வ.எண் |
பாடல் |
001 |
வேத நெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.
|
002 |
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம்
மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால்
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்.
|
003 |
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ
ஒப்பு இல் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்.
|
004 |
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள்
விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில்
வரி அரவம் மந்தரம் சூழ் வடம் போல வயங்கும் ஆல்.
|
005 |
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித் தட மலரால்
களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி
இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள; இலஞ்சி பல.
|
006 |
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும்
கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் மலர்ந்து
அளந்து அறியாப் பல் ஊழி ஆற்றுதலால், அகல் இடத்து
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை.
|
007 |
பரந்த விளைவயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ் ஊர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது ஆல்.
|
008 |
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்
சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்
பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியும் ஆல்.
|
009 |
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கித்
தூமரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பித்
தேமரு மென் சுரும்பு இசையால் செழுஞ் சாமம் பாடும் ஆல்.
|
010 |
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்கு உற வெண் சுதை ஒழுக்கும்
கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின்
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்.
|
011 |
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும்
பூழி உற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்து அவ்இரதப் பொடி ஆடும்
வாழி வளர் மறைச் சிறார் நெருங்கி உள மணி மறுகு.
|
012 |
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால்
நெடு விசும்பு தளிர்ப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம்.
|
013 |
மடை எங்கும் மணிக்குப்பை; வயல் எங்கும் கயல் வெள்ளம்;
புடை எங்கும் மலர்ப் பிறங்கல்; புறம் எங்கும் மகப் பொலிவு;
கிடை எங்கும் கலைச் சூழல்; கிளர்வு எங்கும் முரல் அளிகள்;
இடை எங்கும் முனிவர் குழாம்; எயில் எங்கும் பயில் எழிலி.
|
14 |
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெங் குரு நீர்ப்
பொருவில் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திருக் கழுமலம் ஆம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.
|
15 |
அப்பதியில் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசு இல்மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்
செப்பு நெறி வழிவந்தார் சிவ பாத இருதயர் என்று
இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்.
|
16 |
மற்று அவர் தம் திரு மனையார் வாய்ந்த மறை மரபின் வரு
பெற்றியினார்; எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார்
பொற்பு உடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார்;
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்.
|
17 |
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினால்
அரவு அணிந்த சடை முடியார் அடி அலால் அறியாது
பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவும் நாள்.
|
18 |
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுத்தே
ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு
ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார்.
|
19 |
மனை அறத்தில் இன்பம் உறும் மகப் பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலை நின்றே ஆடிய சேவடிக் கமலம்
நினைவு உற முன் பர சமயம் நிராகரித்து நீறு ஆக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்.
|
20 |
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித்
திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக்
கருத்து முடிந்திடப் பரவும் காதலியார் மணி வயிற்றில்
உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக.
|
21 |
ஆளுடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு
நாள் உடைய ஈர் ஐந்து திங்களினும் நலம் சிறப்பக்
கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வு உறுநாள்.
|
22 |
அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல் ஓரை எழத்
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
தருக்கு ஒழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க
|
23 |
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க,
அண்டர் குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக,
வண் தமிழ் செய்தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப.
|
24 |
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற,
மிசை உலகும் பிறலகும் மேதினியே தனி வெல்ல,
அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல,
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக.
|
25 |
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க
வாள் உடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ
ஆள் உடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக.
|
26 |
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாம்இல் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்.
|
27 |
அப்பொழுது பொற்பு உறு திருக்கழு மலத்தோர்
எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி
மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே
ஒப்பு இல் களி கூர்வது ஓர் உவப்பு உற உரைப்பார்.
|
28 |
சிவன் அருள் எனப் பெருகு சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார்
கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார்.
|
29 |
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும்
தேன் மருவு தாதொடு துதைந்த திசை எல்லாம்
தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி
மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே.
|
30 |
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு இல்
சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும்
சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார்.
|
31 |
பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த
நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார்
ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா
வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்.
|
32 |
பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கித்
தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும்
வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா
நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்.
|
33 |
அங்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச்
சங்கம் படகம் கருவி தாரை முதல் ஆன
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்.
|
34 |
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத்
தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே
அருந் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்.
|
35 |
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார்
சூதம் நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச்
சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்.
|
36 |
மா மறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாம் உறு மகிழ்ச்சியொடு சாயல் மயில் என்னத்
தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக்
காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்.
|
37 |
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி
உள் நிறைந்த விருப்பினுடன் ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்.
|
38 |
செம் பொன் முதல் ஆன பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பு அலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதல் ஆன கடி நீடு வினை செய்வார்.
|
39 |
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையாலும்
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார்.
|
40 |
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்தத்
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐ இரு தினத்தினும் விளைத்தார்.
|
41 |
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச்
சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத்
தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத்
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்.
|
42 |
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால்
அரு மறை குழைத்து அமுது செய்து அருளுவாரைத்
தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்.
|
43 |
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பும் மிகை என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்.
|
44 |
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும்
தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும்
சேய பொருள் திருமறையும் தீந் தமிழும் சிறக்க வரும்
நாயகனைத் தாலாட்டு நலம் பல பாராட்டினார்.
|
45 |
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார்
அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப்
பெரு மழுவர் தொண்டு அல்லால் பிறிது இசையோம் என்பார் போல்
திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்.
|
46 |
நாம் அறியோம் பர சமயம் உலகிர், எதிர் நாடாது
போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால்
காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.
|
47 |
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார்.
|
48 |
சூழ வரும் பெருஞ் சுற்றத் தோகையரும் தாதியரும்
காழியர் தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் பலகலையும் எவ் உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப.
|
49 |
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்பு உற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்.
|
50 |
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு
உளர் கரு மென் சுருள் குஞ்சி உடன் அலையச் செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்
தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார்.
|
51 |
தாதியர் தம் கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து
சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்.
|
52 |
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையர் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல
மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்.
|
53 |
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த
திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி, அரு மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈராண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும்.
|
54 |
நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப்
பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்தச்
சே ஆண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்.
|
55 |
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத்
தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெருக் கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய்.
|
56 |
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத்
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச்
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்.
|
57 |
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர்
முன் செல்கை தனை ஒழித்து முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலம் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை
உன் செய்கை இது ஆகில் போது என்று அங்கு உடன் சென்றார்.
|
58 |
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போன்று
இடை அறாப் பெருந்தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்
விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம்
தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்.
|
59 |
பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்
தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி
உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்.
|
60 |
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார்
சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின்
ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றார் ஆய்.
|
61 |
மறை முனிவர் மூழ்குதலும் மற்று, அவரை முன் காணாது
இறை தரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல்
முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார்
நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்.
|
62 |
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து,
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப,
எண் இல் மறை ஒலி பெருக, எவ் உயிரும் குதுகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்.
|
63 |
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ
செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணிச் சிகரம் பார்த்து
அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள.
|
64 |
அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால்
முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான்
பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச்
சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார்.
|
65 |
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த
பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமைக் கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த
அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்.
|
66 |
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை
எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ் உலகும்
தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன.
|
67 |
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன
சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி.
|
68 |
எண் அரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்.
|
69 |
யாவருக்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவது அதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு அரிய பொருள் ஆகும்
தாவு இல் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்.
|
70 |
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.
|
71 |
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும்
இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும்
துப்புரவு இல்லார் துணிவு துகள் ஆகச் சூழ்ந்து எழுந்தார்.
|
72 |
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிப்
பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா.
|
73 |
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று
கைச் சிறியது ஒருமாறு கொண்டு ஓச்சக் கால் எடுத்தே
அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி.
|
74 |
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேலே
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழி ஆல்.
|
75 |
எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடுந் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்பப்
பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்
செல்லும் முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து.
|
76 |
செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு
எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார்.
|
77 |
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்து அடையின்
கண் நுதலான் பெருங் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட
வண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்.
|
78 |
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையும் ஆய் எய்தாமை
விழுவார்கள் அஞ்சு எழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்.
|
79 |
வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழி பழியாக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
|
80 |
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள
அருள் கருணைத் திருவாளன் ஆம் அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்.
|
81 |
வந்து எழும் மங்கலம் ஆன வானகத் துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும்
அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க.
|
82 |
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட, வானோர் தம்
நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து
உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய்ப்
பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ.
|
83 |
அணை உற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால்
இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின்
புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெருந்தோணி.
|
84 |
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப்
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்.
|
85 |
ஈறுஇல் பெருந்தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமிழின் பொருள் ஆன குறிப்பு ஓர்வார்.
|
86 |
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்
காணுதல் பெற்று இலர் ஏனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார்
தோணி புரத்து இறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார்.
|
87 |
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார்
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி
இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ.
|
88 |
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி
தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.
|
89 |
இன் இசை ஏழும் இசைந்த செழுந் தமிழ் ஈசற்கே
சொல்முறை பாடும் தொழும்பு அருள் பெற்ற தொடக்கோடும்
பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்.
|
90 |
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே
நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி
வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும்
தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்.
|
91 |
காழியர் தவமே! கவுணியர் தவமே! கலை ஞானத்து
ஆழிய கடலே! அதன் இடை அமுதே! அடியார் முன்
வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன்
ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்றனை என்பார்.
|
92 |
மறை வளர் திருவே! வைதிக நிலையே! வளர் ஞானப்
பொறை அணி முகிலே! புகலியர் புகலே! பொருபொன்னித்
துறை பெறு மணியே! சுருதியின் ஒளியே! வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்.
|
93 |
புண்ணிய முதலே! புனை மணி அரை ஞானொடு போதும்
கண் நிறை கதிரே! கலை வளர் மதியே! கவின் மேவும்
பண் இயல் கதியே! பருவமது ஒரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்.
|
94 |
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும்
நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது
சென்று அணைந்த தாதையார் சிவபாத இருதயர் தாம் தெய்வ ஞானக்
கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல.
|
95 |
மா மறையோர் குழாத்தின் உடன் மல்கு திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மை ஆலே
பூ மறுகு சிவ ஆனந்தப் பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும்
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக.
|
96 |
நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண்
மாடு நிறை மடவார்கள் மங்கலம் ஆம் மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பார்
கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக.
|
97 |
மங்கலத் தூரியம் துவைப்பார் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்கு மணி விளக்கு எடுத்துப் பூரண கும்பமும் நிரைப்பார் போற்றிச் செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை.
|
98 |
தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம்
அந்தர துந்துபி முதலா அளவு இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவியாரும்
பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார்.
|
99 |
தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத
மா மறைகள் திரண்ட பெருந்திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய
கா மரு சேவடிக் கமலம் கருத்தில் உற இடை அறாக் காதல் கொண்டு
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில்.
|
100 |
காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள்
தாதை யாரையும் வெளியே தாங்கு அரிய மெய்ஞ்ஞானம் தம் பால் வந்து
போத முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றி
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பின் சென்றார்.
|
101 |
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த
வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவித்
திருக் கோலக்கா எய்தித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று
இருக்கு ஓலிட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்.
|
102 |
மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது
பை நிறைந்த அரவு உடனே பசும்குழவித் திங்கள் பரித்து அருளுவானை
மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால்
கை நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை.
|
103 |
கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளிக் கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர் தம் அஞ்சு எழுத்தும் எழுதிய செம்பொன் தாளங்கள்
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த
வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்த அன்றே.
|
104 |
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழு மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்.
|
105 |
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித்
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல்
வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும்
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச் சண்பை நகர் சாரச் செல்வார்.
|
106 |
செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது
தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில்.
|
107 |
திருப் பெருகு பெருங் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்பு உறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல்
பொருத்தம் உற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூ ஆர் கொன்றை.
|
108 |
எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வம் உற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி
மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ இளங் கோலத்துக் காட்சி
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம்.
|
109 |
அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார்
முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்.
|
110 |
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்பப் பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் எல்லா ஏனையோரும்
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாம் கொண்டு புகலியார் தம்
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார்.
|
111 |
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உள்ளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை
தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும் ஏத்தும் நாளில்.
|
112 |
செழுந் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே
எழுந்து அருள வேண்டும் என இசைந்து அருளித் தோணி வீற்று இருந்தார் பாதம்
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வா
|
113 |
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீறடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை
மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார்
|
114 |
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார்
வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப்
பால் நல் வயல் திரு நன்னி பள்ளி எனத் தாதையார் பணிப்பக் கேட்டு
ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார
|
115 |
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச்
சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில்
நாரிஓர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்.
|
116 |
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர
நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.
|
117 |
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட
நம் பெருந்தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு
தம்பெரு விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்.
|
118 |
காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி
பூ அணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி
ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை
மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்.
|
119 |
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெரு மறை ஓசை மல்கப் பெருந்திருக் கோயில் எய்தி
அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின்
தரு முறை நெறிய அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்.
|
120 |
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
|
121 |
பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடிப்
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்.
|
122 |
வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத்
தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து
மான் இடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை.
|
123 |
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு
ஆரும் மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே.
|
124 |
பொன் இதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு
சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று அங்கு
இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க,
மன்னுசீர்ச் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்.
|
125 |
முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச்
சித்தம் நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து
நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்.
|
126 |
மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்
செப்பு அரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி
ஒப்ப அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.
|
127 |
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம்பந்தர் சார்ந்தார்.
|
128 |
தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய
ஆணி ஆம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச்
சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்.
|
129 |
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம்
செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை.
|
130 |
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள்
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி
உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி
எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில்.
|
131 |
திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின்
வரு நீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார்
ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத்
தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்.
|
132 |
பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச்
சுரும்பு ஆர் செங்கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து
விரும்பு ஆர்வத்தொடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து
வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்.
|
133 |
அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயர் நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே
இள நிலா நகை முகிழ்ப்ப இசைந்து அவரை உடன் கொண்டு
களம் நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்.
|
134 |
கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து
ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி
மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்.
|
135 |
தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால்
ஆன இசை ஆராய்வு உற்று அங்கணர்தம் பாணியினை
மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க
ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்.
|
136 |
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி
வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத்
தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்.
|
137 |
எண்ணரும் சீர்த் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப்
பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின்
கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து
நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப.
|
138 |
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த
வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம்
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த்
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்.
|
139 |
காழியார் தவப்பயன் ஆம் கவுணியர் தம் தோன்றலார்
ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை
யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார்
ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர்.
|
140 |
சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின்
நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும்
அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன்
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்.
|
141 |
மற்று அதற்குப் பிள்ளையார் மனம் மகிழ் உற்று இசைந்து அருளப்
பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச்
சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே
அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார
|
142 |
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர்
பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த
விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார்
|
143 |
பிள்ளையார் அருள் செய்யப் பெருந்தவத்தால் பெற்று எடுத்த
வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப
வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த
புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார.
|
144 |
தாழ்வு இல் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும்
மேவிய சீர் அடியார்கள் புடை வர வெங் குரு வேந்தர்
பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த்
தேவர்கள் தம் பெருந்தேவர் திருத் தில்லை வழிச் செல்வார்
|
145 |
நள் இருள்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி
முள்ளுடைப் புற வெள் இதழ்க் கேதகை முகிழ் விரி மணம் சூழப்
புள் உடைத் தடம் பழனமும் படுகரும்புடை கழிந்திடப் போந்து
கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தனர் கவுணியர் குல தீபர்
|
146 |
வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்
தண்டலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழத்
தெண் திரைக் கடல் பவளமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும்
கொண்டு இரட்டி வந்து ஓதம்அங்கு எதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி.
|
147 |
பல்கு தொண்டர் தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச்
செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு
மல்கு தேவரே முதல் அனைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார்
|
148 |
செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும்
தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப்
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை
|
149 |
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செந் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை.
|
150 |
இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்தருளிய குருளையார் வரக் கண்டு
மழைத்த மந்த மாருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித்
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி.
|
151 |
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு
சேல் அலம்பு தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச்
சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ
போலசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பணை நறும் பூகம்.
|
152 |
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச்
சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகைப் பரப்பாலே
தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணை உற முன்னே
நிவந்த நீல நுண் துகில் விதானித்தது போன்றது நெடுவானம்
|
153 |
கரும்பு செந்நெல் பைங் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைதின் ஆகரம் ஆனதி
மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி
நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆகா.
|
154 |
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ் ஞானமாம் போனகம் பொன் குன்றம்
மங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று
அங் கண் வாழ் பெருந்திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள்.
|
155 |
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்கச்
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச்
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக்
கோது இலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு கொடு புக்கார்.
|
156 |
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில்
எல்லை நீங்கி உள் புகுந்து இருமருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவணம் மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர்
|
157 |
மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச்
சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப்
பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி.
|
158 |
நீடுநீள் நிலைக் கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின்
மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வான் உற வளர் திங்கள்
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த
ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.
|
159 |
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட
அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கன் ஆம் திருவாயில்
சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற
உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள உருகும் அன்பொடு புக்கார்.
|
160 |
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல மும்தம்
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெருந்தனிக் கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு.
|
161 |
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண்
அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி
இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில்
புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி.
|
162 |
ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்
வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி.
|
163 |
பண்ணார் பதிகத் திருக் கடைக் காப்புப் பரவி
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருக்கும்
விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்.
|
164 |
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று
சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சிப்
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்.
|
165 |
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்
மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள்
நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண்
அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார்.
|
166 |
செய்ய சடையார் திருவேட்களம் சென்று
கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன்
வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும்
ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறுநாள்.
|
167 |
கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து
மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திரு உச்சி மேவி உறை
அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்.
|
168 |
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி
நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார்
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கர் ஆம் பேறு அதிசயிப்பார்.
|
169 |
ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே
ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார்
தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து
பூங் கிடங்கு சூழ் புலியூர்ப் புக்கு அணையும் போழ்தின்கண்.
|
170 |
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை
முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்
தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக்
கண்டு அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்.
|
171 |
செல்வம் பிறிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும்
எல்லை இல் சீர்ச் சண்பை இள ஏறு எழுந்து அருளி
ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்.
|
172 |
பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம்
சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும்
செங் கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார்.
|
173 |
ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக்
குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு
மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர்
சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ்.
|
174 |
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில்
நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம்
கூடும் ஆறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம் பலம் எனக் கூறி
|
175 |
இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும்
பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள் பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில்.
|
176 |
அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு உறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர்
நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய
ஒப்பு இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார்.
|
177 |
பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச்
செங்கை யாழ்த் திரு நீல கண்டப் பெரும் பாணனாருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார்.
|
178 |
இருநீ தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்று உற நீல கண்டப் பெரும்பாணனர் வணங்கிக் கார்
நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று
அருங்கலைச் சிறு மழ இளங் களிறு அனார் அங்கு அணைந்து அருள் செய்வார்.
|
179 |
ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவு இல் மாதவம் முன்பு
செய்தவாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர் தம் கோயிலின் உட்புக்கு வலம் கொண்டு வணங்கிப் பார்
உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்
|
180 |
அங்கு நின்று எழுந்து அருளி மற்று அவருடன் அம் பொன்மா மலை வல்லி
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங் குரு வேந்தர்
செங் கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்.
|
181 |
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச்
செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.
|
182 |
வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார்
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி
ஞான போனகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்குத்
தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.
|
183 |
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்த் தொடை சாத்தி
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச்
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை
வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள்.
|
184 |
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப்
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவு உற்றுப் பரவு சொல் தமிழ் மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார்.
|
185 |
கருவரைப்பில் புகாதவர் கை தொழும்
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப்
பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன்
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்.
|
186 |
முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது
தந்தை யார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந் தணாளர் அவர் அருகே செலச்
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்.
|
187 |
ஆதியார் தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தது பைப்பய.
|
188 |
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத்
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்.
|
189 |
பாசம் மற்றுஇலர் ஆயினும் பார் மிசை
ஆசை சங்கரற்கு ஆயின தன்மையால்
தேசம் மிக்க திரு உரு ஆனவர்
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்.
|
190 |
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆர் அமுதாகிய செஞ்சடைத்
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்.
|
191 |
மாறன் பாடி எனும் பதி வந்து உற
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துஉறப் பிள்ளையார்
ஏறும் அஞ்சு எழுத்து ஓதி அங்கு எய்திட.
|
192 |
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய்
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்.
