வ.எண் |
பாடல் |
1 |
நீடு வண் புகழ்ச் சோழர் நீர் நாட்டு இடை நிலவும்
மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர் தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
|
2 |
இஞ்சி சூழ்வன எந்திரப் பந்தி சூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெலடிச் செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.
|
3 |
விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி
முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம்
மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில்
உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இருங்குடிகள்.
|
4 |
நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்துக்
காரினில் திகழ் கண்டர் தம் காதலோர் குழுமிப்
பாரின் மிக்கது ஓர் பொருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி எனத் தகும் சிறப்பால்.
|
5 |
இன்ன வாழ் பதி அதன் இடை ஏயர் கோக் குடிதான்
மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால்.
|
6 |
அங்கண் மிக்க அக் குடியினில் அவதரித்து உள்ளார்
கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடி பணிவார் அடிச்சார்ந்து
பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார்.
|
7 |
புதிய நாள் மதிச் சடைமுடியார் திருப் புன் கூர்க்கு
அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து
நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று
துதியினால் பரவித் தொழுது இன்புறு கின்றார்.
|
8 |
நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு
இயாவர் இச் செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்பத்
தேவர் தம் பிரான் அவர் திறம் திருத்திய அதற்கு
மேய வந்த அச் செயலினை விளம்புவான் உற்றேன்.
|
9 |
திருத் தொண்டத் தொகை அருளித் திருநாவலுர் ஆளி
கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள்.
|
10 |
தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த
வேளாளர் குண்டையூர்க் கிழவர் எனும் மே தக்கோர்
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்.
|
11 |
செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம்கரும் பின்
இன் நல்ல அமுதும் முதல் எண்இல் பெரும் பல வளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுதுஆக வழுவாமல்
பல் நெடும் நாள் பரவையார் மாளிகைக்குப் படி சமைத்தார்.
|
12 |
ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற
வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்கப்
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்குப் போ தாமை
மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார்.
|
13 |
வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து
துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே
அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள் புரிவார்.
|
14 |
ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் என்று அருளி
நீர் ஊரும் சடை முடியார் நிதிக் கோமான் தனை ஏவப்
பேர் ஊர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலைப் பிறங்கல்
கார் ஊரும் நெடு விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது ஆல்.
|
15 |
அவ் இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே
எவ் உலகின் நெல் மலைதான் இது என்றே அதிசயித்துச்
செவ்விய பொன் மலை வளைத்தார் திரு அருளின் செயல் போற்றிக்
கொவ்வை வாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார்.
|
16 |
நாவலூர் மன்னன் ஆர்க்கு நாயனார் அளித்த நெல் இங்கு
யாவர் ஆல் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப்
போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர் தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார்.
|
17 |
குண்டை ஊர்க் கிழவர் தாமும் எதிர் கொண்டு கோது இல் வாய்மைத்
தொண்டன் ஆர் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று
பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட
அண்டர் தம் பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று.
|
18 |
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம்
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டுப்
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று
இனியன மொழிந்து தாமும் குண்டை ஊர் எய்த வந்தார்.
|
19 |
விண் இனை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி
எண் இல் சீர்ப் பரவை இல்லத்து இந் நெல்லை எடுக்க ஆளும்
தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று.
|
20 |
ஆள் இட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதி ஆன
கோள் இலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி
வாள் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதல் உடன் முன் தொழுது பாடுதலும்.
|
21 |
பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி
மிகப் பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப்
புகப் பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில்
நிகர்ப்பு அரிய ஒருவாக்கு நிகழ்ந்தது நின் மலன் அருளால்.
|
22 |
தம் பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திருப் பாதம் தொழுது ஏத்திச்
செம் பொன் நேர் சடையாரைப் பிறபதியும் தொழுது போய்
நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலன் ஆர்.
|
23 |
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்திப் புறம் போந்து
பாங்கு ஆனார் புடை சூழ்ந்து போற்றி இசைக்கப் பரவையார்
ஓங்கு திரு மாளிகையின் உள் அணைந்தார் ஆரூரர்.
|
24 |
கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படி கூறி
மேவி அவர் தம் மோடு மிக இன்பு உற்று இருந்து அதன்பின்
சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திரு அருளின்
ஏவலினால் அவ் இரவு பூதங்கள் மிக்கு எழுந்து.
|
25 |
குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கிக்
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல்.
|
26 |
அவ் இரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு
எவ் உலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து
நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கை புகழ்ப் பரவையார்க்கு
இவ் உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார்.
|
27 |
நீக்கு அரிய நெல் குன்று தனை நோக்கி நெறி பலவும்
போக்கு அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம் இல் புகுவார்
பாக்கியத்தின் திரு வடிவுஆம் பரவையார்க்கு இந் நெல்லும்
போக்கும் இடம் அரிதுஆகும் எனப் பலவும் புகல்கின்றார்.
|
28 |
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார்
இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம்
பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என்ற
வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ்ப் பரவையார்.
|
29 |
அணி ஆரூர் மருகு அதனில் ஆள் இயங்குப் பறை அறைந்த
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு எங்கும் நெல் கூடு
அணியாமல் கட்டி நகர் களி கூரப் பரவையார்
மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர் தமைப் பணிந்தார்.
|
30 |
நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறைநாள்
செம் பொன் புற்று இடம் கொண்டு வீற்று இருந்த செழும் தேனைத்
தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி
இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார்.
|
31 |
குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண்
அலகு இல் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி
நிலவிய வன் தொண்டர் அது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சிப்
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்.
|
32 |
தேவர் ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி
நாவல் ஊரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப்
பாவை பாகர் தமைப் பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார்
|
33 |
மாலும் அயனும் உணர்வு அரியார் மகிழும் பதிகள் பல வணங்கி
ஞாலம் நிகழ் கோட் புலியார் தம் நாட்டியத்தான் குடி நண்ண
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சிக்
கோல மணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக்கொடு புக்கார்.
|
34 |
தூய மணிப் பொன் தவிசில் எழுந்து அருளி இருக்கத் தூ நீரால்
சேய மலர்ச் சேவடி விளக்கித் தெளித்துக் கொண்டச் செழும் புனலால்
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார்.
|
35 |
பூம் தண் பனிநீர் கொடு சமைத்த பொருவு இல் விரைச்சந்தனக் கலவை
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறைமான் மதச் சேறு
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்ணில் மணிப் பாசனத்து ஏந்தி.
|
36 |
வேறு வேறு திருப் பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து
மாறு இலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி
ஈறு இல்விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி
ஆறு புனைந்தார் அடித் தொண்டர் அளவு இல் பூசை கொள அளித்தார்.
|
37 |
செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதி ஆம் கோட்புலியார்
நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால்
தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித்தலை சிறந்த
பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவா.
|
38 |
ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த
தேன் ஆர் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த
மான் ஆர் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்.
|
39 |
அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டு அருளிக்
கடிசேர் மலர்த் தாள் தொழுது உய்யக் கருணை அளிக்க வேண்டும் எனத்
தொடி சேர் தளிர்க்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக் கொண்டப்
படியே மகண்மை யாக் கொண்டார் பரவையார் தம் கொழு நனார்.
|
40 |
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்து
காதல் நிறைந்த புதல்வியர் ஆம் கருத்து உள்கசிவால் அணைத்து உச்சி
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி
நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர்.
|
41 |
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக்
கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை.
|
42 |
சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு அதன் இடைச் சிங்கடியாரைப்
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை நினைத்த பெற்றியினால்
மறப்பு இல் வகைச் சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி
நிறப் பொற்பு உடைய இசைபாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார்.
|
43 |
அங்கு நின்றும் எழுந்து அருளி அளவுஇல் அன்பின் உள் மகிழச்
செங்கண் நுதலார் மேவு திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி
மங்கை பாகர் தமைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
|
44 |
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர்
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளி
மன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து.
|
45 |
இறைஞ்சிப் போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்து அருளி
நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில் களும் பணிந்து போற்றிப் புற்று இடமாய்
உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார்.
|
46 |
செறி புன் சடையார் திருவாரூர்த் திருப் பங்குனி உத்தரத் திருநாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்து அருளிச் சென்று அங்கு எய்தினார்.
|
47 |
சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில் மணி
முன்றில் பணிந்து வலம் கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித்
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து
நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ் விப்பார்.
