநூல் பெறுவாய்மை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மைப் பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்தத்துள் வைத்துப் பாடித் தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் திகழும் தன்மை ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில்.
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே.
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில் தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி நாவினுக்குத் தனி அரசர் நயக்கும் நாள் நம்பர் திரு அருளினாலே.
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப் பொருப்புஅரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்.
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும் பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை.
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி மீண்டு அருளானார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்.
கரண்டம்மலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு வரன்று மணிப் புனல்புகலூர் நேர்நோக்கி வாகீசர் மகிழ்ந்து வந்தார் திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்தன போல் இசைந்த அன்றே
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மைப் பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர் வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற அரு நாமத்து அஞ்சு எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார்.
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகர் ஆளும் மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இத் தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள் செய்தார் முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை.
அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்.
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந் தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் பூ மலர் வாசத் தண் பணை சூழும் புகலூரில்.
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசும் தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுது ஆரப் பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார்.
தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப் பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே ஓவுதல் ஓவும் திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்.
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி வார் திகழ் மென் முலையாள் ஒரு பாகன் திருமருகல் ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.
பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர் உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண் வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்.
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணர் ஆம் ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடன் ஆகப் பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்.
திருப் பதிகச் செழும் தமிழின் திறம் போற்றி மகிழ் உற்றுப் பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில் விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்.
அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற மின் ஆர் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும் முன் ஆகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப் பொன் ஆரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார்.
திரு நீல நக்கடிகள் சிறுத்தொண்டர் முருகனார் பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் வரும் நீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார்.
செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப் பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக் குங்குலியக் கலயனார் திருமடத்தில் குறைவு அறுப்ப அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்.
சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி ஏர் மன்னும் இன்இசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார்.
சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக் கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோது இல் தமிழ்த்தொடை புனைந்து வார்ந்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன் சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை.
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும் காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால் ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார்.
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு நீடு கதலி தழைப் பூகம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப் பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்.
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர்ச் சடை மவுலி வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்.
கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று உய்யும் நெறித் தாண்ட கம் மொழிந்து ஆங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க.
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப் பன் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய் அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எலாம் பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்தது ஆல்.
வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல உலகோர் வருத்தம் உற நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும் கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார்.
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்.
விண் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில் எண் இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும்.
அல் ஆர் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள் எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச் சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்.
ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால் தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால் காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால் வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர்.
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால் ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில்.
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவு உற்றார்.
வாய்ந்த மிழலை மாமணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச் சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார்.
மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு.
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில் அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள் வாயில் வணங்குவார்.
தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர்வு அகற்ற வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார்.
ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர் ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத் தேங்காது இருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர்.
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்.
வேத வனத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கு மணிக் கதவம் காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்.
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும் இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதின் புறத்து அணைந்தார்.
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம் திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில் கறந்த ஞானம் குழைத்து அமுது செய்த புகலிக் கவுணியரை நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என.
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர் பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ் அளவில் கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்தது எடுத்த திருப் பாட்டில்.
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவுற்றார் எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியதால்.
அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் நங்கள் புகலிப் பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்.
அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்.
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம் பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும் துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார்.
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி ஈது எம் பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள.
சீர் ஆர் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர் ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தா வாறே போல் நீர் ஆர் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர் பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலர் ஆல்.
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத் துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்.
அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என.
மாடம் நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்.
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார்.
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் அடி போற்றி மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்.
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் கோது இல் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார் போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண.
வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி அந்தணராளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்கச் சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வினவத் தீங்கும் உளஆமோ இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்.
சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும் பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத் தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர்.
ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக் காயம் மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய் மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த தீய தொழிலும் பல கெட்டேன் செல்ல இசையேன் யான் என்றார்.
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார்.
போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர் தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத் தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார்.
வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப் பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் தாணூவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்.
சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து சாலு மொழி வண் தமிழ் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார்.
வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்துத் தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார்.
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார்.
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம் பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி.
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக் கந்த மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்.
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று எண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார்.
அறிவு இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக் குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் நெறி இல் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரியச் செறிவு இல் அறிவு உற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி.
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவு பெரும் தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான்.
ஆனை இனத்தில் துகைப்பு உண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததற் பின் மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின் ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்.
தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணூமோ என்னும் விலை இல் வாய்மைக்குறுந் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்.
பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொருவிடையார் தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய் எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறு இல் தொண்டர் எதிர் கொள்ளச் செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார்.
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின் மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார்.
மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது பொற் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச் செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார்.
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையோடும் அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பார் ஆய்.
காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால் மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம்.
அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப் பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்.
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதா அமுது செய்து இனிய தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்.
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவது என்று உரைப்ப ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார்.
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம் ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார்.
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து மெய்ஞ் ஞீர் மையினில் அன்பு உருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்.
நாதர் மருவும் திருவண்ணாமலையை நாடிப் பதி பலவும் மிகவும் காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி மாது ஓர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர் ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார்.
செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்.
அண்ணா மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம் கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன் பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார்.
பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள் மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார் அணி ஆர் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்.
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும் சூதம் மலி தண் பணைப் பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு நாதர் போந்து பெருந்தொண்டை நல் நாடு எய்தி முன் ஆகச் சீத மலர் மென் சோலை சூழ் திரு ஓத்தூரில் சென்று அடைந்தார்.
செக்கர்ச் சடையார் திரு ஓத்தூர் தேவர் பிரானார் தம் கோயில் புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய முக் கண் பிரானை விரும்பு மொழித் திருத் தாண்டகங்கள் முதலா ஆகத் தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார்.
செய்ய ஐயர் திரு ஓத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம் உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித் தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.
ஞாலம் உய்யத் திருஅதிகை நம்பர் தம் பேர் அருளினால் சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார்.
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் நீடு கதலியுடன் கமுகு நிர்றைத்து நிறை பொன் குடம் தீபம் தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும் ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால் கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார்.
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார் அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்.
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப் பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருகினார்.
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம் ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து என்பு உள் அலைப்பச் சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்.
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் பரவு ஆய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் விரவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்.
கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகு காதலொடும் செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி மை ஆர்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு மெய் ஆர்வம் உறத் தொழுது விருப்பினொடு மேவு நாள்.
சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேற் றளி முதலாம் நீர் மருவும் சடைமுதியா நிலவி உறை ஆலயங்கள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் சார்வு உறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்துஇருந்தார்.
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித் துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்.
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்.
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார் நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடைப் போய்ப் பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார்.
நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப் பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் சூடும் இளம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய் மாடு பெருங்கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்.
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்து அன்பினொடும் பெரு வாய்மைத் தமிழ்பாடி மருங்கு எங்கும் பிறப்பு அறுத்துல் தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர் மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்.
வரை தவழ் வளர் மா மஞ்சு என்ன மாடமிசை மயில் ஆடும் தரை புகழ் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி திரை வளர் வேலைக் கரை போய்த் திரு ஒற்றியூர் சேர்ந்தார்.
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப் பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து மற்று அவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர்.
திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த பெரு நாகத்திண் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார் கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார்.
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத் தொழுது ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எலாம் முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்.
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருகப் பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் கண்டு ஓங்கு களி சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்.
விளங்கும் பெருந்திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள் களம் கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது வளம் கொள் திருப் பதி அதனில் பல நாள்கள் வைகினார்.
அங்கு உறையும் நாளின்கண் அருகு உளவாம் சிவ ஆலயங்கள் எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள் பங்கு உடையார் அமர்ந்ததிருப் பாசூர் ஆம் பதி அணைந்தார்.
திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும் விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப் பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார்.
முந்தி மூ வெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும் சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்.
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச் செம்மையினார் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார்.
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் ஒருவாத பெருந்திருத் தாண்டகம் முதலா ஓங்கு தமிழ்ப் பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் மரு ஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்.
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார்.
பொன் முகலித் திருநதியின் புனித நெடுந் தீர்த்தத்தில் முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் சென்னி உறப் பணிந்து எழுந்து செங்கண் விடைத் தனிப்பாகர் மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார்.
காது அணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெருங் காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் நாதனை என் கண் உளான் எனும் திருத்தாண்டகம் நவின்றார்.
மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும் சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத் தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்.
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் பேணு திருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம் காணும் அது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார்.
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப் பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்பொடு போதுவார் துங்க மால் வரை கானி ஆறு தொடர்ந்த நாடு கடந்தபின் செங்கண் மால் விடை அண்ணல் மேவு திருப் பருப்பதம் எய்தினார்.
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல் ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்.
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச் செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர் கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்.
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடுங்கிரி வட்டையும் பெரு நலம் கிளர் நாடும் எண் இல பின்படச் செறி பொற்பினால் வரு நெடுங்கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்.
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் மங்குல் சுற்றிய வெற்பின் ஓடு வனங்கள் ஆறு கடந்து அயல் பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார்.
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும் மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை பெயர்ந்து போய் மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார்.
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச் சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து தனித்து நேர் ஏகினார் இரவும் பகலும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்.
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன் தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால் வாய நாக மணிப் பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் தோய வானவராயினும் தனி துன்ன அரும் சுரம் மன்னினார்.
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து எங்கும் மிக்க பிளப் பின்நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன பொங்கு அழல் தெறு பாலை வெந்ந்நிழல் புக்க சூழல் புகும் பகல் செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
இங்ஙனம் இரவும் பகல் பொழுதும் அருஞ்சுரம் எய்துவார் பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும் மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்.
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்.
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெடச் சேர்வு அரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்.
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச் செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் தப்பு உறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த நல் நெடும் புனல் தடமும் ஒன்ற உடன் கொடு நடந்தார் பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம் படியால்.
வந்து மற்றவர் மருங்கு உற அணைந்து நேர் நின்று நொந்து நோக்கி மற்று அவர் எதிர் நோக்கிட நுவல்வார் சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார்.