|
193 |
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்
சுற்றும் நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.
|
194 |
இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய்
மன்னனார் தம் வழி வருத்தத் தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்
சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர்.
|
195 |
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள்
மாறு இல் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.
|
196 |
நீடு வாழ் பதி யாகும் நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடும் கங்குல் கனவில் குலமறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்.
|
197 |
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக் குடை
ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக்
கோனவன் பால் அணைந்து கொடும் என
|
198 |
அந் தணாளர் உரைத்த அப்போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினார்.
|
199 |
ஆங்கு மற்ற அருள் அடியாருடன்
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின்
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்.
|
200 |
சால மிக்க வியப்புஉறு தன்மையின்
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படும்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
|
201 |
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால்
துங்க வெண் குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும்
அம் கண் நாதர் அருளினால் கண்டனர்.
|
202 |
கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து
எண்திசைக்கும் விளக்கு இவையாம் எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவு உற ஆர்த்தனர்.
|
203 |
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்
பொங்கு பல் இய நாதம் பொலிந்து எழ
அங் கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்.
|
204 |
மாசு இல் வாய்மை நெல் வாயில் மறையவர்
ஆசு இல் சீர்ச் சண்பை ஆண் டகையார்க்கு எதிர்
தேசு உடைச் சிவிகை முதலாயின
ஈசர், இன் அருளால் தாங்கி ஏகினார்
|
205 |
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா
முத்த நல் சிவிகை முதல் ஆயின
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்.
|
206 |
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்.
|
207 |
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்
பண்பு தந்தையார் தம் உடன் பாங்கு அமர்
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.
|
208 |
மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியராய்க் கை மலர் குவித்து
ஏல ஐஞ்சு எழுத்து ஓதி எழுந்தனர்.
|
209 |
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்.
|
210 |
ஆய போழ்தில் அர எனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்.
|
211 |
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன்
அந்தம் இல் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்.
|
212 |
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று உளரர் அருள் என்று வணங்கினார்.
|
213 |
எந்தை ஈசன் என எடுத்து இவ் அருள்
வந்த வாறு மற்று எவ் வணமோ என்று
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை
புந்திஆரப் புகன்று எதிர் போற்றுவார்.
|
214 |
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம் அருளே இது ஆம் எனப்
படி இலாத சொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.
|
215 |
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள்
எம்மை ஆள் உவப்பான் இன்று அளித்ததே.
|
216 |
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று
ஆதியார் அருள் ஆதலில் அஞ்சு எழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம்.
|
217 |
தொண்டர் ஆர்த்தனர்; சுருதிகள் ஆர்த்தன; தொல்லை
அண்டர் ஆர்த்தனர்; அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன; முழவமும் ஆர்த்தன; குழுமி
வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது; வானம்.
|
218 |
வளையும் ஆர்த்தன; வயிர்களும் ஆர்த்தன; மறையின்
கிளையும் ஆர்த்தன; கிளைஞரும் ஆர்த்தனர்; கெழுவும்
களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து
விளையும் மாக் கதிர் வெண்குடை ஆர்த்தது; மிசையே.
|
219 |
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார்
அல்கு வெள் வளை அலைத்து எழும் மணி நிரைத் தரங்கம்
மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார்.
|
220 |
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவு இல் ஆனந்தம்
கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்.
|
221 |
செய்ய பொன் புனை வெண் தரளத்து அணிசிறக்கச்
சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத.
|
222 |
சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம்
முற்றும் ஆனவள் ஞானமே முலை சுரந்து ஊட்டப்
பெற்ற பால் அறா வாயன் வந்தான் எனப் பிடிக்க
|
223 |
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே
இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம்கிளர் தாரை
அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது
உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத..
|
225 |
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச்
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல
அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார்.
|
226 |
மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார்
என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும்
பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்.
|
227 |
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர்
ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி
நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப்
பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில.
|
228 |
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு
திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள்
அசைவு இல் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார்.
|
229 |
தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத்
தாவு இல் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக்
காவலார் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்.
|
230 |
விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த
களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட
உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி
வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார்.
|
231 |
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூங்கழலினை உச்சி மேல் கொண்டே
வெண் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்.
|
232 |
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப்
கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக்
குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப்
புவிகைம் மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார்.
|
233 |
மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின்
குறை நரன்றன; முரன்றன வளைக்குலம் காளம்
முறை இயம்பின; இயம்பல ஒலித்தன முரசப்
பொறை கறங்கின; பிறங்கின; போற்று இசை அரவம்.
|
234 |
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதி யோர்
புடை இரண்டினும் கொடியொடு பூந் துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்.
|
235 |
அனைய செய்கை யால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடுங் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்.
|
236 |
அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின்
துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
|
237 |
மண்ணினில் பொலி குல மாலையர் தாம் தொழுது
எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்.
|
238 |
பா இனது இசை வழிபாடி அங்கு அகன்று
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூ உலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.
|
239 |
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.
|
240 |
விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள்
அசைவு இல் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து
இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார்
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்.
|
241 |
புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய்
திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.
|
242 |
அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல்
கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழும்
முத் தமிழ் விரகர் ஆம் முதல்வர் நண்ணினார்
செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்.
|
243 |
திரு மலி புகலி மன் சேரச் சேய்ஞலூர்
அரு மறையவர் பதி அலங்கரித்து முன்
பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே
வருமுறை எதிர் கொள வந்து முந்தினார்.
|
244 |
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத்
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும் பதி என்று நித்தில
யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்.
|
245 |
மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார்
தாம் எழுந்து அருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர்
ஆம் மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்.
|
246 |
களித்தனர்; புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர்; பொரிகளும் மலரும் சிந்தினர்;
துளித்தனர்; கண் மழை சுருதி ஆயிரம்
அளித்தவர்; கோயில் உள் அவர் முன்பு எய்தினார்.
|
247 |
வெங் குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு
செங் கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு
அங் கணர் முன்பு உற அணைந்து தாழ்ந்தனர்.
|
248 |
வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்
காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்
பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்.
|
249 |
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே
நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய
பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்.
|
250 |
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அப்
பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த்
தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்.
|
251 |
மற்ற நல் பதி வட தளியில் மேவிய
அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்
சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில்
பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர்.
|
252 |
சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
|
253 |
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பு அலர் செம்தமிழ் மாலை பாடி நின்று
எம் பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.
|
254 |
அப்பதி பணிந்து அருந்தமிழ் புனைந்து தம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன்
பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர்
பைப் பணியவர் கருப் பறிய லூரினில்.
|
255 |
பரமர் தம் திருக் கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்
உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம்
சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்.
|
256 |
மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்இல் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத
கண் வளர் மென் கரும்பும் இடை கதிர்ச் செஞ்சாலி
கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத்
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும
|
257 |
பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும்
உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர
வெள்ள மறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடை மகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம்
செழும்
|
258 |
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க
அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்
பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப்
புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை ம
|
259 |
கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு
கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்தமிழ் நாயகரும
|
260 |
திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி
சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர்
மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கும் மல்க
வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து
துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்
தங்கள் திரு முன்பு த
|
261 |
பரவு திருப்பதிக இசை பாடி நீடும்
பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி
விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே
வர அவரை வளம் பெருகு மனையில் போக
|
262 |
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்
மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள
நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று
ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள் செய்
|
263 |
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும்
திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி
மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில்
ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த
உலகு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லை மறை விதிச் சடங்கு மறை
|
264 |
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவு இறப்ப ஓதினார்
|
265 |
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன
தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும்
கலை மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வரும் தியானப் பொருள் என்று இறை
|
266 |
மந்திரங்கள் ஆன எலாம் அருளிச் செய்து
மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த
சிந்தை மயக்கு உறும் ஐயம் தெளிய எல்லாம்
செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதல் ஆகும் முதல்வனார் எழுத்து அஞ்சு என்பார்
அந்தியின
|
267 |
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து
சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டும் போந்து
பத்தர
|
268 |
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு இல் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக
அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக்கு அரையர்.
|
269 |
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்.
|
270 |
சிந்தை இடை யறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும்
கந்தம் மிகை ஆம் கருத்தும் கை உழவாரப் படையும்
வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும்
அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய.
|
271 |
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்து அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்.
|
272 |
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து
போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்.
|
273 |
அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணை இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்தும்
புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்.
|
274 |
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டிப்
பொன் மார்பின் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும்
பின் ஆக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.
|
275 |
வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத்
தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்.
|
276 |
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும்
வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கும்
சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்று இருக்கை ஈரடி ஈரடி வைப்பு.
|
277 |
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிகம்
மூல இலக்கியம் ஆக எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர்.
|
278 |
இன் இசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்.
|
279 |
அங்கண் அமர் கின்ற நாளில் அருந்தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார் தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ் மாலை பாடி ஏத்தி இங்கு எய்துவன் என்று
தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார்.
|
280 |
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்,
அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்.
|
281 |
ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப் பணி உற்று நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்.
|
282 |
அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற.
|
283 |
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரந்த முரசு உடைப் பல் லியம் ஆர்ப்ப
மன்னு திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க.
|
284 |
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க
மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று
பொங்கிய காதலின் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்.
|
285 |
திருமறைச் சண்பைரர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார்.
|
286 |
போற்றிய காதல் பெருகப் புள் இருக்கும் திருவேளூப்
நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார்.
|
287 |
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக்
கூடிய காதலின் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.
|
288 |
அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன
எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கி
தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.
|
289 |
திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப்
பருக்கை வரை உரித்தார் தம் பந்தண நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்.
|
290 |
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ் சேரி
செப்பு அரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி
ஒப்பு இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார்.
|
291 |
செழும்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நல்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடி காவில் சென்று அடைந்தார்.
|
292 |
திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்.
|
293 |
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சு அணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அம் சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன் ஆகச்
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார்.
|
294 |
வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
அங் கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது
செங் கண் மாலுக்கு அரியார் தம் திருந்து தேவன் குடி சேர்ந்தார்.
|
295 |
திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலின் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடம் ஆம் என்று
அருந் தமிழ் மாலை புனைந்தார் அளவு இல் ஞானத்து அமுது உண்டார்.
|
296 |
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார்
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய்
மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்.
|
297 |
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன
பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவிப்
பொன் அங்கழலிணைப் போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடங் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில்.
|
298 |
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறியச் சிறப்பித்து அருளிச்
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றிப்
படை கொண்ட மூவிலை வேலார் பழனத் திருப்பதி சார்ந்தார்.
|
299 |
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்
உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்
அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்.
|
300 |
மாடம் நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி.
|
301 |
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால்
நந்தி திரு அருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்.
|
302 |
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்
அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு இல் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்து
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்.
|
303 |
கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலை
நீடு பெருந்திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய.
|
304 |
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத் தொண்டரோடு
நிலவு திருப்பதி அதன் கண் நிகழும் நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை
அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்
குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்.
|
305 |
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பினொடும்
படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அருந்தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடைவளர் மென் கரும்பினொடு பூகம் மிடை மழபாடி போற்றச் சென்றார்
|
306 |
செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போதில்
மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார்.
|
307 |
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்திச்
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சில நாள்
|
308 |
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதல் மறையோர் அன்பில் ஆலந் துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்
பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடி
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்.
|
309 |
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர்ப் பரிதிமதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி
|
310 |
அங்கண் அகன்று அங்மருங்கில் அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்
செங் கமலப் பொதி அவிழச் சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறாப்
பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போ
|
311 |
அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல்
கன்னி இள மடப் பிணை ஆம் காமரு கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித்
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான் .
|
312 |
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப்
பொற் றொடியைக் கொடு வந்து போர்க் கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர் தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான்.
|
313 |
அவ் அளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்து அருளி அணுக எய்தச்
செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றே
எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும் தனிக் காளத்து எழுந்த ஓசை
வெவ் உயிர்க்கும் அவன் கேளா மெல் லியலை விட்டு எதிரே விரைந்து செல்வான்.
|
314 |
மா நகரம் அலங்கரிமின்; மகர தோரணம் நாட்டும்; மணி நீர் வாசத்
தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும்
வானவர் நாயகர் மகனார் வரும்முன்பு தொழுது அணைந்தான்; மழவர் கோமான்
|
315 |
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல்
வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.
|
316 |
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்தாகப் புனை முத்தின் சிவிகை நின்றும்
அங் கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை.
|
317 |
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி
என் இது என்று அருள் செய்ய மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகன் ஆம் பொரு இல் அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்
முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின
|
318 |
அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அந் நிலையின் நின்றே
பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவு இல் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நா
|
319 |
பன்னு தமிழ் மறை ஆம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல்
கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப் பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கிவந்து பொருவலித் தாதை புடை அணைந்தாள்.
|
320 |
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெருகு மகிழ்ச்சி பொங்கத்
தன்தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர் அணிவேணி நிமலர் பாதம்
ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்.
|
321 |
நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை பாகத்தர் தாள் வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து பணிந்து அடிபோற்றி ஏகிச்
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.
|
322 |
பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்
சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார்.
|
323 |
செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கைச் சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம் புனைந்து
பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
கொங்கின் குட புலம் சென்று அணைந்தார் கோதுஇல் மெய்ஞ்ஞானக்
|
324 |
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரை ஆம் கொங்கின் இடை
வண்டு அலையும் புனல் சடையார் மகிழ்வு இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசைக் கொடி மாடச் செங்குன்றூர்.
|
325 |
அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து
பல் நெடும் தோரணம் முதலாப் பயில் அணிகள் பல அமைத்து
முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள்
சென்னி உறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழும் கோயில்.
|
326 |
தம் பெருமான் கோயிலின் உள் எழுந்து அருளித் தமிழ் விரகர்
நம்பர் அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடிக்
கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்.
|
327 |
அப்பாலைக் குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில்
எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப்
பைப் பாந்தள் புனைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்.
|
328 |
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண்
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப்
பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியது ஆல்.
|
329 |
அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப்
பளிக்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத்
துளித் தலைமெல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால்
குளிர்க்கு உடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்.
|
330 |
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க்
கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசையக் குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை
ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும் ஆல்.
|
331 |
நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத்து இறைகள் தொறும்
பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன.
|
332 |
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்
விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.
|
333 |
அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள்
பல் நாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்.
|
334 |
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே
இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா என்று
சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்.
|
335 |
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே
செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார்.
|
336 |
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து
தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய
மேய அப் பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்
தீய பனிப் பிணி அந்நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே.
|
337 |
அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று
துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி
முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும்
செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்.
|
338 |
பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம்
மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி
விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம்
பொரு இல் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.
|
339 |
செல்வக் கருவூர்த் திரு ஆனிலைக் கோயில் சென்று இறைஞ்சி
நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு முதல்ஆ வணங்கி வந்து
பல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்.
|
340 |
பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும்
அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார்.
|
341 |
நீடும் பராய்த் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோது இல் தமிழ்ச் சொல் மாலை
பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச்
சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்.
|
342 |
தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று
எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா
வழு இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார்.
|
343 |
கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப்
பொன் திரள் மேருச் சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றி இசைத்து
நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்.
|
344 |
செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் பள்ளி மேய செழும் சுடரைக்
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண் நுதலாரைக் கழல் பணிந்து
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்.
|
345 |
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன் அடிமையும் அம் சொல் தொடையில் வைத்துப்
பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையி
|
345 |
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன் அடிமையும் அம் சொல் தொடையில் வைத்துப்
பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையி
|
346 |
நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உள் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்.
|
347 |
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன் கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார்.
|
348 |
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறு இல் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறு அணி செம்பவளப் பொருப்பின் நெடும் கள மா நகர் சென்று சேர்ந்தார்.
|
349 |
நெடும் களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்னும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
கடுங் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப் பள்ளிப்பதி
|
350 |
சென்று திகழ் திருக்காட்டுப் பள்ளிச் செஞ்சடை நம்பர் தம் கோயில் எய்தி
முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கை தொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண் நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி
|
351 |
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணி திரு ஆலம் பொழில் வணங்கிப்
பொங்கு புனல் பொன்னிப் பூந் துருத்திப் பொய் யிலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள எப்பதியும் தொழுது
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக் கண்டியூர் தொழச் சென்று
|
352 |
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து அடியாருடன் காதல் பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்
அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கே
|
353 |
வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்புத் தன்னில்
அனைய நினைவு அரியோன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்.
|
354 |
அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று
ஒப்பு இல் வண் தமிழ் மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்வு இலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்.
|
355 |
தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறை
செல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடி
எல்லை இல் அன்பு கூர இறைஞ்சினார்.
|
356 |
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்.
|
357 |
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை.
|
358 |
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன்
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்
பழுது இல் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.
|
359 |
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாள் மதிக்
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக மும் பாடினார்.
|
360 |
பாடி நின்று பரவிப் பணிந்து போய்
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர்.
|
361 |
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய்
மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன்பு
எய்தவந்து அருளினார் இயல் இசைத் தலைவனார்.
|
362 |
சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து
அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்.
|
363 |
தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்று
அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப்
புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்
|
364 |
மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம்
பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்து
இன் இசைத் தமிழ் புனைந்து, இறைவர் சேலூருடன்
பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து, ஏகினார்.
|
365 |
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய்
வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும்
பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.
|
366 |
மன்றல் அங்கழனி சூழ் திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப்
பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச்
சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்.
|
367 |
நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும்
பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே
அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்.
|
368 |
வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகி நீர்
வெள்ள ஆனந்தம் மெய் பொழிய மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார்.
|
369 |
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான்
வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து
அரவு உடைச் சடையர் பேர் அருள் பெறும் பெருமையால்
விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார்.
|
370 |
அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடி
நல் நெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார்.
|
371 |
நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திரு அருள் பெற அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர்.
|
372 |
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று
சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்.
|
373 |
பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறபதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவளிவள் ணல்லூர்.
|
374 |
மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்.
|
375 |
பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை
வழு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து.
|
376 |
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து
பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்.
|
377 |
பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்து இனிது இருந்த
மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி,
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.
|
378 |
மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள்
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்
பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில் திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார்.
|
379 |
மதி புணைந்தவர் வலஞ் சுழி மருவும் மாதவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து
எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக்
கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்து எனக் கலந்தார்.
|
380 |
கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கமலக் கரம் குவித்து உடன் அணைவார்
வலஞ் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப்
பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்.
|
381 |
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்
திருவலஞ் சுழி உடையவர் சேவடித் தலத்தில்
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்.
|
382 |
ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணர் அவர் தமை வினவும்
ஊனம் இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பானல் ஆார் மணிகண்டரைப் பாடினார் பரவி.
|
383 |
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து
நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள் தொறும் பரவி
வலஞ் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார்.
|
384 |
மகிழ்ந்து அதன்தலை வாழும் அந் நாள் இடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெங் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்.
|
385 |
தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்
நண்புஉடைத் துணை நகை மணி முத்து அணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப.
|
386 |
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான்
பெறல் அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள் தேம்ப வயல் இரை தேடும்
பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்.
|
387 |
நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினுலும்
வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும்
பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார் ஆல்.
|
388 |
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமலம் முகை விரிய
குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத்
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில்
வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்.
|
389 |
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ் சுழியை
எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருள்
விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்.
|
390 |
திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந் தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி
மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திருச் சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்.
|
391 |
திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக்
கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி
விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால்.
|
392 |
வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப.
|
393 |
அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச்
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ் வினைதான் ஈசர் திரு அருள் ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.
|
394 |
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக்
கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார்
மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப்
புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும்.
|
395 |
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார்
வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்.
|
396 |
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றி
ஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்.
|
397 |
சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப்
பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்.
|
398 |
அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பு அரிய ஆனந்தப்
பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெரும் காதல்
திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்.
|
399 |
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார்
செப்பு அரும் சீர்த் திரு ஆறை வட தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார்.
|
400 |
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக்
காவணம் நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப்
பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார்.
|
401 |
வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று
பண்தரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்.
|
402 |
நிகர் இலா மேருவரை அணு ஆக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானைத்
தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்.
|
403 |
பாடும் அரதைப் பெரும் பாழியே முதல் ஆகச்
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில்
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.
|
404 |
அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கை சடைக் கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்
பொங்கும் இசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்.