|
48 |
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்கு ஒழிய
வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர்
அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப
மறி வண்கையார் அருளேயோ மலர்க்கண் துயில் வந்து எய்தியதால்.
|
49 |
துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணித் தேன்
அயிலும் சுரும்பு ஆர் மலர்ச் சிகழி முடிமேல் அணியா உத்தரிய
வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்துப் பள்ளி மேவினார்.
|
50 |
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர்க் கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேம்மண் கல்லே விரிசுடர்ச் செம்
பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி.
|
51 |
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக் கைக் கமல முகை தலை மேல்
கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு
மண்டு காதல் உற வணங்கி வாய்த்த மதுர மொழிமாலை
பண் தங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்துப் பாடினாள்.
|
52 |
பதிகம் பாடித் திருக் கடைக் காப்பு அணிந்து பரவிப் புறம் போந்தே
எதிர் இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்து அருளி
நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும்
பொதியும் சடையார் திருப் பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர்.
|
53 |
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி
எய்த அருள எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி
ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று
உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார்.
|
54 |
வளம் மல்கிய சீர்த் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்து அருளி
அளவு இல் செம்பொன் இட்டிகைகள் ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்
தளவ முறுவல் பரவையார் தம் மாளிகையில் புகத் தாமும்
உளம் மன்னிய தம் பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார்.
|
55 |
வந்து பரவைப் பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள்
அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியார் தம் காவலனார்.
|
56 |
பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச்
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி
வல மா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை.
|
57 |
பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம் பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி
நாடு மகிழ அவ் அளவு நடைக் காவணம் பாவுஆடைஉடன்
மாடு கதலி பூகம் நிரை மல்க மணித் தோரணம் நிரைத்து.
|
58 |
வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்று அவரும்
சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின்
முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கிப்
பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.
|
59 |
படம் கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவு அரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத்
தடம் கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்.
|
60 |
வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருஅருள் முன் பெற்றுத் திருவாஞ்சியத்து அடிகள்
பாசம் அறுத்து ஆள் கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும்
மாசு இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில் கரைப் புத்தூர் அணைந்தார்.
|
61 |
செழு நீர் நறையூர் நிலவு திருச் சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி
விழுநீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள
மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திருப் புத்தூர் வணங்கித்
தொழு நீர் மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள்.
|
62 |
புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றிஇசைத்து
முனிவர் போற்ற எழுந்து அருளி மூரி வெள்ளக் கங்கையினில்
பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து
இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவா வடு துறையில்.
|
63 |
விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு
உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்
வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான்
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ்ச் சொல் மாலை சாத்தினார்.
|
64 |
சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பர் உடன் கூடப்
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றுப் பெண் ஓர் பாகத்து அண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென் கரைமேல் திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம் இடை மருதை அடைந்தார் முனைப் பாடித் தலைவர்.
|
65 |
மன்னும் மருதின் அமர்ந்த வரை வணங்கி மதுரச் சொல் மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப் பரவிப் போந்து தொண்டர் உடன்
அந் நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாகேச்சரத்தை
முன்னிப் புக்கு வலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்.
|
66 |
பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல் வணங்கி
உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து
மருவும் பதிகள் பிற பணிந்து கலைய நல்லூர் மருங்கு அணைந்தார்.
|
67 |
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினா
|
68 |
அங்கு நின்று திருக் குடமூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய்
மங்கை பாகர் வலஞ் சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத்
தங்கு காதல் உடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத்
திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரைச் சென்று அணைந்தார்
|
69 |
நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவு நம்பர் பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம் உடைய
சொல் ஊதியமா அணிந்தவர் தம் சோற்றுத் துறையின் மருங்கு எய்தி
அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம் கொண்டு அடி பணிவார்.
|
70 |
அழல் நீர் ஒழுகி அனைய எனும் அஞ்சொல் பதிகம் எடுத்து அருளிக்
கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூரப் பரவிய பின்
கெழு நீர்மையினில் அருள் பெற்றுப் போந்து பரவையார் கேள்வர்
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார்.
|
71 |
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு வையாறு அதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச்
சேவில் வருவார் திரு ஆலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு
பாவு சயனத்து அமர்ந் அருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.
|
72 |
மழபாடி இனில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று
குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருளக் குறித்து உணர்ந்து
நிழலார் சோலைக் கரைப் பொன்னி வடபால் ஏறி நெடும் மாடம்
அழகு ஆர் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர்.
|
73 |
அணைந்து திருக் கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து
பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக்
குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப்
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து.
|
74 |
அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தித்
தன் தேர் இல்லாப் பதிக மலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து
மன்னும் பதியில் சில நாள் கள் வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து
பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார்.
|
75 |
செய்ய சடையார் திரு ஆனைக் காவல் அணைந்து திருத் தொண்டர்
எய்த முன் வந்து எதிர் கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக் கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து
மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.
|
76 |
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணி ஆரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி.
|
77 |
வளவர் பெருமான் மணி ஆரம் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதம் உற
அளவு இல் திருமஞ்சனக் குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளித்
தளரும் அவனுக்கு அருள் புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்.
|
78 |
சாற்றி அங்குத் தங்கும் நாள் தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவுஇல் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சிராமம் சென்று அடைந்தார்.
|
79 |
சென்று திருக் கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி
முன்றில் வலம் கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி
நன்று பெருகும் பொருள் காதல் நயப்புப் பெருக நாதர் எதிர்
நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று.
|
80 |
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திருத் தோழமைப் பணியால்
பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால்
முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல்
என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்.
|
81 |
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமை ஆம் எழுமையும் ணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினர் வழித்தொண்டர்.
|
82 |
இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின அல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்.
|
83 |
அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப்
பைப் பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர் புடை வலம் கொண்டு
துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார்.
|
84 |
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்.
|
85 |
பரவி அப் பதிகத் திருக் கடைக் காப்புச் சாத்தி முன் பணிந்து அருள் பெற்றுக்
கரவு இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து ருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்
குரவு அலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில்
|
86 |
கொங்கினில் பொன்னித் தனெ் கரைக்கறையூர்க் கொடு முடிக் கோயில் முன் குறுகிச்
சங்க வெண் குழையர் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி
இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க் குறிப்பினி
|
87 |
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்று இதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்.
|
88 |
உலகு எலாம் உய்ய உறுதி ஆம்பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை
நிலவிய சிந்தை உடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள்
பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றிப் போந்து தண் பனி மலர்ப் படப்பைக்
குலவும் அக் கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால்.
|
89 |
அத் திருப்பதியை அணைந்து முன் தம்மை ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்டக்
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார்.
|
90 |
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை இல் அன்பு என்பினை உருக்கப்
பூண்ட ஐம் புலனில் புலப் படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத்
தாண்டவம் புரியும் தம் பிரானாரைத் தலைப்படக் கிடைத்த பின் சைவ
ஆண் டகை யாருக்கு அடுத்த அந் நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்
|
91 |
அந் நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதன் இடை மருவிப்
பொன் மணி மன்று உள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிடப் பெற்றால்
என் இனிப் புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார்.
|
92 |
ஆய் இடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதிபல பணிந்து
மேய வண் தமிழால் விருப் பொடும் பரவி வெம் சமாக் கூடலும் பணிந்து
சே இடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென் திசைக் கற்குடிமலையில்.
|
93 |
வீடு தரும் இக் கற் குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தை உடன் பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சித்
தேடும் இருவர் காண்பு அரியார் திரு ஆறை மேல் சென்று அணைந்தார்.
|
94 |
செம் பொன் மேருச் சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில்
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ் வார்க்கு அருள் கூட
உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார்
இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார்.
|
95 |
ஏரின் மருவும் இன்னம் பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார்
போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்றச்
சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப் பதிகம் பாடிச் சென்றார்.
|
96 |
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந்தமிழ் ஆல் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசைப் பதிகம் புனைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே.
|
97 |
அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல் ஊரினில்
ஒப்பரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர்
இப்பதிக் கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர் கொள்ளவே
முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார்.
|
98 |
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து
ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால்
பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார்.
|
99 |
அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால்
பொங்கு நாள் மலர்ப் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து
எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில்
தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் தாவுஇல் அன்பரோடு எய்தினார்.
|
100 |
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீர் அணிந்த சென்னித்
தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து
கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார.
|
101 |
செப்ப அரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு
மெய்ப் பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார்
முப் புரி நூலும் தாங்கி நம்பி ஆரூரர் முன்பு.
|
102 |
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்
இன்று யாம் முது குன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்னக்
குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச்
சென்றது இவ் வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல.
|
103 |
கண்டுஅவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்.