மாசு இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் தேசு உடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ ஆசு இல் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப் பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்.
வண்டு உலாம் குழல் மலை மகளுடன் வட கயிலை அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன் கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற.
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால் வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி.
மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்.
ஆங்கு மற்று அவர் துணிவு அறிந்து அவர் தமை அறிய நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால் ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்.
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம் நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார்.
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் எழு பெருந்திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை பழுது இல் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார்.
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப் பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்.
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார் போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி மாது ஓர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப.
வம்பு உலா மலர் வாவியின் கரையில் வந்து ஏறி உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார் எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண் பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்.
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்.
பொன் மலைக் கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் தன்மை ஆம் படி சத்தியும் சிவமும் ஆம் சரிதைப் பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்.
காணும் அப் பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப் பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர் பூணும் அன்பொடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத் தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க.
தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர் மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக் காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப.
கங்கையே முதல் தீர்த்தம் ஆம் கடவுள் மா நதிகள் மங்கலம் பொலி புனல் பெருந்தடம் கொடு வணங்க எங்கும் நீடிய பெருங்கண நாதர்கள் இறைஞ்சப் பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற.
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப முந்தை மாதவப் பயன் பெறும் முதன்மையால் மகிழ்ந்தே நந்தி எம்பிரான் நடுவு இடை ஆடி முன் நணுக.
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும் தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம் கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவன் ஆர்.
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார். தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்.
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப் பொன் பிறங்கிய சடையரைப் போற்று தாண்டகங்கள் இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை இல் தவத்தோர்.
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்பு உறக் கயிலை மேய நாதர் தம் துணை யொடும் வீற்று இருந்து அருளித் தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம் சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ.
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர் மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச் செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து வையம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து.
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகெளாடும் என்னும் கோது அறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் காதல் துணையொடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்.
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பில் மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்.
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப் பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித் தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார்.
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச் சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வு உறும் தன்மையர் ஆனார்.
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி.
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத் திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்.
பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும் அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும் செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு எல்லை இல் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்.
பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத் தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு மன்னிய சீர்ச் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்.
தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி வாய்ந்த வளம் திரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப் பூம் துருத்தி வளம் பதியின் புறம்பணையில் வந்து அணைந்தார்.
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்து அருளத் தாம் கேட்டு மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து கண் பெருகும் களி கொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால் எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்.
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார் சூழும் இடைந்திடும் நெருக்கில் காணாமே தொழுது அருளி வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார்.
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின் சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் சிந்தை களிப்பு உற வருவார் தமையாரும் தெளிந்து இலர் ஆல்.
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு அருகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார்.
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத் துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்.
கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச் செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள் தொழுது உருகி இன்பு உற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்.
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி உடல் புல்லிய கூன் நிமிர்த்து அதுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில் எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்.
பண்பு உடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும் நண்பு உடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர் எண் பெருக உரைத்து அருள எல்லை இல் சீர் வாகீசர் மண் குலவும் தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.
பிரம புரத் திரு முனிவர் பெருந்தொண்டை நல் நாட்டில் அரன் அமரும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப் புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்.
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்று அப் பதி நின்றும் பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார்.
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உலர் புக்கு வன் தனி மால் விடையானை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்.
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்.
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின் சார்வு உடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று ஆர கிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்.
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல் தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்.
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலினுள் நெடியானுக்கு அறிவு அரியார் நேர் தோன்றக் கண்டு இறைஞ்சி வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்.
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த மன்னவனாம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர்.
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்பு உறு மொழியால் பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி நா அரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார்.
அங்கு உறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப் பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம் எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்.
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி வழு இல் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும் ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்.
தேம் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப் பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குதற்கு.
பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி நையும் மனப் பரிவினொடும் நாள் தோறும் திரு முன்றில் கை கலந்த திருத் தொண்டு செய்து பெருங்காதல் உடன் வைகும் நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.
நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும் மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும் கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும் துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார்.
ஆர் உயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும் பார் பரவும் பாவ நாசப் பதிகம் பல் முறையும் நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார்.
அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார்.
செம் பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி வம்பு அலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்.
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால் வில்லோடு நுதல் மடவார் விசும்பு ஊடு வந்து இழிந்தார்.
வானக மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து தானம் நிறை சுருதிகளில் தரும் அலங்காரத் தன்மை கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப் பானல் நெடுங்கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்.
கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய உற்பல மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயரப் பொற்பு உறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர அற்புதப் பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார் கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.
இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும் மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம் சித்தம் நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்.
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்.
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக் காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் பேதம் இலா ஓர் உணர்வின் பெரிய வரைப் பெயர்விக்க யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் நின்றார்.
இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர் மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும் அந் நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்.
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் தன்னுடைய சரணான தமியேனைப் புகலூரன் என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்.
மண் முதல் ஆம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்.
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின் மேல் நிறைந்த ஐந்து பேர் இய ஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்.
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப் படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன் கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார் முடிவு இல் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.