|
405 |
போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உருவும்
தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு
நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்.
|
406 |
தேமருவு மலர்ச் சோலைத்திருக் குடமூக்கினில் செல்வ
மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத்
தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்கக்
கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்.
|
407 |
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழக் குட மூக்கை உவந்து இருந்த
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்.
|
408 |
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளைச்
சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டர் உடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரோடும்
கந்த மலர்ப் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்.
|
409 |
பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெருந்தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்.
|
410 |
கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப்
பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும்
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி.
|
411 |
திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைக்
கரு நாகத்து உரி புனைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து
பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்து இன் புற்றார்.
|
412 |
மா நாகம் அருச்சித்த மலர்க் கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப்
பால் நாறும் மணி வாயர் பரமர் திருவிடை மருதில்
பூ நாறும் புனல் பொன்னித் தடம்கரை போய்ப் புகுகின்றார்.
|
413 |
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித்
தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார்.
|
414 |
அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து
முடிவு இல் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப்
படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய.
|
415 |
பர உறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள்.
|
416 |
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க்
குரங்காடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள்
பெரும் காதலின் பணிந்து பேணிய இன்னிசை பெருக
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து பரவினார்.
|
417 |
அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு
மைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி
நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச்
செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்.
|
418 |
மூவருக்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத்
தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக்
காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவுடன் கலந்தார்.
|
419 |
வந்து அணைந்தவர் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை
அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார்
சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்.
|
420 |
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையால்
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதை
நாடு காதலில் பணிந்து எழுந்து அருந்தமிழ் நவின்றார்.
|
421 |
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்து இருந்தார்.
|
422 |
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்.
|
423 |
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி
அந்தம் இல் பொருள் ஆவன ஆவடு துறையுள்
எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்.
|
424 |
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்று இலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன்
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்.
|
425 |
எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.
|
426 |
நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவரின் அருளால்
அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்து அகல் பீடத்து
உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று.
|
427 |
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால்
உய்த்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு
நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திரு அருள் நினைந்து அவனி மேல் பணிந்தார்.
|
428 |
பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து
அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள்
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு அளித்து உரைசெய்வார்.
|
429 |
ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி
நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து
வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்.
|
430 |
என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண
வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்.
|
431 |
அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை
உள் நிலாவிய காதலினால் பணிந்து உறைந்து
மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல்
தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்.
|
432 |
கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி
என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி
மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.
|
433 |
வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி
செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்தராய்த் திரு நல்லத்தில் நண்ணி.
|
434 |
நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை
இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்
பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்
அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்.
|
435 |
மன்னுமாமடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப்
பன்னு பாடலின் பதிக இன் இசை கொடு பரவிப்
பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்து
சொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்.
|
436 |
திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில்
வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்
உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின்
கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்.
|
437 |
மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து
பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியர் தலைவர்
வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார்.
|
438 |
மல்கு தண் டலை மயிலாடு துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரோடு எதிர் கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்.
|
439 |
உள்ளம் இன்பு உற உணர் உறும் பரிவு கொண்டு உருகி
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பத
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி
வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்.
|
440 |
அத்திருப்பதி அகன்று போய், அணிகிளர் சூலக்
கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி,
மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம்
பத்தர் தம் உடன் பணிந்து, இசைப் பதிகம் முன் பகர்ந்தார்.
|
441 |
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும்
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்
காடு கொண்ட செஞ்சடைமுடிக் கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்.
|
442 |
பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி
அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச்
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார்.
|
443 |
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
குடிபணிந்தங் கலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்
டகன்பதிகள் கலந்து நீங்கிக்
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்
குண்டர்சாக் கியர்தங் கொள்கை
படியறியப் பழுதென்றே மொழிந்துய்யும்
நெறிகாட்டும் பவள வாயர்
.
|
444 |
தருமபுரம் பெரும்பாணர் திருத் தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார
வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய
|
445 |
கிளைஞரும் மற்று அது கேட்டுக் ‘கெழுவு திருப் பதிகத்தில் கிளர்ந்த ஓசை
அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது’ என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்.
|
446 |
அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும்
உலகில் உேளாரும் தரெிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்
பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி
இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார்.
|
447 |
வேத நெறி வளர்ப்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்து நூல் புகன்ற பேத
நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார்
மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த.
|
448 |
வண் புகலி வேதியனார் ‘மாதர் மடப்பிடி’ எடுத்து வனப்பில் பாடிப்
பண் பயிலும் திருக்கடைக் காப்புச் சாத்த அணைந்து பெரும் பாணர் தாம்
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்கு
எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே.
|
449 |
அப்பொழுது திருநீலகண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து எழுந்து நோக்கி,
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச்
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் அன்றோ என்று தெளிந்து செய்வார்.
|
450 |
வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர்
ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்த
பாக்கியத்தின் மெய் வடிவாம் பாலறா வாயர் பணித்து அருளுகின்றார்.
|
451 |
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூடச்
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்பால்
எய்திய இக் கருவியினில் அளவு படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார்
|
452 |
சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர்’ எனக் கொடுப்பப் புகலி மன்னர்
தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார்.
|
453 |
அணை உறும் அக் கிளைஞர் உடன் பெரும் பாணர் ஆளுடைய பிள்ளையார் தம்
துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத் தோணிபுரத் தோன்றலாரும்
இணை இல் பெருஞ் சிறப்பு அருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப்
பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார்.
|
454 |
பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித்
தங்கு இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்
செங் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு ந
|
455 |
நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின்
|
456 |
உருகிய அன்பு உறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல
மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று,
பொரு இல் பதிகம் ‘போகம் ஆர்த்த பூண் முலையாள்’ என்று எடுத்துப் போற்றி.
|
457 |
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண் இல் கற்பச்
சேண் அளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்புச் சாத்திச் செங்கண் நாகப்
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும்
பாணனார் யாழில் இடப் பாலறா வாயர் அருள் பணித்த போது.
|
458 |
பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம்
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை.
|
459 |
மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நல் நீர்ப்
பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந் நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச் சாத்த மங்கை மூதூர்
தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ.
|
460 |
நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவ
மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்,
|
461 |
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர்
உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய அந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார்.
|
462 |
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று துதித்துப் போந்து எல்லை இல்லா
நீற்று நெறி மறையவனார் நீல நக்கர் மனையில் எழுந்து அருளி அன்பால்
ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார்.
|
463 |
நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மைப்
பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று
நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து.
|
464 |
கோது இலா ஆர் அமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி
ஆதி ஆம் மறைப் பொருளால் அருந்தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப்
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார்.
|
465 |
பரவிய காதலில் பணிந்து பாலறா வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில்,
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார்
உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி.
|
466 |
மற்று அவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு
மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்
பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தச்
கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக்
கண் நுதலைக் கைதொழுது, கலந்த ஓசைச்
சொல் தமிழ் மா
|
467 |
கழிக் கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச்
சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப் போய்த் தோகைமார் தம்
விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும்.
|
468 |
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து அருளும் பெருமை கேட்டுத்
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத் தொண்டர் ஓடிச் சென்று அங்கு
உருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார்.
|
469 |
சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங் குடியில் எழுந்து அருளிச் சீர்த்தி
நிறுத்து எண் திக்கிலும் நிலவும் தொண்டர் அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் சரத்தின் கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த் தொண்டருடன் அணைந
|
470 |
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங் கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெருந் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ. இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசை பாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரி
|
471 |
போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில்.
|
472 |
திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித் திங்களுடன் செங்கண் பாம்பு
மருவு நெடுஞ் சடை மவுலி மாணிக்க வண்ணர் கழல் வணங்கிப் போற்றி
உருகிய அன்பு உறு காதல் உள் அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப்
பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.
|
473 |
அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி,
அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டு
பொன் ஆர் மேருச் சிலையார் கோயில் மாடு
புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த
விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத்
தன் ஆவி நீங்கும் அவன்
|
474 |
வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்
மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப் பார் இன்றி,
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே
அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது,
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக்
கொள்கையினாலும் தீர்க்கக் குறையாது ஆக,
நீள் இரவு பு
|
475 |
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன்
இவ் இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை.
மன்னிய சீர் வணிகர் குல மணியே! யானும்
வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம்
|
476 |
அடியார் ஆம் இமையவர் தம் கூட்டம் உய்ய
அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே! செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல
நீல விட அரவு அணிந்த நிமலா! வெந்து
பொடியான காமன் உயிர் இரதி வேண்டப்
புரிந்து அளித்த புண்ணியனே! பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழு
|
477 |
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி
வரும் காலன் பெருங்கால வலயம் போலும்
செந் தறுகண் வெள் எயிற்றுக் கரிய கோலம்
சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா
இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான்
இடுக்கண் குழி நின்றும் ஏறுமாறும்
அந்தி மதிக் குழவி வளர்
|
478 |
இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும்
இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்
அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம்
மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார
மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல்
வைத்து அன்னம் என
|
479 |
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று
சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து
பரிவு உறுவாள் தனை நோக்கிப் ‘பயப்படேல் நீ!
பருவரலும் நும் பரிசும் பகர்வாய்’ என்னக்
கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
கண் அருவி சொரிந்து இழியக், காழி வேதப்
புரவலனார் சேவடிக
|
480 |
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை,
மருமகன் மற்று இவன், அவற்கு மகளிர் நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர், இவரில் மூத்தாள்
இவனுக்கு என்று உரை செய்தே ஏதிலானுக்குக்
உளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓர் ஒருவர் ஆக எனை ஒழிய ஈந்தான்,
தளர்ந்து அழ
|
481 |
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான்
மறி கடலில் கலம் கவிழ்த்தார் போல் நின்றேன்,
சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால்
துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர்
கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள்
|
482 |
சடையானை எவ்வுயிர்க்கும் தாய் ஆனானை
சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை
விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும்
பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை, ‘உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உ
|
483 |
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான்; சூழ்ந்த
பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப,
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை அவள் தனை நயந்த நம்பியோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
|
484 |
மற்று அவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் நாளில்.
மருகல் நகரினில் வந்து வலிய பாசம்
சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று
பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும
சுற்றும்
|
485 |
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார்
பொங்கு திரை நதிப்புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம்
திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக
மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில்
மன்னும் நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கைக் கனலார் கணபதீச் சர
|
486 |
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி யீச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார்வுறப் பாடலுற்றார் ‘அங்கமும் வேதமும்’ என்று எடுத்து.
|
487 |
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதியீச்சரம் காதலித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதியில் சில நாள்கள் போற்றித்
தொண்டருடன் அருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்
புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம் புகலூர் தொழப் போதுகின்றார்.
|
488 |
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப் பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்.
|
489 |
திருப்புகலூர்த் திருத் தொண்டரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த
விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப்
பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூமலி முன்றில் புடை வலம் கொண்டு
ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்
|
490 |
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம் புகலூர் மன்னு புண்ணியரை
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர்க் கண்ணீர் அருவி செய்ய,
மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து,
திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்
|
491 |
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில்,
வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்
பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்
|
492 |
மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார் தாம்
புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்று இடைப் பொன் தொடிப் பங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்வூ
|
493 |
நாவுக்கரசர் எழுந்து அருளும் நல்ல திருவார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவு உற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பரோடும்
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பணை எல்லை கடந்து போந்தார்.
|
494 |
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர் வந்து அணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித்
தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கித் தனித் தனியே
மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது.
|
495 |
மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தனர் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட, ஈறு இல் பெருந் தவத்தோர்
செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்
|
496 |
அரசு அருளிச் செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின்கண் தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலின் ‘சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன்’ என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்.
|
497 |
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர்த் தோன்றல் பின் காதல் தொடரத் தாமும்
பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரம் தொண்டரோடும் ‘பாடலன் நான் மறை’ பாடிப் போந்தா
|
498 |
துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர் ‘அள்ளல் கழனி ஆரூர் அடைவோம்’ என மொழிந்து அன்பு பொங்கப்
புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத
|
499 |
வான் உயர் செங்கதிர் மண்டிலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு, சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்
தேன் ஒடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்.
|
500 |
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச்
செங்கை நிறை மலர் கொண்டு தூவித் திரு இருக்குக் குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்.
|
501 |
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு
அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று
வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க்
கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்.
|
502 |
நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன்
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய
வான மாரியின் பொழிந்தது மலர் மது மாரி
|
503 |
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள்
தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலி தோரண நிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்.
|
504 |
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின்
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும்
நீல மாமணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவள வேதிகை மலர்ப் பந்தர்.
|
505 |
தழை மலர்த்தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம்
குழை முகத்தவர் ஆடு அரங்கு இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து
மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்.
|
506 |
விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும்
பிரச மென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர்
அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும்
புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொளும் பொழுது.
|
507 |
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகர் ஆம் சண்பையர் தலைவர்
அந்தம் ஆய் உலகு ஆதி ஆம் பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்.
|
508 |
ஆன அத்திருப் பதிகம் முன் பாடிவந்து அணையும்
ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார்
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த
வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்.
|
509 |
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்
தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்து ஆம்
பன் நெடும் சுடர் படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்.
|
510 |
மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக்
கூடு காதலின் கோபுரம் பணிந்து கை குவித்துத்
தேடு மால் அயற்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில்
நீடு வார் முன்பு நிலம் உறப் பல முறை பணிந்தார்.
|
511 |
பணிந்து வீழ்ந்தனர்; பதைத்தனர்; பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர்; பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார்;
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்.
|
512 |
செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து
அஞ்சு எழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்
|
513 |
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த
செங் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப்
பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப்
பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்
|
514 |
புற்று இடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக
பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி
நல்தவத் திருத்தொண்டர்கெளாடு நலம் சிறப்ப
மற்று வண்பதி தன் இடை வைகும் அந் நாளில்.
|
515 |
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத்
தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே
எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்.
|
516 |
ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வு என நிகழ் திருத் தொண்டர்கேளாடும்
ஈறு இலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார்.
|
517 |
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல
நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து
பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார்.
|
518 |
புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே.
|
519 |
காழியார் வாழ வந்து அருள் செயும் கவுணியப் பிள்ளையார் தாம்
ஆழியான் அறிஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார்
பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து
வாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப் பதியில் வைகி.
|
520 |
அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார்
தங்கும் நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே
எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுது எழுந்து அருளி வந்தார்
பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார.
|
521 |
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்றும் நாமச்
சே உகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப்
பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே
மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்.
|
522 |
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கிப்
பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே
தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனி முதல் தொண்டர் தாமே
யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்
|
523 |
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச்
சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை
சாலமிக்கு உயர் திருத் தொண்டின் உண்மைத் திறம் தன்னையே தெளிய நாடிக்
காலம் உய்த்தவர்கேளாடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடார்.
|
524 |
கும்பிடும் கொள்கையின் குறி கலந்து இசை எனும் பதிகம் முன் ஆன பாடல்
தம் பெருந்தலைமையால் நிலைமை சால் பதி அதன் பெருமை சால்பு உற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர
நம்பர் தம் பதிகள் ஆயின எனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்
|
525 |
புள் அலம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்றுப்
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழச் செல்வார்
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்பு உறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்.
|
526 |
கண்ணகன் புகலூரினைத் தொழுது போம் பொழுதினில் கடல் காழி
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே
வண்ணம் நித்திலச் சிவிகையும் பின் வர வழிக் கொள உறும் காலை
எண் இல் சீர்த்திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார்.
|
527 |
‘நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர்’ என்றலும், ‘சுடர்த் திங்கள்
மேய வேணியார் அருளும் இவ்வாறு எனில் விரும்பும் தொண்டர்கேளாடும்
போயது எங்குநீர் அங்கு யான் பின் வரப் போவது’ என்று அருள் செய்தார்.
|
528 |
என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட இருந் தவத்து இறையோரும்
‘நன்று நீர் அருள் செய்ததே செய்வன்’ என்று அருள் செய்து நயப்பு உற்ற
அன்றை நாள் முதல் உடன் செலும் நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார்
சென்று முன் உறத் திருஅம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்.
|
529 |
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச் செல்வார்
பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரு புகலூரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெருந் தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்.
|
530 |
அம்பர் மா நகர் அணைந்து மா காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை
உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்.
|
531 |
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச்
சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப் பெருங் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு
வாழ்ந்து இருந்தனர் காழியார் வாழ வந்து அருளிய மறை வேந்தர்.
|
532 |
பொருவு இலாத சொல் ‘புல்கு பொன் நிறம்’ முதல் பதிகங்களால் போற்றித்
திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்.
|
533 |
இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில்
கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய்
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும்
அந்நெடும்பதி அணைவுறக் கயலரோடு அடியவர் எதிர்கொண்டார்
|
534 |
மற்று அவண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில்
சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று
பற்று அறுப்பவர் ‘சடை உடையான்’ எனும் பதிக இன் இசை பாடி.
|
535 |
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு
விரவு நண்பு உடை குங்கிலிய பெருங் கலயர் தம் மனை மேவிக்
கரை இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி.
|
537 |
தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச்
செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீயச்சூர் பணிந்து ஏத்திப்
பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புர நகர் சேர்ந்தார்.
|
536 |
சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச் சில நாள் அமர்ந்து அருேளாடும்
விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் விருப்பொடும் தொழச் செல்வார்
மறைப் பெருந்திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருஆக்கூர்.
|
538 |
பாம்புரத்து உறை பரமரைப் பணிந்து நல் பதிக இன் இசை பாடி
வாம்புனல் சடை முடியினார் மகிழ்வு இடம் மற்றும் உள்ளன போற்றிக்
காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பகணை நீங்கித்
தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்கு உறச் செல்கிறார்.
|
539 |
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட
மெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார்
பின்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார்
எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார்.
|
540 |
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏத்தி
நறை மலர்ப் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப
இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார்.
|
541 |
வந்து திரு வீழி மிழலை மறை வல்ல
அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி
உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார்.
|
543 |
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண
மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார்
பூ இயலும் உந்தியான் போற்றப் புவிக்கு இழிந்த
தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்.
|
542 |
அப்போது அரையார் விரிகோவண ஆடை
ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி
மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்
கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார்.
|
544 |
வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின்
சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து
நிலம் கொண்ட மேனியராய் நீடு பெருங் காதல்
புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்.
|
545 |
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து
சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை
ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்று அழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்.
|
546 |
நீடிய பேரன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று
பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உள்கொண்டு
மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்.
|
547 |
வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச்
செந் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச்
சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை
அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்.
|
548 |
அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த்
தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே
பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே
எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்.
|
549 |
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கு ஆர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து
வீங்கு ஒலி நீர் வீழி மிழலையினில் மீண்டும் அணைந்து
ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் அந்நாளில்.
|
550 |
சேண் உயர் மாடப் புகலி உள்ளார் திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக்
காணும் விருப்பின் பெருகும் ஆசை கைம் மிகு காதல் கரை இகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும் பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்து அணைந்தார்.
|
551 |
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ் ஞானம் உண்டாரை முன்னா
ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார்.
|
552 |
சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம்பிரானாரைப் பணிந்து போந்து
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார்.
|
553 |
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு இல் சிவ ஞானப் பிள்ளையாரும்
நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே
அன்று புகலி அருமறையோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார்.
|
554 |
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் பொருள் ஆனார் தமைப் பரவும்
சீர்ப் பட்ட எல்லை இனிது செல்லத் திருத் தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப் பட்ட வண்கைக் கவுணியர்க்குக் கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார
|
555 |
‘தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள்
சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும் படியால் அறிதி’ என்று பெயர்ந்து அருள் செய்யப் பெருந்தவங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத் தொடும் உணர்ந்தார
|
556 |
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு
மறி உற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்.
|
557 |
‘மைம் மரு பூங்குழல்’ என்று எடுத்து மாறு இல் பெருந்திருத்தோணி தன் மேல்
‘கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னில்
செம்மை தரும் விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல்’ என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்.
|
558 |
செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித் திருக் கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சு இவர் சோலைப் புகலி மேவும் மா மறையோர் தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மைத் திறத்தை அருள் செய்கின்றார்
|
559 |
பிரம புரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி
வருவது மேற் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று
தெரிய உரைத் தருள் செய்து, ‘நீங்கள் சிரபுர மாநகர் செல்லும்’ என்றார்.