வண்டு அலர் கொன்றை யாரை வடி உடை மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினோடும் கூடலை யாற்றூர் புக்கார்.
|
104 |
கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்தம்
பீடு உயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி
நீடு அருள் பெற்றுப் போந்து திரு முது குன்றில் நேர்ந்தார்.
|
105 |
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செஞ்சொல்மாலைத்
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று.
|
106 |
நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோது அறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட.
|
107 |
பனி மதிச் சடையார் தாமும் பன்னிரண்டுஆயிரம் பொன்
நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி
தனி வரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று
கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார்.
|
108 |
அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருள் உற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத்
தெருள் உற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்று இட்டுஇப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்.
|
109 |
என்று தம் பிரானார் இன் அருள் பெற்ற பின்னர்
வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு மணி முத்து ஆற்றில்
பொன் திரள் எடுத்து நீர்உள் புகவிட்டுப் போது கின்றார்
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று.
|
110 |
மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில்
காவி அம் கண்டர் கூத்துக் கண்டு கும்பிடுவது என்று
வாவி சூழ் தில்லை மூதூர் வழிக் கொள்வான் வணங்கிப் போந்தார்.
|
111 |
மாடு உள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்குச்
சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார்.
|
112 |
பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும்
நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர்
மற்று அதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம் பொன்
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலைமேல் கொள்வார்.
|
113 |
ஆடிய திருமுன்புஆன அம் பொனின் கோபுரத்தின்
ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில்
நாடகச் செய்யதாளை நண் உற உள் நிறைந்து
நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர் நிறைந்து பாய.
|
114 |
பரவுவாய் குளறிக் காதல் படி திருப் படியைத் தாழ்ந்து
விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை
உரன் உறு திருக்கூத்து உள்ளம் ஆர் தரப் பெருகி நெஞ்சில்
கரவு இலாத அவரைக் கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள.
|
115 |
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றால்
அடுத்து ஆற்றும் நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி.
|
116 |
மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து திரு வீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர் அன்பால் பொன்பதியை வணங்கிப் போய் மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர் தம் கருப்பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார்.
|
117 |
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெருங் காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்
போற்றி இசைத்துப் புறத்து அணைந்துஅப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறிச்
சாற்ற
|
118 |
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி
எண் இல் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினை
|
119 |
திருப் பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில்
உருப் பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால்
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாலானைப் போற்றி இசைத்துப் புறம் போந்து தங்கிப் பூ மென்
கருப்பு வயல்
|
120 |
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு
தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேன் ஆரும் மலர்ச் சோலை ம
|
121 |
எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானைத் துருத்தி
|
122 |
காட்டு நல் வேள்விக் கோலம் கருத்து உற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத்தோடு நம்பி ஆரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு நின்று ஏகி அன்பு
பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து.
|
123 |
எஞ்சாத பேர் அன்பில் திருத் தொண்டர் உடன் எய்தி
நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி
மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர்த் தடங்கள் புடை சூழும்
செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார்.
|
124 |
செல்வமலி திருவாரூர்த் தேவரொடு முனிவர்களும்
மல்கு திருக் கோபுரத்து வந்து இறைஞ்சி உள்புக்கு அங்கு
எல்லை இலாக் காதல் மிக எடுத்த மலர்க் கை குவித்துப்
பல்கு திருத் தொண்டர் உடன் பரமர் திருமுன் அணைந்தார்.
|
125 |
மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத
சே ஆரும் கொடியாரைத் திரு மூலட்டானத்துள்
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சிப் புறம் போந்து
தாவாத புகழ்ப் பரவையார் திரு மாளிகை சார்ந்தார்.
|
126 |
பொங்கு பெரு விருப்பினோடு புரி குழலார் பலர் போற்றப்
பங்கயக் கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி
எங்களையும் நினைந்து அருளிற்று என இயம்ப இனிது அளித்து
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள்.
|
127 |
நாயனார் முது குன்றர் நமக்கு அளித்த நல் நிதியம்
தூய மணி முத்து ஆற்றில் புக விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்துக்கொடு போதப் போதுவாய் எனப்புகல.
|
128 |
என்ன அதிசயம் இது தான் என் சொன்னவாறு என்று
மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார்
நன் நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில்
பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று.
|
129 |
ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன்
பூம் கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி
ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலைப்
பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர்.
|
130 |
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி
முற்று இழையார் தமை நிறுத்தி முனைப் பாடித் திருநாடர்
கற்றை வார் சடையாரைக் கை தொழுது குளத்தில் இழிந்து
அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்குத் தடவுதலும்.
|
131 |
நீற்று அழகர் பாட்டு உவந்து திரு விளையாட்டினில் நின்று
மாற்று உறு செம் பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள
ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ
சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித் தொண்டர்.
|
132 |
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில்
பொன் செய்த மேனி இனீர் எனப் பதிகம் போற்றி இசைத்து
|
133 |
முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள்
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர் வினால் கை அறவாம்
இட்ட அளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு
எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்.
|
134 |
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்து ஆடும் அம்பலத்துக் கண் உளனாம் கண் நுதலைக்
கூத்தா தந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
|
135 |
கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால்
வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற
அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார்
|
136 |
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து
மூலம் எனக் கொடு போந்த ஆணியின் முன் உரைப் பிக்க
நீல மிடற்றவர் அருளால் உரை தாழப் பின்னும் நெடு
மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர்
|
137 |
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பினால் வரும்
பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும்
ஓட்டு அறு செம் பொன் ஓக்க ஒரு மாவும் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்
|
138 |
கரை ஏறிப் பரவையார் உடன் கனக ஆனது எலாம்
நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கிக்
திரை யேறும் புனல் சடிலத்திரு மூலத் தானத்தார்
விரை யேறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில்
|
139 |
வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து
அந்தமிலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச்
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே இழையாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர்ச் சோலை நவலர் தம் காவலனார்
|
140 |
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப்
பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம்
தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன்
துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்
|
141 |
பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உள் நிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண் நிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம்
எண் நிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
|
142 |
இன் புற்று அங்கு அமர்நாளில் ஈறு இல் அரு மறை பரவும்
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே
அன்பு உற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும்
பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார்
|
143 |
பரிசனமும் உடன் போதப் பாங்கு அமைந்த பதிகள் தொறும்
கரி உரிவை புனைந்தார் தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்
துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப்
புரி உறு மெய்த் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு
|
144 |
விண் தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேல் குவித்துக்
கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து
மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த நிலம் மிசைப் பணிந்தார்
|
145 |
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித்
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி
|
146 |
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின்
பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மருஈரத் தமிழ் மலை புனைந்து ஏத்தி மலை வளத்த
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்
|
147 |
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம்
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
|
148 |
தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து
பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய்
மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில்
|
149 |
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின்
புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல்
பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த்
தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்
|
150 |
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்
|
151 |
அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில்
செப்ப அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில்
ஒப்ப அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார்
மெய்ப் பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார்
|
152 |
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
|
153 |
அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்
கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக் கோலக்கா அணையக்
கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப்
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார்
|
154 |
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப்
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
|
155 |
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று
தாவாத புகழ் சண்பை வலம் கொண்டு தாழ்ந்து இறைஞ்சி
நாவார் முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப் போய்
மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார்
|
156 |
உண் நீரின் வேட்கை உடன் உறுபசியால் மிக வருந்தி
பண் நீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்
கண் நீடு திரு நுதலார் காதல் வரக் கருத்து அறிந்து
தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழிச் சார் கின்றார்
|
157 |
வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக் குளிர் மென்
பான் நல்மலர்த் தடம் போலும் பந்தர் ஒரு பால் அமைத்தே
ஆன மறை வேதியராய் அருள்வேடம் கொண்டிருந்தார்
மான் அமரும் திருக் கரத்தார் வன் தொண்டர் தமைப் பார்த்து
|
158 |
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த் திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத் தொண்டர் உடன்