|
560 |
என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலில் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து
மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும் நியதியராய் உறைந்தார்.
|
561 |
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத் திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கு அரசரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில்.
|
562 |
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற
மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப்
பாலறா வாயருடன் அரசும் பார் மேல்
‘கண் நுதலான் திருநீற்றுச்
|
563 |
வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி
மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி
உலகங்கள் அனைத்துமாய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய
அடி பரவி அன்று இரவு துயிலும் போது
கான் நாடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில் அணைந்து
|
564 |
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
‘நம்பிரான் அருள் இருந்த வண்ணம்’ என்றே
நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்பு உலாம் மலர் இதழி வீழிநாதர் மணிக்
கோயில் வலம் செய்யப் புகுந்த வேளை
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்
|
565 |
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
‘நம்பிரான் அருள் இருந்த வண்ணம்’ என்றே
நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்பு உலாம் மலர் இதழி வீழிநாதர் மணிக்
கோயில் வலம் செய்யப் புகுந்த வேளை
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்
|
566 |
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று
கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க
‘நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
நல் விருந்தாய் உண்பதற்கு வருக’ என்று
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உ
|
567 |
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்
நாள் கூறு திரு அமுது செய்யக் கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்
திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்
‘தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர்
திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவும் மிக்க அடியவருக்கு அளியா வண்ண
|
568 |
திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
‘ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால்
காசு தனை வாசி பட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வ
|
569 |
திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் ‘சிவபெருமான் நமக்குத் தந்த
ஒரு காசு வாசிபட மற்றக் காசு
நன்று ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால்
பெறும் காசு ஆம் ஆதலினால் பெரியோன் தன்னை
வரும் நாள்கள் தரும் காசு வாசி தீரப்
|
570 |
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு
‘வாசி தீர்த்து அருளும்’ எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர்
பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட நல் தவத்தீர்! இக் காசு சால நன்று
வேண்டுவன நாம் தருவோம்! என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில்
|
571 |
அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி
அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்து பொங்கி
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத்
திரு முடி மேல் திங்கெளாடு கங்கை சூடும்
சிவ பெருமான் அருள் செய்யச் சிறப்பின் மிக்க
பெருமை தரு சண்பை நக
|
572 |
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி
அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த
புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப்
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத்
தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்
|
573 |
நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப்
பாட்டு ஒலி நீர்த் தலையாலம்காடு மாடு
பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி
நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி
நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடித்
தேடு மறைக்கு அரியார் தம் விளமர்
|
574 |
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றிச்
|
575 |
மற்று அவ் ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி
மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்
பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்
பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட
கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி
செற்றவர்
|
576 |
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும்
கடல் காழிக் கவுணியர் தம் தலைவர் தாமும்
சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத்
திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பின் பொங்கி
ஊர் அடைய அலங்கரித்து விழவும் கொள்ள
உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்
வார் முரசம்
|
577 |
முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை
முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் தம்
பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னி மிசைக் கரம் குவித்து முன்பு சென்று
சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின்
|
578 |
சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும்
தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர்
மல்கு திரு மறுகின் கண் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லை இல்லா வகை ‘அர’ என்று எடுத்த ஓசை
இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி
ஒல் ஒலி நீர் வேலை ஒலி
|
579 |
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற
அணி மறுகின் ஊடு எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக் குறுகிப் புக்கு
முடிவு இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ
முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்நாள்
படியின் மறை அருச்ச
|
580 |
அரு மறைகள் திருக் காப்புச் செய்து வைத்த
அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும்
பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப்
பெருமையினால் அன்று முதலாகப் பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை
உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர் வியப்பு எய
|
581 |
அப்பரே! வேத வனத்து ஐயர் தம்மை
அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும என்ன
விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு ‘என்னை
இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆக
|
582 |
பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும்
பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில்
சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச்
செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி
நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட
ஆடிய சேவடியார் த
|
583 |
மற்று அது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி
அற்புத நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்.
|
584 |
கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கைகேளாடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார்.
|
585 |
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி,
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.
|
586 |
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி
நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய
மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்.
|
587 |
அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் ‘சதுரம்’ என்னும்
இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே.
|
588 |
அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகையாரும் அஞ்சொல்
தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார்.
புடைப்பொழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர்
நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி.
|
589 |
அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரை
கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்.
|
590 |
அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்க பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க
இரு பெருந்தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து
திரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள.
|
591 |
வேதங்கள் எண் இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார்
நாதங்கள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்.
|
592 |
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க
வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்
பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிது ஆம் அன்றே.
|
593 |
இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி
மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில்
மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து ‘வாய்மூர்
அவ்விடை இருத்தும் அங்கோ வா’ என்று அங்கு அருளிப் போக.
|
594 |
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார்
மண்டிய காதலோடும் மருவுவார் போன்றும் காணார்
எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா
அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும்.
|
595 |
அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் ‘அப்பர்
எங்கு உற்றது’ என்று கேட்ப ‘எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால்’ என்று உரைத்திடப் ‘போன தன்மை
சங்கை உற்று என்கொல்’ என்று தாமும் அங்கு அணையப் போந்தார்.
|
596 |
அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்டத் ‘தளரிள வளரும்’ பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்.
|
597 |
நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப்
பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக்
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு
தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார்.
|
598 |
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு
மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக்
கண் பயில் நெற்றியார் தம் கழலிணை பணிந்து போற்றிப்
பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே.
|
599 |
இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு
மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக்
கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை.
|
600 |
தனெ்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே
அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப,
மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும்
நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே.
|
601 |
பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடு
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.
|
602 |
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியும் முக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி,
அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை.
|
603 |
வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான்
திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும்
குரை கழல் அமைச்சனார் ஆம் குலச் சிறையாரும் என்னும்
இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாது ஆக.
|
604 |
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார்.
|
605 |
இந் நெறி ஒழுகுகின்றார் ஏழு உலகு உய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்
செந் நெறி விளக்குகின்றார் திரு மறைக்காடு சேர்ந்த
நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்.
|
606 |
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழும் மகிழ்ச்சி பொங்க
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி
வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கு அரசியாரும்
சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்.
|
607 |
காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே
‘போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய
பாதங்கள் பணிமின்’ என்று பரிசன மாக்கள் தன்மை
மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார்.
|
608 |
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவுடைமாந்தர் அங்கண்
நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்.
|
609 |
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ
பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள்
வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்.
|
610 |
மற்று அவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப்
பொன் கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார்.
|
611 |
புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர
அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய
நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத்
தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்.
|
612 |
நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர்
மன்றல் அங்குழலியார் ஆம் மானியார் தமக்கும் மானக்
குன்று என நின்ற மெய்ம்மைக் குலச் சிறையார் தமக்கும்
நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள்.
|
613 |
‘கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும்
கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும்’ என்று இறைஞ்சி விட்டார்.
|
614 |
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர்
ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம்
‘நன்று நமை ஆளுடைய நாதன் பாதம்
நண்ணாத எண் இல் அமண் குண்டர் தம்மை
வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக
நி
|
615 |
மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து
பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு
உற்ற செயல் பாண்டிமா தேவியாரும்
உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொல் தனி மன்னவருக்குப் புகலி மன
|
616 |
அரசர் அருளிச் செய்கின்றார் ‘பிள்ளாய்! அந்த
அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய
எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்
பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர்த்தாள் போ
|
617 |
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும்
அவர் முன்னே எழுந்து அருள அமைந்த போது
புரம் எரித்தார் திருமகனார் ‘அப்பர்! இந்தப்
புனல் நாட்டில் எழுந்து அருளி இருப்பீர்’ என்று
கர கமலம் குவித்து
|
618 |
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்
வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்
பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப்
பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து
மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம்
வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும்
காதலினால் அருமை உறக் கலந்து
|
619 |
திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம்
உய்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து
ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று
ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத்
|
620 |
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி தாரை காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப.
|
621 |
மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப
அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபமுடன்
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக்
கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார்.
|
622 |
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி
அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக்
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத்
தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.
|
623 |
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி
எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி
மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப்
பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார்.
|
624 |
திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ்ப் பதிக மலர் போற்றும் படி பாடி
இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார்.
|
625 |
கருங் கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித்
திருந்திய சீர்ப் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி
மருங்கு மிடை தடஞ்சாலி மாடு செறி குலைத்தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார்.
|
626 |
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும்;
கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும்;
அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும்;
எங்கும் எங்கும் மலர்ப் படுகர்; இவை கழிய எழுந்து அருளி.
|
627 |
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்
இடம் எங்கும் அந்தணர்கள் ஓது கிடை ஆக நிலை
மடம் எங்கும் தொண்டர் குழாம்; மனை எங்கும் புனைவதுவை
நடம் எங்கும்; ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து.
|
628 |
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள்
கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து
போர் நாடும் சிலை மறவர் புன் புலவைப்பு இடை போகிச்
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார்.
|
629 |
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரு நதிகள் பல
சென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான்
கன்று தறெித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார்
கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடுங் குன்றம்.
|
630 |
கொடுங் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை
அடுங் குன்றம் உரித்தானை வணங்கி அருந்தமிழ் பாடி
நெடுங் குன்றும் படர் கானும் நிறை நாடும் கடந்து மதி
தொடுங் குன்ற மதில் மதுரைத் தொல் நகர் வந்து அணைகின்றார்.
|
631 |
இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கட்கு அழிவு முன் சாற்றல் உற்றுப்
பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத் தீக் கனாக்கேளாடும்
துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்.
|
632 |
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும்
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்
கொள்ளும் மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய
புள் இனம் ஆன தம்மின் பூசல் இட்டு அழிவு சாற்றும்.
|
633 |
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக்
கால்களும் தடுமாறாடிக் கண்களும் இடமே ஆடி
மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார்
மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்.
|
634 |
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள
வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய
முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச்
சிந்தையில் செற்றம் முன் ஆம் தீக் குணத் தலை நின்றார்கள்.
|
635 |
இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பு இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்.
|
636 |
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித்
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி
‘இன்னன கனவு கண்டோம்’ என எடுத்து இயம்பல் உற்றார்.
|
637 |
சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக
ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்.
|
638 |
‘குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப்
பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம் பின்
ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக்
கண்டனம்’ என்று சொன்னார் கையறு கவலை உற்றார்.
|
639 |
கான் இடை, நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம்
மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம்’ என்பார்
‘கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம்
ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம்’ என்பார்.
|
640 |
‘மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை
உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி
விழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு
நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம்’ என்பர்.
|
641 |
‘ஆவது என் பாவிகாள்! இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே’ என்று
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார்
‘யாவது செயல்’ என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள்.
|
642 |
அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச்
சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல்
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும்
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நல் நிமித்தம் மேன் மேல்.
|
643 |
அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த
உளம் மகிழ்வு உணரும் காலை உலகு எலாம் உய்ய வந்த
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை
கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்.
|
644 |
அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையால் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.
|
645 |
மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற
கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி
நங்கள் தம்பிரான் ஆய ஞான போனகர் முன்பு எய்தி
‘இங்கு எழுந்து அருள உய்ந்தோம்’ என எதிர் கொள்ளும் என்றார்.
|
646 |
மன்றல் அங்குழலினாரை வணங்கிப் போந்த அமைச்சனாரும்
வென்றிவேல் அரசனுக்கும் ‘உறுதியே’ என விரைந்து
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை.
|
647 |
அம்புய மலராள் போல்வார் ‘ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டும்’ என்று கொற்றவன் தனக்கும் கூறித்
தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்.
|
648 |
திரு நிலவும் மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து
வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப்
பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்.
|
649 |
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணர் ஆம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாதம் மாதிரம் உள்பட முழங்கச்
செந் தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப.
|
650 |
பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த
எண் இல் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட
மண் உலகமே அன்றி வான் உலகும் செய்த பெரும்
புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த.
|
651 |
துன்னும் முழு உடல் துகளால் சூழும் உணர்வினில் துகளால்
அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம்
கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட.
|
652 |
பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு
ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப.
|
653 |
புரசை வயக் கடக் களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத்
தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க
உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம்
பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற.
|
654 |
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்து அருளும் பொழுது இசைக்கும்
ஒப்பு இல் நித்திலப் பொன் தனிப் பெருங் காளம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை
செப்பு அரும் பெருமைக் குலச் சிறையார் தம் செவி நிறை அமுது எனத் தேக்க
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பின
|
655 |
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார்
நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன் வரும் நல்தவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு உற அணைந்து முன் பணிந்தார்.
|
656 |
நிலமிசைப் பணிந்த குலச் சிறையாரை நீடிய பெருந்தவத் தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு
மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம்
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற.
|
657 |
சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்று அவர் தமை அணைந்து
கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது அவரும் முன் நிற்ப
வரம்மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்.
|
658 |
‘செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும்
நம் பெருமான் தன் திரு அருள் பெருகும் நன்மை தான் வாலிதே’ என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசைத்தாழ்ந்து அடி வணங்கித்
தம் பெருந் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மை ஆம் நிலை உரைக்கின்றார்.
|
659 |
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திரு அருள் உடையேம்
நன்றி இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திரு நீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் எ
|
660 |
இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க் கரசியாரும் ‘நம்முடைய வாழ்வு எழுந்து அருளியது’ என்றே
அங்கு நீர் எதிர் சென்று அடிபணிவீர் என்று அருள் செய்தாள்’ எனத் தொழுது ஆர்வம்
‘பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து’ போற்றினார் புரவலன் அமைச்சர்
|
661 |
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவுஇலா அருள் புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித் தலை அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புடை சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவத் தொண்டரை நோக்கி
‘ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது’ என வினவ.
|
662 |
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி ‘முருகு அலர் சோலைகள் சூழ்ந்து
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி சூழ் வியன் நெடும் கோபுரம் தோன்றும்
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திருவாலவாய் இது’ என்றார்.
|
663 |
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி
மண்டு பேர் அன்பால் மண்மிசைப் பணிந்து ‘மங்கையர்க்கரசி’ என்று எடுத்தே
‘எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே’ என்று இருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற.
|
664 |
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும்
தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடு உயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்.
|
665 |
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த
கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு
நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார்
மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார்.
|
666 |
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும்
செங் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி
எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்.
|
667 |
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும்
மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து
சீல மாதவத் திருத் தொண்டர் தம்மொடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்.
|
668 |
சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச்
சாத்தி நல் இசைத் தண் தமிழ்ச் சொல் மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி
மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய.
|
669 |
பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது
வெள்ள நீர் பொதி வேணியார் தமைத் தொழும் விருப்பால்
உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஒதுங்கும்
தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த.
|
670 |
மருங்கில் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக்
கருங் குழல் கற்றை மேல் குவிகைத் தளிர் உடையார்
‘பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார்’ என்னப்
பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்.
|
671 |
தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய
பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும்
இன் அருள் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார்.
|
672 |
ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து
மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே
பானல் அம் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி
‘யானும் என் பதியும் செய்த தவம் என் கொல்’ என்றார்.
|
673 |
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக்
காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும்
‘சூழும் ஆகிய பர சமயத்திடைத் தொண்டு
வாழும் நீர்மையீர்! உமைக் காண வந்தனம்’ என்றார்.
|
674 |
இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார்
மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய
அன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித்
துன்னும் மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப் பொழுது.
|
675 |
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி
‘மல்கு கார் அவண் இருள் கெட ஈங்கு வந்து அருள
எல்லை இல் தவம் செய்தனம்’ என எடுத்து இசைத்தார்.
|
676 |
அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்.
|
677 |
பரவு காதலின் பாண்டிமா தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பச்
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய.
|
678 |
வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர்
பழுது இல் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுகும் மெய் இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்.
|
679 |
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்.
|
680 |
மற்று இவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச்
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்.
|
681 |
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி
ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்.
|
682 |
புக்க போது அவர் அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத்
தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்.
|
683 |
‘ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர்’ என்று
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்
‘மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம்
மேவலால் இன்று கண்டுமுட்டுயாம்’ என்று விளம்ப.
|
684 |
என்று கூறலும் ‘கேட்டு முட்டு யானும்’ என்று இயம்பி
‘நன்று நல் அறம் புரிந்த வா நான்’ என்று நகுவான்
கன்றும் உள்ளத்தன் ஆகி, ‘அக் கண் நுதல் அடியார்
இன்று இம் மாநகர் அணைந்தது என்? அவர்கள் யார்?’ என்றான்.
|
685 |
‘மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச்
சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப்
பாலன் அன்பர் தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை
மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல’.
|
686 |
என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்தது
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன்
மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம்
சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் சொல்வான்.
|
687 |
மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல்
உற்ற செய் தொழில் யாது செய்கோம்’ என உரைப்பச்
செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார்.
உரை
|
688 |
‘வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும்
சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில்
வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால்
இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார்.
|
689 |
‘ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப்
போவது’ என்று அவரைப் போக்கிப் பொய்ம்மையைப் பொருளாகக் கொண்டான்
யாவதும் உரையாடாதே எண்ணத்தில் கவலையோடும்
பூஅணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்.
|
690 |
மன்னவன் உரைப்பது இன்றி இருப்ப மா தேவியார்தாம்
‘என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவ! நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய்’ என்றார்.
|
691 |
தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான்
‘காவி நீள் கண்ணினாய்! கேள் காவிரி நாட்டில் மன்னும்
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல’ என்று.
|
692 |
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டுயானும் காதல்
வண்டு உணத் துதைந்த கோதை மானியே! இங்கு வந்த
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை’ என்றான்.
|
693 |
மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கரசியார் தாம்
‘நின்னிலை இதுவே ஆகில் நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் விடாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதி ஆகும் சுழி உறேல் மன்ன!’ என்றார்.
|
694 |
சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழுமலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும்
கொந்து அலர் குழலார் போதக் குலச்சிறையார் அங்கு எய்த
இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்.
|
695 |
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று
‘பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு’ என்பார்
‘இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம்’ என்றார்.
|
696 |
மானியார் தாமும் அஞ்சி, ‘வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம்?’ என்று எண்ணி
‘ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும்
ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது’ என்றார்.
|
697 |
இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன
அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில்
தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ
சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார்.
|
698 |
ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்க
மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே
பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள்
சாதியா வகை கண்டு அமண் குண்டர்கள் தளர்ந்தார்.
|
699 |
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி
‘விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை
உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும்’ என்று உணர்வார்.
|
700 |
மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும்
புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு
அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல்
வந்து, தம் தொழில் புரிந்தனர்; வஞ்சனை மனத்தோர்.
|
701 |
திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்
மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்
பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்.
|
702 |
கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத்
தொழுது நின்று, அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன
பொழுது, மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி.
|
703 |
‘என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ’ என்று பின்னையும் அச்சம்
முன்பு உறப் பின்பு முனிவு உற முத்தமிழ் விரகர்
‘மன் புரக்கும் மெய்ம்முறை வழு’ என மனம் கொண்டார்.
|
704 |
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்
‘செய்யனே திரு ஆலவாய்’ எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்
‘பையவே சென்று பாண்டியற்கு ஆக’ எனப் பணித்தார்.
|
705 |
பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் அரசன் பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்
தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணி ‘பையவே செ
|
706 |
திருந்து இசைப் பதிகத் தொடை திரு ஆல வாயின்
மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால்
விரிந்த வெந் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப்
பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றது அன்றே
|
707 |
செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில்
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக்
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப
வெய்யவன் குணக் கடலிடை எழுந்தன மீது.
|
708 |
இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச் சிறையாருடன் கேட்டுச்
‘சிவபுரப் பிள்ளையாரை இத் தீயவர் நாட்டு
வரவழைத்த நாம் மாய்வதே’ என மனம் மயங்கி.
|
709 |
பெருகும் அச்சமோடும் ஆர் உயிர் பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து
கருமுருட்டு அமண் கையர் செய் தீங்கு இது, கடைக்கால்
வருவது எப்படி ஆம் என மனம் கொள்ளும் பொழுது.
|
710 |
‘அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள்
உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத
விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும்
வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார்.
|
711 |
வேந்தனுக்கு மெய் விதிர்ப்பு உற வெதுப்புறும் வெம்மை
காந்து வெந்தழல் கதுமென மெய் எலாம் கவர்ந்து,
போந்து மாளிகைப் புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க.
|
712 |
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப்
புணர் இளங் கதலிக் குருத்தொடு தளிர் புடையே
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக.
|
713 |
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த
திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல்
உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக்
கருத்து ஒழிந்து, உரை மறந்தனன் கௌரியர் தலைவன்.
|
711 |
வேந்தனுக்கு மெய் விதிர்ப்பு உற வெதுப்புறும் வெம்மை
காந்து வெந்தழல் கதுமென மெய் எலாம் கவர்ந்து,
போந்து மாளிகைப் புறத்து நின்றார்களும் புலர்ந்து
தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க.
|
715 |
மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ
மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது
பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொரி சிதறி வீழக
|
716 |
கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள்
கை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக் ‘காவாய்
அருகனே! அருகனே! என்று என்று ஓதி,
அடல் வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி
பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல
ஒருவரும் இங
|
717 |
பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப் ‘புகலியில் வந்து நம்மை
ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு
மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ’ என்று கூற.
|
718 |
கொற்றவன் அமைச்சனாரம் குலச்சிறையாரும் தாழ்ந்து
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு
முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார்.
|
719 |
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து ‘இந்த வெப்பு
வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து
பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே’ என்று.
|
721 |
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வு அளிப்போர் கூற
ஞான சம்பந்தன் என்னும் நாம மந்திரமும் செல்ல
ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும்
மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கலுற்றான்.
|
722 |
மன்னவன் அவரை நோக்கி ‘மற்று இவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின’ என்று எண்ணி
‘மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன்’ என்றான்.
|
720 |
காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள்
மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கி
தீய இப்பிணியே அன்றிப் பிறவியும் தீரும் என்றார்.
|
723 |
என்று முன் கூறிப் பின்னும் ‘யான் உற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும்’ என்ன
அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார்.
|
724 |
பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தால்
மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு
நாயகப் பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி.
|
725 |
மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே
அன்ன மெல் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி,
மின் இடை மடவார் சூழ, வேல் படை அமைச்சனாரும்
முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
|
726 |
திருமடம் சாரச் சென்று. ‘சேயரிக் கண்ணினார் முன்
வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை
சிரபுரப் பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப்
பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார்.
|
727 |
பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும்
ஈண்டு வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்யச் சண்பை
ஆண் தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளிச் செய்ய
மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார்.
|
728 |
ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை
வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத்
தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்.
|
729 |
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடுந்தொழில் நினைந்தே
மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப்
புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நிலம் உற விழுந்தார்
கொண்ட குறிப் போடு நெடிது உயிர்த்து அழிந்த கொள்கையராய்.
|
730 |
உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்
தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக்
கரையில் கவலைக் கடற்கு ஓர் கரை பற்றினால் போன்று
விரைவு உறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு.
|
731 |
அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட
இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும்
தெரி மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச்
‘திருவுடையீர்! உங்கள் பால் தீங்கு உளதோ?’ என வினவ.
|
732 |
வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீர்ந்தோம்
வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால்
எஞ்சல் இலாக் கொடுவெதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது.
|
733 |
‘வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பு அவர் தாம்
செய்யும் அதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால்
மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன் உயிரும்’ என உரைத்தார்கள்.
|
734 |
என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர்
‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா, உணர்வு இலா அமணர் தம்மை
இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால்’ என்றார்.
|
735 |
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்
‘அழுந்தும் இடர்க் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருளச்
செழுந் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால்
எழுந்து அருளப் பேறு உடையோம் என் பெறோம்’ எனத் தொழலும்.
|
736 |
‘ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்
பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச்
சே உயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன்’ என்று
பூ அலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்.
|
737 |
வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின் நின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து
கை இணை தலையின் மீது குவியக் கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாய் உள் புக்கார்.
|
738 |
‘நோக்கிட விதி இலாரை நோக்கி நான் வாது செய்யத்
தீக் கனல் மேனியானே திருவுளமே’ என்று எண் இல்
பாக்கியப் பயனாய் உள்ள பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார்.
|
739 |
கான் இடை ஆடுவாரைக் ‘காட்டு மா உரி’ முன் பாடித்
தேன் அலர் கொன்றையார் தம் திரு உளம் நோக்கிப் பின்னும்
ஊனம் இல் ‘வேத வேள்வி’ என்று எடுத்து உரையின் மாலை
மானம் இல் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி.
|
740 |
‘ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க்கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவ பெருமானே’ என்றார்.
|
741 |
நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு, புனித நீற்று
மேதகு கோலத்தோடும் விருப்பு உறு தொண்டர் சூழ
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார்.
|
742 |
அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேற் கொண்ட போதில்
எம் மருங்கினிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி
மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே.
|
743 |
பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி
நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன
வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு
எல்லை இல் முத்தின் காளம் தாரை சங்கு எங்கும் ஓத.
|
744 |
கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியின் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் ‘முன்பு
பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத’ என்றார்.
|
745 |
தென்னவன் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார்
கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை.
|
746 |
கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப்
பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற
முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான்.
|
747 |
மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச்
சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு ‘இதுவோ பண்பால்
நம் தனிச் சமயம் தன்னை நாட்டும் ஆறு’ என்று பின்னும்.
|
748 |
நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில்
அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும்
முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து, மற்று அவரால் தீர்ந்தது
என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார்.
|
749 |
பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே
எய்திய தெய்வச் சார்வால் ‘இரு திறத்தீரும் தீரும்
கைதவம் பேசமாட்டேன்’ என்று கைதவனும் சொன்னான்.
|
750 |
என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்
தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார்
வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு
பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார்.
|
751 |
குலச்சிறையார் முன்பு எய்தக் கொற்றவன் தேவியாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த
கலைச் செழுந் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான்.
|
752 |
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித்
தண் துணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட
வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை
கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பின் உள் அச்சம் கொண்டார்.
|
753 |
செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று
விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி
அழிவுறு மனன் நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக்
‘கெழுவு உறு பதி யாது?’ என்று விருப்புடன் கேட்ட போது.
|
754 |
பொன்னி வளம் திரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர்’ எனச் சிறந்த
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்.
|
755 |
பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது
உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர்
கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத்
துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார்.
|
756 |
காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல்
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாம்
கோலும் நூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்.
|
757 |
பிள்ளையார் அது கேளாப் ‘பேசுக நும் பொருள் எல்லை
உள்ளவாறு’ என்று அருள, ஊத்தைவாய்ப் பறி தலையார்
துள்ளி எழுந்து அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற
ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி.
|
758 |
தென்னவன் தன்னை நோக்கித் ‘திருமேனி எளியர் போலும்
இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண் இலார்கள்
மன்ன! நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும்
பின்னை இவ் அமணர் மூள்வார் வல்லரேல் பேச’ என்றார்.
|
759 |
மாறனும் அவரை நோக்கி ‘வருந்தல் நீ’ என்று ‘மற்று
வேறு வாது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும்
ஆறு அணி சடையினாருக்கு அன்பராம் இவரும் நீங்கள்
தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிவிப்பீர்’ என்றான்.
|
760 |
ஞான ஆர் அமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி,
‘மானின் நேர் விழியினாய் கேள்! மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம். நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன்’ என்று எழும் திருப்பதிகம்பாடி.
|
761 |
பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான்
‘இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்
தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப.
|
762 |
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி ‘நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்
முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும்’ என்றார்.
|
763 |
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத்
தீது உறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான்.
|
764 |
தென்னவன் நோக்கம் கண்டு திருக் கழுமலத்தார் செல்வர்
‘அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது’ என்று
பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி.
|
765 |
திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன்
பொரு அரு வெப்பு நீங்கிப் பொய்கையின் குளிர்ந்தது அப்பால்
மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாது என்னப் பொங்க.
|
766 |
உறி உடைக் கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திச்
செறி மயல் பீலி தீய தென்னன் வெப்பு உறு தீத்தம்மை
எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்
அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்.
|
767 |
பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற
மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே.
|
768 |
மன்னவன் மொழிவான் ‘என்னே! மதித்த இக் காலம் ஒன்றில்
வெந் நரகு ஒரு பால் ஆகும்; வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்;
துன்னும் நஞ்சு ஒரு பால் ஆகும்; சுவை அமுது ஒரு பால் ஆகும்;
என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும்’ என்பான்.
|
769 |
‘வெந் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும்
வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே!
இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர்’ என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான்.
|
770 |
திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்தது வெப்பு அகன்று பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்.
|
771 |
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப்
‘பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன்’ என்றே உளம் களித்து உவகை மிக்கார்.
|
772 |
மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற
ஆன பேர் இன்பம் எய்தி, உச்சி மேல் அங்கை கூப்பி,
மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்கி வந்த
‘ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்’ என்றான்.
|
773 |
கந்து சீறும் மால் யானை மீனவன் கருத்து நேர்
வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம்
முந்தை மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார்.
|
774 |
சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால்
கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லல் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார்.
|
775 |
பிள்ளையாரும் ‘உங்கள் வாய்மை பேசுமின்கள்’ என்றலும்
தள்ளும் நீர்மையார்கள் ‘வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது’ என்ன ஒட்டினார்.
|
776 |
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும்
‘கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது
ஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது’ உமக்கு எனச்
சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார்.
|
777 |
என்ன வாது செய்வது என்று உரைத்ததே வினா எனாச்
‘சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால்
வெந் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது’ என்றனர்.
|
778 |
என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார்
‘நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான்
வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின்’ என்றனர்.
|
779 |
அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்து உறும் அளவில்
ஒப்பு இல் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால்
செப்பு அருந்திறல் மன்னனும் திருந்து அவை முன்னர்
வெப்பு உறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான்.
|
780 |
ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கித்
தீ அமைத்தலும் சிகை விடு புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி.
|
781 |
செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த
பொங்கு இசைத் திருப்பதிக நன் முறையினைப் போற்றி,
‘எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே
அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார்’.
|
782 |
சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்மையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்
நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் ‘போகம் ஆர்த்த பூண் முலையாள்’.
|
783 |
அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெங் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து
கைத் தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.
|
784 |
நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்
என்னை ஆளுடை ஈசன் தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆக எனத் ‘தளிர் இள வளர் ஒளி’ பாடி.
|
785 |
செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண
வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.
|
786 |
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டு உலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீ இடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.
|
787 |
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவு செந் தீயினில் இடுவார்
உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்.
|
788 |
அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர்
வெஞ் சுடர்ப் பெருந்தீயினில் விழுத்திய ஏடு
பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால்
நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து இலர் நின்றார்.
|
789 |
மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின்
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப.
|
790 |
எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக்
அடுத்து ‘நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின்’ என்றான்.
|
791 |
அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில்
பெருகு தீக் கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பார்.
|
792 |
செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் ‘ஏடு இன்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான்
|
793 |
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அது ஆறு ஆக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால்
துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர்! போலும் என்றான்.
|
794 |
தென்னவன் நகை உள்கொண்டு செப்பிய மாற்றம் தேரார்
சொன்னது பயனாக் கொண்டு சொல்லுவார் ‘தொடர்ந்த வாது
முன் உற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது’ என்றார்.
|
795 |
தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு ‘இம்
மாற்றம் என் ஆவது’ என்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ்ச் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்.
|
796 |
‘நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம்
ஏடு உற எழுதி மற்று அவ் ஏட்டினை யாமும் நீரும்
ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு நல்பொருள் பரிப்பது’ என்றார்.
|
797 |
என்று அமண் கையர் கூற, ஏறு சீர் புகலி வேந்தர்
‘நன்று அது செய்வோம்’ என்று அங்கு அருள் செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்சனார் தாம் ‘வேறு இனிச் செய்யும் இவ்வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது’ என்றார்.
|
798 |
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே ‘தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங் கழு ஏற்றுவான் இவ் வேந்தனே’ என்று சொன்னார்.
|
799 |
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
‘செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர்’ என்று
‘பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்
பொற்பு உற விடுவதற்குப் போதுவது’ என்று கூற.
|
800 |
பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து
தெள்ளு நீர்த் தரளப் பத்திச் சிவிகை மேல் ஏறிச் சென்றார்
வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்.
|
801 |
தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப்
பின் உற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம்
மன்னிய மதுரை மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார்.
|
802 |
‘மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த
ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும்’ என்பார்;
‘பால் நறும் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார் தாம்
மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார்; என்பார்.
|
803 |
‘எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர்’ என்பார்;
‘புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம்’ என்பார்;
‘பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம
வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள்’ என்பார்.
|
804 |
‘ஏதமே விளைந்தது இந்த அடிகள்மார் இயல்பால்’என்பார்;
‘நாதனும் ஆல வாயில் நம்பனே காணும்’ என்பார்;
‘போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது’ என்பார்;
‘வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும்’ என்பார்.
|
805 |
‘அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர்’ என்பார்;
‘கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும்’ என்பார்;
‘வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம்’ என்பார
‘விடிவதாய் முடிந்தது இந்த வெஞ் சமண் இருளும்’ என்பார்.
|
806 |
‘நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார் கேளா’ என்பார்;
‘இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ’ என்பார
‘பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர்’ என்பார
‘மருப்பு உடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம்’ என்பார்.
|
807 |
‘ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார்’ என்பார்
‘ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை’ என்பார
‘நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார்’ என்பார்;
‘நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர்’ என்பார்.
|
808 |
‘தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர்’ என்பார்;
‘ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது’ என்பார
‘நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும்’ என்பார்.
|
809 |
இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின் ஒளி மணிப் பொன் காம்பின் வெண் குடை மீது போதப்
பன் மணிச் சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உள்ளோர்க்கு
நல் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார்.
|
810 |
‘தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண்கையன் வந்தான்
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்
என்று பன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க.
|
811 |
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும்
புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார்.
|
812 |
கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம்
சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல்
நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும்
பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு.
|
813 |
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி
‘நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும்
வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக’ என்றான்
தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்
|
814 |
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய்
அடுபவர் பொருளை ‘அத்தி நாத்தி’ என்று எழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே.
|
815 |
ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்
தேறும் மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார்
பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு
நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.
|
816 |
காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு
நாண் இலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச்
சேண் இடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.
|
817 |
வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால்
ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி
ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று
‘மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும்’ என்றார்.
|
818 |
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசு இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்
பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற.
|
819 |
தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்
பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை
துன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே.
|
820 |
உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்
நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.
|
821 |
‘அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க’ என்று
இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச்
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம்.
|
822 |
வேள்வி நல் பயன் ‘வீழ் புனல் ஆவது’
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
‘ஆளும் மன்னனை வாழ்த்தியது’ அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.
|
823 |
‘ஆழ்க தீயது’ என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் ‘அரன் பெயர்
சூழ்க’ என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே.
|
824 |
சொன்ன ‘வையகமும் துயர் தீர்கவே’
என்னும் நீர்மை இக பரத்தில் துயர்
மன்னி வாழு் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்.
|
825 |
‘அரிய காட்சியர்’ என்பது அவ் வாதியைத்
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார்.
|
826 |
‘ஆயினும் பெரியார் அவர்’ என்பது
மேய இவ் இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்றதாம்.
|
827 |
பின்பும் ‘ஆர் அறிவார் அவர் பெற்றி
என்பது யார் உணர்வானும் சென்று எட்ட ஒணா
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண்டகையார் அவர்.
|
828 |
‘வெந்த சாம்பல் விரை’ என்பது தமது
அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெந்து அற மற்று அப் பொடி அணி
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்.
|
829 |
‘தமக்குத் தந்தையர் தாய் இலர்’ என்பதும்
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது
இமைத்த சோதி அடக்கிப் பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்.
|
830 |
தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினைப்
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம்.
|
831 |
எந்தையார் அவர் எவ்வகையார் கொல்’ என்று
இந்த வாய்மை மற்று எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று
அம் தண் பூந் தராய் வேந்தர் அருளினார்.
|
832 |
‘ஆதி ஆள்பால் அவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால்
ஓதும் எல்லை உலப்பில ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம்’ என்றதாம்.
|
833 |
அன்ன ஆதலில் ‘ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்
தன்மையார்க்கு’ என்றனர் சண்பை காவலர்.
|
834 |
மன்னும் ‘ஏதுக்களால் எனும்’ வாய்மைதான்
தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு
அன்னவற்றால் அளப்பு இலன் என்றது ஆம்.
|
835 |
தோன்று காட்சி ‘சுடர் விட்டு உளன்’ என்பது
ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம்.
|
836 |
‘மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றும்’ என்பது
ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்து உள் ஆக்கிப்
போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
போதித்த பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்.
|
837 |
ஈண்டு ‘சாதுக்கள்’ என்று எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினில் போற்றுவீர் ‘சார்மின்’ என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார்.
|
838 |
‘ஆடும்’ எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்தது ஈசர்
கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்.
|
389 |
கருதும் ‘கடிசேர்ந்த’ என்னும் திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்டீசர் தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்.
|
840 |
‘வேத முதல்வன்’ எனும் மெய்த் திருப்பாட்டினில் நேர்
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்.
|
841 |
பா உற்ற ‘பார் ஆழி வட்டத்’ திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்.
|
842 |
‘மால் ஆயவன்’ என்ன வரும் திருப்பாட்டில் மாலும்
தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த
மேலாம் கருணைத் திறம் வெங் குருவேந்தர் வைத்தார்.
|
843 |
ஆன ‘அற்று அன்றி’ என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா
ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்.
|
844 |
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர் தம் திருப்பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்.
|
845 |
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில்
நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார்.
|
846 |
திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல்
பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்
இரு நிலத்தோர் கட்கு எல்லாம் ‘இது பொருள்’ என்று காட்டி.
|
847 |
‘எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்’ என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே.
|
848 |
ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்தின் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான்
பாடு சேர் அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார்.
|
849 |
ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்
காற்று என விசையின் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு
கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார்
ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க.
|
850 |
ஏடகம் பிள்ளையார் தாம் ‘வன்னி’ என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்
காடு இடம் ஆக கண்ணுதல் கோயில்மாடு
நீடு நீர் நடவுள் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்.
|
851 |
தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச்
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ
மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார்.
|
852 |
மற்று அவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட
அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே.
|
853 |
மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
‘துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய்தா
கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற.
|
854 |
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை.
|
855 |
பண்பு உடை அமைச்சனாரும் பார் உள்ளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட
எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்.
|
856 |
தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம
ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்ந்த தம்பம்
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்
போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும்.
|
857 |
தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான்
‘மன்னன் நீறு அணிந்தான்’ என்று மற்று அவன் மதுரை வாழ்வார்
துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார்.
|
858 |
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்;
மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே.
|
859 |
மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க
ஊனம் ஆம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட
ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத்
தேன் அலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே.
|
860 |
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க,
இறைவன் நல் நெறியின் ஓங்க, இகத்தினில் அவனி இன்பம்
குறை இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே.
|
861 |
‘அங்கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம் பணிவன்’ என்று எழுந்து சென்று
பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்.
|
862 |
எண் அரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத
மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம்.
|
863 |
ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்றக் கண்டு
பாலறா வாயர் பண்பினால் தொழுது சென்று
மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில்
சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புகக்கார்.
|
864 |
தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும்
நல் நெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய
பொன் அடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில்
தன்னை முன் வலம் கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார்.
|
865 |
கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
‘ஐயனே! அடியன் ஏனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே’ என்று ‘வீடல் ஆலவாய்’ விளம்பல் உற்றார்.
|
866 |
‘ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம்
மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்’
என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட.
|
867 |
தென்னவன் பணிந்து நின்று ‘திரு ஆல வாயில் மேவும்
மன்னனே! அமணர் தங்கள் மாய்கையால் மயங்கி யானும்
உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள
இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான்.
|
868 |
சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியார் ஓடும்
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல்
ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி
ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார்.
|
869 |
நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும்
மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினால் ஏ
நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்.
|
870 |
திருவிய மகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு
அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவித்
தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி
இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே.
|
871 |
பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே
வாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.
|
872 |
மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க
ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற
ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்.
|
873 |
செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த
வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை
மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை
எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்.
|
874 |
‘ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த
மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும்
மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும்
போனவர் பால் புகுந்தபடி அறிவன்’ எனப் புறப்படுவார்.