வருவார் அப்பந்தர் இடைப்புகுந்து திரு மறைவர் பால்
பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம எனப் பேசி
|
159 |
ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கிச்
சால மிகப் பசித்தீர் இப் பொதி சோறு தருகின்றேன்
காலம் இனித் தாழாமே கைக் கொண்டு இங்கு இனிது அருந்தி
ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இனைப்பு தீரும் என
|
160 |
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு
இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளிப்
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கிச்
சென்று திருத் தொண்டருடன் திரு அமுது செய்து அருளி
|
161 |
எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப்
பண்ணியபின் அம் மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த
உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்தது ஆல்
|
162 |
சங்கரனார் திரு அருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர் வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார் களும் துயிலக்
கங்கை சடைக் கரந்தார் அப் பந்தரொடும் தாம் கரந்தார்
|
163 |
சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர்
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்ருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள
|
164 |
குருகவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு
வருகாதல் கூர வலம் கொண்டு திரு முன் வணங்கிப்
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார்
|
165 |
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆரத் தொழுது இறைஞ்சிப்
பண் ஆர்ந்த திருப் பதிகம் பாடியே பணிந்து ஏத்தி
உள் நாடும் பெரும் காதல் உடையவர்தாம் புறத்து எய்தி
நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார்
|
166 |
அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று
மின் ஆர் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக்
கன் ஆடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென் நாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார
|
167 |
சீர் வளரும் திருத்தில்லைத் திரு வீதி பணிந்து புகுந்து
ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப்
பார் வளர மறை வளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார்
போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை மா நகர் புகுந்தார்
|
168 |
திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய்
நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப்
பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார்
|
169 |
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப்
பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச்
செரு நாகத்து உரிபுனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார்
|
170 |
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை
மூ உலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக்
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்
|
171 |
நலம் பெருகும் அப்பதியில் நாடி அன்பொடு நயந்து
குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத் தொடும் இனிது அமர்ந்து
சலம் பெருகும் சடைமுடியார் தாள் வணங்கி அருள் பெற்றுப்
பொலம் புரிநூல் மணிமார்பர் பிறபதியும் தொழப் போவார்
|
172 |
தண்டகம் ஆம் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள்
தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதி
வண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே
எண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார்
|
173 |
தேன் ஆர்ந்த மலர்ச் சோலை திருக்கழுக் குன்றத்து அடியார்
ஆனாத விருப்பினொடும் எதிர் கொள்ள அடைந்து அருளித்
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர்க் கொழுந்தைத் தொழுது இறைஞ்சி
பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார்
|
174 |
பாடிய அப் பதியின் கண் இனிது அமர்ந்து பணிந்து போய்
நாடிய நல் உணர்வின் ஒடும் திருக் கச்சூர் தனை நண்ணி
ஆடக மா மதில் புடை சூழ் ஆலக் கொயிலின் அமுதைக்
கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார்
|
175 |
அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுது ஆகக்
கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை
தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்
புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார்
|
176 |
வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார்
மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஒடு ஏந்தி
அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணர் ஆய்ப் புறப்பட்டுச்
சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூறச் செப்புவார்
|
177 |
மெய்ப் பசியால் மிக வருந்தி இனைத்து இருந்தீர் வேட்கைவிட
இப்பொழுது சோறு இரந்து இங்கு யான் உனக்குக் கொணர்கின்றேன்
அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச்
செப்பி அவர் கச்சூர் மனை தோறும் சென்று இரப்பார்
|
178 |
வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக்
கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப்
புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக்
கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார்
|
179 |
இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும்
அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப
பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேணி
நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார்
|
180 |
வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த
ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப
ஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமே
நீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார்
|
181 |
திருநாவலூர் ஆளி சிவ யோகியார் நீங்க
வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே
பெரு நாதச் சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண்
உருநாடி எழுந்து அருளிற்று என் பொருட்டாம் என உருகி
|
182 |
முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை
அது ஆம் என்று அதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்
|
183 |
வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம்
முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக் கண் பெருமானைச்
சிந்தித்திட வந்து அருள் செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்
|
184 |
அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய
வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து
நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்
இன்று இங்கு எய்தப் பெற்றேம் என்று எயில் சூழ்காஞ்சி நகர் வாழ்வார்
|
185 |
மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக மறுகு மணித் தோரணம் நாட்டி
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிரப்
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம் போய் எதிர் கொண்டார்
|
186 |
ஆண்ட நம்பி எதிர் கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிள் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார்
|
187 |
ஆழி நெடும் மால் அயன் முதல் ஆம் அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழி உற மண் மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு
வாழி மணிப் பொன் கோயிலின் உள் வந்தார் அணூக்க வன் தொண்டர்
|
188 |
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர
ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த
மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடுபூம்
செய்ய கமலச் சேவடிக் கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார்
|
189 |
வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால்
வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்
|
190 |
சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சாடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடர் ஆம்
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
|
191 |
ஓணா காந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண் இல் நிதி பெற்று இனது இருந்தார்
|
192 |
அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள் அணைந்து
செம் கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்
|
193 |
பாடல் இசையும் பணியினால் பாவைத் தழுவக் குழைக் கம்பர்
ஆடல் மருவும் சே அடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாடம் நெருங்கு வன் பார்த்தான் பனம் காட்டூரில் வந்து அடைந்தார்
|
194 |
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்
|
195 |
மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம்
தன் உள் எய்தி இறைஞ்சிப் போய்ச்சாரும் மேல்பால் கற்றைப்
பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வனங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார்
|
196 |
தடுக்கல் ஆகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும்
அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்
|
197 |
வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டு ஆடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
|
198 |
வட மாதிரத்துப் பருப்பதம் திருக் கேதார மலையும் முதல்
இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி
நடம் ஆடிய சேவடியாரை நண்ணிர் போல் உள் நிறைந்து
திரு மாம் கருத்தில் திருப் பதிகம் பாடிக் காதல் சிறந்து இருந்தார்
|
199 |
அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார்
தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கும் புணிரிக் கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத்
திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார்
|
200 |
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்டநம்பி எழுந்து அருள
எண் இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர் கொள்வார்
வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள்
சுண்ணம் நிறை பொன் குடம் தூபம் தீபம் எடுத்துத் தொழ எழுங்கால்.
|
201 |
வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில்
புர மங்கையர்கள் நடம் ஆடப் பொழியும் வெள்ளப் பூ மாரி
அர மங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார்
பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பு பெருந்தொண்டர்.
|
202 |
ஒற்றி ஊரின் உமையோடும் கூட நின்றார் உயர்தவத்தின்
பற்று மிக்க திருத் தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச்
சுற்றும் அணைந்து துதி செய்யத் தொழுது தம்பிரான் அன்பர்
கொற்ற மழ ஏறு உடையவர் தம் கோயில் வாயில் எய்தினார்.
|
203 |
வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்
கூனல் இளம் வெண் பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர் குறுகி
ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையின் உடன்
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர்.
|
204 |
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்டம் மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியி
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது இல் அமுதஇசை கூடப்
பாட்டும் பாடிப் பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்.
|
205 |
பாடி அறிவு பரவசம் ஆம் பரிவு பற்றப் புறம் போந்து
நீடு விருப்பின் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றத்
தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம்
கூடும் காலங்களில் அணைந்து பரவிக் கும்பிட்டு இனிது இருந்தார்.
|
206 |
இந்த நிலைமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்கு ஆக
அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார்
வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர்
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.
|
207 |
நால் ஆம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேல் ஆம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர்
பால் ஆதரவு தரும் மகளார் ஆகிப் பார் மேல் அவதரித்தார்
ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார்.
|
208 |
மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி
தலை ஆம் உணர்வு வந்து அணையத் தாமே அறிந்த சங்கிலியார்
அலை ஆர் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலை ஆயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்.
|
209 |
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வ நிகழ் தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைந் தொடியார்
வாரும் அணிய அணிய ஆம் வளர் மென் முலைகள் இடை வருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார் தங் கண் மனைவியார்க்கு உரைப்பார்.
|
210 |
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும்
படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார்.