|
875 |
துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான்
அடி வணங்கி அலர் சண்பை அதன் நின்றும் வழிக் கொண்டு
படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி
வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார்.
|
876 |
மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார்
தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை
தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன்
பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தொடும் பணிந்தார்.
|
877 |
அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ
‘இங்கு எம்மைக் கண் விடுத்த காழியார் இள ஏறு
தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம்
செங் கமலத் திருமடம் மற்று இது’ என்றே தெரிந்து உரைத்தார்.
|
878 |
செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த
அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி
ஒப்பு இல் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய
‘எப்பொழுது வந்து அருளிற்று’ என்று எதிரே எழுந்து அருள.
|
879 |
சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத்
தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார்
அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப்
பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார்.
|
880 |
இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி
‘அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட
பெரும் தகை எம் பெருமாட்டியுடன் இருந்ததே’ என்று
பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்.
|
881 |
‘மண்ணின் நல்ல’ என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார் தமை வினவித் திருப்பதிகம் அருள் செய்தார்
தண் நறும் பூஞ் செங்கமலத் தார் அணிந்த தமிழ் விரகர்.
|
882 |
திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு
விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள்
அருப்பு உறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும்
பொருப்பு உறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார்.
|
883 |
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானைக்
காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார்
சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத.
|
884 |
தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்
தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை
ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர
பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே
‘யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்
இறைவர் பதி எனைப்பலவும் பணிவீர்’ என்று
ஞானம் உணர்வார
|
885 |
ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்ற
அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்
நிலவு திருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்
சிர புரத்து வந்து அருளும் செல்வர் செங்கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப
|
886 |
பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால
செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம
பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும
கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலம் குறும் பலாக் கும
|
887 |
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பா
நல்தொண்டர் உடன் நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்
மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணிய பொன் சி
|
888 |
செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித
திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியாரும் சூழ மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப
புடை வலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்து
பங்கயச் செங்கை குவித்
|
889 |
சேதுவின் கண் செங்கண் மால் பூசை செய்
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக
கண் நுதலான் திருத் தொண்டர் ஆனார்க் கெல்லாம்
கோது இல் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க
குலச்சிறையார் குறை அறுத்துப் போற்றிச் செல்ல
நாதர் தமை நாள
|
890 |
அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவ
ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண
மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடிச்
சென்னி மதி புனை மாட மா தோட்டத்தில
திருக் கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிகப் பணிந்து ஏ
|
891 |
அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார
அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப
புணரி பொருது அலை கரைவாய் ஒழியப் போந்தே
செப்பு அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்
செந்தமிழ் மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பு
|
892 |
பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண
பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி
விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்க
வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த
கதி அருளிக் காழி நகர் வாழ வந்தார
கண் நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
|
893 |
அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்
பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து
மன்னு திருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்
மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும்
கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக
குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்
சென்னி வளர் மதி அணி
|
894 |
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்
போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும்
மங்கையர்க் கரசியார் தாமும் தென்னர
மன்னவனும் மந்திரியார் தாமும் கூட
அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றா
உடன் போக ஒருப்படும் அவ் அளவு நோக்கி
‘இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசை
|
895 |
சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம
தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்ச
மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையா
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற
|
896 |
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்
பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும
பத்தர் உடன் பதி உள்ளோர் போற்றச் சென்று
கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம
கறை அணிந்தார் பாதாள ஈச்சரமும் பாடி
முன் அணைந்
|
897 |
மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி
மலர்ப் பிறங்கல் வண்டு இசைப்பச் சுமந்து பொங்கி,
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆ
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலா
நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலை பயிலும் கவுணியர
|
898 |
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர
எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்ற
ஒழிந்திடவும் மிக்கது ஓர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக
கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோல் ஆக அதன
|
899 |
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம
செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று
செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம் பூதூர
தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர் அவர் தமை வணங்க ஞானம் உண்
பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பு அலரும் நறும் கொன்றை நயந்
|
900 |
நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சிப் புக்
நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாண் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி
மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று,
‘தாணுவே! ஆற்றின் கண் ஓடம் உய்க்கும
தன்மையால் அருள் தந்த தலைவா! நாகப்
பூணினாய்! களிற்று பூர
|
901 |
போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும் நாளில
பூழியன் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப
பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம
அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவும
|
902 |
நீடு திருத் தொண்டர் புடை சூழ அங்கண
நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப
பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில்
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்
மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்
‘பாடக மெல் அடி’ எடுத்து
|
903 |
‘தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில
தீயின் கண் இடும் ஏடு பச்சையாக்
என் உள்ளத் துணையாகி ஆலவாயில
அமர்ந்து இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப்போந்
பண்பு இனிய தொண்டருடன் அங்குவைகி
மன்னுபுகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்
|
904 |
சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்
சிவபெருமான் தனைப் பரவிச் செல்லும் போது
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்
சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம்
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தா
அளவு இறந்த பல்இயங்கள் முழக்கி ஆர்த்துப்
பார் குலவு தன
|
905 |
புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப
புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர
எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும
மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட
|
906 |
மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன
வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊ
புடைத்த நாராசம் எனப் புக்க போது
செற்றம் மிகு உள்ளத்துப் புத்த நந்த
செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று
‘வெற்றிபுனை சின்னங்கள் வா
|
907 |
புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்த
பொருவு இல் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் கா
வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி,
‘இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யா
இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரைச் சிவ
|
908 |
‘வரும் இடத்தில் அழகு இது ஆம் நமக்கு வாதில
மற்று இவர் தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்த
பொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற,
அரும் முறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உரும் இடித்
|
909 |
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்
எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறு இல் வலி மந்திரமாம் அசனி போ
வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே
வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன
மேனியையும் தலையினையும் வெவ்வேறாகக்
கூறுபட நூறி இடப் புத்தர் கூட்
|
910 |
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்த
வாக்கின் போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர
அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம்
வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்
விண்ணப்பம் செய ‘எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே யாம
|
911 |
அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எல்லாம
அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
‘வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சை
வாய்மையோ’ என மருண்டு மனத்தில் கொள்வார்
‘எஞ்சல்இல் மந்திர வாதம் அன்றி எம்மோ
எதிர்ந்து பொருள் பேசுவதற்கு இசைவது’ என்று
தம் செயலின் மிக்கு உள்ள சார
|
912 |
அத்தன்மை கேட்டு அருளிச் சண்பை வந்
அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று,
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்
வெண் தரளச் சிவிகையின் நின்று இழிந்து, வேறு ஓர்
சத்திர மண்டபத்தின் மிசை ஏறி, நீ
சைவருடன் எழுந்து அருளி இருந்து, ‘சாரும்
புத்தர்களை அழைக்க’ எனத் திரு
|
913 |
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து ‘நீங்கள
செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றி மழ இளம் களிறு சண்பை யாள
வேத பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும
நண்ணும் எனக் கூறுதலும் நன்மை சாராத்
தன் தகைமைப் புத்தருடன் சா
|
914 |
அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும
பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன
இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம
போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை
‘உங்கள் தலைவனும் பொருளும்
|
915 |
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்
திமாறும் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே தன்
புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்ய உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்
ஒழியாத பேர்இன்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்து உய்ய அறம்முன் சொன்
பான்மை யா
|
916 |
என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து ஏற்
இரும் தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும்
‘நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்
நாட்டுகின்ற முத்தி தான் ஆவது’ என்றார்
‘நின்ற உரு வேதனையே குறிப்புச் செய்
நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய கந்தத்து விவேஅமுத
|
917 |
ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட அன்பர
அதனை அனுவாதம் செய்துஅவனை நோக்கித்
‘தாங்கிய ஞானத்துடன் ஆம் கந்தம் ஐந்தும
தாம் வீந்து கெட்டன வேல் தலைவன் தானும்
ஈங்கு உளன்’ என்ற அவனுக்கு விடயம் ஆ
யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழவு எடுக்
|
918 |
கந்தம் ஆம் வினை உடம்பு நீங்கி எம் கோன
கலந்து உளன் முத்தியில் என்றான் என்னக் காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும
இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை’ என்றார்
‘முந்தை அறிவிலன் ஆகி உறங்கினா
நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினைப் பயன
|
919 |
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும
‘தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை
ஆன போது அவன் பெறுதல் இல்லை’ என்றார்
‘முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்ற
முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய்க் கொலை
|
920 |
‘இப்படியால் எய்தும்’ என இசைத்து ‘நீ இங்
எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல்
மெய்ப் படிய கரணங்கள் உயிர் தாம் இங்
வேண்டுதி ஆல் நும் இறைவற்கு ஆன போது
செப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித
திரிவு இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்
அப்படி அக் கந்தத்
|
921 |
அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்ற
‘அணைந்து உளன் அம் முத்தி எனும் அதுவும் பாழாம்’
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக் கடல
அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்
‘பொய்வகையே முத்தியினில் போனான் முன்
பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்;
|
922 |
உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன
உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப்
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல
இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம்
கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வே
குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்
துணர் கதுவிச்
|
923 |
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர
எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்
அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன்
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத
தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்
கடுத்த எரி நிகழ்
|
924 |
‘ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம
அறிந்தது நும் முத்தி போல் ஆயிற்று அன்றே
ஏதம் ஆம் இவ் அறிவால் உரைத்த நூலும்
என்று அவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன
மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன
|
925 |
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை
பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற
மந்த உணர்வு உடையவரை நோக்கிச் ‘சைவம
அல்லாது மற்று ஒன்றும் இல்லை’ என்றே
அந்தம் இல் சீர் மறைகள் ஆதமங்கள் ஏமை
அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்ய
சிந்தையினில் அது
|
926 |
அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை நோக்கம
அணைதலினால் அறிவுஇன்மை அகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார
முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம
நிலைமை அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் ப
|
927 |
அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளிக்
கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உரையும் நாள் ‘வாகீசமா முனிவர்
எந்நகரில் எழுந்து அருளிற்று’ என்று அடியார் தமை வினவ.
|
928 |
அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்து அருளிப்
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின் கண் போற்றி இசைத்துத்
தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார்.
|
929 |
அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும்
ஒப்பு அரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளிபெருகு
மைப் பொருவு கறைக் கண்டர் கழல் வணங்கி அருள் பெற்றுச்
செப்பு அரிய புகழ்ப் புகலிப் பிள்ளையார் செல்கின்றார்.
|
930 |
பூ விரியும் தடம் சோலை புடை பரப்பப் புனல் பரக்கும்
காவிரியின் தென்கரை போய்க்கண் நுதலார் மகிழ்ந்த இடம்
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்பு உறுமெய்த் தொண்டரோடு
நாவரசர் உழைச் சண்பை நகர் அரசர் நண்ணுவார்.
|
931 |
அந்தணர் சூளா மணியார் பூந் துருத்திக்கு அணித்து ஆக
வந்து அருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டு அருளி
‘நம் தமை ஆளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன்’ என்று முகம் மலர அகம் மலர்வார்.
|
932 |
‘எதிர் சென்று பணிவன்’ என எழுகின்ற பெருவிருப்பால்
நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்தப்
பதி நின்றும் புறப்பட்டு பர சமயம் சிதைத்தவர் பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார்.
|
933 |
திருச்சின்னம் பணிமாறக் கேட்ட நால்திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச் சூழ்ந்த
நெருக்கின் இடைஅவர் காணா வகை நிலத்துப் பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்.
|
934 |
வந்து அணைந்த வாகீசர் வண் புகலி வாழ் வேந்தர்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.
|
935 |
‘அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது’ என்று அருள் செய்யச்
செப்பு அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார்
‘ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான்’ என்றார்.
|
936 |
அவ் வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி
‘இவ்வாறு செய்து அருளிற்று என்னாம்’ என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவர் ‘திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது’ என்று எதிரே இறைஞ்சினார்.
|
937 |
சூழ்ந்து மிடைந்து அருகு அணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து
வாழ்ந்து மனக் களிப்பினராய் ‘மற்று இவரை வணங்கப் பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார்.
|
938 |
திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்
பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்
மருஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்
பொருஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி.
|
939 |
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில்
முன்பு அணித்தாகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித்
துன்பம் இலாத் திருத் தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி
என்பு உருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்.
|
940 |
பொய் இலரைப் பணிந்து போற்றியே புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்னாக
மைஅறு சீர்த் தொண்டர் குழாம் வந்து புடை சூழ உலகு
உய்யவருவார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார்.
|
941 |
வாக்கின் தனி மன்னர் வண்புகலி வேந்தர் தமைப்
போக்கும் வரவும் வினவப் புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ் விரகர் சொல் இறந்த ஞான மறை
தேக்கும் திருவாயால் செப்பி அருள் செய்தார்.
|
942 |
காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை
ஆழி மிசைக் கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி
‘வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெரு வேலி ஆனீர்’ எனத் தொழுதார்.
|
943 |
பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின்
வெள்ளம் அனைய புகழ் மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக் குலச் சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து அங்கு உவந்து இருந்தார்.
|
944 |
தென்னற்கு உயிரோடு நீறு அளித்துச் செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சருக்கும் அன்பு அருளித்
துன்னும் நெறி வைதிகத்தின் தூ நெறியே ஆக்குதலால்
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்.
|
945 |
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி
மல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் மன்னும்
செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்
புல்கு நூல் மார்பரும் போய்ப் போற்ற மனம் புரிந்தார்.
|
946 |
அங்கணரைப் போற்றி எழுந்து ஆண்ட அரசு அமர்ந்த
பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து
திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாம் பரவிச் செல்லும் நாள்.
|
947 |
வாகீச மாமுனிவர் மன்னு திரு ஆலவாய்
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்கப்
போகும் பெரு விருப்புப் பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார்
|
948 |
பூந் துருத்தி மேவும் புனிதர் தமைப் புக்கு இறைஞ்சிப்
போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்கு
வேந்தர் திரு உள்ளம் மேவ விடை கொண்டு அருளி
ஏந்தலார் எண் இறந்த தொண்டருடன் ஏகினார்.
|
949 |
மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில்
நீடு திரு நெய்த்தானம் ஐயாறு சேர்ந்து இறைஞ்சிப்
பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய்
ஆடல் புரிந்தார் திருப் பழனம் சென்று அணைந்தார்.
|
950 |
செங்கண் விடையார் திருப் பழனம் சேர்ந்து இறைஞ்சிப்
பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும்
தங்கிப்போய்ச் சண்பை நகர் சார்ந்தார் தனிப் பொருப்பில்
மங்கை திருமுலைப்பால் உண்டு அருளும் வள்ளலார்.
|
951 |
தென்னாட்டு அமண் மாசு அறுத்துத் திரு நீறே
அந்நாடு போற்று வித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு
‘எந் நாள் பணிவது’ என ஏற்று எழுந்த மா மறையோர்
முன் ஆக வேதம் முழங்க எதிர் கொண்டார்.
|
952 |
போதம் நீடு மா மறையவர் எதிர் கொளப் புகலி காவலரும் தம்
சீத முத்து அணிச் சிவிகை நின்று இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி
நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணிக் கோபுரம் சென்று உற்றார்.
|
953 |
அங்குஅம் மா நிலத்து எட்டு உற வணங்கிப் புக்கு அஞ்சலி முடி ஏறப்
பொங்கு காதலின் புடைவலம் கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதித்
துங்க நீள் பெருந்தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்று இருந்து அருளினார் மலர்க் கழல் பணிவு உற்றார்.
|
954 |
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி
‘உற்று உமை சேர்வது’ எனும் திரு வியமகம் உவகையில் எடுத்து ஓதி
வெற்றி ஆக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார்.
|
955 |
சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக் கடைக் காப்பு ஏற்றி
வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார் தமைப் போற்றி
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அங்கையால் தொழுது ஏத்தி
ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில்.
|
956 |
தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறு
மூது எயில் திருவாயிலைத் தொழுது போய் முனை மலர்க் குழலார்கள்
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகு இடைச் சென்று
காதலித்அவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார்.
|
957 |
நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலியார் உடன் நீல கண்டப் பெரும் பாணர்க்கு மிக நல்கி
உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில்
அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார்
|
958 |
அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும்
துங்க நீள் பெருந்தோணியில் தாயர் தாள் மனம் கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப்
பொங்கும் இன் இசைத் திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி.
|
959 |
நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும்
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்கேளாடும்
சால நாள்கள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழை கம்பர்
கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார்.
|
960 |
தாண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில்
கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று
அண்டருக்கு அறிவரும் பெருந்தோணியில் இருந்தவர் அருள் பெற்றுத்
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரைசெய்வார்
|
961 |
‘அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும்
துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுதிடும்’ எனச் சொல்லி
மெய்ப் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடை கொடுத்து அருளிப்போய்
ஒப்பு இலாதவர் தமை வழி இடைப் பணிந்து உருகும் அன்பொடு செல்வார்.
|
962 |
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்திப்
பல் பெருந்தொண்டர் எதிர் கொளப் பரமர் தம் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணி குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்து உற்றார்.
|
963 |
கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்னம் மா முடக்கால் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணை உற்றார்.
|
964 |
வக்கரைப் பெருமான் தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருளாலே
செக்கர் வேணியார் இடும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர் கொளத் தொழுது எழுந்து அணை உற்றார்.
|
965 |
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி.
|
966 |
பரவி ஏத்திய திருப் பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய்
அரவ நீர்ச் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திரு ஆமாத்தூர்
சிர புரத்து வந்து அருளிய திருமறைச் சிறுவர் சென்று அணை உற்றார்.
|
967 |
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருஆமாத்தூர்ப்
பொன் தயங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்
‘குன்ற வார் சிலை’ எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்.
|
968 |
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்திப்
பா அலர்ந்த செந் தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்பு உறு மேன்மை ஆம் தன்மையை விளங்கிட அருள் செய்தார்.
|
969 |
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அத் திரு அறை அணி நல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம் மலை மிசை வலம் கொள்வார
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார்.
|
970 |
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால்
‘உண்ணா முலையாள்’ எனும் பதிகம் பாடித் தொண்டர் உடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலையைச் சென்று சேர் உற்றார்.
|
971 |
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது
தங்கும் விருப்பில் வீற்று இருந்தார் தாள்தமரைகள் தம் முடி மேல்
பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி
எங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார்.
|
972 |
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்
பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால்’ போற்றி இசைத்து
காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்.
|
973 |
மங்கை பாகர் திருஅருளால் வணங்கிப் போந்து வட திசையில்
செங் கண் விடையார் பதி பலவும் பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிது அமரும் திரு ஓத்தூரைச் சேர்வுற்றார்.
|
974 |
தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்தார் திரு ஓத்தூரில் திருத் தொண்டர்
தாவு இல் சண்பைத் தமிழ் விரகர் தாம் அங்கு அணையக் களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர் கொண்டார்.
|
975 |
சண்பை வேந்தர் தண் தரளச் சிவிகை நின்றும் இழிந்து அருளி
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம் கொண்டு
பண்பு நீடிப் பணிந்து எழுந்து பரமர் கோயில் உள் அடைந்தார்.
|
976 |
வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார் தம் முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும் நண்ணற்கு அரிய கழல் போற்றும்
காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழுதார்.
|
977 |
தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதி செய்து
முழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர் தமைப்
பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன்
அழுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார்.
|
978 |
‘அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எல்லாம்
மங்குல் உற நீண்டு ஆண் பனையாய்க் காயாது ஆகக் கண்டு அமணர்
‘இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ’ என்று
பொங்கு நகை செய்து இழித்து உரைத்தார் அருள வேண்டும்’ எனப் புகல.
|
979 |
பரமனார் தம் திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்தி
விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி
அரவும் மதியும் பகை தீர அணிந்தார் தம்மை அடி வணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி.
|
980 |
விருப்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே
‘குரும்பை ஆண்பனை ஈனும்’ என்னும் வாய்மை குலவு தலால்
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்.
|
981 |
சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்
பாரில் நீடும் ஆண் பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்துக் கொடுத்து அருளி
ஆரும் உவகைத் திருத் தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார்.
|
982 |
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்து அமணர்
அந்நாட்டு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்
‘என் ஆவன மற்று இவை’ என்று தகர்ப்பார் ‘இறைவன் ஏறு உயர்த்த
பொன்ஆர் மேனிப் புரிசடையான் அன்றே’ என்று போற்றினார்.
|
983 |
பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்
கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்
வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்ஆம்.