|
211 |
தாயரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்று இதுஎம் பெருமான் திரு அருளே
மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவு உற்று
ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார்.
|
212 |
பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னோ உற்றது எனத்
தாங்கிச் சீத விரைப் பனி நீர் தெளித்துத் தை வந்துஅது நீங்க
வாங்கு சிலை நல் நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார்.
|
213 |
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார்
இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது
வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்
சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என.
|
214 |
அந்த மாற்றம் கேட்டு அவர் தாம் அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த உள்ளத்தினர் ஆகி மற்று மாற்றம் மறைத்து ஒழுகப்
பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான்
சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார்.
|
215 |
தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்
ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன்
தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான்
மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்.
|
216 |
தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தை
உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறியச்
செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ள படி செப்
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார்
|
217 |
அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர் ஆல்
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும்
குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்த படியே ஒற்றி நகர்ப்
பணம் கொள் அரவச் சடையார்தம் பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார்.
|
218 |
பண்ஆர் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர்
தெண்நீர் முடியார் திரு ஒற்றி ஊரில் சேர்ந்து செல்கதியும்
கண்ஆர் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத்
தண் ஆர் தடம் சூழ் அந் நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று.
|
219 |
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே
மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம்
சொற்ற வண்ணம் செயத் துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள்
செற்ற சிலையார் திரு ஒற்றி ஊரில் கொண்டு சென்று அணைந்தார்.
|
220 |
சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து
துன்னும் சுற்றத் தொடும் பணிந்து தொல்லைப் பதி ஓர் இசைவினால்
கன்னி மாடம் மருங்கு அமைத்துக் கடி சேர் முறைமைக் காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி.
|
221 |
யாங்கள் உமக்குப் பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார்
தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்சிப் போனார் எயில் சூழ் தம்பதியில்.
|
222 |
காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார்
பூத நாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி
நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப் பூ மண்டபத்துத் திரை சூழ் ஒரு பால் சென்று இருந்து.
|
223 |
பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம்
கொண்ட உணர்வு தலை நிற்பக் குலவு மலர் மென் கொடி அனையார்
வண்டுமருவும் திரு மலர் மென் மாலை காலங்களுக்கு ஏற்ப
அண்டர் பெருமான் முடிச் சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள்
|
224 |
அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர
வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார்
|
225 |
அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரைப்
பண்டை முறைமை யால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து
தொண்டு செய்வார் திருத் தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்டரீகத் தடம் நிகழ் பூம் திருமண்டபத் தின் உள் புகுந்தார்.
|
226 |
அன்பு நாரா அஞ்சு எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே
என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து
முன்பு போலத் திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து
மின் போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண் உற்றார்.
|
227 |
கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழு மென் முகையும் அனையாரைச்
சேவார் கொடியார் திருத் தொண்டர் கண்டபோது சிந்தை நிறை
காவாதுஅவர் பால் போய் வீழத் தம் பால் காமனார் துரந்த
பூ வாளிகள் வந்து உற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார்.
|
228 |
இன்ன பரிசு என்று அறி அரிதால் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப் புதிய மதி
தன் உள் நீர்மை ஆல் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை உள்ளம் திரிவித்தாள் யார் கொல் என்று அங்கு இயம்புதலும்
|
229 |
அருகு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன
இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பாவை ஒருத்தி இவள் மற்றை அவளாம் என மருண்டார்.
|
230 |
மின்ஆர் சடையார் தமக்கு ஆள் ஆம் விதியால் வாழும் எனை வருத்தித்
தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே
என் ஆர் உயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப்
பொன் ஆர் இதழி முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார்
|
231 |
மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா
நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை
உலகம் எலாம் தாம் உடையார் ஆயும் ஓற்றியூர் அமர்ந்த
இலகு சோதிப் பரம் பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார்
|
232 |
மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின் கண்
கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என.
|
233 |
அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப் புறத்து அணைந்தே
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆம் ஆறு எண்ணும் என் நெஞ்சில்
திண்ணம் எல்லாம் உடைவித்தார் செய்வது ஒன்றும் அறியேன்யான்
தண் நிலா மின் ஒளிர் பவளச் சடையீர்! அருளும் எனத் தளர்வார்.
|
234 |
மதிவாண் முடியார் மகிழ கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்பக்
கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார்
முதிரா முலையார் தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய.
|
235 |
உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட
தம்பிரானார் வன் தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியை
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன.
|
236 |
அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி
ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க
இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் எனப் போற்றி
மன்றல் மலர்ச் சே வடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர்.
|
237 |
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலி ஆராம்
தூண்டு சோதி விளக்கு அனையார் தம்பால் கனவில் தோன்றினார்.
|
238 |
தோற்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்து அருளும்
பேற்றுக்கு என் யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்து அனைய
நீற்றுக் கோல வேதியரும் நேர் நின்று அருளிச் செய்கின்றார்.
|
239 |
சாரும் தவத்துச் சங்கிலி கேள் சால என்பால் அன்பு உடையான்
மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான்
வார் கொள் முலையாய்! நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார்.
|
240 |
ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின் கண்
மாதர் ஆர் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு அரிய
சீத மலர்த் தாமரை அடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார்.
|
241 |
எம் பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான்; இமையோர்
தம் பிரானே! அருள் தலைமேல் கொண்டேன்; தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக்
கொம்பின் ஆகம் கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார்
|
242 |
பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார்
மன்னும் திரு ஆரூரின் கண் அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும்; எம் பிராட்டி திரு முலை தோய்
மின்னும் புரிநூல் அணி மார்பீர்! என்றார் குன்றா விளக்கு அனையார்.
|
243 |
மற்று அவர் தம் உரைகொண்டு வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றி நகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன் தொடி ஆய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம்
அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி.
|
244 |
வேய் அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித்
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார் பால் அணைந்து
நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள் பால்
ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருளி.
|
245 |
வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய
நின்ற குறை யாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு
சென்று கிடைத்து இவ் இரவே செய்க என அருள் செய்தார்.
|
246 |
என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு
மின் செய்த புரி சடையீர்! அருள் பெறுதல் வேண்டும் என
முன் செய்த முறுவல் உடன் முதல்வர் தாம் முகம் நோக்கி
உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள.
|
247 |
வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர்
நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று
கும்பிடவே கடவேனுக்கு இது விலக்கு ஆம் எனும் குறிப்பால்
தம் பெருமான் திருமுன்பு தாம் வேண்டும் குறை இரப்பார்.
|
248 |
சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள் தனைப் பிரியா வகை சபதம் செய் வதனுக்கு
அங்கு அவேளாடு யான் வந்தால் அப்பொழுது கோயில் இடத்
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க் கொள வேண்டும் எனத்தாழ்ந்தார்.
|
250 |
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச்
செஞ் சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட்டினை மகிழ்ந்தோ
வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்.
|
249 |
தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டிக் கொண்டு அருள
உமபர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய்
நம்பி !நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள
எம் பிரானே! அரியது இனி எனக்கு என் ? என ஏத்தி.
|
251 |
சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே
கொங்கு அலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்து அருள.
|
252 |
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு அரியீர்
அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப்
பெற்றது யான் எனக் கண்கள் பெருந்தாரை பொழிந்து இழிய
வெற்றி மழ விடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார்.
|
253 |
தையலார் தமக்கு அருளிச் சடா மகுடர் எழுந்து அருள
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அவ் இரவின் கண்
செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார்
ஐயம் உடன் அருகு துயில் சேடியரை அணைந்து எழுப்பி.
|
254 |
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர்
தாம் கனவில் எழுந்து அருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம்
பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார்.
|
255 |
சேயிழையார் திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும்
தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவார் உடன் போதக்
கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார்
ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர்.
|
256 |
நின்றவர் அங்கு எதிர் வந்து நேர் இழையார் தம் மருங்கு
சென்று அணைந்து தம் பெருமான் திரு அருளின் திறம் கூற
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார்
ஒன்றிய நாணொடும் மடவாருடன் ஒதுங்கி உள்புகுந்தார்.
|
257 |
அங்கு அவர் தம் பின்சென்ற ஆரூரர் ஆழையீர்!
இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும் படி இயம்பத்
திங்கள் முடியார் திருமுன் போதுவீர் எனச் செப்பச்
சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியர் மொழிவார்.
|
258 |
எம் பெருமான்! இதற்காக எழுந்து அருளி இமயவர்கள்
தம் பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்ன
நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே
கொம்பு அனையீர்! யான் செய்வது எங்கு என்று கூறுதலும்
|
259 |
மாதர் அவர் மகிழ்க் கீழே அமையும் என மனம் மருள்வார்
ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்ன படி மறுக்கில்
ஆதலினால் உடன் படவே அமையும் எனத் துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ்க் கீழ் அவர் போதப் போய் அணைந்தார்.
|
260 |
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து
மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார்
பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.
|
261 |
மேவிய சீர் ஆரூரர் மெய்ச் சபதம் வினை முடிப்பக்
காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கிப்
பாவியேன் இது கண்டேன் தம் பிரான் பணியால் என்று
ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார்.
|
262 |
திரு நாவலூர் ஆளி தம் உடைய செயல் முற்றிப்
பொரு நாகத்து உரி பனைந்தார் கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப்
பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெரு மகிழ்ச்சி உடன் போந்தார்.
|
263 |
வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின்
தார் புனையும் மண்டபத்துத் தம் உடைய பணி செய்து
கார் புனையும் மணி கண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி
ஏர் புனையும் கன்னி மாடம் புகுந்தார் இருள் புலர.
|
264 |
அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆள் கொண்ட
பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள
நின்ற புகழ்த் திரு ஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார்.
|
265 |
நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்து இடை நம் ஏவலினால் மணவினை செய்து
உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார்.
|
266 |
மண் நிறைந்த பெரும் செல்வத் திரு ஒற்றியூர் மன்னும்
எண் நிறைந்த திருத் தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ மழை பொழியக்
கண் நிறைந்த பெரும் சிறப்பின் கலியாணம் செய்து அளித்தார்.
|
267 |
பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி தன் அருளாலே
வண்டு அமர் பூங்குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர்
புண்ட ரிகத்து அவள் வனப்பைப் புறம் கண்ட தூ நலத்தைக்
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால்.
|
269 |
இந் நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும்
மன்னு புகழ் ஒற்றி யூர் அதனில் மகிழ் சிறப்பினால்
சென்னி மதி புனைவார் தம் திருப் பாதம் தொழுது இருந்தார்
முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல.
|
268 |
யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும்
மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து
வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும் புலவி புணர்ச்சிக் கண்
ஊழி ஆம் ஒரு கணம் தான் அவ் வூழி ஒரு கணம் ஆம்.
|
270 |
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ் சந்தனத்தின்
கொங்கு அணைந்து குளிர் சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டு அருளும் வகை நினைந்தார்.
|
271 |
வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதி விடங்கப் பெருமான்
ஒண் நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதன் இடையே
பண் அமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக்
கண் உற முன் கண்டு கேட்டார் போலக் கருதினார்.
|
272 |
பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்று இடம் கொண்டு இருந்தாரை
நீங்காத காலினால் நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார்
ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார்.
|
273 |
மின் ஒளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ் தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்.
|
274 |
பின் ஒரு நாள் திருவாரூர் தனைப் பெருக நினைந்து அருளி
உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றி நகர்
தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால்
முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார்.
|
275 |
செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார்
மை விரவு கண்ணார் பால் சூள் உறவு மறுத்து அதனால்
இவ்வினை வந்து எய்தியது ஆம் என நினைந்து எம் பெருமானை
எய்திய இத் துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து.
|
276 |
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி
வழுத்தும் நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது ஓர் பாகனார் மலர்ப்பதம் உன்னி,
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவிப் பண
|
277 |
அங்கு நாதர் செய் அருள் அது ஆக, அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து,
திங்கள் வேணியார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்கு ஆக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி.
|
278 |
தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெம் துயர் களைக் எனப் பரவிக் குறித்த காதலின் நெறிக் கொள வருவார்
வண்டு உலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக் காயும் நாகத
|
279 |
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்திக்
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைதலை மேல்கொண்டு நின்று
வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே! என்ற வன் தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி
இணங்கு இலா மொழியால் உள்ளோம் போகீர் என்று இயம்பி
|
280 |
பிழை உளன பொறுத்திடுவீர் என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவின் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்.
|
281 |
முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப்
பன்னும் இசைத் திருப் பதிகம் பாடியபின் பற்று ஆய
என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை கொல் ஆம் என்று
மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழிக் கொள்வார்.
|
282 |
அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பர் உடன்
பங்கயப் பூந் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தித்
தங்குவார் அம்மைத் திரு தலையாலே வலம் கொள்ளும்
திங்கள் முடியார் ஆடும் திரு ஆலங் காட்டின் அயல்.
|
283 |
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப்
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்.
|
284 |
தேன் நிலவு பொழில் கச்சித் திருக்காமக் கோட்டத்தில்
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால்
ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின் முன்
வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன் தொண்டர்.
|
285 |
தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய்த் தொல் உலகம்
முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்வர் திரு ஏகம்பம்
பழுது இல் அடியார் முன்பு புகப் புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி.
|
286 |
விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே! கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள
வண்ணா! கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்.
|
287 |
பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச்
செங் கயல் கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து,
பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு
மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண் கொடுத்தார்.
|
288 |
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலம் தான் அறிவு அறியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலம்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலம்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்.
|
289 |
பாடி மிகப் பரவசமாய்ப் பணிவார்க்குப் பாவை உடன்
நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச்
சூடிய அஞ்சலியினர் ஆய்த் தொழுது புறம் போந்து அன்பு
கூடிய மெய்த்தொண்டர் உடன் கும்பிட்டு இனிது அமர்வார்.
|
290 |
மா மலையாள் முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்த மதிப்
பூ மலிவார் சடையாரைப் போற்றி அருள் அது ஆகத்
தே மலர் வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார்
பாமலர் மாலைப் பதிகம் திருவாரூர் மேல் பரவி.
|
291 |
அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று,
சந்த இசை பாடிப் போய்த் தாங்கு அரிய ஆதரவு
வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழிக் கொள்கின்றார்.
|
292 |
மன்னு திருப் பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சிப்
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார்
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்.
|
293 |
அங்கணரை ஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கித்
தங்கும் இசைத் திருப் பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு
மங்கலம் ஆம் பெருந்தொண்டை வள நாடு கடந்து அணைந்தார்
செங் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு.
|
294 |
அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி
மின் ஆரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொல் மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன் ஆர்வத் திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்.
|
295 |
பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள்
விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர்த்தாள் தொழுது ஏத்தி,
உரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி,
அரவு அணிந்தார் அமர்ந்த திருவா வடு தண் துறை அணைந்தார்.
|
296 |
அங்கு அணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப்
பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டு உள் அணைந்து
கங்கை வாழ் சடையாய்! ஓர் கண் இலேன் எனக் கவல்வார்
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்.
|
297 |
திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய்
விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர் கழல்
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி
வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார்.
|
298 |
பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திரு அருள் புரிவார்
விரவிய இப் பிணி அடையத் தவிர்ப்பதற்கு வேறு ஆக
வரமலர் வண்டு அறை தீர்த்த வட குளித்துக் குளி என்னக்
கரவு இல் திருத்தொண்டர் தாம் கை தொழுது புறப்பட்டார்.
|
299 |
மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து, வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத் தொழுது,
புக்கு அதனில் முழுகுதலும் புதிய பிணி அது நீங்கி,
அக் கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார்.
|
300 |
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து,
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து,
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண்திசையும் அறிந்து உய்ய ஏழ் இசையால் எடுத்து இசைத்தார்.
|
301 |
பண் நிறைந்த தமிழ் பாடிப் பரமர் திரு அருள் மறவாது
எண் நிறைந்த தொண்டர் உடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி,
உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கிப்போய்க்
கண் நிறைந்த திருவாரூர் முன்தோன்றக் காண்கின்றார்.
|
302 |
அன்று திரு நோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்பு உறார்
நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி
வன் தொண்டர் திருவா ரூர் மயங்கு மாலையில் புகுந்து
துன்று சடைத் தூவாயர் தமை முன்னம் தொழ அணைந்தார்.
|
303 |
பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சித்
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று
அங் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்.
|
304 |
ஆறு அணியும் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து
மாறு இல் திரு அத்தயா மத்து இறைஞ்ச வந்து அணைந்தார்.