|
984 |
அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவின் உடன்
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி
மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்திப் போய்க்
கொங்கு மலர் நீர்க் குரங்கு அணில் முட்டத்தைச் சென்று குறுகினார்.
|
985 |
ஆதி முதல்வர் குரங்கு அணில் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி
நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர் இல் சண்பையினில்
வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்.
|
986 |
நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும்
மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்பம் நேர் குலாவு வீதி கோலினார்
காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால்.
|
987 |
கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப் புறம்
கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன்
மடிவு இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார்
படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்.
|
988 |
கோதைமாதர் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும்
வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே
காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து பாய்
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார்.
|
989 |
சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும்
பண்பு நீடியானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு
எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல்
மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர்.
|
990 |
சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார்
வாண் நிலாவு நீற்று அணி விளங்கிட மனத்தினில்
பூணும் அன்பர் தம் உடன் புகுந்திடப் புறத்து உளோர்
காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர்.
|
991 |
வியல் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்
கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும்
புயல் பொழிந்தது ஆம் எனப் பூவினொடு பொன் சுண்ம்
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார்.
|
992 |
இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார்
பின்னுவார் சடை முடிப் பிரான் மகிழ்ந்த கோயில்கள்
முன் உறப் பணிந்து போய் மொய் வரைத் திருமகள்
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் உன்னினார்.
|
993 |
கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்து
உம்பர் ஓங்கு கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து
அம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.
|
994 |
செம் பொன் மலைக் கொடி தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்
கம்பரை வந்து எதிர் வணங்கும் கவுணியர்தம் காவலனார்
பம்பு துளிக் கண் அருவி பாய்ந்து மயிர்ப் புளகம் வரத்
தம் பெருகு மனக் காதல் தள்ள நிலம் மிசைத் தாழ்ந்தார்.
|
995 |
பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று
உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவும் இசை முதல் தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ.
|
996 |
பாடினார் பணிவு உற்றார் பரிவு உறும் ஆனந்தக் கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல்
சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமும் ஆய்த்
தேடினார் இருவருக்கும் தெரிவு அரியார் திருமகனார்.
|
997 |
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால்
பெருகிய கண் மழை பொழியப் பெருந்புகலிப் பெருந்தகையார்
உருகிய அன்பு உள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப்
பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்.
|
998 |
புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திருமடத்தில்
பெறற்கு அரும் பேறு உலகு உய்யப் பெற்று அருளும் பிள்ளையார்
மறப்பு அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார்
அறப் பெருஞ் செல்வக் காமக் கோட்டம் அணைந்து இறைஞ்சினார்.
|
999 |
திரு ஏகம்பத்து அமர்ந்த செழுஞ் சுடரைச் சேவடியில்
ஒரு போதும் தப்பாதே உள் உருகிப் பணிகின்றார்
மருவு திரு இயமகமும் வளர் இருக்குக் குறள் மற்றும்
பெருகும் இசைத் திருப்பதிகத் தொடை புனைந்தார் பிள்ளையார்.
|
1000 |
நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்
சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி
ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரி
மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்.
|
1001 |
எண் திசையும் போற்றி இசைக்கும் திருப்பதி மற்று அதன் புறத்துத்
தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை விடம் உண்டு இருண்ட
கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி
மண்டு பெருங்காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார்.
|
1002 |
அப்பதியில் விருப்பினொடும் அங்கணரைப் பணிந்து அமர்வார்
செப்பு அரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய்
மைப் பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி
முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்
|
1003 |
திருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக்
கருமாலும் கருமாவாய்க் காண்பரிய கழல் தாங்கி
மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் த்
பொருமாற்குத் திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்.
|
1004 |
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கிப்
பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர்
எங்கும் உறை பதி பணிவார் இலம்பையங் கோட்டூர் இறைஞ்சிச்
செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.
|
1005 |
திருத்தொண்டர் பலர் சூழத் திரு விற் கோலமும் பணிந்து
பொருள் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடி
அருள் புகலி ஆண் டகையார் தக்கோலம் அணைந்து அரு
விருப்பினொடும் திரு ஊறல் மேவினார் தமைப் பணிந்தார்.
|
1006 |
தொழுது பல முறை போற்றிச் சுரர் குருவுக்கு இளைய முனி
வழு இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த
பழுது இல் செழும் தமிழ் மாலைப் பதிக இசை புனைந்து அளி
முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர்.
|
1007 |
குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும்
நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத் தொண்டர் உடன்
பொன் தயங்கு மணி மாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்று அணைந்தார் பழையனூர்த் திரு ஆலம் காட்டு அருகு.
|
1008 |
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலம் காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்று
செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும
|
1009 |
மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்தனையோ பாடுதற்கு என்
ருளிச் செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி
|
1010 |
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல் இலா வகை முறையே பழையனூரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து
ஏத்தி அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக் காப்பு அமைய சாத்திப்
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பா
|
1011 |
நீடும் இசைத் திருப் பதிகம் பாடிப் போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை
மாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆல வனத்து மன்னி
ஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம் அருளிச் செய்து அகம்மலர பாடி ஏத்திச்
சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போ
|
1012 |
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பரையன் மடப்பாவை இடப் பாகத்துப் புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்
விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே
அருள் கரு
|
1013 |
மன்னு திருப்பதிக இசைப் பாடிப் போற்றி வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர் தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால்
முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை
உன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க உற
|
1014 |
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச் சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கு காரி கரை முன்னர் சென்று
புக்கு இறைஞ்சிப் போற்றி இசைத்து அப் பதியில்
|
1015 |
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண் இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்
நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் வாகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றுஅவன் மேல் எழுவதற்குச்
சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த
|
1016 |
மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரிச் சின்னம் வரம்பு இன்று ஆகப்
பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப் புரவலனார் எழுந்து அருளும் பொழுது சின்னத்
தீது இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம் நிறை செவியின வாய் மாக்கள
|
1017 |
கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய
மான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வானம் மறை நிலை பெரிய மரமும் தூறும்
ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமையவாம் எண் இலாத
தானமும் மற்று அவை கடந்து திருக் காளத்தி சார எழுந்து அருளினார
|
1018 |
அம் பொன் மலைக் கொடி முலைப்பாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம் பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்
பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல வேடச் சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார்
|
1019 |
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்ற போது
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க
அசைவு இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்
இசை விளங்கும் தம
|
1020 |
வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியே தோன்றும்
இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தம் இல் சீர்க் காளத்தி மலையாம் என்ன அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு வி
|
1021 |
திருந்திய இன் இசை வகுப்புத் திருக் கண்ணப்பர் திருத் தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்து பெருந்தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம் மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்
மருந்து வெளியே இருந்த தி
|
1022 |
தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே தடம் சிலாதல சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில்
சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித் தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்து
|
1023 |
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அவ் அன்பின் உள்ளே மன்னும்
வெள்ளச் செங்சடைக் கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப் பைம் பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம் பொன்
வள்ளத்தி
|
1024 |
பங்கயக் கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடித்
தங்கு பெருங்களி காதல் தகைந்து தட்பத் தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட
அங்கு அரிதின் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்
பொங்கு திருத்தொண்டர்
|
1025 |
யாவர்கலும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ் உலகும் உடையானை எண் இலாத
தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூஅலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து பண்பு இனிய த
|
1026 |
அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும் அருந்தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆகத்
திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்று இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர் வாவித் திருக்கேதாரம
|
1027 |
கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடிக் குலவு திருப் பருப்பதத்தின் கொள்கைபாடி
ஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம்
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப் புகலியர் தம் பெருந் தகையார் புனிதம் ஆகும்
நீற்றின் அணி கோலத்துத் தொண
|
1028 |
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் மு
|
1029 |
மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினோடும் மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும்
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன் மணிகள் பொன்வன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்
|
1030 |
திருவேற்காடு அமர்ந்த செழுஞ்சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி
உரு ஏற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது
பெரு வேட்கை தருவாழ்வு பெற்
|
1031 |
மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி
மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர் தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று
புக்கு அருளி வலம் கொண்டு புனிதர்
|
1032 |
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால் பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்
பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப் பரந்து இழியும் கண் அருவி பாய நின்று
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுது புறத்து அணைந்தருளித் தொண்டரோடும்
ஒற்றி நகர் காதல
|
1033 |
இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால
பன்னு தொல் புகழ்த் திரு மயிலாபுரிப் பதியில்
மன்னு சீர்ப் பெரு வணிகர் தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம்.
|
1034 |
அரு நிதித் திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும்
பொரு கடல் செலப் போக்கி அப் பொருள் குவை நிரம்ப
வரு மரக்கலம் மனைப் படப்ப அணைக்கரை நிரைக்கும்
இரு நிதிப் பெருஞ் செல்வத்தின் எல்லையில் வளத்தார்.
|
1035 |
தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால்
பொய்ம்மை நீக்கிய பொருள் இது எனக் கொளும் உள்ளச்
செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார்.
|
1036 |
கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில்
உற்ற செய்கையா ஒழிவு இன்றி உருகிய மனமும்
பற்று இலா நெறிப் பர சமயங்களைப் பாற்றும்
செற்றம் மேவிய சீலமும் உடையார் ஆய்த் திகழ்வார்.
|
1037 |
ஆன நாள் செல அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய
ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததும்
ஊனம் இல் புகழ் அடியார் பால் கேட்டு உவந்து உளராய்.
|
1038 |
செல்வம் மல்கிய சிர புரத்தலைவர் சேவடிக் கீழ்
எல்லை இல்லது ஓர் காதலின் இடை அறா உணர்வால்
அல்லும் நண் பகலும் புரிந்தவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார்.
|
1039 |
நிகழும் ஆங்கு அவர் நிதிப் பெருங்கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகிப்
புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் னினும்
மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு.
|
1040 |
அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து அரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால்
கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து
தூரிய பூ மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள்.
|
1041 |
நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்பப்
பல் பெருங்கிளை உடன் பெரு வணிகர் பார் முழுதும்
எல்லை இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவணம் மறுகு இடைப் பொழிந்து உளம் மகிழ்ந்தார்.
|
1042 |
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால்
ஈறு இலாத பூசனைகள் யாவையும் மிகச் செய்து
மாறு இலா மறையவர்க்கு வேண்டின எலாம் அளித்து்
பேறு மற்று இது எனும்படி பெரும் களி சிறந்தார்.
|
1043 |
சூத நல் விணை மங்கலத் தொழில் முறை தொடங்கி
வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த
சாதகத் தொடு சடங்குகள் தச தினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார்.
|
1044 |
யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்பு உறப் பயந்த
பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கிப்
பூவினாள் என வருதலின் பூம்பாவை என்றே
மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க.
|
1045 |
திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருக
அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் ணைந்து
தங்கு பேர் ஒளிச் சீறடி தளர்நடை பயில.
|
1046 |
தளரும் மின்னின் அங்குரம் எனத் தமனியக் கொடியின்
வளர் இளம் தளிர்க் கிளை என மணி கிளர் ஒளியின்
அளவு இல் அம் சுடர்க் கொழுந்து என அணை உறும்பருத்து
இள வனப்பிணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த.
|
1047 |
அழகின் முன் இளம் பதம் என அணிவிளக்கு என்ன
விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய
மழலை மென் கிளிக் குலம் என மனை இடை ஆடி.
|
1048 |
பொற்றொடிச் சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு
உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி
மற்றும் இன்புறு வண்டலாட்டு அயர் உடன் வளர.
|
1049 |
தந்தையாரும் அத் தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை
இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெவன்
அந்தம் இல் எனது அருநிதிக்கு உரியன் என்று அறைந்தார்.
|
1050 |
ஆய நாள்களில் அமண் பயில் பாண்டி நாடு அதனைத்
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து
மாய வல் அமண் கையரை வாதில் வென்றதுவும்
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும்.
|
1051 |
நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டிய பின்
மருப்பு நீள் கழுக் கோலில் மற்று அவர்கள் ஏறியதும்
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும்.
|
1052 |
இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச்
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத் திசை நோக்கிச்
சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்துசெம்நின்று.
|
1053 |
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக்
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்று எடுத்த பூம் பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்.
|
1054 |
எல்லை இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி
முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல்
மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலிச்
செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார்.
|
1056 |
அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால்
பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது
என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு அணைந்தது போல் ஓர் முள் எயிற்று அரவம்.
|
1057 |
மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்து வந்து எய்திச்
செவ்வி நாள்முகை கவர் பொழுதினில் மலர்ச் செங்கை
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல்
கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து.
|
1058 |
நாலு தந்தமும் என்பு உறக் கவர்ந்து நஞ்சு உகுத்து
மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர் இழை மென்பூ
மாலை தீ இடைப் பட்டது போன்று உளம் மயங்கி.
|
1059 |
தரையில் வீழ் தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி
வரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருகக்
கரையில் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார்.
|
1060 |
விடம் தொலைத் திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்
திடம் கொள் மந்திரம் தியானம் பாவகம் நிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தனித் தனித் தொழிலராய்ச் சூழ்வார்.
|
1061 |
மருந்தும் எண் இல மாறு இல செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கிப்
பெரும் தடங்கண் மென் கொடிஅன தலை மிசைப் பிறங்கித்
திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து இலதால்.
|
1062 |
ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக
மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப்
பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலிக் கடல் போல்.
|
1063 |
சிந்தை வெம் துயர் உறு சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ேளார்
இந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட
அந்தம் இல் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார்.
|
1064 |
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற
அரசர் பாங்கு உள்ளோர் உள்பட அவனி மேல் உள்ள
கரை இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார்.
|
1066 |
உடைய பிள்ளையார்க்கு என இவள் தனை உரைத்த அதனால்
அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே
இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல்
புடை பெருத்த கும்பத்தினில் புகப் பெய்து வைப்பார்.
|
1065 |
சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலை சூழ் கழுமலத் தலைவர்
சாரும் அவ்வளவும் உடல் தழல் இடை அடக்கிச்
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார்.
|
1067 |
கன்னி மாடத்தில் முன்பு போல் காப்பு உற அமைத்துப்
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல்
மன்னு பொன் அரி மாலைகள் அணிந்து வைத்தனர் ஆல்.
|
1068 |
மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள் தொறும் வழாமைப்
பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கு இனைய
சாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே
ஏலுமா செய யாவரும் வியப்பு எய்து நாளில்.
|
1069 |
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து
பண்பு பெற்ற நல் தொண்டர் களுடன் பணிந்து இருந்த
நண்பு மிக்க நல் வார்த்தை அந்நல் பதி உள்ேளார்
வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார்.
|
1070 |
சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே
இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்தச்
சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும்
துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து.
|
1071 |
மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலி
நிகர் இல் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள் மறுகு யாவையும் நலம் புனை அணியால்
புகர்இல் பொன் உலகு இழிந்ததாம் எனப் பொலிவித்தார்.
|
1072 |
இன்னவாறு அணி செய்து பல் குறைவு அறுப்ப ஏவி
முன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர்
பொன் அடித் தலம் தலைமிசை புனைவன் என்று எவார்
அந்நகர்ப் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார்.
|
1073 |
ஆய வேலையில் அருமறைப் புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று
காயல் சூழ் கரைக் கடல் மயிலாப்புரி நோக்கித்
தூய தொண்டர் தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற.
|
1074 |
மாறு இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த
நீறு சேர் தவக் குழாத்தினை நீள் இடைக் கண்டே
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று
ஈறு இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச.
|
1075 |
காழி நாடரும் கதிர் மணிச் சிவிகை நின்று இழிந்து
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்து அருளி
வாழி மாதவர் வணிகர் செய் திறம் சொலக் கேட்டே
ஆழி சூழ் மயிலா புரித் திருநகர் அணைந்தார்.
|
1076 |
அத் திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறு சிவநேசர் தம் செயல் வாய்ப்பப்
பொய்த்த வச் சமண் சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி.
|
1077 |
கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து
துங்க நீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்கு அருளி
மங்கை பங்கர் தம் கோயிலை வலம் கொண்டு வணங்கி்
செங்கை சென்னி மேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார்.
|
1078 |
தேவர் தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர்.
|
1079 |
போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறை மயிர்ப் புளகங்கள் நெருங்கக்
கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம்பு போந்து அருளி
ஆற்றும் இன் அருள் வணிகர் மேல் செல அருள் செய்வார்.
|
1080 |
ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய
அருமையால் பெறு மகள் என்பு நிறைந்த அக் குடத்தைப்
பெரு மயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்
திரு மதில் புறவாய்தனில் கொணர்க என்று செப்ப.
|
1081 |
அந்தம் இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து
வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு
கந்த வார் பொழில் கன்னி மாடத்தினில் புக்கு
வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து.
|
1082 |
மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போத
மாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி.
|
1082 |
மூடு பன் மணிச் சிவிகை உள்பெய்து முன்போத
மாடு சேடியர் இனம் புடை சூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திருக் கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர் மணிச் சிவிகையை நீக்கி.
|
1083 |
அங்கணாளர் தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால்
மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்கப்
பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்துத்
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார்.
|
1084 |
மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றி இல் சமயத்தின் உள்ளோர்
மாடு சூழ்ந்து காண்பதற்கு உவந்து எய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பு இடை நெருங்க.
|
1085 |
தொண்டர் தம் பெரும் குழாம் புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து
வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி.
|
1086 |
இந்த மாநிலத்து இறந்துள்ளோர் என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கல்
சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம் பாவை பேர் செப்பி.
|
1087 |
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆதல
உண்மை ஆம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்.
|
1088 |
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ் அகம்
துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்.
|
1089 |
ஆன தன்மையின் அத்திருப் பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் ன்
ஞான போனகர் பின் சமண்பாட்டினை நவில்வார்.
|
1090 |
தேற்றம் இல் சமண் சாக்கியத் திண்ணர்இச் செய்கை
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது
கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்.
|
1091 |
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு
அடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து
தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக் கடைக் காப்பு மேல் விரித்தார்.
|
1092 |
ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள்
ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப்
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே.
|
1093 |
தேவரும் முனிவர் தாமும் திரு அருள் சிறப்பு நோக்கிப்
பூவரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார்.
|
1094 |
அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப்
பங்கம் உற்றாரே போன்றார் பர சமயத்தில் உள்ளோர்
எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது எறு
சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார்.
|
1095 |
கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய்க் கருங்குழலின் பாரம்
மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற.
|
1096 |
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி
தேம் கமழ் ஆரம் சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில்
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப் புயல் கீழ் இட்ட
வாங்கிய வான வில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப.
|
1097 |
பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன்
செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக
இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப.
|
1098 |
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன்
கண் இணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள்
தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.
|
1099 |
பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும்
நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு
மணி நிறக் கோபம் கண்டு மற்று அது வவ்வத் தாமும்
அணி நிறக் காம ரூபி அணைவது ஆம் அழகு காட்ட.
|
1100 |
இளம் மயில் அனைய சாயல் ஏந்து இழை குழை கொள் காது
வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும்
கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மை ஆலும்
அளவு இல் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனைய ஆக
|
1101 |
வில் பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பு அமை வதனம் ஆகும் பதும நல் நிதியம் பூத்த
நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி
அல்பொலி கண்டர் தந்த அருட்கு அடையாளம் காட்ட.
|
1102 |
எரி அவிழ் காந்தள் மென் பூத் தலை தொடுத்து இசைய வைத்துள்
திரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு
கருங் நெடும் கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம்
அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற.
|
1103 |
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாகக்
கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுத கும்பச்
சீர் கெழு முகிழைக் காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற.
|
1104 |
காம வேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை
நேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய
தாம நீள் கண்ணி சேர்த்த சலாகை தூக்கியதே போலும்
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி.
|
1105 |
பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன்
அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகிப்
பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட.
|
1106 |
வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை
கரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்டத்
தெரிவு உறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி
புரிவு உறு பொன் பந்து என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க.
|
1107 |
பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன்
ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர் உற்று ஓங்க.
|
1108 |
கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப்
பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நல்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்.
|
1109 |
எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்
கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்.
|
1110 |
இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள்
தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார்
பொன் அணி மாளிகைப் புகலி வேந்தர் தாள்
சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்.
|
1111 |
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள்
பணம் புரி அரவுஅரைப் பரமர் முன் பணிந்து
இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை
வணங்கியே நின்றனள் மண்ணு உள்ளோர் தொழ.
|
1112 |
சீர் கெழு சிவ நேசர் தம்மை முன்னமே
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும் மகளைக் கொண்டு இனிப்
பார் கெழு மனையினில் படர்மின் என்றலும்.