|
305 |
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்
கோது இல் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே,
ஏது இலார் போல் வினவி ஏசறவு ஆல் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்.
|
306 |
சீர் பெருகும் திருத் தேவ ஆசிரியன் முன் சென்று இறைஞ்சிக்
கார் விரவு கோபுரத்தைக் கை தொழுதே உள் புகுந்து,
தார் பெருகு பூங்கோயில் தனை வணங்கிச் சார்ந்து அணைவார்
ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார்.
|
307 |
வீழ்ந்து எழுந்து கை தொழுது முன் நின்று விம்மியே
வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார்
ஆழ்ந்த துயர்க் கடல் இடை நின்று அடியேனை எடுத்து அருளித்
தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார்.
|
308 |
திரு நாவலூர் மன்னர் திருவாரூர் வீற்று இருந்த
பெருமானைத் திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைப்
பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகுதற்கு
மருவு ஆர்வத்துடன் மற்றைக்கண் தாரீர் என வணங்கி.
|
309 |
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத்
தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆள் ஆம் திருத் தோழமைத் திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார்.
|
310 |
பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரி வேதனைக்கு இரங்கிக் கருணைத் திரு நோக்கு அளித்து அருளிச்
சீத மலர்க் கண் கொடுத்து அருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பர வசமாய்.
|
311 |
விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி
எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றின் இடை எழுந்த
செழும் தண் பவளச் சிவக் கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார்.
|
312 |
காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணி மாளிகைக் கோயில்
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம் கொண்டு
மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம் போந்து
சீலம் உடைய அன்பர் உடன் தேவா சிரியன் மருங்கு அணைந்தார்.
|
313 |
நங்கை பரவையார் தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின் கண் தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல் கங்குல்ஆகிக் கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீது ஊரப் புகல்வார் சில நாள் போன அதன்பின்.
|
314 |
செம்மை நெறி சேர் திரு நாவலூர் ஒற்றி யூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டு உரைப்பத்
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார்.
|
315 |
மென் பூஞ் சயனத்து இடைத்துயிலும் மேவார்; விழித்தும் இனிது அமரார்
பொன் பூந் தவிசின் மிசை இன் இரார்; நில்லார்; செல்லார்; புறம் பொழியார்;
மன் பூ வாளி மழை கழியார்; மறவார்; நினையார்; வாய் விள்ளார்;
என்பு ஊடு உருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப் பட்டார்.
|
316 |
ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப்
பானல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்.
|
317 |
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திரு ஆரூரர் எதிர்
சென்று மொழிவார் திரு ஒற்றி ஊரில் நிகழ்ந்த செய்கை எலாம்
ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமும் சென்று எய்தப் பெற்று இலோம் என்று இறைஞ்சினார்.
|
318 |
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர்
உற்ற இதனுக்கு இனி என்னோ ? செயல் என்று உணர்வார் உலகு இயல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்குத் தீர்வு சொல்லச் செல விட்டார்.
|
319 |
நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது
பைம் பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்நேர் இடையார் முன் எய்தி,
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார்.
|
320 |
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன்
மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர்
போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப்புறம் போந்தார்.
|
321 |
போந்து புகுந்த படி எல்லாம் பூந் தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருஉற்று அயர்வார் துயர்வேலை
நீந்தும் புணை ஆம் துணை காணார் நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடையாமக் கடலுள்.
|
322 |
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்தயாமம் பணி மடங்கிப்
பெருகு புவனம் சலிப்பு இன்றிப் பேயும் உறங்கு பிறங்கு இருள்வாய்
முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும்
செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார்.
|
323 |
முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்து அருளிது,
அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றிப்
பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார்.
|
324 |
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன்தளிர்க் கைத்
தொடியார் தழும்பும் முலைச் சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும்
படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய.
|
325 |
தம் பிரானார் எழுந்து அருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக் குவிய
அம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார்.
|
326 |
விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினேடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமை நோக்கி என் நீ உற்றது என்று அருளத்
தொழும் தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசி இடைப்பட்டு
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று.
|
327 |
அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள் செய்ய
வடிவேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்ததிறம் எல்லாம்
கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்பால் யான் குறுகில்
முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது ? என மொழிந்து.
|
328 |
நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழரும் ஆம் தம்பிரானாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி, அவ் அளவும்
போய் இவ் இரவே பரவை உறு புலவி தீர்த்துத் தாரும் என.
|
329 |
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்தநம்பி முகம் நோக்கித்
துன்பம் ஒழி நீ யாம் உனக்கு ஓர் தூதன் ஆகி இப்பொழுதே
பொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார்.
|
330 |
எல்லை இல்லாக் களிப்பினர் ஆய் இறைவர் தாளில் வீழ்ந்து எழுந்து
வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண் நகைப் பரவை முகில் சேர் மாடத்து இடைச் செல்ல
நில்லாது ஈண்ட எழுந்து அருளி நீக்கும் புலவி எனத் தொழுதார்.
|
331 |
அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அழுது ஆக
உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவுஅரியார்
வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கித்
தொண்டனார் தம் துயர் நீக்கத் தூதனார் ஆய் எழுந்து அருள.
|
332 |
தேவாசியன் முறை இருக்கும் தேவர் எல்லாம் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர்
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன்போத.
|
333 |
அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ் இருடிகளும்
மருவு நண்பு நிதிக் கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த
தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப்
பொருவில் அன்பர் விடும்தூதர் புனித வீதியினில் போத.
|
334 |
மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும்
காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்த
ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப
நீல மலர்க்கண் பரவையார் திருமாளிகையை நேர் நோக்கி.
|
335 |
இறைவர் விரைவின் எழுந்து அருள எய்தும் அவர்கள் பின்தொடர
அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம்
பிறை கொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன்
மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது.
|
336 |
பெரு வீரையினும் மிக முழங்கிப் பிறங்கு மத குஞ்சரம் உரித்து
மருவீர் உரிவை புனைந்தவர் தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வத் திருவாரூர்
ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளது ஆமால்.
|
337 |
ஞாலம் உய்ய எழுந்து அருளும் நம்பி தூதர் பரவையார்
கோல மணி மாளிகை வாயில் குறுகுவார் முன் கூடத்தம்
பால் அங்கு அணைந்தார் புறம் நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும்
சீலம் உடைய மறை முனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார்.
|
338 |
சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு
நின்று பாவாய்! திறவாய் என்று அழைப்ப நெறி மென் குழலாரும்
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய்
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து.
|
339 |
பாதி மதி வாழ் முடியாரைப் பயில் பூசனையின் பணி புரிவார்
பாதி இரவில் இங்கு அணைந்தது என்னோ ? என்று பயம் எய்திப்
பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே
பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார்.
|
340 |
மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயில் இடை
முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின் கண்
என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன
மின்னும் மணி நூல் அணிமார்பீர்! எய்த வேண்டிற்று என் ? என்றார்.
|
341 |
கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கை! நீ மறாது செய்யின் நான் வந்தது உரைப்பது என்ன,
அம் கயல் விழியின் ஆரும் அதனை நீர் அருளிச் செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையலாம் என்று சொல்லி.
|
342 |
என் நினைந்து அணைந்து என்பால் இன்னது என்று அருளிச் செய்தால்
பின்னையது இயலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும்
மின் இடை மடவாய்! நம்பி இங்கு வர வேண்டும் என்ன
நன் நுதலாரும் சால நன்று! நம் பெருமை என்பார்
|
343 |
பங்குனித் திரு நாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி,
இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலித் தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ ? நீர்
கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகிது! என்றார்.
|
344 |
நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற்கு அன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்ய அடாது என அருளிச் செய்தார்.
|
345 |
அரு மறை முனிவர் ஆன ஐயரைத் தையலார் தாம்
கருமம் ஈது ஆக நீர் இக் கடைத் தலை வருகை மற்றுஉம்
பெருமைக்குத் தகுவது அன்று ஆல்; ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன்; நீரும் போம் என மறுத்துச் சொன்னார்.
|
346 |
நம்பர் தாம் அதனைக் கேட்டு நகையும் உள்கொண்டு மெய்ம்மைத்
தம் பரிசு அறியக் காட்டார் தனிப் பெருந்தோழனார் தம்
வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி
வம்பு அலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார்.
|
347 |
தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர்
நாதரை அறிவிலாதே நன்னுதல் புலவி நீக்கிப்
போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார்.
|
348 |
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ ?
நாயனார் தம்மைக் கண்டால் நன் னுதல் மறுக்குமோ தான்;
ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம்
சேயிழை துனி தீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று.
|
349 |
வழி எதிர் கொள்ளச் செல்வர்; வரவு காணாது மீள்வர்;
அழிவு உற மயங்கி நிற்பர்; அசைவுடன் இருப்பர்; நெற்றி
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன்
பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்கண் உற்றார்.
|
350 |
பரவையார் தம்பால் நம்பி தூதர் ஆம் பாங்கில் போன
அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில்
இரவு தான் பகலாய்த் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட
உரவு நீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்.
|
351 |
சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி, செய்து அணைந்தார் என்றே
அன்று நீர் ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர்
இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்து அருளி என்றார்.
|
352 |
அம் மொழி விளம்பும் நம்பிக்குஐயர் தாம் அருளிச் செய்வார்
நம்மை நீ சொல்ல நாம் போய்ப் பரவை தன் இல்லம் நண்ணிக்
கொம்மை வெம் முலையினாள்க்கு உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள்
வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்.
|
353 |
அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும்
துண் என நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச் செய்த
வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் ? நாங்கள்
எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று.
|
354 |
வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்;
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்;
நான் மறைச் சிறுவர்க்கு ஆகக் காலனைக் காய்ந்து நட்டீர்;
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் ? போதாது என்றார்.
|
355 |
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை நீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்றுவலிய ஆட் கொண்ட பற்று என் ?
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள் பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்.
|
356 |
தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக்
கொம்பினை இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புஉறு துயர் நீங்கு என்றார்; வினை எலாம் விளைக்க வல்லார்.
|
357 |
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர் தாமும்
முயங்கிய கலக்கம் நீக்கி உம் அடித் தொழும்பன் ஏனைப்
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற.
|
358 |
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப்
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார்
முன்பு உடன் போதா தாரும் முறைமையில் சேவித்து ஏகப்
பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்.
|
359 |
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு
முது மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும்
அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்.
|
361 |
வெறி உறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை
அறி உறு கோலத் தோடும் அளவு இல் பல் பூத நாதர்
செறிவு உறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறு இல் சீர்ப் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து.
|
360 |
கண் துயில் எய்தார்; வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று
அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம்
கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு அழியும் போதில்.
|
362 |
பார் இடத் தலைவர் முன் ஆம் பல் கண நாதர் தேவர்
நேர்வு உறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே
பேர் அருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால்
சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே.
|
363 |
ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும்
எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம்
மெய் உறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்.
|
364 |
அரி அயற்கு அரியார் தாமும் ஆயிழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன் பால் வந்தோம்
முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்பால்
பிரிவு உற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்.
|
365 |
பெருந்தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத்தோடும் மலர்க்கரம் குழல் மேல் கொண்டே
அருந் திரு மறையோர் ஆகி அணைந்த நீர் முன் அடியேன் செய்த
இருந் தவப் பயன் ஆம் என்ன எய்திய நீரோ! என்பார்.
|
366 |
துளி வளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது
அளிவரும் அன்பர்க்கு ஆக அங்கொடுஇங்கு உழல் வீர்ஆகி
எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார்.
|
367 |
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று,
மங்கை ஓர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகத்
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்.
|
368 |
ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில் கண்டே
வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார்
பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர்.
|
369 |
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த
மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்பத் திருவாரூர்
மன்னவனார் அம் மறையவனார் பால் வந்து உற்றார்.
|
370 |
அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார்
என் செய்து மீள்வார் இன்னமும் ? என்றே இடர் கூரப்
பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலிவீதி
முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார் ஆல்
|
369 |
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த
மின் இடையார் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்பத் திருவாரூர்
மன்னவனார் அம் மறையவனார் பால் வந்து உற்றார்.
|
372 |
எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும்
கொம்பு அனையாள் பால் என் கொடுவந்தீர் குறை என்னத்
தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி வித்தோம்
நம்பி இனிப் போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன.
|
373 |
நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும்
சிந்தை உள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர்
எந்தை பிரானே என் இனி என் பால் இடர் ? என்றார்.
|
374 |
என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார்
சென்று அணை நீ அச் சே யிழை பால் என்று அருள் செய்து
வென்று உயர் சே மேல் வீதி விடங்கப் பெருமாள் தம்
பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ
|
375 |
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும்
வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி
நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து அருளும் போது.
|
376 |
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின் திகழ் பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்தத்
தனெ்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட.
|
377 |
மாலை தண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும்
கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள
சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம்
பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல.
|
378 |
இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும்
மை வளர் நெடும் கண்ணாரும் மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்காரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்.
|
379 |
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக்
காமர் பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித்
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும்
மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்.
|
380 |
வண்டு உலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக்
கண்ட போது உள்ளக் காதல் வெள்ளத்தின் கரை காணாது
கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும்
தண் தளிர்ச் செங்கை பற்றிக் கொண்டு மாளிகை உள் சார்ந்தார்.
|
381 |
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த
திரு அருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவர் உள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்.
|
382 |
ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்று இடம் கொண்டு ஆண்ட
நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றிப்
பார் அணி விளக்கும் செஞ் சொல் பதிக மாலைகளும் சாத்தித்
தார் அணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்.
|
383 |
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி நின்று
தம் பிரானாரைத் தூது தையல் பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர் கோனார்தாம் கேட்டு
வெம்பினார்; அதிசயித்தார்; வெருவினார்; விளம்பல் உற்றார்
|
384 |
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! சால
ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டன் ஆம்! என்னே! பாவம்
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்.
|
385 |
காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப்
பார் இடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவத்
தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி,
ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று.
|
386 |
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல்
உம்பர் ஆர் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா
எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே ? இதனுக்கு உள்ளம்
கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் ? என்று.
|
387 |
அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான் தன்னை
வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல் ? என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி.
|
388 |
ஈறு இலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோனார் தாம் எண்ணப்
பேறு இது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவார் ஆகி
வேறு இனி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து.
|
389 |
நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம் முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி
வாடு உறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்.
|
390 |
ஏதம் இல் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன
வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து
பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார்.
|
391 |
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய
எம் தமை ஆளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர்
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி
முந்து உற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு.
|
392 |
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம்
தம் பிரான் நீரே என்று வழி வழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து?.
|
393 |
மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால்
பெற்றம் மேல் உயர்த்தீர்! செய்யும் பெருமையை அறிந்தார் யாரே ?
உற்றவன் தொண்டர்க்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக்
கற்றை வார் சடையார் தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே.
|
394 |
வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச் சிந்தையோடு
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர்.
|
395 |
அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வரும்திறம் செப்பி விட்டார்.
|
396 |
நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டுத்
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் ? என்பார்.
|
397 |
மற்று அவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாயப்
பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால்
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே.
|
398 |
கருத அரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும்
பொருஅரும் கணவரோடு போவது புரியும் காலை
மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும்.
|
399 |
கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி
அணை உறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்னப்
புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத்
துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்.
|
400 |
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற
நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி,
மெய்ம்மை ஆம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து, மிக்க
மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது.
|
401 |
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த
நான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு
யான் மிக வருந்து கின்றேன் ஏயர் கோனார் தாம் உற்ற
ஊன வெம் சூலை நீக்கி உடன் இருப்பதனுக்கு என்றார்.
|
402 |
மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை; உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத்
தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம்
ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்.
|
403 |
வன் தொண்டர் பின்னும் கூற மற்று அவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத் தொடர் குடர் சொரிந்து உள் ஆவி
பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு
நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்.
|
404 |
கோள் உறும் மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற
ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
|
405 |
மற்று அவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர்
கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்;
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர்; புவனம் போற்ற.
|
406 |
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருஅரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன் கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று, வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்துப் பாடி.
|
408 |
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து
பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில்
தங்கும் நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே
செங் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும்.
|
409 |
நள் இருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார் மலர் அடி வணங்கிப் புக்கேன்;
உள் உணர்வுஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப.
|
407 |
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர்
மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர்
குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர்; நிறைந்த அன்பால்.
|