|
1113 |
பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார்
மருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்று
அருமையால் அடியனேன் பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்.
|
1114 |
மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர்
பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர் கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரை தகாது என.
|
1115 |
வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார்
அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர்
தணிவில் நீள் பெருந்துயர் தணிய வேத நூல்
துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்.
|
1116 |
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளை
வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப்
பள்ளம் நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின்
உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்.
|
1117 |
பான்மையால் வணிகரும் பாவை தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய்
வான் உயர் கன்னி மாடத்து வைத்தனர்
தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள்.
|
1118 |
தேவர் பிரான் அமர்ந்து அருளும் திருக் கபாலீச்சரத்து
மேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ் உயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப்
பாவலர் செந்தமிழ் பாடிப் பன்முறையும் பணிந்து எழுவார்.
|
1119 |
தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடை சூழப்
பழுது இல் புகழ்த் திருமயிலைப் பதியில் அமர்ந்து அருளும் நாள்
முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச
அழுது உலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்.
|
1120 |
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை கொள்ளச் சிவநேசர்
வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல்
அருத்தியொடும் திருவான்மியூர் பணிய அணை உற்றார்.
|
1121 |
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர
வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள
அருகு ஆக இழிந்து அருளி அவர் வணங்கத் தொழுது அன்பு
தருவார் தம் கோயில் மணித்தட நெடும்கோபுரம் சார்ந்தார்.
|
1122 |
மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில்
புக்கு அருளிக் கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற
செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்.
|
1123 |
தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று
வாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச்
சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால்
வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்.
|
1124 |
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப
விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணை உற்று
அரவ நெடுந் திரை வேலை அணிவான்மியூர் அதன் உள்
சிரபுரத்துப் புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார்.
|
1125 |
அங்கண் அமர்வார் உலகு ஆளுடையாரை அருந்தமிழின்
பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக்
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச்
செங்கண் விடைக் கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார்.
|
1126 |
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடைச் சுரத்து
மன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில்
தன்னை வலம் கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு.
|
1127 |
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல்
கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன்
மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து
அண்டர் பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார்.
|
1128 |
இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அருந்தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்
பெருந்தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்.
|
1129 |
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சிப் புறம் போந்து அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச்
சிறந்த திருத் தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக் குன்றினை அணைந்தார்.
|
1130 |
சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப்
பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன் போந்து
மன்றல் விரி நறுஞ் சோலைத் திருமலையை வலம் கொண்டு
மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.
|
1131 |
திருக்கழுக் குன்றத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப்
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்.
|
1132 |
இன்பு உற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு இல் பெருந்தொண்டர் உடன்
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளி
என்பு உற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து
அன்பு உற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கத்து அணைந்தார்.
|
1133 |
ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்
கோதுஇல் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அங்கு அமர்ந்து அருளி.
|
1134 |
ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும்
நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில்
ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார்.
|
1135 |
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்து
பரசி எழு திருப் புறவார் பனங்காட்டூர் முதல் ஆய
விரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித்
திரை செய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்.
|
1136 |
எல்லை இல் ஞானத் தலைவர் எழுந்து அருள எதிர் கொள்வார்
தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெரும் காதல் உடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்.
|
1137 |
திரு எல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை
மருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி
உருகு பெருங்காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி
பெருகி வளர் மணிமாடப் பெருந்திரு வீதியை அணைந்தார்.
|
1138 |
நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம்
குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையொடு
தலம் உற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு
வலம் உற வந்து ஓங்கிய பேர்அம்பலத்தை வணங்கினார்.
|
1139 |
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத
கணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப
அணங்கு தனிக் கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கடந்த தனிக் கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவார்.
|
1140 |
தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி
மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார்
அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்து உள் அலைந்து
கண்ட பேர்இன்பத்தின் கரை இல்லா நிலை அணைந்தார்.
|
1141 |
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில்
மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளிப்
பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும்
இன் இசை வண் தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார்.
|
1142 |
திருந்திய சீர்த் தாதையார் சிவ பாத இருதயரும்
பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன் போற்றும் பெரும் பற்றப் புலியூரில்
இருந் தமிழ் ஆகரர் அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்.
|
1143 |
ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும்
தாங்கு அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க
ஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத்
தேம் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்.
|
1144 |
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன்
அன்பு நெறி பெருக்குவித்த ஆண்டகையார் அடி போற்றிப்
பொன் புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி
இன்பு உறு தோணியில் அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள.
|
1145 |
நல் தவர் தம் குழாத்தோடு நம்பர் திரு நடம் செய்யும்
பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளிப் புறம் போந்து
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக்
கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே சென்று அடைவார்.
|
1146 |
பல் பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த
தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கிச்
செல்வம் மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.
|
1147 |
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப்
புன்னை மணம் கமழ் புறவப் புறம்பணையில் வந்து அணைந்தார்.
|
1148 |
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம்
ஏழு இசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார்.
|
1149 |
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று இருந்த சிவபெருமான்
தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனை உன்னி
நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி
வாள் நிலவு பெரும் கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்.
|
1150 |
முன் இறைஞ்சித் திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறிப்
பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச்
சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து
மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்.
|
1151 |
பரவு திருப் பதிகங்கள் பலவும் இசையினில் பாடி
விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி
அரவு அணிந்தார் அருள் பெருகப் புறம் எய்தி அன்பர் உடன்
சிரபுரத்துப் பெருந்தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்.
|
1152 |
மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள் புரிந்து
தாள் பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால் தலை அளிசெய்து
ஆளுடைய தம் பெருமான் அடியவர் களுடன் அமர்ந்து
நீளவரும் பேரின்பம் மிகப் பெருக நிகழும் நாள்.
|
1153 |
காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த
ஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர்
வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர்
சூழு நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்.
|
1154 |
வந்தவரை எதிர் கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தம் இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்று இருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி.
|
1155 |
பெரு மகிழ்ச்சியுடன் செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும்
மருவு பெருங்கிளையான மறையவரும் உடன் கூடித்
திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப்
பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார்.
|
1056 |
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும்
கூட்டுவது மனம் கொள்வார் கோது இல் மறை நெறிச் சடங்கு
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதனை
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்.
|
1057 |
மற்று அவர் தம் மொழி கேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார்
சுற்றம் உறு பெரும் பாசத் தொடர்ச்சி விடு நிலைமையர் ஆய்ப்
பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதனால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள.
|
1158 |
அருமறையோர் அவர் பின்னும் கை தொழுது அங்கு அறிவிப்பார்
இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும்
திருமணம் செய்து அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என.
|
1159 |
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும்
துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும்
பிறை வாழும் திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த
கறை வாழும் கண்டத்தார் தமைத் தொழுது மனம் களித்தார்.
|
1161 |
ஏதம் இல் சீர் மறையவரின் ஏற்ற குலத்தோடு இசைவால்
நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெரும்
காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்கப்
போதும் அவர் பெருந்தன்மை எனப் பொருந்த எண்ணினார்.
|
1160 |
திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம் செய்த அதற்குத்
தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்கு அரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே
உருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்.
|
1162 |
திருஞான சம்பந்தர் சீர் பெருக மணம் புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத்
தருவார் தண் பந்தணை நல்லூர் சார்கின்றார் தாதையார்.
|
1163 |
மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏகத்
திக்கு நிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்று எய்தத்
தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச்
செக்கர்முதிச் சடைமுடியார் தம் திருப்பாதம் தொழுது எழுவார்.
|
1164 |
ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால்
அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்
செப்பு அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே
எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்.
|
1165 |
எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பம் உறு
மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்பச்
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் அறைகின்றார்.
|
1166 |
ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால்
ஊனம் இல் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என
ஆன பேறு அந்தணர் பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மன மகிழ்ச்சியொடு மொழிவார்.
|
1167 |
உம்முடைய பெருந்தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு
எம் உடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம்
வம்மின் என உரைசெய்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்.
|
1168 |
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து
கார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திச்
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப்
பார் குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்.
|
1169 |
திருமணம் செய் கலியாணத் திருநாளும் திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி
அருள் புரிந்த நன்னாளில் அணிமுளைப் பாலிகை விதைத்தார்.
|
1170 |
செல்வம் மலி திருப்புகலிச் செழும் திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே
எல்லை இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி
அல்கு பெருந்திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார்.
|
1171 |
அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்யப்
பொருந்து திரு நாள் ஓலை பொரு இறந்தார் கொண்டு அணையத்
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு
வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்.
|
1172 |
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி
நல் நிலைமைத் திருநாளுக்கு எழு நாளாம் நல் நாளில்
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப்
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்.
|
1173 |
சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள்
நீள் நிலைய மாளிகைகள் நிகர் இல் அணி பெற விளக்கிக்
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி
வாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து.
|
1174 |
நீடு நிலைத் தோரணங்கள் நீள் மறுகு தொறும் நிரைத்து
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச்
சேடு உயரும் வேதிகைகள் செழுஞ் சாந்து கொடு நீவிப்
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்.
|
1175 |
மன்றல் வினைத் திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம்
முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயில்கள் தொறும்
நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள்
துன்று சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்.
|
1176 |
எங்கணும் மெய்த் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர்
மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்
பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்.
|
1177 |
மங்கல தூரிய நாதம் மறுகு தொறும் நின்று இயம்பப்
பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத்
தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன்
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ விரை மணம் பெருக.
|
1178 |
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப்
பண்டம் நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில
மண்டு பெரு நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய
உண்டி வினைப் பெருந்துழனி ஓவாத ஒலி ஓங்க.
|
1179 |
மா மறை நூல் விதிச் சடங்கில் வகுத்த முறை நெறி மரபின்
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில் துவன்றத்
தாமரையோன் அனைய பெருந்தவ மறையோர் தாம் எடுத்த
பூமருவு பொன் கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த.
|
1180 |
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழுமப்
பொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத்
துங்க நறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க
எங்கும் மலர்ப் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிகப் பெருக.
|
1181 |
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும்
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்
நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான்
தனை இறைவர் தாம் ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்.
|
1182 |
மாறு இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்
கூறும் நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்.
|
1183 |
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க
ஓத நீர் உலகியன் முறை ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்.
|
1184 |
நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்த
புகர் இல் சித்திரவிதான மண்டபத்தினில் பொலியப்
பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம் மலர் திரு முன்பு சேர்ந்தார்.
|
1185 |
செம் பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண்பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குஉற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில்.
|
1186 |
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப்
போது சாந்து அணி பூந்துகில் புணைந்த புண்ணியம் போல்
மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி.
|
1187 |
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய
சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச்
சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த.
|
1188 |
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார்
கொண்ட வல்வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே.
|
1189 |
நிரந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும்
புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய
அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல்
பரந்த பேர் இருள் துரந்து வந்து எழுந்தனன் பகலோன்.
|
1190 |
அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில் சண்பை ஆண் டகையார்
தம் சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று
மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச்
செஞ்சுடர்க் கதிர்ப் பேர்அணி அணிந்தன திசைகள்.
|
1191 |
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள்
நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால்
தரம் கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின்
வரம்பு இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்.*
|
1192 |
நங்கள் வாழ்வு என வரும் திருஞான சம்பந்தர்
மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி.
|
1193 |
அளக்கர் ஏழும் ஒன்று ஆம் எனும் பெருமை எவ் உலகும்
விளக்கும் மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்
துளக்கு இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி.
|
1194 |
சந்த மென் மலர்த் தாது அணி நீறு மெய் தரித்துக்
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போது
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து.
|
1195 |
எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி
மண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக்
கொண்ட வெண் நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்ன
வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு.
|
1196 |
ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும்
காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான்
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச்
சீலம் ஆர் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார்.
|
1197 |
காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல
வாழி மா மறை முழங்கிட வளம்பதி வணங்கி
நீழல் வெண் சுடர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்.
|
1198 |
ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேல் கொள்ளக்
கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி
மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்.
|
1199 |
சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம்
வங்கியம் ஏனை மற்றும் மலர் துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே.
|
1200 |
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும்
நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பால் ஆக.
|
1201 |
விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம்
கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப் பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின்
எண் இலா வண்ணத்தூசின் பொதிப் பரப்பு எங்கும் நண்ண.
|
1202 |
சிகையொடு மான் தோல் தாங்கும் கிடையும் ஆசானும் செல்வார்
புகை விடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்
தகைவு இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகை யறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க.
|
1203 |
அறுவகை விளங்கும் சைவத்து அளவு இலா விரதம் சாரும்
நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர்
மறு அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக்
குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக.
|
1204 |
விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித் தழைத்த ஆதரவினோடு
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காணச் சென்றார்.
|
1205 |
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்ற இத் தலத்தின் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும்
பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல.
|
1206 |
தவ அரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர்த் திருப் பெருமணத்தைச் சேர்ந்தார்.
|
1207 |
பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால்
வருமணத் திறத்தின் முன்னர் வழி எதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம்
இருள் மணந்து இலங்கு கண்டத்து இறைவர் தம் கோயில் புக்கார்.
|
1208 |
நாதரைப் பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடிக்
காதல் மெய் அருள் முன் பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம் புனைந்திடவேண்டும் என்னப்
பூத நாயகர் தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார்.
|
1209 |
பொன் குடம் நிறைந்த வாசப் புனித அஞ்சனம் நீராட்டி
வில் பொலி வெண்பட்டு ஆடை மேதக விளங்கச் சாத்தி
நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நானப்
பல் பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர்.
|
1210 |
திருவடி மலர் மேல் பூத்த செழு நகைச் சோதி என்ன
மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த
பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி.
|
1211 |
தண் சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்த
கண் கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடி சூத்திரத்தை
வெண் சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளிவளரச் சாத்தி.
|
1212 |
ஒளி கதிர்த் தரளக் கோவை உதர பந்தனத் தின் மீது
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்திக்
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி.
|
1213 |
வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்
தாள் உறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீள் ஒளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்
தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி.
|
1214 |
திருக் கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப்
பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்திப்
பெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய திரு ஆர் காதில்
வருக்க வெண் தரளக் கொத்தின் வடிக் குழை விளங்க சாத்தி.
|
1215 |
நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது
மேல் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப்
பால் படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி
ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்.
|
1216 |
இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம்
கைவ்வினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின்
செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை
எவ் உலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்.
|
1217 |
அழகினுக்கு அணி ஆம் வெண்ணீறும் அஞ்சு எழுத்தும் ஓதிச்சாத்திப்
பழகிய அன்பர் சூழப் படர் ஒளி மறுகில் எய்தி
மழ விடை மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து
முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேற்கொண்டபோது.
|
1218 |
எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணேர் கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம்.
|
1219 |
படர் பெருந்தொங்கல் பிச்சம் பைம் கதிர்ப் பீலிப் பந்தர்
அடர் புனை செம் பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக்
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல
வடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார்.
|
1220 |
சீர் அணி தெருவின் ஊடு திருமணம் செல்ல முத்தின்
ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளித் தாரை எல்லாம்
பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகேளாடு
தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று.
|
1221 |
மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள்
எண்ணில பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்த போது அவ்
அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க.
|
1222 |
முற்றும் மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புஉறும் சடங்கு முன்னர்ப் புரிவுடன் செய்து அவ்வேலை.
|
1223 |
செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப்
பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை
நம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டி
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்.
|
1224 |
மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம் பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த
காமர் பொன் கலச நன்னீர் இருக்குடன் கலந்து வீச.
|
1225 |
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச
மண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக்
கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்கள் ஊடு
புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்.
|
1226 |
பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும்
பன் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன் இழிந்து அருளி வந்தார் மூ உலகு உய்ய வந்தார்.
|
1227 |
மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம்
நிற்ரைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம்
நறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொன் பாண்டில்
உறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்.
|
1228 |
ஆங்கு முன் இட்ட செம் பொன் அணி மணிப் பீடம் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்னத்
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறிப்
பாங்கு ஒளி பரப்ப நின்றார் பர சமயங்கள் வீழ்த்தார்.
|
1229 |
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர்
மதுரமங்கலம் முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து
கதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல்
விதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார்
|
1230 |
மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம் பொன் இம வரை கலந்தது என்ன
அங்கு அவர் செம் பொன் மாடத்து ஆதி பூமியின் உள்புக்கார்
எங்களை வாழ முன் நாள் ஏடு வைகையின் உள் இட்டார்.
|
1231 |
அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில் புனை விதான நீழல் தூ மலர்த் தவிசின் மீது
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை.
|
1232 |
திருமகள் கொடுக்கப் பெற்ற செழு மறை முனிவர் தாமும்
அருமை ஆன் முன் செய் மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்
பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன்
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார்.
|
1233 |
வந்து முன் எய்தித் தான் முன் செய் மா தவத்தின் நன்மை
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம்
கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்பப்
புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி.
|
1234 |
விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலைமேல் கொண்டு
பொருப்புஉறு மாடத்து உள்ளும் புறத்து உளும் தெளித்த பின்னர்
உருப்பு ஒலி உதரத்து உள்ளும் பூரித்தார் உவகை பொங்கி
அருப்பு உறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும்.
|
1235 |
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவும் மங்கல நீர் வாசக் கரகம் முன் ஏந்தி வார்ப்பார்
தரு முறைக் கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்றன்
அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார்.
|
1236 |
நல் தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செங்கை
பற்றுதற்கு உரிய பண்பின் பழுது இல் நல் பொழுது நண்ணப்
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மணப் பிணை அன்னாரைச்
சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன் துன்னினார்கள்.
|
1237 |
கம் ஆம் சிவ மெய்ஞ் ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி
நாகம் ஆர் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை
மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்று இருந்த வெள்ளை
மேகம் ஓடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார்.
|
1238 |
புனித மெய்க் கோலம் நீடு புகலியார் வேந்தர் தம்கைக்
குனி சிலைப் புருவ மென் பூங்கொம்பனார் உடனே கூட
நனி மிகக் கண்ட போதில் நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி.
|
1239 |
பத்தியில் குயிற்றும் பைம் பொன் பவளக் கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத்தின் கீழ்ச் செழும் திரு நீல நக்கர்
முத் தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு
மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய
|
1240 |
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க
நிறை வளைச் செங்கை பற்ற நேர் இழை அவர் முன் அந்தப்
பொறை அணி முந்நூல் மார்பர் புகர்இல் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி.
|
1241 |
அருப்பு மென் முலையினார் அணிமலர்க் கைப் பிடித்து அங்கு
ஒருப் படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம் தன்னில்
விருப்பு உறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று
திருப் பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார்.
|
1242 |
மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர்
தம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர்
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததோ இவள் தன்னோடும்
அந்தம் இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க.
|
1243 |
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ
அலகு இல் மெய்ஞ்ஞானத்து ஒல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண்
உலகின் எம் மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக்
குல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்.
|
1244 |
சிவன் அமர்ந்து அருளும் செல்வத் திருப் பெரு மணத்துள் எய்தித்
தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப்
பவம் அற என்னை முன்நாள் ஆண்ட அப்பண்பு கூட
நவம் மலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க.
|
1245 |
காதல் மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீது உறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன்
பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட.
|
1246 |
தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும்
பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று
மூ உலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுஆகி.
|
1247 |
கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப் புகலி மன்னர்
பா இன ஒளியால் நீடு பரம் சுடர்த் தொழுது போற்றி
மா இருள் ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார்.
|
1248 |
ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொல்ஆம் என்று
ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்
ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.
|
1249 |
வரும் முறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி
உரு எனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள்
திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க மன்னு சோதின் உள் புக்கார்.
|
1250 |
சீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர்
ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர்
ஆர் திரு மெய்ப் பெரும் பாணர் மற்று எனையோர் அணைந்துள்ளோர்
பார் நிலவு கிளை சூழப் பன்னிகேளாடு உடன் புக்கார்.
|
1251 |
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றோர்கள்
மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினராய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்.
|
1252 |
ஆறு வகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறு இல் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்
|
1253 |
காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித்
தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார்
போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்
|
1254 |
பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர்
கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்ப
வள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும்
தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்
|
1255 |
கண் நுதலார் திருமேனி உடன் கூட கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெரு
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர்
எண் இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார்
|
1256 |
அருந்தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல்
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமை கலிக் காமனார் செய்கை வழுத்து வேன்
|